Wednesday, 23 December 2015

பெண்களை உருகுலைக்கும் மனச் சிதைவு நோய்.

எனக்கு மிகவும் பரிச்சியமான ஒரு குடும்பம். கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். பார்ப்பதற்கு மகிழ்சியான குடும்பம் தான். ஆனால் கணவன், மனைவிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன... இது பெரும்பாலும் அனைவருக்கும் உள்ளது தான்.

சிறிது கால இடைவெளியில் அந்த குடும்பத்தைப் பற்றிய செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..! மூத்த மகள் மருத்துவம்  பயில்கிறாள். இளையவள் பதினோராம் வகுப்பு. அவர்களுடைய  தாய்  அவர்கள் வீட்டில் இல்லை. வீட்டோடு ஒரு ஆளை ( அவருமொரு பெண்மணி தான்) நியமித்து சமாளித்து கொண்டிருக்கிறார்கள்...! காரணம் அவர்களின் அம்மாவிற்கு மனச் சிதைவு நோய். அதிகம் கோபப் படுகிறார்கள்... ஏதாவது பிள்ளைகளை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..காரணமே இல்லாமல் எல்லோரையும் புண்படுத்தி பேசுகிறார்கள். இதனால் பிள்ளைகள் படிக்க முடியவில்லை என்பது தான்.!
அந்த பெண் நாற்பதை கடந்த நடுத்தர வயதுடையவர். கணவனுக்கும், அவருக்கும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்படுவதுண்டு. எதனால் என்று மிகச் சரியாக கணிக்க முடியவில்லை...  ஆனால் வெளியில் யாருடனும் .பேச மாட்டார். பழக மாட்டார். எப்போதும் ஒரு சோகத்துடனே காணப் படுவார். பலநாட்பட்ட மன அழுத்தம் அவரை இந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது..! இப்போது அவருடைய தாயார் வீட்டில் விடப்பட்டிருக்கிறார்... அவருக்கான செலவுகளை கணவர் பார்த்துக் கொள்கிறார் என்றாலும், குழந்தைகளைப்  பிரிந்து இருக்கும் அந்த பெண்ணின் மனம் இன்னும் மன உளைச்சலில் தான் இருக்குமென்று நினைக்கிறேன்... இதை கேள்விப் பட்டதும் மிகவும் வேதனையாக இருந்தது.

பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தனக்கென்று எதையும் நினைப்பதில்லை.. நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை அமைத்து விட்டால் சரி.. இல்லை என்றால் இந்த மன அழுத்தம் பெண்களை  வெகுவாக பாதிக்கிறது.. கணவன்-மனைவி உறவு சரியில்லை என்றால் , இந்த மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்கள்...! 
 
குழந்தைகள் வளர, வளர அவர்கள் படிப்பு, நண்பர்கள் வட்டமென்று சென்று விடும் போதும்,கணவன் வேலை, தொழில் என்று இருக்கும் போதும் தான் தனிமையில் விடப்பட்டு விட்டோம் என்ற உணர்வே இந்த நிலைக்கு காரணம். பணி புரியும் சகோதரிகளுக்கு தன கவலையை மறக்க தோழர்கள், பணி  என்ற ஒரு வடிகால் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு எந்த வடிகாலுமில்லை... அதற்கும்காரணம் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை.!
இந்நிலை மற்ற பெண்களுக்கும் வராமல் தடுக்கப் பட வேண்டும் என்ற உணர்வு தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது. பெண்கள் எந்த வயதிலும் தன்  நண்பர்களை தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவருடனாவது மனம் விட்டு பேச வேண்டும். நூலகம் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்க பழக வேண்டும். தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டு இருக்க வேண்டும். அது, படித்தல், எழுதுதல், தையல், வரைதல், கைத்தொழில் என ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டிருந்தோமானால் இந்த மனச்சோர்விருந்து விடு படலாம்... !
பெண்களே... எப்போதும் மனச்சோர்வுக்கு உள்ளாகாமல்  புத்துணர்ச்சியுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்..!

Monday, 21 December 2015

நெகிழிப் பொருட்கள் ...!

நான் பார்த்தவரை பெரும்பாலும் சென்னையில் மழை நீர் தேங்கி இருந்த போதும்,  இப்போது குப்பைகளாக குவிந்திருக்கும் போதும், ஆக்ரமித்திருப்பது  பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும் தான்.! 
மண்ணிலும் மக்காமல், நீரிலும் கரையாமல், நீரை மண் உறியாமல் தடுப்பதும் இந்த நெகிழிப்பொருட்கள்  தான்.!
இன்னும் சொல்லப்போனால் சாக்கடைகளை அடைத்திருப்பதும் இவைகள தான்.!
இயற்கையையும் கெடுத்து, நம் உடல்நலத்தையும் பாதிக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடை கொடுத்து பயன்படுத்தாமல் இருப்போமே..!

Thursday, 17 December 2015

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
"அரசு நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது..
அந்த நியமனங்களில் கோயில்களில் பின்பற்றப்படும் பழக்கமுறையை பின்பற்றவேண்டும் என்கிறது..
அந்தப் பழக்கங்கள் சாதி அல்லது பிறப்பு சார்ந்த பேதமாக இருக்கக்கூடாது என்று சொல்கிறது... ஆனால் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் சொல்கிறது.!"
இந்த தீர்ப்பை பார்த்தால், பல்வேறு குழப்பங்களை உள்ளடக்கியதாகவே தெரிகிறது... ' இருக்கு ... ஆனா இல்ல ' என்பது போல்.!
பழைய முறைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஒரு உள்குத்து வேற...!
சமூகநீதியில் அக்கறைக் கொண்ட அரசு இதை நியமனம் செய்தாலும், ஆகம விதிகளுக்கு உட்படவில்லை என்று இடைக்கால வழக்கு போட்டு ஆணையை தடுக்க முடியுமே... ஆகம விதிகள் எல்லாம் அவர்களுக்கு சாதகமா தானே இருக்கிறது...!!!

Tuesday, 15 December 2015

சென்னையின் மழை வெள்ளம்

சென்னைவாசிகள் பலரையும் வீடு இழந்து, உடைமைகள் இழந்து, 
வீதியில் வர வைத்திருக்கிறது இந்த வரலாறு காணாத பெரு மழை...!   ஆனால் சென்னைவாசிகள் முழுதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்... என்ன ஒரு 
மனிதநேயம்.. குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த துடிப்புடனும், 
ஒற்றுமையுடனும், அன்புடனும், பொறுப்புடனும் சேவை 
செய்கிறார்கள்... நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல 
அமைப்புகள், தனிப் பட்ட மனிதர்கள் என பாதிக்கப் பட்ட மக்களுக்கு 
தங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறார்கள்.உணவு, உடை, 
அத்தியாவசியப் பொருட்கள், என பல வழிகளில் உதவி 
வருகிறார்கள்.பலர் பணம் கொடுத்து உதவி செய்கிறார்கள்...! 

