Wednesday, 23 April 2014

தனிமையில் இனிமை (பகுதி - 2)

 தனிமையில் இனிமை '  என்ற என்  முந்தையப் பதிவிற்கு பலவிதமான கருத்துகள்  வந்ததினால் , இதைப் பற்றி சற்று விரிவாக எழுதாலமென , ஒரு எண்ணத்தின் விளைவு தான் அதன் தொடர்ச்சியான இரண்டாம் பகுதி.

தனிமை என்பது தனியாக இருப்பது தான் என்றில்லை...பலருடன் இருக்கும்போது,  தனிமைப் படுத்தப் படுதலும் தனிமை தான்...! இது தவிர்க்க முடியாத ஓன்று.. இதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் எல்லோரின் மீதும் திணிக்கப் படுகிறது என்பது தான் உண்மை..! இதை ஏற்றுக் கொண்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பயனுள்ள வகையில் கையாளுகிறார்கள்...! ஆனால்  ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தான் மிகப் பெரிய மன போராட்டத்திற்கு உள்ளாகி அவதிப் படுகிறார்கள்.

ஒரே வீட்டில் இரண்டு, மூன்று  தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இருக்கும் போது , வயதில் மூத்தவர்கள் அடிக்கடி சொல்வதை நாம்  அனைவரும் கேட்டிருப்போம்...' நான் சொல்வதை யார் கேட்கிறார்கள்..? ' என்ற சொற்றொடரை...! அதேபோல் வீட்டிலுள்ள அனைவரின் நலனையும் பார்த்துக் கொள்ளும் நடுத்தர வயதுப்  பெண்கள் , ' நான் சொல்வதை இந்த பிள்ளைகளோ, மற்றவர்களோ  காதில் வாங்குவதே இல்லை ' என்று தன ஆதங்கத்தை வெளிப் படுத்துவார்கள்... இதே போல் தான் ஆண்களுக்கும் , தங்கள் பணி, குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதரப் பிரச்சனைகள் என மன அழுத்தத்தின் வெளிப்பாடு தனிமையில் தள்ளுகிறது. இந்த தலைமுறை இடைவெளி இருக்கிறதே, அது நாம் என்ன தான் தோழமையுடன் பழகினாலும் , ஒரு இடைவெளியை ஏற்படுத்துகிறது என்பது எல்லோராலும் ஒப்பு கொள்ளக் கூடிய உண்மை...! இந்த இடைவெளி தான் தனிமையையும் ஏற்படுத்துகிறது
இந்த தனிமையை ஏற்றுக் கொண்டவர்கள் அதன் இனிமையை உணர்ந்து மிகவும் அருமையாக கையாளுகிறார்கள்.  இதை ஏற்றுக் கொண்டோமானால் ,  கையாளுவது மிகவும் எளிது.  பிறகு அதன் இனிமையை உணர்ந்து  நாமே பயனுள்ள வகையில் செயல் படுவோம் 

தனிமை  ஒரு தனி மனிதரின் திறமையை வெளிக் கொணர  உதவுகிறது. தற்போது உள்ள கணினி யுகத்தில் நாம் வீ ட்டிலிருந்துக் கொண்டே  பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்..   உதாரணமாக , கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, கைத் தொழில்  செய்வது, சுய உதவி குழுவில் சேர்ந்து பணியாற்றுவது, ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவது என பலவழிகளில் நம் திறமைகளை வெளி கொண்டு வந்து சாதிக்க முடியும்.

 நாம் யாரால் தனிமைப் படுத்தப் பட்டதாக  உணர்ந்தோமோ., அவர்களாலே கவனிக்கப் படுவதையும் உணர முடியும். அது மட்டுமல்ல... நம் திறமைகள் அங்கீகரிக்கப் படுவதையும் காண முடியும். ஆதலால் நம் சிந்தனை, ரசனை, திறமை  எல்லாவற்றையும் நமக்கு உணர்த்தும் இந்த தனிமையின் இனிமையை ரசிக்கப் பழகிக் கொள்வோம்.
 

Thursday, 17 April 2014

தனிமையில் இனிமை

தனிமையில் இனிமை '  -- இதை ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...! மற்றவர்களுக்கு இது ஒரு பெரும் சுமை தான்.   தனிமை தவிர்க்க முடியாத ஓன்று..!   இது  தற்போதைய காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது.  தனிமையை ரசிக்க பழகிக் கொண்டோமானால், அதன் இனிமையை உணர முடியும்.

