Friday, 28 March 2014

பெண்ணியம்

நேற்று (20-10-2013) விஜய் தொலைக்காட்சியில் நீயா, நானா நிகழ்ச்சி பார்த்தேன். தலைப்பு பெண்ணியம் பற்றியது...., பெண்ணியம் தேவை இல்லை என்று பேசும் ஒரு குழு....? இதில் அதிர்ச்சியான ஒரு செய்தி என்னவென்றால் இந்த குழுவில் இருந்தவர்கள் அனைவரும் நன்கு படித்த இளம் தலைமுறை பெண்கள்.. !!!! அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்து விடுவதால் அவர்களுக்கு பெண்ணியம் தேவையில்லை என்பது அவர்கள் வாதம்....

குழந்தையில் இருந்து நடுத்தர வயதை தாண்டிய பெண் முதல் இங்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது...., இன்னமும் சில கிராமங்களில் நடக்கும் பெண் சிசு கொலையை தடுக்க முடியவில்லை...? கல்வி ,திருமணத்தில் உரிமை, சொத்துரிமை முதலியன மறுக்கப்படும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.

அப்படி இருக்கும் போது சமூகத்தில் மற்ற பெண்களின் நிலைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பேசிய இந்த இளம் பெண்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது....?

ஆனால் களப்பணியாற்றும் நம் அன்பு சகோதரிகள் , குட்டி ரேவதி,ஓவியா, புதிய மாதவி, கவின் மலர், வெண்ணிலா, கவிதா. சல்மா போன்றவர்கள் மிகவும் அருமையாக பெண்ணியம் பற்றி அவர்களுக்கு புரிய வைத்தார்கள்...பாராட்டுக்கள்...!!!!

தந்தை பெரியார்

சமீபக்காலமாக சமூக ஊடங்களில், தந்தை பெரியார் அவர்களை தமிழ் மொழிக்கு எதிரானவர் மாதிரி ஒரு மாயை உருவாக்க முயல்கின்றனர்... அவர்களுக்கு ..:

நாடு முழுவதும் இந்தித் திணிக்கப் பட்டபோது தமிழகத்தில் மட்டும் அதை எதிர்த்து வெற்றி ப் பெற்றது யாரால்...? புரியாத மொழியில் திருமணம் செய்துக் கொண்டிருந்த நாம் தமிழில் உறுதிமொழிக் கூறி இணைய வைத்தது யார்..? எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தது யார்..? ஆலயங்களில் தமிழில் பூசை செய்ய வைத்தது யார்..? ஏன் ..? மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையை தகர்த்தெறிந்ததில் பெரும்பங்கு யாருக்கு..? இவையெல்லாம் செய்தது தந்தை பெரியார் அவர்கள்....!

பெரியாரை நன்கு ஊன்றி படியுங்கள்; பிறகு நீங்களே உணர்வீர்கள்... பெரியார் ஒரு மிகச் சிறந்த அறிவு கருவூலம் என்பதை...! அவர் இங்கே மட்டுமல்ல, உலகெங்கிலும் தேவைப்படும் ஒரு மாமனிதர் என்பதை...! அவரின் கருத்துக்களைத் தவறாகப் பரப்ப நினைப்பது, நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்ளுவதற்கு சமம்...!
 

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம் !