 இராணுவம், கப்பற்படை, பேரிடர் மீட்பு குழு, தமிழக கமாண்டோ குழுவினர் என அனைவரும் மீட்புப் பணியில் இறங்கினர். அதற்கு முன் முதல் தற்போது வரை 
இளைஞர்களின் தொண்டு அளப்பரியது.. அந்த தோழர்களுக்கு மிக்க நன்றி... தங்கள் பணி தொடர வாழ்த்துகள்...! 
து மட்டுமல்லாமல், இஸ்லாமிய,சீக்கிய, கிருத்துவ, ஜைன  சகோதர, சகோதரிகளின்  அன்பும், பரிவும், உதவும் மனபான்மையும் அளவிட முடியாதது...!ஜாதி, மதம், மொழி இவைகளை தாண்டி மழை நம்மை இணைத்திருக்கிறது... மனிதநேயத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திருக்கிறது... நானும் ஒரு சென்னைவாசி என்ற முறையில், மழையில் நனைத்தப் படி, வெள்ளத்தில் போய் உதவி செய்த, இன்னமும் உதவி செய்துகொண்டிருக்கும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும், மிக்க நன்றி.. நன்றி..நன்றி...!

Monday, 12 October 2015

பொது இடங்களில் பொது மக்களைப் பாதிக்கும் பக்தி...!

கடந்த சனிக்கிழமையன்று நான்  பேருந்தில் வந்துக் கொண்டிருந்தபோது , சென்னை மைலாப்பூர், திருவள்ளுவர் சிலையிலிருந்து லஸ் கார்னர் வருவதற்கு 45 நிமிடங்கள் ஆனது. 5 நிமிடத்தில் கடக்க  வேண்டிய சாலையை 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதற்கான காரணம், அன்று பிரதோசமாம்...கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையாம்.. மேலும் நவராத்திரிக்காக, சாலையோர கடைகளில்  கொலு பொம்மைகள் விற்பனை. இதற்கு தான் அந்த மக்கள் கூட்டம்.!
 வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. பேருந்தின் உள்ளே குழந்தைகள் அழ ஆரம்பித்துவிட்டன. வயதானவர்கள் வியர்வையில் அவதிப் படுகின்றனர். இதில் பேருந்து  ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றிருப்பதால் கொசு தொல்லை வேறு..! காவல்துறையினர்  நெடுநேரம் போராடி பின்பு தான் சாலை போக்குவரத்தை சரி செய்ய முடிந்தது...பக்தி என்பது மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்(து)த மதம் சார்ந்த  ஒரு பண்டிகையின் காரணமாக எவ்வளவு பொது மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை மாநகராட்சி கவனத்தில் கொள்ளாதது மிகவும் கண்டனத்துக்குரியது.

Thursday, 9 July 2015

தாய் வழிச் சமூகம்

பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப்பது இனி கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.! இதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.! 
' திருமண உறவைத் தாண்டியும், சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர். அல்லது சில பெண்கள் தங்கள் மட்டுமே  குழந்தை வளர்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது .அதனால் தாயின் அடையாளம் கண்டிப்பாக தெரியும். சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை தாய் சேர்க்க விரும்பாமல் இருக்கலாம். மாறி வரும் கால சூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றங்கள் தேவை. நாட்டில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். எந்தக் காரணத்தையும் முன்னிட்டு பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது.ஆதலால் தந்தையின் பெயர் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தக்கூடாது.  இதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும்.' என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
#மாறி​#வரும்#காலசூழலுக்கு#ஏற்ப#சட்டங்களிலும்#மாற்றங்கள்#தேவை.

Thursday, 25 June 2015

பகுத்தறிவு

நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பல செய்திகளை , அறிதல், சிந்தித்தல், புரிதல், தெளிதல் என்ற அடிப்படையில் பார்த்தோமானால் அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே, அது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கும்.! சாதாரணமான் கண்ணோட்டத்திற்கும், இதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் எளிதில் உணரலாம். எதையும் ஆராய்ந்து, அலசி  தெளிதல் என்பது சிறந்த அறிவைக் கொடுக்கும். அந்த அனுபவம் எதற்கும் ஈடு இணையில்லாத ஒன்றாக இருக்கும் என்பதில் சிறிதும்  அட்டியில்லை..!  அனைத்து காரியத்தையும் பகுத்து ஆராயும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தும். அது தானே பகுத்தறிவு..! நம்மில் பலர் பகுத்தறிவு என்பது நாத்திகம் சம்பந்தப் பட்டது என்று எண்ணுகின்றனர். எதையும் முழுமையாக அறிந்து, ஆராய்ந்து தெளிதல் தான் பகுத்தறிவு. இதனை அனுபவிக்கும் போது தான் இதன் பயன்பாடு நமக்கு தெரிய வரும்.. நிறைந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.இந்த கண்ணோட்டத்தை  நாம் எல்லோரும் கடைப்  பிடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை கற்றுக் கொடுத்து விட்டோமானால் நம் எதிர்கால சமூகம் மிகச் சிறந்த மாற்றத்தை அடையும் என்பது நிதர்சனமான உண்மை.

Monday, 22 June 2015

சமஸ்கிருதம் ஒரு முதலீடு

ஆதி காலத்தில் மனிதன் தான் நினைத்ததை , தன்னுடைய உணர்வை மற்றவர்களுக்கு புரிய வைக்க முதலில் சைகையை பயன்படுத்தினான். பின்பு ஒலி எழுப்பியதன் மூலம் மொழி உண்டாயிற்று என்பது தான் வரலாறு.  பின்பு ஒரு இனம் அல்லது குழுவாக வாழ்ந்தவர்கள் அவர்களுடைய தாய் மொழியை பேசி தங்களுக்குள் கருத்தை பரிமாறிக் கொண்டார்கள். 

