Thursday, 25 September 2014

பிரச்சனைகளை அணுகுவது எப்படி..?

முகனூல் நண்பர் ஒருவர் என்னிடம் , ' உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே...எப்படி உங்களுக்கு வரும் பிரச்சனைகளைக் கையாளுகிறீர்கள்?' என்று கேட்டார் . அவர் மட்டுமல்ல... என்னிடம் பல பேர் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்....! இதில் உள்ள ஒரு உண்மை என்னவென்றால் , கடவுள் மறுப்பாளர்கள் தான் தனக்கு வரும் துன்பங்கள், இடையூறுகள், பிரச்சனைகளை மிகத் துல்லியமாக ஆராய்ந்து , அவற்றைக் களைய முயற்சி செய்கிறார்கள்...! கடவுள் நம்பிக்கையாளர்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... ! 

இறை நம்பிக்கையுள்ள பல பேர் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம்..., '' கோவிலுக்கு சென்று , சாமியிடம் வேண்டியப் பிறகு என் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது போல் உணர்ந்தேன் " என்ற சொற்றொடரை... இது ஒரு மாயை.. அப்போது மனது இலேசானது போலொரு உணர்வைத் தரும். அவ்வளவு தான்..! சிறிது காலத்திற்கு பிறகு அதுவே வேறு வடிவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இதுவே கடவுள் மறுப்பாளர்கள் பிரச்சனை வந்தால் நாம் தான் அதை சரி செய்ய வேண்டும், வேறு யாரும் நம் பிரச்னையை கையில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்பதால் துணிவாக எதிர்  கொள்வார்கள்....!

முதலில் நாம் ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளேயே உழன்றுக் கொண்டிருக்கக்  கூடாது. அதிலிருந்து வெளியில் வந்து, மூன்றாவது மனிதராக சிந்தித்தோமானால் , அதற்கான  தெளிவுப் பிறக்கும். பின்பு அதை எதிர் கொள்ளும் துணிவு கிடைக்கும்.. பிறகு அதற்கான விடையும் கிடைத்து விடும். இந்த நேரத்தில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பசுமையான பூங்காவிற்கு செல்லுதல் மூலமோ , நல்ல இசையை கேட்கும் போதோ அல்லது நன்கு உறங்கி விழிக்கும் போதோ நம் மூளை சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம். அந்த நேரத்தில் சிந்தித்தால் நமக்கு தேவையான , சிறந்த முடிவை எடுக்க முடியும். சில நேரங்களில்  நெருங்கிய நண்பர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். 

இன்னும் சில பிரச்சனைகளை நாம் சரி செய்ய முடியாது. உதாரணத்திற்கு விபத்து போன்றவை...அது நடந்தது நடந்தது தான்... ஒன்றும் செய்ய முடியாது.. அது போன்றவற்றை ஒரு அனுபவமாக எடுத்துக் கோள்ள வேண்டும். இப்படி தான் செய்ய வேண்டும் என்பது ஒரு அனுபவம் போல் இப்படி செய்ய கூடாது என்பதும் ஒரு அனுபவம் தானே...!

Saturday, 20 September 2014

மூளையில் பூட்டப் பட்ட விலங்கு

சில  தினங்களுக்கு முன் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.....

ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவரைப் பார்க்க காத்திருந்த போது , ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க பெண்மணி அலைபேசியில் தன்  கணவருடன் பேசி கொண்டிருந்தார்...  (நிறை மாத கர்ப்பிணியான தன மகளுடன் வந்திருந்தார்....) அதை அப்படியே தருகிறேன்...  "மருத்துவரைப் பார்த்து விட்டேன்.எப்படியும் சுக பிரசவம் ஆகாது. ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நான் நம் ஜோசியரிடம் பேசினேன். நாளை நல்ல நாளாம்... அருமையான நட்சத்திரமாம். பிறக்கப் போகும் பேத்தி ராணி போல் ஆளக் கூடிய நட்சத்திரமாம்.....! ஆதலால் நாளை ஆபரேஷன் செய்து விடலாம்.  ஒரு நாளைக்கு முன் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டரே சொல்லி விட்டார். அதனால் உடனே மாப்பிள்ளையிடம் சொல்லி விடுங்கள்  " -- இது தான் அந்த அம்மாவின் முடிவு...

இதை பார்த்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சென்று, " குழந்தை தானாக பிறந்தால் தானே அந்த நட்சத்திரத்தில் பிறந்ததாக பொருள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட  நட்சத்திரத்தில் பிறக்க வைக்கிறீர்கள்..அது எப்படி இந்த நட்சத்திரம் என்று சொல்ல முடியும்? " என்று  கேட்டேன். அதற்கு அவர்,  " அது அப்படி இல்லை. குழந்தை எப்போது இந்த மண்ணில் விழுகிறதோ, அந்த நேரம் தான் முக்கியம் " என்றார்கள்.அதற்கு நான், "இதற்காக ஏன் இவ்வளவு சிரம படுகிறீர்கள்  நமது வசதிக்காக சடங்கு, சம்பிரதாயங்கள், நாள், நட்சத்திரம் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்வதற்குப் பதில் அதை கடைப் பிடிக்காமல் இருக்கலாமே..! என்றேன்.   

அவ்வளவு தான்...அவர் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார்...ஒன்றுமே சொல்லாமல் திரும்பி சென்று விட்டார்....!
மக்கள் மனதில் மூடநம்பிக்கைகள் எப்படி வேறுன்றி போயிருக்கிறது பாருங்கள்...தங்கள் வசதிக்காக எப்படி வேண்டுமானாலும்  மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.. ஆனால்  அதை விட்டு விட்டு வெளியே வர யாருமே தயாராக இல்லை.....!!!!

தந்தை பெரியார் அவர்கள்  சொல்லிய கருத்து ,'  இது மூளையில் போடப் பட்ட விலங்கு.. அறுத்தெறிவது அவ்வளவு எளிதல்ல ' என்பது தான் நினைவுக்கு வந்தது.....:-(

Wednesday, 17 September 2014

தந்தை பெரியாரின் 136- வது பிறந்தநாள் ..வாழ்த்துகள்.!

தந்தை பெரியாரின் 136- வது பிறந்தநாள் ..வாழ்த்துகள்.!  :-) :-)

ஜாதி,மத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக நீதி என்பனவற்றை கொள்கைகளாகக் கொண்டு, போராடி, தன வாழ்நாளிலேயே வெற்றியும் கண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்..!!

1938 - ல்  இராஜாஜி அவர்கள் , ' சமஸ்கிருதத்தை படிப்படியாக கொண்டுவரவே இந்தியை புகுத்துகிறேன் ' என்று பகிரங்கமாகவே அறிவித்தபோது , முதல் முறையாக தமிழர்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடுகளின்றி ஒரே குடையின் கீழ் ஓன்று திரண்டு , மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கிய , ' இந்தி எதிர்ப்புப் போரை ' தலைமை  தாங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்...!!

அதே போல் இராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை மூடி, குலக்கல்வி திட்டத்தை நடை முறைப் படுத்திய போது, அவரை  ஆட்சியிலிருந்தே விரட்டி, கல்வி வள்ளல் காமராஜரை முதல்வராக ஆக்கி, நம் அனைவரும் கல்விப் பெற காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்...!!!

எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை சுயமரியாதையுள்ள மனிதர்களாக  வாழ வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்...!!

வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு...!