ஒரு சிறு முயற்சி தான்.., ஆனால் அது நாம் எதிர்பார்க்கும் அளவை விட அதிக பலனைத் தந்தால் மனதிற்கு மிக நிறைவையும், மகிழ்சியையும் அளிக்கிறது...!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், என் அக்கம்பக்கத்தினர், ,நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பொருட்களை வாங்கும் போது பார்த்து வாங்குங்கள். இலங்கைத் தயாரிப்பு என்றால் வாங்க வேண்டாம் . குறிப்பாக பிஸ்கட் கேக் போன்ற தின்பண்டங்கள், கிரீன் டீ போன்றவைகளை வாங்கும் போது இலங்கைத் தயாரிப்பு என்றால் புறக்கணியுங்கள்.... நாம் கொடுக்கும் ஒவ்வொரு காசும் நம் இனத்தை அளிக்க பயன் படுத்தப் படுகிறது என்ற உண்மையை விளக்கினேன். அவர்களும் புரிந்துக் கொண்டு , சரி என்று கூறினார்க ள் ..!
.
சில தினங்களுக்கு முன் திரும்பவும் அவர்களைப் பார்க்கும் போது ,"நாங்கள் இலங்கைத் தயாரிப்பு ப் பொருட்களை வாங்குவதில்லை.., புறக்கணிக்கிறோம்" என்றுக் கூறினார்கள் . . .! அது மட்டுமல்ல.. எங்கள் நண்பர்கள்; உறவினர் வட்டத்திலும் இதை வலியுறுத்துகிறோம் என்றும் சொன்னார்கள்...! என்னாலும் இந்தளவு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்த போது எனக்கேற்ப்பட்ட உணர்வை விளக்க வார்த்தைகளே இல்லை....!!! இதற்காக நான் அதிகமாக மெனக் கெடவில்லை ..பார்த்தவர்களிடம் சொன்னேன் . அவ்வளவு தான்...! இது போல் நம் எல்லோரும் முயற்சிச் செய்தால் எளிதாகவும் அதே சமயம் விரைவாகவும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாமே...!,

தனித்த தீவுகளாய் மனிதர்கள்......!

அண்மைக் காலமாக, நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் தான்..., மக்கள் அனைவரும் ஏதோ இந்திர மனிதர்கள் போலவே வலம் வருகின்றனர்..., அலைப் பேசியில் பேசிக் கொண்டு தனி தனித் தீவுகளாக வாழ்கின்றனர். சாலையில் தனியாக நடந்தாலும் சரி.., மக்கள் கூடியிருக்கும் இடங்களிலும் சரி.., செவியில் ஒலிகடத்தியை (Head set) மாட்டிக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டு போகிறார்கள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஒரு தெளிவுமில்லாமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கடைகளில் பொருள்கள் வாங்க வரும் போதும்,வாங்கிவிட்டு திரும்பி போகும் போதும் பேசிக் கொண்டே செல்கின்றனர்... பூங்காக்களில் நடைப் பயிற்சி செல்லும் போதும் இதே நிலை தான்...! ஏன்..? நம் வீடுகளிலும் அம்மா தனியாக அலைப், பேசியில் பேசிக் கொண்டிருப்பார். அப்பா தனியாகப் பேசிக் கொண்டிருப்பார். பிள்ளைகள் தனியாக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்...! இந்த தலை முறையினர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேசுவது என்பதே அரிதாக இருக்கிறது.,? அப்படி என்ன பேசுகிறார்கள்..? பேசுவதற்கு அவ்வளவு செய்திகள் இருகின்றனவா .. ? என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது..!

முன்பெல்லாம் பேருந்துகளில் பயணிக்கும் போது பல விதமான செய்திகள் நம் செவிகளை வந்தடையும். நாம் கேட்க வேண்டும் என்ற கவனமில்லாமலே தானாகவே நம்மை கேட்க வைக்கும். " நாங்க எல்லாம் அந்த காலத்தில்....." என்ற தாத்தா, பாட்டி கதைகளும், நடுத்தர வயதினரின் குடும்பப் பிரச்சனைகள், அரசியல், மாணவர்களின் படிப்பு சம்பந்தமானச் செய்திகள், திரைப் பட செய்திகள், விளையாட்டுச் செய்திகள் என பல செய்திகள் நம்மை சிந்திக்க வைக்கும். இது அவசியம்...! வாழ்வியல் தொடர்புடையது...! . தேவையானவற்றை எடுத்துக் கொள்வோம். தெரியாததை தெரிந்துக் கொள்வோம். இந்த கேள்வி ஞானம் நல்ல ஒரு அனுபவத்தைத் தரும். ரசனையை கூட்டும்.

இந்த அனுபவம் என்ன என்றே தெரியாமல் இப்போதுள்ள இளம் தலை முறையினர் வளர்கின்றனர் என்பது மிகவும் வருத்ததுக்குரியது..., ஏதோ ஒரு சக்தியில் கட்டுண்டவர்கள் போல் இருக்கும் இவர்கள் உண்மையில் கேள்வி ஞானத்தினால் கிடைக்கும் ரசனை, அனுபவத்தை இழக்கிறார்கள் என்பது இக்காலத்தின் கட்டாயமோ என்று தோன்றுகிறது....!