இரு தமிழர்கள் சந்தித்தால் தமிழிலும், இரு ஆங்கிலர்கள் சந்தித்தால் ஆங்கிலத்திலும், இரு ரஷ்யர்கள் சந்தித்தால் ரஷ்ய மொழியிலும் , இரு சீனர்கள் சந்தித்தால் சீன மொழியிலும்  உரையாடுவார்கள். இது தானே இயல்பு..! ஆனால் ஆரியர்கள் தங்களின் மொழியாக, வேத மொழியாக கூறிக் கொள்ளும் சம்ஸ்கிருத மொழியை மட்டும் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதில்லையே..இதை நாம் சிந்தித்தோமா..!  இரு பார்ப்பனர்கள் சந்தித்துக் கொண்டால் சமஸ்கிருதத்தில் தானே பேசிக் கொள்ள வேண்டும்.ஆனால் அவர்கள் வாழும் மாநில மொழியிலும், ஆங்கிலத்திலும் தானே பேசிக் கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் அது எப்படி மொழியாக இருக்க முடியும்.? அவர்களின் தொழிலுக்கு போடப் படும் முதலீடு தான் இந்த சமஸ்கிருதம் என்பது தானே சரியாக  இருக்க முடியும்..! உடலுழைப்பு இல்லாமல் மந்திரம் சொல்லி அதன் மூலம் சம்பாதித்து வாழ்கிறார்கள் எனும் பொழுது , அந்த மொழி அவர்கள் வாழ்வாதரத்திற்கு பயன் படும் ஒரு முதலீடு என்பது தான் உண்மை.! நாம் அதை செத்த மொழி என்று சொல்வது கூட சரியல்ல என்பது என் கருத்து.

இந்த புரியாத ஒரு மொழியை சொல்லி, நம்மவர்களை சிந்திக்க விடாமல் கட்டிப்  போட்டு வைத்திருக்கிறார்கள்.!  மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் வாழ்வில் நடக்கும் இன்ப,   துன்பங்களில் எல்லாம் ஒரு நிகழ்ச்சியை வலுக்கட்டாயமாக புகுத்தி , சடங்கு, சம்பிரதாயம் என்று கூறி அவர்களுக்கே புரியாத மொழியில் பேசி, ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் பயபக்தியுடன் உட்கார வைத்து , அதன் மூலம் பணம் சம்பாதிக்க தான் இந்த சமஸ்கிருதம் பயன் படுகிறது.இதில்  மிகவும் வருத்ததுக்குரிய செய்தி என்னவென்றால் , அவர்கள் நம்மிடம்  சொல்லும் மந்திரங்கள் எல்லாமே நம்மை இழிவுப் படுத்துவதும், நம்ப முடியாத நம் அறிவுக்கு  ஓவ்வாத கதைகளாகவும்   இருப்பது  தான்..! 

Friday, 12 June 2015

ஜூன் . 12 . குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்..!

ஜூன் . 12 . குழந்தை தொழிலாளர்  ஒழிப்பு தினம்..!

நேற்று அமைந்தகரை பகுதி வழியாக வரும் போது ஒரு தேநீர் கடையில்  10 வயதுடைய ஒரு சிறுவன் ஓடி ஓடி வேலை செய்துக் கொண்டிருந்தான். தேநீர் குவளையை வாடிக்கையாளர்களிடம் சென்று கொடுப்பதும், அவர்கள் குடித்தப்  பின்பு  அக்குவளையை கழுவி வைப்பதும் ,  அவர்கள் கொடுக்கும் பணத்தை தன முதலாளியிடம் கொடுத்து விட்டு , அவரின் ஏவலுக்காக அவரின் முகத்தைப் பார்த்தப்படி நிற்கிறான்...! அவனுக்கு தெரியுமா என்று தெரியவில்லை..தன்னைப் பற்றி தான் இன்று இந்த உலகதிலுள்ள அனைத்து ஊடகங்களும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன என்பது..!
குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப் பட வேண்டும் பல ஆண்டுக்களாக பேசப் பட்டு வருகிறது. சட்டம் இயற்ற சட்டத் துறை உள்ளது. நீதி வழங்க நீதித துறை உள்ளது. இதை தடுக்க காவல் துறை உள்ளது.இதைப் பற்றி மேடைகளில் முழங்க அரசியல்வாதிகள் உள்ளனர்..! உண்மையில் இது ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சமூக ஆர்வாளர்கள் முயற்சி செய்கிறார்கள்..ஆனால் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..!

Tuesday, 26 May 2015

நினைவேந்தல்

நம்மிடையே பலருக்கு இந்த குலதெய்வ வழிபாடு  என்பது குறித்த சரியான தெளிதல் இல்லை என்பது என் கருத்து. முன்னோர்களை வழிபடுதல் என்பது சரி தானே என்று சில முற்போக்குவாதிகள் கூட கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இதை வலியுறுத்தவும் செய்கிறார்கள்..! இந்த வாதம் எப்படி சரியாக இருக்க முடியும்..? நாம் காணாத கடவுளை வணங்குவதை விட நம்முடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதரை வணங்குதல் சரி என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளுதல் ஒரு வகையில் அறியாமை தான்..!

அது நம் முன்னோர்கள் ஆக இருந்தாலும் சரி ..., ஒரு குழுவின் தலைவனாகவோ அல்லது ஒரு இனத்தின் தலைவனாகவோ இருந்தாலும் சரி.., அவர்களை நினைவு கூறுதல் என்பது சரியான ஓன்று. அது நம் சந்ததியினருக்கும், அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் அவரைப் பற்றிய செய்திகள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி என்பது வரை இது சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.. இது எப்போது வழிபாடு என்று ஆகிறதோ அப்போதே மூட நம்பிக்கையில் சேர்ந்து விடும்..!

இப்படி தானே புத்தர், ஏசு, மகாவீரர், நபிகள் நாயகம் போன்றவர்களின் நெறிகள் மதமாக்கப் பட்டன்...! இதை தெரிந்து தான் தந்தை பெரியார் அவர்கள், அவரின் ஒவ்வொரு சிலையின் கீழும் கடவுள் மறுப்பு கொள்கையை பதிவு செய்ய சொன்னார்கள்..! சற்று சிந்தித்துப்  பார்த்தால் உண்மை விளங்கும். இதை நாம் ஏற்றுக் கொண்டோமானால் நாளை காந்தி மதம், ஐயனார் மதம், வீரனார் மதம் என்று பல மதங்கள் பெருகிக் கொண்டே போகும் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறதே..! மக்களால் இதை தாங்கி கொள்ள முடியுமா..? அப்படியே முடியுமென்றாலும் நம் பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஒன்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..? ஒருவரிடம் நாம் வைத்திருக்கும் மரியாதை, மதிப்பு பக்தியாக மாறி விட நாம் அனுமதிக்க கூடாது.!

Thursday, 21 May 2015

ஏற்றுக்கொள்ளுதல் என்ற பண்பு

படிப்பு, பணம், ஆடம்பர வாழ்க்கை என்பதில் மட்டுமே  நம்முடைய தேடல் அனைத்தும் சென்றதன் விளைவு வாழ்வியலை கற்க தவறி விட்டோமே என்று தோன்றுகிறது..!  ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஒரு பண்பு, விட்டுக்கொடுத்தல் என்ற குணங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது நம் சமூகத்தில்..! இன்றைய நாளிதழில் நான் படித்த (முதல் பக்கத்திலேயே ..) செய்தி தான் எனக்கு இந்த உணர்வை தூண்டி இந்த பதிவை பதிவு செய்ய காரணமாக அமைந்தது..!