தனிமையை ஏற்றுக்கொள்ள் தெரியாதவர்கள் ,  அதிலும் முதியவர்கள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே , அது மிகவும் கொடுமையானது.., மனரீதியாக மிகவும் மன உளைச்சலைத் தந்து உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர்.  இதிலிருந்து மீள வேண்டுமானால்,  நம் இளமை காலந்தொட்டே,  தனிமையை ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தனிமை நமக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது..!  அதன் மூலம்  நாம்  பெறுகின்ற  அனுபவங்கள் இருக்கின்றதே , அதற்கு ஈடு இணையேயில்லை  என்று தோன்ற வைக்குமளவிற்கு ஆற்றல் உடையது.

' தனிமையில் இனிமை ' என்று நினைக்கும் போதே அந்த இனிமையை உணர முடிகிறதல்லவா...!   தனிமையில் சிந்தித்து, அதன் மூலம் தெளிவு பெறும் உணர்வு,  நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும்  அளிக்கும்.  முதலில் , தனிமை நம்மைப் பற்றி நமக்கே ஒரு புரிதலையும் ,  பிறகு நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், இயற்கை, சமூகம் பற்றிய ஒரு தொலை நோக்குப் பார்வையையும் ஏற்படுத்துகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்  கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன்    இந்த தொலை நோக்குப் பார்வை தான் நன்மை, தீமைகளை பிரித்துப் பார்க்கும் தெளிவை நமக்கு கொடுக்கிறது  .. .!  இந்த உணர்தல் என்ற உணர்வே மிகவும் இனிமையானது. .!   ரசனையை தூண்டக் கூடியது...!   மகிழ்ச்சியை அள்ளி வழங்கக் கூடியது....!  இப்படிப் பட்ட சிறந்த சிந்தனையையும், ரசனையையும் தரக் கூடிய இந்த தனிமையை  ஏன்  தவற விட வேண்டும்..?   இதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்யலாமே...!  

படைப்பாளிகளுக்கு இந்த தனிமை ஒரு கிடைத்ததற்கரிய ஒரு நல் வாய்ப்பல்லவா..!  மிகச் சிறந்த படைப்புகள் எல்லாம் தனிமையில் உருவானவை தானே..!  கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள் மற்றும் மிக பெரிய காவியங்களாகட்டும் .., அனைத்தும் தனிமையில் படைக்கப் பட்டவையே..!   தத்துவஞானிகளின் தத்துவங்களும், கண்டு பிடிப்பாளர்களின்  புதிய கண்டுபிடிப்புகளும் , அறிவியலாளர்களின் அறிவியல் கோட்பாடுகளும்  தனிமையில் உண்டாக்கப் பட்டவை தான்...! 

படைப்பாளர்களுக்கு மட்டும் தான் என்றில்லை... சாதாரண மக்களுக்கும் தனிமை பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம், நல்ல இசையை கேட்கும் பழக்கம், கை வேலைப்பாடுகள்  என அவரவர் விருப்பங்களை செய்ய தூண்டுகிறது...!  இவ்வாறு நம் திறமைகள் அனைத்தையும் ரசித்து உணர வைக்கும் தனிமையின் இனிமையை முழுமையாக ரசிப்பதற்கு பழகிக் கொள்வோம்...! 


 

Wednesday, 9 April 2014

" சிறகொடிக்கப் பட்ட கூண்டு பறவைகள்"

இந்த கூண்டுகளில் அடைக்கப் பட்டிருக்கும் பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு திருமணமானப்  பெண்கள் தான் நினைவிற்கு வருகிறார்கள்....!  பறவைகள் என்றால் பறப்பது தானே நியதி..?  மனிதன் தன சுய விருப்பத்திற்காக, கூண்டில் அடைத்து வைத்து , பார்த்து மகிழ்வது எந்த விதத்தில் நியாயம்..? கூண்டைப் பார்க்கும் போதெல்லாம், திறந்து விட்டு விட வேண்டுமென்றே எனக்குத்  தோன்றும்....! 

நம் சமூகத்திலுள்ள  திருமணமான பெண்களும் இதே போல் தான் தன விருப்பு, வெறுப்பு பாராமல், தங்களின் அடையாளங்களை இழந்துக் கொண்டிருக்கிறார்கள்...!  கணவன்,  குடும்பத்தினர், குழந்தைகள் என்றே அவர்களின் உலகம் நின்று விடுகிறது. ..! என்ன தான் சமூகம் சார்ந்த அறிவு, ஆர்வம் இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை...! அன்பு, அதிகாரம், பொறுப்பு என்ற பல கயிறுகளால் அவர்களின் உரிமைகள் கட்டப் பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை....!  தன வாழ்நாள் முழுதும் , தன விருப்பப்படி நடக்கும் உரிமைப் பெற்றிருப்பவர்கள் ஆண்கள்...! ஆனால்  அதைப்  பெண்களால் கடைசி நிமிடம் வரைக்  கூட பெற முடியாமல் போவது மிகவும் கசப்பான உண்மை...!  