இதுவும் ஒரு வகையில் வன்முறை தான் .....!

நம் சமூகத்தில் பல வன்முறைகள் நடந்துக் கொண்டிருந்தாலும் இது குழந்தைகள் மீது பெற்றோர் நடத்தும் வன்முறையாகவே எனக்கு தோன்றுகிறது. ...! 

எல்லா பெற்றோர்களுக்கும் தன பிள்ளைகள் படிப்பில் முதலில் வர வேண்டும்.. என்று தான் நினைக்கிறார்கள்.., இன்னும் சில பேர் ஒரு படி மேலே போய் , நடனம், பாட்டு,நீச்சல், அறிவுத்திறன் வளர்த்தல் என பல வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். இது எல்லாம் கற்றுக் கொண்டால் நல்லது தானே என்று கேட்க தோன்றும். அதற்கு ஒரு குறிப்பிட வயது வர வேண்டாமா...? ஐந்து வயது குழந்தை எவ்வளவு தான் கற்றுக் கொள்ளும். .! மாலை வந்ததும் பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்தைப் படிக்க வேண்டும், எழுத வேண்டும்.., பிறகு பிற வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்...! சோர்ந்து வரும் பிள்ளையை உடனே சாப்பிட ஏதாவதுக் கொடுத்து மறுபடியும் அனுப்புகிறார்கள்...!

வார இறுதி நாட்களிலும் ஏதாவது ஒரு வகுப்பு என அவர்களை விடுவதில்லை...? இதில் என்ன கொடுமை என்றால் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்குப் போனால் அதற்கு ஒரு சான்றிதழ்...! அதற்காக இந்த பெற்றோர்கள் குழந்தைகளை விடுப்பே எடுக்க விடுவதில்லை...! உடல் நலமில்லாமல் இருந்தாலும் மருந துக் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்...!

இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நமக்கு சிறு வயதில் கிடைத்த இனிமையான வாய்ப்புகளை, அனுபவங்களை இழந்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது, நண்பர்களின் இல்லங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்களின் உரையாடல், அவர்களின் அன்பு, தெருக்களில் விளையாட்டும் போது நாம் கண்டு, கற்றுக் கொண்ட காட்சிகள் என எவ்வளவோ இருக்கின்றன...!

இந்த குழந்தைகளுக்கு நன்கு பேசிப் பழக நண்பர்களும் இல்லை.., பெற்றோர்களுடன் பேசுவதற்கு நேரமும் இல்லை....! பணம் கட்டிய பந்தயக் குதிரைகள் போல ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.... எதைப் பிடிக்க ஓடுகிறோம் என்பதே தெரியாமல்..? தற்போது எல்லா வீடுகளிலும் ஒரே குழந்தை என்பதால் வீட்டிலும் அவர்களால் விளையாட முடிவதில்லை...! தொலைக் காட்சி, கணினி விளையாட்டு என்பது மட்டும் அவர்கள் இளைப்பாறக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு வடிகால்...!

இ தனால் விளைவது என்னவென்றால் சிறு வயதிலேயே மன அழுத்தம்..! இவ்வழுத்தம் அதிகமாகி, அதிகமாகி, சில குழந்தைகள் படிப்பில் நாட்டமில்லாமல், உடல் நிலையிலும் பிரச்சனை என பல வழிகளில் பாதிக்கப் படுகின்றனர்....!

இதை மாற்ற வேண்டுமானால், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்...: மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை... என்பதை முதலில் உணருங்கள்...! எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டுமென்ற எண்ணத்தை விட்டொழியுங்கள் .... ! அவர்களை அவர்களாக வாழ விடுங்கள்...! பிறகுப் பாருங்கள்...அவர்கள் திறமையை... நீங்களே அசந்துப் போவீர்கள்....!

எனது முதல் கவிதை

மனிதன் தோன்றிய நாள் முதலாய்,

பெண்ணினம் சந்தித்த இன்னல்கள் பல...