மதுரையில் நேற்று நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு.., ஒரு பெண் தன்னுடன் வாழ பிடிக்காத கணவரையும், அவர் வீட்டரையும் உயிருடன் எரித்து கொலை செய்தது...ஏமாற்றமும், வெறுப்பும், சினமும் சேர்ந்து அந்த பெண்ணை பழிவாங்க தூண்டியிருக்கிறது.! இதுவும் ஒரு வகையில் அறியாமை தான்..!

இது தான் உண்மை, இது தான் இயல்பு என்பதை உணர்ந்து, அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது தான் இதற்கு காரணம்..! பிடிக்காதவருடன்  வாழ்வதை விட பிரிந்து வந்து தனியாக வாழலாம் அல்லது புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.. இதை எல்லாம் விட இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதாவது நம்மால் முடிந்தயளவு பங்களிக்க வேண்டும் என்ற உணாவு இல்லாமல் போயிருக்கிறதே...??!!   தன்னை விரும்பாத பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்றுவது, இணையர்களிடையே கருத்து வேறு பாடு காரணமாக தற்கொலை செய்து கொள்ளுதல், பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், எதையும் தாங்கிக் கொள்ளும் மனதிடம் இல்லாமை மற்றும் பிரச்சனைக்களை கையாளும் விதம் தெரியாமல் முடங்கி, சோர்ந்து போதல்  போன்றவைகள்அதிகமாகிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது..,  இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாழ்வியலைப் பற்றிய ஒரு புரிந்துணர்வை சிறு வயதிலேயே கல்வி மூலம் கொடுப்பது இக்காலத்தின் கட்டாயமாகிறது..!

  

Friday, 8 May 2015

.மகிழ்ச்சி

காலை எழுந்ததும், கையில் செய்தித்  தாளை எடுத்து  படித்துக் கொண்டு , இருக்கும் இடத்தில் காலை காபியை எதிர் பார்க்கும் ஆண்களா நீங்கள் .... அவர்களுக்காக.: 

ஒன்றும் பெரிதாக வேண்டாம்... சிறிய சிறிய வேலைகள் தான்.. உங்கள் இணையர்களுக்கு உதவி செய்து பாருங்கள்.. அவர்கள் முகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று  ..! என்ன தான் நேர மேலாண்மை, திட்டமிடல்  மன அழுத்தத்தை குறைக்குமென்றாலும்,  காலை  நேர பரபரப்பு பெண்களுக்கு ஒரு பெரிய தலை வலி தான்..!  முன்பெல்லாம் பெண்கள் எழுந்தவுடன் வேலையை கவனிப்பார்கள்.. ஆனால் இப்போது நடைப் பயிற்சி என்பது அத்தியாவசியமாகி விட்டது. பயிற்சியை முடித்து, மிகவும் சோர்வுடன் வேலையை ஆரம்பிக்கும் போது யாராவது சிறு  உதவி செய்தால் கூட அது மிகப் பெரிய உதவியாக தெரியும்..!

காலை சிற்றுண்டி, மதிய உணவு, மதிய உணவை  டப்பாக்களில் கட்டுதல் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களை ஆயுத்தப் படுத்துவது என்னும்  பணி  சுமையினால் கோபம், எரிச்சல் என  மன அழுத்தத்திற்கு ஆளாதல் என்பது இயல்பு.. ! இந்த நேரத்தில் காய்கறி நறுக்கிக்  கொடுப்பது, பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களை தயார் படுத்துவது, சீருடை எடுத்து வைத்தல், தண்ணீர்  பாட்டில்களில் நீர் நிரப்பி வைத்தல்  என சிறு சிறு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளலாமே...! இதனால் இணையர்களுக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது..முயற்சி செய்து பாருங்கள்...மகிழ்ச்சியாக உணர்வீர்கள்..!!!!

Tuesday, 31 March 2015

துணிவு

நேற்று மாலை பூங்காவில் கண்ட ஒரு காட்சி... சிறுவர்கள் விளையாடிக்  கொண்டிருந்தனர். ..! அப்போது ஒரு சிறுமி அழுதுக் கொண்டே வந்து தன தாயிடம் ,  ' அவன் என்னை அடித்து விட்டான் ' என்று முறையிட்டாள். அதற்கு அந்த தாய் யார் என்று கேட்க, அச்சிறுமி கைக்காட்டி அவன்தான் என்று சொன்னாள்... அதற்கு அங்கிருந்த மற்ற பெண்கள் ,  அந்த பையன் எப்போதும் அப்படி தான்.. எல்லோரையும் அடிப்பான் என்று கூறினார்கள் .  உடனே அந்த தாய் தன மகளிடம், '  இனிமேல் அவனிடம் விளையாடாதே.., அவனிடம் பேசாதே ' என்று கூறுகிறார்.

இதுவே அச்சிறுவன் மற்றொரு சிறுவனை அடித்திருந்தால் அந்த சிறுவன் இப்படி தான் தன தாயிடம் வந்து முறையிடுவானா..? அல்லது அவனுடைய தாய் தான் இப்படி கூறுவார்களா..? இன்னும் சொல்லபோனால் நீயும் அடிக்க வேண்டியது தானே ... என்பது தான் பதிலாக இருக்க முடியும்..!  சிறுவர்களாக  இருந்தாலும், ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் வெவ்வேறு விதத்தில் வளர்க்கப் படுகிறார்கள் நம் சமூகத்தில்...!  ஆண் குழந்தைகளுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், பெண் குழந்தைகளுக்கு அதை எதிர் கொள்ளாமல் ஒதுங்கி செல்வதற்கும், அல்லது அதை அனுசரித்துப்  போவதற்கும் பழகப் பட்டு வளர்க்கப் படுகிறார்கள்..! முதலில் இதை தாய்மார்கள் உணர வேண்டும். நாம் வளர்ந்தது போலவே தன குழந்தைகளை வளர்க்காமல் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் நடக்கவும், எது சரியானது என்பதையும் சொல்லிக் கொடுப்பது மிக முக்கியம்... அப்போது தானே அந்த குழந்தை வளர்ந்தவுடன் எதையும் எதிர்கொள்ளும் திறனைப் பெற முடியும்..! 