வீட்டிலிருக்கும் பெண்களுக்குத் தான் இப்படி என்றால், பணிப்புரியும் பெண்களுக்கு வேறு விதத்தில் சிக்கல்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்கும் நிலையில்லை.., ஓரளவிற்கு மதிப்பும், உரிமையும் கிடைக்கிறது என்றாலும், அவையெல்லாம் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கிறது... அவர்களாலும் தங்கள் உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை..! வீடு, அலுவலகம், குழந்தைகள் என்றே ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே  சுற்றி வருகின்றனர்...! அதைத் தாண்டி அவர்களால் வெளியே வர முடிவதில்லை..? இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், பிறந்து ஓரிரண்டு மாதங்களே ஆன குழந்தையை மற்றவர்களிடம் விட்டு விட்டு  பணிக்குச் செல்லும் தாயின் வலி இருக்கிறதே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...! குழந்தைகளிடம் நேரத்தை செலவிட அவர்கள் தவிக்கும் தவிப்பு  மிகவும் வேதனையானது...! 

இன்னும் சில பெண்கள் சுய உதவிக் குழுக்களின் மூலம் பொருளீ -ட்டுகிறார்கள் .., அவர்களுக்கு, குடும்பம், பணியிடம் என்று இல்லாமல் சந்திக்கும் அத்தனை நபர்களிடம் சமாளிக்க வேண்டிய சுழல்...! ஓரளவிற்கு படித்தப் பெண்களுக்கே இந்த நிலையென்றால், கிராமங்களில் உள்ள கல்வியறிவு இல்லாத பெண்களைப்  பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இதற்கான தீர்வு என்னவென்றால் , இந்த பிரச்சனையைப் பெண்கள் தான் கையில் எடுக்க வேண்டும். இதற்கு,  வாய்ப்புள்ளவர்கள் வெளியில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்... ! அல்லது வீட்டிலேயே , தங்கள் குழந்தைகளை ஆண், பெண் என பாகுபாடின்றி சமமாக வளர்க்க வேண்டும் ... சிறு வயதிலிருந்தே இரு பாலருக்கும்  ' பெண்ணியம் ' சார்ந்த அறிவை ஊட்ட வேண்டும். பெண் என்பவள் சரி சமமாக  மதிக்கப் பட வேண்டியவள் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.  இன்றைய தலைமுறைப் பெண்களாகிய நாம் இதைச் செய்தோமானால்,  நாளை அதற்கான முழுப் பலனும்  அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு சென்றடைய  கூடிய வாய்ப்பு  அதிமாக இருக்கிறது...!

Wednesday, 2 April 2014

பொறுமை கடலினும் பெரிது...!


'  பொறுமை  '     --     இச்சொல்லை உச்சரிக்கும் போதே மனதில் ஒரு வித  அமைதியையும்,   நிறைவையும்  அளிக்கிறது என்றால் மிகையல்ல....!  எந்த ஒரு செயலையும் பொறுமையுடன் கையாண்டால் அது வெற்றியில் முடியும்  என்பது எல்லோராலும் ஒப்பு  கொள்ளக் கூடிய உண்மை..!    அய்யன் முதல் பல  அறிஞர்கள்  வரை பொறுமை பற்றி  நிறைய சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த பொறுமை என்ற உணர்விற்கு மிகுந்த வலிமையையும், ஆற்றலும் உண்டு... அது நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இருக்கிறதே.., அது எந்த பள்ளியிலும், கல்லூரிகளிலும்  கற்றுக் கொள்ள முடியாதது., . அது ஒரு வாழ்க்கை பாடம்... , அனுபவக் கல்வி...!