ஆனால் எம்மினப்பெண்கள் ஈழத்தில்.., 

இன்றுவரை தினந்தோறும் சந்திக்கும் 

கொடுமைகளை கைக்கட்டி , வாய் மூடி ,

வேடிக்கைப் பார்க்கும் வையகமே.. ! -- உன்னளவில்

மனிதநேயம், மனிதத்தன்மை, மனித உரிமை

என்பனவெல்லாம் வெறும் வார்த்தைகள் தானோ...?

மகளிர் தினச் செய்தி

" பெற்றோர்கள் ஆண்  குழந்தைகளைப படிக்க வைக்காவிட்டாலும்  பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். உள்ளூரில் பள்ளி இல்லையென்றாலும் பள்ளியுள்ள ஊரில் சென்று கூலி வேலை செய்தாவது பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்"
                                                                                            
                                                                                                               - தந்தை பெரியார்.


.
பெண் விடுதலை, பெண்ணுரிமைப்  பற்றி பேசும் போது தந்தை  பெரியார் அவர்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பெண் கல்வி ஒன்றினால் மட்டுமே பெண்கள் யாரையும் சாராமல், சுதந்திரமாகவும், சுய மரியாதையுடன் வாழ முடியும் என்று மிகவும் தெளிவாகக் கூற பெரியரால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது.

இன்று  பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். எல்லா துறைகளிலும் தனது திறமைகளை சாதித்துக் காட்டியுள்ளர்கள். பன்னெடுங்காலமாக உரிமைகள் மறுக்கப் பட்டு வந்த பெண்ணினம் இன்று, வெளியில் வந்து எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறது. அவர்களுக்கு சவாலாக இருப்பது பாதுகாப்பின்மை  தான்.....??? கல்வியுடன் சேர்த்து தற்காப்புக் கலையும் கற்றுக் கொள்ளும் கட்டாயம் வந்திருக்கிறது..! எந்த நேரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறனை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு அவசியம்.

அது மட்டுமல்ல...., நம் ஆண்  குழந்தைகளிடம் பெண்ணியம் பற்றிய அறிவை உருவாக்க வேண்டும்..ஆண்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமையும்,பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதையும், அவர்கள் சரி சமமாகவும், சுய மரியாதையுடனும் நடத்தப் பட வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே அறிவுறுத்த வேண்டும். அப்படி செய்தோமானால் பெண்களுக்கு எதிராக இருக்கும் கொடுமைகள்,  குற்றங்கள், வன் கொடுமைகள் , ஆதிக்கம் போன்றவற்றை களைய வழி வகுக்கும் என்பதில் சிறுதும் அய்யமில்லை... !

ஏதோ  ஆண்டில் ஒரு நாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடி விட்டு, எல்லோரும் கூடி பேசி, பின்பு கலைந்துச் செல்வதால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை... ! இதை தினமும் வலியுறுத்த வேண்டும். இதில் பாகுபாடுப் பார்க்காமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. இது நம் எல்லோரின் கடமை. இதனைக் கடைப் பிடித்தோமானால் " பெண்மையைப் போற்றுவோம் " என்பது வெறும் சொற்றொடராக மட்டுமில்லாமல் நடை முறையில் சாத்தியமாக்கலாம் .

            "அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...! "

நம்பிக்கையை முடமாக்கும் ' மூடனம்பிக்கை '



அண்மையில்  எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...!

கடந்த வாரத்தில் ஒரு நாள்,  நான் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தப்  போது  முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். சில நொடிகளிலேயே இலேசான விசும்பல் ஓசைக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண்  அழுதுக் கொண்டிருந்தார்....!  அது தொடர்ந்துக் கொண்டிருந்தது. ..  ஐந்து மணித் துளிகளுக்கு மேல் என்னால் முடியவில்லை....!  ' ஏதாவது பிரச்சனையா?' என்றுக் கேட்டு விட்டேன். அவ்வளவு தான்... அவர் நன்கு அழ  தொடங்கி விட்டார். அது இயல்பு தானே..! நாம் மிகவும் வருத்தத்தில் இருக்கும் போது யாராவது ஆறுதலாகக் கேட்டால் , நம்மை மீறி அழுகை வரும்... சிறிது நேரம் அவரின் கரங்களின் மேல் என் கைகளை வைத்துக் கொண்டிருந்தேன். பின்பு, அவரே பேச ஆரம்பித்தார். அதை அப்படியே இங்கு தருகிறேன்.