Monday, 23 March 2015

நேற்று விஜய் தொலைக்காட்சியில் ( 22-03- 2015 ) நீயா, நானா நிகழ்ச்சியில் பெண்களின் பொழுது போக்கு குறித்து விவாதிக்கப் பட்டது. அதில் இறுதியில் முன்று கேள்விகள் கேட்கப்பட்டன. பத்திரிக்கைப் படித்தல், ஏதாவது பேசிக் கொண்டிருத்தல் மற்றும் தொலைக் காட்சி பார்த்தல் என்பவை தான் அவைகள். அதில் முதலிடம் தொலைக்காட்சி பார்த்தலுக்கு தான். இரண்டாவது ஏதாவது பேசிகொண்டிப்பது, முன்றாவது இடம் தான் பத்திரிகை படித்தலுக்கு.. அதுவும் ஓரிரண்டு பேர் தான்...!  ' இது தவறான ஓன்று.., இதை மாற்ற வேண்டும்.. நீங்கள் நிறைய படியுங்கள்.. எழுதுங்கள், உங்கள் உணர்வுகளை பதிவு செய்யுங்கள்' என்று வரவேற்கத்தக்க, அருமையான கருத்து திரு. கோபிநாத் -ஆல் முன் வைக்கப்பட்டது..மிக்க நன்றி.. மகிழ்ச்சி...!

இந்த ஒரு கருத்து கூட ஆண் ஒருவரால் தான் பெண்களுக்கு இந்த கணினி யுகத்திலும் சொல்லப்பட வேண்டிருக்கிறது என்பது வருத்ததுக்குரிய ஒன்றாக  தான் இருக்கிறது..! தொலைக்காட்சி தான் பொழுதுபோக்கு என்று கூறிய பெண்கள் அனைவரும் எதுவும் தெரியாதவர்கள் அல்ல.. அவர்களுக்கும் பெண்ணிய சிந்தனை அதிகமுள்ளது... பிடிக்காத, தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்ன என்று கேட்கப் பட்ட போது மிகவும் சிறப்பாக சிலவற்றை சொன்னார்கள்..! வாசனை திரவிய விளம்பரத்திற்கு ஒரு ஆணின் பின்னால்  பல பெண்கள் வருவது போன்று காட்டப் படுவதும், பெண்களை இழிவுப் படுத்துவது போன்ற காட்சிகள் தொடர்களில் வருவதையும்,  திரைப்பட பாடல்களில் பெண்களை ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க எழுதப்படும்  வரிகளையும், தொலைக்காட்சியில் வரும் மகளிர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அழகு குறிப்புகளும், சமையல் குறிப்புகளும் தான் சொல்லப் படுகின்றன என்பதையும் மிக சிறப்பாக எடுத்துரைத்தார்கள்..!!! 

இந்தளவு பெண்ணிய சிந்தனைகள் இருந்தும் இவர்களின் பொழுது போக்கு தொலைக்காட்சி தான் எனபது தவிர்க்கப் பட வேண்டிய ஓன்று .., இதில் யாருக்கும்  மாற்றுக்கருத்து இருக்க முடியாது ...! இந்த சகோதரிகள்  அனைவரும்  இதை  விட்டு வெளியே வந்தால் நிச்சயம்  உணர்வார்கள்..., ரசிக்கப்பட வேண்டியவை,  அறிய பட வேண்டியவை, சாதிக்க பட வேண்டியவைகள்  நிறைய  நம்மைச் சுற்றி இருக்கின்றன என்பதை...! தொலைக்காட்சி  நம் நேரத்தை மட்டுமல்ல...நம் சிந்தனையை, அறிவை, திறமையை , ஆளுமையை எவ்வளவு சுரண்டி இருக்கிறது என்பதை தெளிவாக உணர  முடியும்...!!!

Wednesday, 18 March 2015

நிறம்

நிறம்..,  நிறம் பொதுவானது..!  மனிதர்களில் நிறத்தை அடிப்படையாக வைத்து பேச வேண்டுமென்றால்,  இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம்  பார்க்க வேண்டிய அவசியமில்லையே...! நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் வீட்டின் வரவேற்பறை வரை வந்து நம் மீது திணிக்கப் படும் விசயங்களில் ஒன்று விளம்பரங்கள்...! இதில் மிக முக்கியமாக சிவப்பாக்கும் பசை( என்ன தான் தடவினாலும் சிவப்பாக முடியாது என்பது வேறு செய்தி ) ஒன்றிற்கு வரும் விளம்பரம் இருக்கிறதே, அதை என்னெவென்று சொல்வது?  ஒரு பெண்ணிற்கு கருப்பாக இருக்கும் போது வராத தன்னம்பிக்கை சிவப்பாக் ஆனவுடன் வருவதாக காட்டியிருப்பார்கள்...!!!   ஆக ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை கல்வியிலோ, திறமையிலோ, தன ஆளுமையினாலோ வராமல், தோலின் நிறம் சிவப்பாக இருந்தால் வந்து விடும் என்பது எத்தகைய கீழ்த்தரமான எண்ணம்... இதை விட  கேவலமாக பெண்களை சித்தரிக்க முடியாது என்பது திண்ணம்...!

மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கும் பாராளுமன்றத்தில் கூட ஒருபெரிய கட்சியின் தலைவர் பெண்களின் அழகைப் பற்றியும், நிறம், வடிவம் பற்றியும் விமர்சிக்கிறார் என்றால் பெண்கள் இன்னமும் காட்சிப் பொருளாக பார்க்கப் படுகிறார்கள்   என்பது  தானே உண்மை..! இது கண்டிக்கப் படக் கூடிய ஒன்றாக தான் இருக்க முடியும்..!  வெள்ளை நிறமுடையவர்கள் கருப்பு நிறமுடையவர்களை விட முக்கியத்துவம் தரப் படுகிறார்கள் என்றால் இதில் ஏன் பெண்களை  மட்டும் குறிப்பாக சொல்ல வேண்டும்? பொதுவாக மனிதர்கள் என்று குறிப்பிட்டு இருக்கலாமே...! அப்படியும் இல்லையென்றால் ஆண்டாண்டு காலமாக நடை முறையில் இருக்கும் வட இந்தியர் , தென்னிந்தியர் பாகுபாடை கூட குறிப்பிட்டு இருக்கலாம்....!!!

பெண்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... !   இக்காலக் கட்டத்தில் கூட பெணகளின் திறமை, கல்வி தகுதி, சாதனை இவற்றை பொறுத்து  மதிப்பிடாமல் அழகு, நிறம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதென்றால் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசி என்ன பலன்...? பெண்களின் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்..? நிறம் தான் முக்கியமாக கவனிக்கப் படுகிறதென்றால் அதில் ஆண், பெண் என்ற பேதமில்லை..அது அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஓன்று தானே..!

