Thursday, 26 June 2014

ஒரு தாயின் வலி.....

நேற்று தியாகராயர் நகரிலுள்ள ஒரு புத்தகக் கடைக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பற்றியது தான் இந்த பதிவு...  புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுது தூயத் தமிழிலில் பேசும் ஒரு பெண் குரல் கேட்டது. .. திரும்பிப் பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் , ஒரு புத்தகத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். 

நான் அவரருகில் சென்று , ' நீங்கள் ஈழத்திலிருந்து வந்துள்ளீர்களா? ' என்று கேட்டேன். அவருக்கு வியப்பு...! ( ஈழம் என்று கேட்டதனால் என்னவோ... ) உடனே நான் , ' தமிழீழம் விரைவில்  அமைய  வேண்டும் என்று ஆவலுடன் எதிர் பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி '  என்றதும் அந்த சகோதரியின்  முகத்தைப் பர்ர்க்க வேண்டுமே..... அவ்வளவு பூரிப்பு....! 

பின்பு மிகுந்த அன்புடனும், தோழமையுடனும்  பேசஆரம்பித்தார். 2009-ம் ஆண்டு யுத்தம் நடந்த போது அவர்கள் குடும்பம் ஈழத்தில் தான் இருந்தது என்றும் , அந்த போரில் அவருடைய தந்தை குண்டடிப் பட்டு இறந்து விட்டார் என்பதையும் கூறினார். பிறகு நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து, அவருடைய இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறார். கணவர் அங்கு தொழில் செய்கிறார் . அவரால் இங்கு வர முடியவில்லை.. மேலும் அவரின் ஊதியம் மிகவும் தேவை என்பதால்,  மகன்களை மட்டும் அழைத்துக் கொண்டு  கல்வி பயில , கல்வி பயிலும் ஒப்பு சீட்டு (student's visa) மூலம் இங்கு வந்ததாகச் சொன்னார்.

' மூத்த மகன் பொறியியல் படிப்பு முடித்து விட்டார். ஆனால்  வேலை கிடைக்காததால் திரும்பவும் இலங்கைக்கு செல்ல  வேண்டிய சூழ் நிலை... இரண்டாவது மகனும் இந்த ஆண்டு இறுதி ஆண்டு...  அடுத்த வருடம் படிப்பு முடிந்து விடும். அதற்கு பிறகு இங்கு வாழ முடியாது. அங்கு திரும்பி செல்ல மிகவும் அச்சமாக உள்ளது... இன்னமும் அங்கு பிள்ளைகள் காணமல் போய் கொண்டிருக்கிறார்கள்... காணாமல் போனறவர்கள் திரும்பி வருவதே இல்லை. நாங்கள் இலங்கை குடியுரிமை  பெற்றுள்ளதால் இங்கு வசிக்க அனுமதியும் கிடைக்காது. அகதி முகாமில் சென்றோமானால் மிகுந்த கட்டுபாடுகளும் , விதிகளும் உள்ளன. என்ன செய்வதென்றே தெரியவில்லை...எதுவும் செய்ய இயலாது ... '  என்றார். அப்போது ஒரு  தாயின் மனதில் நிரம்பி இருக்கும்  வலியும், தவிப்புகளும், அச்சமும் அந்த சகோதரியின் கண்களில் தெரிந்தன. அந்த நேரத்தில் எனக்கு,  நம்முடைய இயலாமையை நினைக்கும்போது மிகுந்த வெறுப்பும் , விரக்தியும் ஏற்பட்டது ... நம்முடைய  சட்ட திட்டங்கள் மீது...! 

இந்த சட்டத்திட்டங்கள் எல்லாமே மனிதர்களால், மனிதர்களுக்கு உண்டாக்கப் பட்டவை தானே... பின் ஏன் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், மனிதத்தை காப்பாற்றாமல் தடுக்கிறது..? இப்படிப் பட்ட சட்டங்கள் இருந்தால் என்ன... இல்லாமல் போனால் தான் என்ன .. என்று ஒரு தோன்றுகிறது.....:-(. :-( .... விடைப் பெறும் போது அந்த சகோதரியிடம் ,' வருத்தப் படாதீர்கள்... எல்லாம் நன்மையில் தான் முடியும் ' என்று நான் சொன்ன போது என் கண்கள் மட்டுமல்ல.... அவரின் கண்களும் கலங்கி இருந்தன.....

' இதுவும் கடந்து போகும் '  --  என்று இன்னும் எத்தனை நாட்கள் நாம் சொல்லி கொண்டிருப்பது என்று தான் தெரியவில்லை....?