இப்படிப் பட்ட இந்த பொறுமையை ,  இப்போதைய பரப்பான நம்முடைய வாழ்க்கைச்  சுழலில் சிறிது சிறிதாக இழந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் வருத்தத்துக்குரியது..! நம்மில் பலரின் முகத்தைப் பார்த்தாலே தெரியும்.., எப்போதும் ஒரு பரபரப்பு, பதற்றம்.. இவை தான் நம் பொறுமையை இழக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் நம் தேடல்கள் அதிகமாகி விட்டன என்று தோன்றுகிறது. தேடல்கள் அதிகமானதால் அதற்கான ஓட்டங்களும் அதிகமாகிறது. சிறிது நேரம் ஓட்டத்தை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தோமானால் , நாம் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று தெரிய வரும்.. அதில் பொறுமைக்கு பெரும் பங்கு இருக்கும். அதிலும் பொறுமையின்மையால்  இழந்தது அதை விட அதிகமாக இருக்கும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல... குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப் படுகிறோம். பெரியவர்களுக்கு கோபமாகவும், குழந்தைகளுக்கு பிடிவாதமாகவும் வெளிப் படுகிறது. இதனால் உடல் ரீதியாகவும். மன ரீதியாகவும் பல பக்க விளைவுகளை சந்திக்க  வேண்டியுள்ளது.


இதில்  பொறுமை .மட்டுமல்ல... அதோடு உடன் பிறந்த குணங்களான சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு,  காத்திருத்தல் ஆகியவைகளும் காணமல் போய் விடுகின்றன . இந்த காத்திருத்தல் என்பதையே நாம் மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு மணி நேரம் ஆனாலும் பேருந்துவிற்காகக்  காத்திருந்த நாம் இப்போது கால் மணி நேரம் காத்திருப்பதே அதிகமாகத் தோன்றுகிறது. உடனே ஆட்டோ அல்லது சிற்றுந்து என கிளம்பி விடுகிறோம். காத்திருக்கும் கட்டாயம் ஏற்பட்டால் கூட , ஏதாவது சண்டை, சல சலப்பு, குறைகள் என அமைதியின்மையை .  ஏற்படுத்தி விடுகிறோம். பொறுமையாகக் காத்திருப்பது ஒரு கவனிப்பை உண்டாக்கும். அந்த கவனிப்பு ஒரு அனுபத்தைக்  கற்றுக் கொடுக்கும்...!  விட்டுக் கொடுக்கும் பண்பு, சகிப்புத் தன்மை இருக்கிறதே, அது நமக்கு மற்றவர்களிடமிருந்து  அளவற்ற அன்பை அள்ளிக் கொடுக்கும்  தன்மையுடையது.

சிறு வயதிலிருந்தே பொறுமை இல்லாமல் ஒரு வித பிடிவாதத்துடனே வளரும் குழந்தைகள் பெரியவர்களானதும் , திருமண வாழ்க்கையிலும்  பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததால், எதற்கெடுத்தாலும் சண்டை., கடைசியில் மண  விலக்கு வரை போய் விடுகிறது. பொறுமையாக பேசித்  தீர்க்கும் பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி ,  நீதி மன்றம் வரை போகிறார்கள். மண  விலக்கு என்பது ஒரு கடைசித் தீர்வு. அதை அவர்கள் முதலிலேயே கையில் எடுத்து விடுகிறார்கள். இது ஒரு கலாசாரச் சீர்கேட்டை உருவாகும் ஆபத்தல்லவா..! 


கருத்து வேறுபாடுகள் என்பது எல்லா இடத்திலும் உள்ளது தான். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வெவ்வேறான கருத்துக்கள் இருக்கும். நம்மில் பலர் கருத்து வேறுபாடுகளை அதிகமாக்கிக் கொண்டு வெறுப்புணர்ச்சியையும், பகைமையுணர்ச்சியையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கட்டுரையின் பாதை வேறுப் பாதையில் செல்வதாக எண்ண வேண்டாம். பொறுமையாக சிந்திததோமென்றால் ஒரு தெளிவுப் பிறக்கும். அது நமக்கு ஒரு புரிதலை உண்டாக்கும். இந்த புரிதல் நிறை, குறைகளை ஆராய்ந்து, வேறுபாடுகளை நீக்கி ஒரு கருத்தொற்றுமைக்கு வழி வகுக்கும்... !  பொறுமை  -  சிந்தித்தல்   -  தெளிவு    --   புரிதல்  --   ஆராய்ச்சி  என்பனவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை...,  .எங்குச் சுற்றினாலும் பொறுமை தான் இதில் முக்கியப்  பங்கு வகிக்கிறது...! ஆதலால் இந்த பொறுமை இருக்கிறதே, அது நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த உணர்வு.
. பொறுமையை இழக்கிறோமென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை இழக்கிறோம் என்று பொருள் ஆகும். பொறுமையாக இருத்தல் என்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல...! பெரியவர்களாகிய நாம் நம்மை மாற்றிக்கொண்டோமானால் ,  அடுத்து வரும் தலை முறையினர் கட்டாயம் மாற்றிக் கொள்ளவார்கள்....!