Sunday, 15 March 2015

குழந்தைகள் நம் வருங்காலத் தூண்கள்

உலகில் ஊட்டசசத்து குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை விகிதாசாரத்தில் 46 சதவிகிதம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறார்களாம்...!  இந்தியாவின் வருங்கால தூண்கள் என்று நம்பப்படும் குழந்தைகளின் நிலைமை இப்படி உள்ளது..? ஆனால்..., 

 * பால் குடம் குடமாக அபிஷேகம் என்ற பெயரின் கற்சிலைகளின் மீது ஊற்றப் படுகிறது. நாலு கால    பூஜை, ஆறு கால பூஜை என உணவை கற்சிலைகளின் முன்பு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

* அரசோ கங்கையை சுத்தப் படுத்துகிறோம் என்றப் பெயரில் ( முதலில் கழிவை, குப்பையை போடாமல் இருக்க சட்டம் இயற்றாமல் எப்படி சுத்தம் செய்வார்கள்  என்று புரியவில்லை.) கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி இருக்கிறது.

* புராணத்தில் உள்ளதை காரணம் காட்டி இல்லாத சரஸ்வதி நதியை கண்டுப்பிடிக்க கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

* மத மாற்றம், பசு வதை சட்டம் என்றெல்லாம் பேசி கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது.

* இதை விட உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியாரிணி சொன்னது தான்...!!!! 

மதம் நம்மை எங்கு கொண்டு போகிறது என்பதை  தெளிவாக உணரா விட்டால் மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கும்...! உடல் வலிமையுடனும்,  அறிவுடனும் , மனித நேயத்துடனும் கூடிய மனித வளம் மட்டுமே நம்மை உலக அளவில் முன்னிறுத்த வழி வகுக்கும்..!

Wednesday, 11 March 2015

நான் நல்லவன்



சில தினங்களுக்கு முன் மகிழுந்தில் (car)  சென்று கொண்டிருந்தபோது எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குந்தில் (lorry)  "  நான் நல்லவன்  "  என்று எழுதி இருந்தது. நான் படித்த மாத்திரத்தில் , என் மனதில் '  ஓ. .. அப்ப  நாங்கள் எல்லாம் கெட்டவங்களா..! ' என்று தோன்றியது. அதற்கு அடுத்த வினாடியே நாம் தவறாக எடுத்துக் கொண்டோம் என்பதை  புரிந்துக் கொண்டேன். படிப்பவர்கள் அனைவரும் நான் நல்லவன் என்று சொல்லும்  போது ஒரு நேர் மறை சிந்தனையை தான் உருவாக்குகிறது  என்பதை....!

இரண்டு எண்ணங்களும் அடுத்தடுத்து தோன்றுகிறது ஒரே மனதில்.. முதலில் எதிர் மறையாகவும், பின்பு  நேர்மறை சிந்தனையாகவும் ..! ஒரே வாசகம். படிப்பவரும் ஒருவரே..ஆனால் நம் மனம் இரு வேறு விதமாக சிந்திக்கிறது என்பதை எளிதாக புரிந்துக் கொள்ள முடிந்தது.. எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்திலும்  , அணுகும் முறையிலும் தான் புரிதல் உண்டாகிறது.   நேர்மறை சிந்தனையை நாம் பழகிக் கொண்டால் , அதிலுள்ள எதிர்மறை காணாமல் போய் விடுகிறது என்பது உண்மை. நாம் எல்லோருக்கும் தெரியும்.., தாமஸ் ஆல்வா எடிசன் தனது கண்டுபிடிப்பில் 9999 முறை தோல்வியை தழுவியப் பிறகு வெற்றி கண்டார்.  ஆனால் அவரோ அதை தோல்வியாக கருத வில்லை, எப்படி செய்ய கூடாது என்ற அனுபவத்தை பெற்றேன் என்றல்லவா கூறினார்...! நாம் எல்லோரும் அவருடைய விடா முயற்சி தான் இதற்கு காரணம் என்று நினைத்திருப்போம்.. ஆனால் அந்த விடா முயற்சிக்கு கூட அணுகும்  முறை தான் காரணம். ஒரு செயலை அணுகும் விதத்தில் தான் நமக்கு தன்னம்பிக்கையும், அதன் மூலம் விடா முயற்சியும் கிடைக்கிறது...! அணுகும் முறையில் தான் ஆளுமையும் செயல் படுகிறது என்பதை உணர முடிந்தது...!

Sunday, 8 March 2015

பெண்களே.., தங்களை அழகு படுத்திக் கொண்டு  அலங்காரப் பதுமைகளாக காட்டிக் கொள்ளாமல்,  அறிவையும், ஆளுமையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. அது உங்களுக்கு சுய மரியாதையையும், சுய மதிப்பையும் கொடுக்கும்... தன்னம்பிக்கையை மென்மேலும் ஊட்டும்...!

திருமணம்...

இது கற்பனை அல்ல... நம் வீடுகளில் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பார்க்கும் போது , நம் எல்லோரின் எதிர்பார்ப்புகள் எப்படி வார்த்தைகளாக வருகிறது என்பதை சுட்டிக்காட்டும் ஒரு சிறு உரையாடல் :

மகன்  : பெண் அழகாக இருக்க வேண்டும். நன்கு படித்திருக்க வேண்டும். ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும் ..!

அம்மா : வேலை செய்து அலுத்து விட்டது. மருமகள் வந்ததும் அவளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நன்கு ஒய்வு எடுக்க வேண்டும்!.

அப்பா : வர வர உன் சமையல் நன்றாக இல்லை. வாய்க்கு ருசியாக சமைத்து போடும் பெண்ணாக இருக்க வேண்டும்.!

பாட்டி  : என்னை கோயிலுக்கு அழைத்து போவதற்கும், பேச்சு துணைக்கும் ஏற்றவளாக இருந்தால் நல்லாயிருக்கும்.!

தங்கை : யாருமே என்னை புரிந்துக் கொள்ள வில்லை.. என்னுடைய ரசனைக்கு ஏற்றவாறும், உதவி செய்பவராகவும் ஒரு அண்ணி வேண்டும்.!

இது பெற்றோர்  பார்த்து செய்து முடிக்கும் திருமணம்...., இதுவே  காதல் திருமணமாக இருந்தால் எப்படி இருக்கும்...?

