உலகிலுள்ள வளங்களிலேயே மிகவும் முக்கியமானதாகக் கருதப் படுவது நம் மனித வளம் தான்...இந்த மனிதவளம் தான் உலகிற்கு நாகரீகமும், அறிவையும் அறிமுகப் படுத்தின... ! தோன்றிய நாள் முதல் இன்றுவரை அந்த நிலையிலே தான் பறவைகளும், விலங்குகளும் வாழ்கின்றன... ஆனால் மனிதன் மட்டும் தான் ஆரம்பக் காலங்களில் குகைகளில் வாழ்ந்துக் கொண்டிருந்தவன் இன்று விண்வெளிக்குச் சென்று திரும்பி வரும் அளவிற்கு தன அறிவை விரிவு செய்திருக்கிறான்.....! அப்படிப்பட்ட மனிதக்குலம் இன்று மதுவின் பிடியில் சிக்கிச் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தத்துக்குரியது...
அண்மையில் உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு சராசரி இந்தியன் , ஒரு ஆண்டிற்கு 33 லிட்டர் மதுவை அருந்துகிறான் என்பதாகும். இதில் என்ன கொடுமை என்றால் பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆண்களில் 32% - ம் , பெண்களில் 11% - ம் அதிகரித்திருப்பதாக உள்ள தகவல்....! இதிலும் நம் தமிழ்ச் சமூகம் இன்னும் அதிகமான அளவில் அடிமைப் பட்டுக் கொண்டிருக்கிறது...!
அறிவிலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய நம் தமிழ்ச் சமூகம் இன்று, இந்த மதுவிற்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறது.... இந்த போதை இருக்கிறதே, இது நம்முடைய மூளையை சிறிது சிறிதாக செயழிக்கச் செய்து, தற்காலிக இன்பத்தை தந்து, பின்பு நிரந்தரமாக அதற்கு அடிமைப் படுத்தி விடும் வல்லமைப் படைத்தது இது நாகரீகமாகவும், ஒரு பொழுதுப் போக்காகவும், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்சிக்காகவும் என விளையாட்டாக வாரம் ஒரு முறை, இரு முறை ஆரம்பித்து, .
கடைசியில் தினமும் என பழகிவிடும் ஆபத்தில் கொண்டு விடுகிறது.
முன்பெல்லாம் இந்த மது அருந்தும் பழக்கம் உயர்மட்ட வர்க்கத்திற்கு மட்டும் தான் என்றிருந்தது. அதிலும் இதற்கென்று உரிமம் வாங்கி கொண்டு தான் பயன் படுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
இங்கு வரலாற்றில் உள்ள ஒரு சிறு பதிவைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சுமார் 1950 - களில் , திரு. கண்ணதாசன் அவர்கள் இந்த உரிமம் வாங்கி வைத்திருந்தார்... அப்போது திரு. காமராசர் அவர்கள் , ' இந்த உரிமத்தை ரத்து செய்து விடுய்யா.... உனக்கு மத்திய அரசு பதவி ஒன்றுக்கு பரிந்துரைச் செய்கிறேன் ' என்று சொன்னாராம்.. கவிஞர் அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை... என்பது வேறு செய்தி..., இதை ஏன் இங்கு நினைவுப் படுத்துகிறோமேன்றால் , அப்படி இருந்த நம் சமூகம் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தரவர்க்கம், ஏழை எளியவர்கள் வரை சென்று , . கள்ளுக்கடை, சாராயக்கடை என்பதோடு மட்டுமல்லாமல் இன்று அரசே எடுத்து நடத்தும் டாஸ்மாக் வரை வந்துள்ளது.
இதில் மிகவும் வேதனையானச் செய்தி என்னவென்றால் , இந்த பழக்கம் பள்ளிச் சிறுவர்கள் வரை சென்றடைந்திருக்கிறது என்பது தான்...! பெட்டிக் கடைகளில் மிட்டாய் வாங்குவதுப் போல் இன்று பள்ளி மாணவர்கள் இதை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது...! கையில் நூறு ரூபாய் இருந்தால் போதும் .. வாங்கி விட முடியும் என்ற நிலை இன்று உள்ளது..? மேலும் இந்த பழக்கம் இளைய சமூகத்தினரிடையே மிகப் பெரிய கலாச்சாரச் சீர்கேட்டையல்லவா உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது...? இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் என பல தீயச் செயல்களில் ஈடுப் படுகின்றனர்...! இதனால் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தவறு செய்து விட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் பெரும்பாலான சிறுவர்கள்....! மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் 10 நொடிக்கு ஓர் உயிரிழப்பு ஏற்படுவதாக புள்ளியியல் விவரம் ஓன்று .தெரிவிக்கிறது...! 200 விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்பதும் கூடுதல் தகவல்...!
இந்த மாதிரி பழக்கங்களை செய்ய தூண்டுவோர் பட்டியலில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன... தனக்குப் பிடித்த திரைப்பட நாயகன் செய்வதையெல்லாம் தானும் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் ஒரு ரசிகனாக, ஒவ்வொரு இளைஞனுக்கும் தோன்ற வழி வகுக்குகிறது.. மேலும் சில இடங்களில் ஆசிரியர்களே இதற்கு தூண்டுகோலாய் இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியது..! இதனை மாற்ற வேண்டுமானால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். பள்ளி , கல்லூரிகளில் பயிலும் தங்கள் பிள்ளைகளிடம் சிறு மாறுதல் தென்பட்டால் உடனே அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதற்கு மிகவும் அதிகமாகஅடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஓன்று எதுவென்றால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்... இவர்கள் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விழா ( விருந்து) என்ற பெயரில் இந்த மதுப் பழக்கத்தை பரவலாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். .. இதற்கு பெண்களும் மிக எளிதாக அடிமைப் படுத்தப் படுகிறார்கள் என்பது தான் மிகவும் வருத்தப் பட வேண்டிய ஓன்று....! இந்த நிலை நீடிக்கப் பட்டால் நம் தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய கலாச்சாரச் சீரழிவை எதிர்க் கொள்ள நேரிடும்...!
இன்றைய இளைஞர்கள் தான் நாளை நம் சமூகத்தை ஆளப்போகும் நம்பிக்கைத் தூண்கள்...! இனிமேலும் தாமதிக்காமல் இதனைக் கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்கத் தவறினால் நம் தமிழ்ச் சமூகம் இந்த போதை வெள்ளத்தில் மூழ்கி விடும் ஆபத்து உருவாகி விடும். நம் எல்லோருக்கும் இந்த கடமை இருக்கிறது. நம் முடிவை நாமே தேடிக் கொள்ளாமல் , இதற்கான வழியை உடனே ஏற்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். ! அரசு ஒன்றும் தனியார் நிறுவனம் அல்ல.... லாபத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட.., அது மக்களுக்கு, மக்களால் உருவாக்கப் பட்ட து...! மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, மக்களை காப்பாற்ற வேண்டிய கடமையை உணர்ந்து செயல் பட வைப்பது நம் எல்லோரின் கடமையாகும்.
" மது விலக்கை வலியுறுத்துவோம்..... மதுவை வெல்வோம்..! "