' எனக்கு திருமணம் நடந்து ஏழு வருடங்கள் ஆகின்றன். குழந்தை இல்லை. கடந்த இரு வருடங்களாக சிகிச்சை மேற்கொள்கிறேன் . எனக்கு தான் குறை உள்ளது.  மருத்துவர்,   தாமதமாகலாம்.. ஆனால் நிச்சயம் குழந்தைப் பிறக்கும் என்று கூறினார்கள் . நன்றாக தான் போய் கொண்டிருந்தது. இரு மாதங்களுக்கு முன் என் மாமியார்  ஜாதகம் பார்த்துள்ளார். அதில் எனக்கு குழந்தையே பிறக்காது என்று சோதிடர் சொல்லியுள்ளார். அதிலிருந்து வீட்டில் ஒரே சண்டை தான். எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறார்கள். என் கணவரும் அதற்கு உடந்தையாக  இருக்கிறார் ...!   இன்று பெரிய சண்டை வந்து விட்டது. அதனால் வேறு திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு கிளம்பி விட்டேன். அம்மா வீட்டிற்கு தான் போகிறேன். '   என்று முடித்தார்.

' சோதிடம்  பற்றிய எனது அனுபவத்தைக்  கூறினேன் . இதை அறிவியல் என்று கூறி நம்மை ஏமாற்றிக் கொண்டிருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. அதிகம் படித்திருக்கும்  மருத்துவருக்கு இதைப் பற்றி தெரியுமா... அல்லது சோதிடருக்கு அதிகம் தெரியுமா?  நீங்கள் கோபத்திலும், வருத்தத்திலும் முடிவு எடுக்காதீர்கள். சரியாக இருக்காது.., இரு நாட்களுக்குப் பிறகு உங்கள் கணவரை அழைத்துப்  பேசி புரிய வையுங்கள் .. இருவருமாகச்  சேர்ந்து மருத்துவரிடம் சென்று கலந்தாலோசியுங்கள். ' என்று சொன்னேன். அதன் பிறகு அந்த சகோதரியின் முகத்தில் ஒரு தெளிவுப் பிறந்தது. அவர் இறங்குமிடம் வந்ததும், ' உங்களிடம் பேசியப் பிறகு சிறிது நம்பிக்கை வந்துள்ளது அக்கா '  என்றுக் கூறி  விடைப் பெற்றார்.

அவர் சென்று வெகு நேரமாகியும் அவரின் முகமும், அவர் பேசியவைகளும்  என் மனதை விட்டு அகலவே இல்லை. நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டிருந்த இணையர்களின் வாழ்வில் சோதிடம் எப்படி விளையாடியிருக்கிறது பாருங்கள்....! இதை ஒழிக்கத்  தானே தந்தை பெரியார்அவர்கள்  தன வாழ்நாள் முழுதும் பாடுப் பட்டார். நன்கு படித்தவர்களின் மத்தியிலும்  இந்த மூடனம்பிக்கை எப்படி வேரூன்றி இருக்கிறது.? அதிலும் இந்த மாதிரி மூடனம்பிக்கைகளால் ஆண்களை விட பெண்கள் தான்  அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்...!  இது ஒருபுறம் இருக்கட்டும்...! இந்த பிரச்சனையை சிறிது மாற்றிப் பாருங்கள். இந்த குறை அந்த ஆணிடம்  இருந்தால் பெண்கள்  என்ன செய்வார்கள்?  பரவாயில்லை... விடுங்கள்... நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துக் கொள்ளலாம்.. இல்லையென்றால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று தானே பெண்கள் சொல்வார்கள்...! ஏன்  ஆண்களால் இந்த மாதிரி சொல்ல முடிவதில்லை. ? (இந்த விடயத்தில் ஒரு பெண் காரணமாக இருந்திருக்கிறார் என்பது வருத்தத்துக்குரியது)

தொழிற்புரட்சி, விஞ்ஞானப் புரட்சி என்று எவ்வளோவோ நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், மூடநம்பிக்கையிலும், பெண் விடுதலையிலும் இன்னமும் பின் தங்கியிருக்கிறோம்  என்றே தோன்றுகிறது...!  நாம் சென்றடைய வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே  போய் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என நினைக்கிறேன் .