மகன் வீட்டில் உள்ள அனைவரிடமும், "  பெண் ரொம்ப நல்லவள். நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கிறாள்....,  நம் குடும்பத்திற்கு மிகவும் ஏற்றவள்...,  நல்லா  சமைப்பாள்...,  பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகட்டும்.., மற்றவர்களை மதிப்பதாகட்டும்... ஒரு குறையும் சொல்ல முடியாது... எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்...  அவர்கள் குடும்பமும் நல்ல குடும்பம் தான்...! "

இந்த இரு திருமணங்களிலும் பெண்ணின் ஆசையோ, எண்ணமோ, குறிக்கோளோ, உணர்வுகளோ சிந்திக்கப் படவேயில்லை..! ( சிந்தித்தால் தானே மதிக்கப் படுவதற்கு ...)  புது வீடு, புதிய மனிதர்கள், புதிய உறவுகள்.., இவைகளை எதிர்நோக்கும் அந்த பெண்ணின் மனநிலை பற்றி யாருக்கும் கவலை இல்லை. .., முதலில் அவர்கள் அந்த ஆண்மகனின் வாழ்க்கை முழுதும் சமபங்கு ஏற்று , சம உரிமையுடைய ஒரு வாழ்விணையராக  அந்த பெண்  பார்க்க பட வில்லை...!
அவர்களை பொறுத்த மட்டில் வீட்டிற்கு வாங்கப்படும் துணி துவைக்கும் இயந்திரமாகவோ, குளிர்பதனப்  பெட்டியாகவோ,  மாவரைக்கும் இயந்திரமாகவோ தான் பார்க்கப் படுகிறார்கள்..!

Tuesday, 3 March 2015

பெண்கள் இன்னும் ஆண்களின் உடைமைகளா..?

கொடூரமான குற்றத்தை செய்து விட்டு , அதற்கான தண்டனையும் பெற்று, அது நிறைவேற காத்திருக்கும் ஒரு குற்றவாளியால் எப்படி இப்படி பேச முடிகிறது..??? பெண் என்பவள் எப்போதும் உடைமையாகவே பார்க்க படுவதன் விளைவு தான் இது என்று தோன்றுகிறது...! ஆண்கள் இத்தனை மணிக்கு மேல் வெளியில் செல்ல கூடாது .., இந்த மாதிரி தான் ஆடை உடுத்த வேண்டும்... என்று யாரும் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை எனும் போது , பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை நிபந்தனைகள்.. கட்டுபாடுகள்..?  மேலை நாடுகளில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.. அங்கு இது போன்ற குற்றங்கள் நடை பெறுவதில்லையே ..!

" பெண்கள் நாட்டின் கண்கள் "  என்னும் வாசகத்தை நான் என்னுடைய  எட்டு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன்...! ஆனால் குற்றங்கள் இன்னும் அதிகரித்து இருக்கின்றனவே தவிர குறையவில்லை...! எங்கு தவறு நடக்கிறது என்று சிந்தித்தால் , பெண்ணியம் சார்ந்த  அடிப்படை எண்ணமே தவறாகவே உள்ளது நம் நாட்டில்., துகிலுரிக்கப் பட்ட திரௌபதியையும் , தீக்குளிக்க கட்டாயப் படுத்தப் பட்ட சீதையையும் இன்னும் நம் பாடத் திட்டத்தில் வைத்து படித்துக்  கொண்டிருக்கிறோம்...! இதில் என்ன கொடுமை என்றால், இதை இரண்டையும் வலியுறுத்திய ஆண்கள் இருவரும் மிகவும் நல்லவர்களாகவே சித்திரிக்கப் பட்டுள்ளார்கள்...!!! இதை  படிக்கும் ஆண்களுக்கு  சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் தன்னுடைய உடைமை என்று தானே தோன்றும்..?

ஆண்களுக்கு தோன்றும் அத்தனை உணர்வுகளும் பெண்களுக்கும் உண்டு.., அவர்களுக்கு உள்ள அதே கல்வி, குறிக்கோள், முன்னேற்றம் போன்றவற்றில் உள்ள அனைத்து  உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு  ., அவர்கள் ஒரு காட்சி பொருள் அல்ல ..என்ற எண்ணத்தை இனிமேலாவது வலியுறுத்தும் படி நம் பாட திட்டம் முதல் அன்றாடம் நடக்கும் நம் வாழ்வியலையும் சேர்த்து போதிக்க வேண்டும்..  அது மட்டுமல்ல.., இந்த மாதிரி குற்றங்களுக்கு விரைவு நீதி மன்றம் மூலம் விரைவில் வழக்கை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும். தண்டனைகளும் சற்று கடுமையாக்கப் பட வேண்டும்..

Saturday, 28 February 2015

மெக்காவில் கோயில் கட்ட இடம் தாருங்கள்.,
மெதினாவில் கோயில் கட்டுங்கள்.,
வாடிகன் சர்ச்சில் பாதி இடம் கோயில் கட்ட இடம் தாருங்கள்
பிறகு ராமர் கோயில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி நாங்கள் முடிவு செய்கிறோம்.. --  ஆதித்யநாத் யோகி. பி.ஜே.பி.. எம்.பி.

" இந்து கோயில்களாக ஆக்கப்பட்ட புத்த விகாரங்கள்,  சமண கோயில்கள் இருந்த இடங்களை முதலில் நீங்கள்    தாருங்கள் என்று கேட்டால் என்ன செய்வீர்கள்..? "

Thursday, 26 February 2015

கோயில்களில் சிறப்பு சலுகை

இன்று  காலை பிரபல வானொலி அலைவரிசை  நிகழ்ச்சி ஒன்றில்,   திருத்தணி கோயில் நுழைவுச் சீட்டு மோசடியில் சிக்கி ஒரு ஊழியர் பணியிடை நீக்கம் செய்திருப்பதைப்  பற்றி மக்களிடம் கருத்து கேட்கப் பட்டது.. அருமையான நிகழ்ச்சி..!  கோயில் என்றாலே பல மோசடிகள் நடை பெறுகின்றன என்பது தெரிந்திருந்தாலும் , நான்  செல்வதில்லை என்பதால் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் நிகழ்ச்சி முழுதும் கேட்டேன். பெரும்பாலும் பெண்கள் தான் கருத்து சொன்னார்கள்...!  சிறப்பு சலுகை என்ற பெயரில் பணம் கொடுத்து , கடவுளை மிக அருகில் பார்ப்பவர்கள் முதல் கடவுளுக்கு போடப்படும் மாலை கூட பணத்தை கொடுத்தால் பக்தர்களுக்கு போட படுகிறது  வரை சொன்னார்கள்.. இது மட்டுமல்லாமல் ஆடை நன்கு அணித்திருப்பவர்களை பார்த்து மிகவும் மரியாதையாக அழைத்து செல்வது, தரிசனம் முடிந்ததும் பணத்தை பெற்றுக் கொண்டவுடன்,அவர்களை ஒருமையில்  அழைப்பது,விரட்டுவது ஆகியவைகளும் நடை பெறுகிறதாம். இரண்டு, முன்று மணிநேரம் வரிசையில் நின்று சாமி கும்பிட செல்வர்களுக்கு குடிநீர்  வசதி கூட செய்து தரப்பட வில்லையாம்...! இன்னும் சில கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கும், தட்டில் காணிக்கை செலுத்துவதற்கும் கூட வலுக் கட்டாயமாக காசு வசூலிக்கப் படுகிறதாம்.. கடைசியில் பல பேருடைய கோரிக்கை என்னவென்றால் இந்த சிறப்பு சலுகை என்ற பெயரில் பணத்தை கொடுத்து சாமியை அருகில் சென்று கும்பிடுவது (வரிசையில் நிற்காமல்) என்ற முறையை அரசு நீக்க வேண்டும் என்பது தான். ( இதை கூட அரசு தான் நீக்க  வேண்டும். கடவுளிடம் கோரிக்கை வைத்தால் நடக்காது என்பதாலோ..!) 

Thursday, 19 February 2015

மதம்

டெல்லியில் கிருத்துவ தேவாலயங்கள் தாக்கப் படுகின்றன. .. தீக்கரையாக்கப் படுகின்றன... கிருத்துவப் பள்ளி தாக்கப் பட்டுள்ளது..!  பாபர் மசூதி இடிக்கப் பட்டு இருபத்தி முன்று ஆண்டுகள் ஓடி விட்டன...! ஆனால்  இதுவரை யாரும் தண்டிக்கப் படவில்லை..!!! கடவுள் சொன்னதாகக் கூறிக் கொண்டு ஒரு நாட்டின் மீதே போர் தொடுத்து, பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்தது ஒரு வல்லரசு நாடு.., மதம் என்ற பெயரில் பல தரப் பட்ட மதத்தை சேர்ந்தவர்களை பிடித்து வைத்துக் கொண்டு மிகவும் கொடூரமான முறையில் கொன்று கொண்டிருக்கிறது ஒரு தீவிரவாத அமைப்பு.. இன அழிப்பு என்ற முறையில் ஒரு இனத்தையே அழிக்கும் வேலையில் இறங்கி இன்னமும் அழித்துக் கொண்டிருக்கிறது அண்மை நாடு..!  

இதையெல்லாம் செய்பவர்கள் கடவுள் மறுப்பாளர்களோ , மத எதிர்ப்பாளர்களோ , பகுத்தறிவாளர்களோ மூட நம்பிக்கையை ஒழிக்க முயல்பவர்களோ அல்ல...!!! இதை அனைத்தையும் செய்பவர்கள் கடவுளையும், மதத்தையும் மதிப்பவர்கள்..மதம் மனிதனை கட்டு படுத்துகிறது , ஒழுக்கத்தை போதிக்கிறது,. மனிதத்தை வளர்கிறது என்பது உண்மை என்றால்,  இது எப்படி உலகெங்கிலும் நடந்துக் கொண்டிருக்கிறது? மதத்தை தூக்கி எறிந்தால் மட்டுமே  மனிதநேயம் தழைத்தோங்கும்...! 

Wednesday, 18 February 2015

தாய் மொழி

சில தினங்களுக்கு முன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் ஒரு சிறுவன் , தன் தாய் மொழியான இந்தியைப் பற்றியும் , அங்கு அவனுடைய நண்பர்கள் பற்றியும்  பேசிக் கொண்டிருந்தான். மற்ற நால்வரும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதன் பிறகு மற்றொருவன் அவனுடைய தாய்  மொழி தெலுங்கைப் பற்றியும், திரைப் படத்தைப் பற்றியும் கூற  , இன்னொரு தெலுங்கு பேசும் சிறுவன் அவனை ஆமோதித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்த சிறுவன் அவனுடைய தாத்தா , பாட்டி பற்றியும், கேரளத்தில் உள்ள அவர்களின் வீடு பற்றியும், அந்த ஊரின் சிறப்புகளையும் கூறிக் கொண்டிருந்தான். கடைசியில் இருந்த சிறுவன் என பேசுவதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.. அவன் பக்கத்தில் போய் விசாரித்துப் பார்த்தப் பிறகு தான் தெரிந்தது ... அவன் தமிழ் சிறுவன்....! என்ன ஒரு கொடுமை.. அவனுக்கு தமிழும் தெரியவில்லை. தமிழ் திரைப் படங்கள் பார்த்ததில்லை. அவர்கள் உறவினர்கள் பற்றி தெரியவில்லை. கிராமத்தில் இருக்கும் தன தாத்தா , பாட்டியுடன் பேச முடிவதில்லை...ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் அவர்களிடம் பேசுவதில்லை என்ற
 
எனக்கு அச்சிறுவனைப் பார்க்கும் போது மிகவும் பாவமாக இருந்தது. அது அவனுடைய தவறு இல்லையே...! தகவல் தொழில் நுட்பத்தில் பொறியாளர்களாக பணி  புரியும் பெற்றோர்கள்.., ஆங்கிலம் மட்டுமே பேசப்படும் பள்ளியில் பயில்கிறான்.குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பிலும் பல மொழி பேசும் நண்பர்களுடன் விளையாடுவதால் ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற மனப்பான்மையில் வளர்க்கப் படுகிறான். வீட்டிலும் தமிழ் பேசுவதில்லை...! எங்கே போய்  கொண்டிருக்கிறது தமிழ்ச  சமூகம்...? அவனுடைய பெற்றோர்கள் இதைப் பற்றி கவலை படவில்லை என்பதால் தானே இப்படி ... எப்படி இவர்களால் முடிகிறது?  குழந்தைகளுக்கு  அவர்களுடைய தாய் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அவர்களின் உறவினர்கள், சொந்த ஊர், அவர்கள் சாந்த சமூகம்  பற்றிய சிறப்புகளை கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையல்லவா..!  தன் தாய் மொழி தெரியாமல் பல  மொழிகள் தெரிந்திருப்பதால்  என்ன பயன்..? எத்தனை வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில் அந்த சிறுவனின் முகம் இயலாமையால் வாடி இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை..!


Thursday, 12 February 2015

இந்து ஆன்மீக சேவை கண்காட்சி

இந்து ஆன்மீக சேவை கண்காட்சி என்ற பெயரில் இந்த ஒரு வார காலமாக இவர்கள் நடத்தும் கூத்து இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது? பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் , சிறுமிகள் ஆகியோரை அழைத்து, எல்லாவற்றிற்கும் வழிபாடு, பூஜை நடத்தி, இளம் பிஞ்சுகளின் மனதில் மதம் என்ற நஞ்சை புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லா மதத்தினரும் பயிலும் பள்ளியில் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரில் நடக்கும் கண்காட்சிக்கு  ( உண்மையில் பிரச்சாரம் ) மாணவர்களை அழைத்துக் கொண்டு போக முடியும்? இதற்கு பள்ளி நிர்வாகமும் உடந்தையாக இருக்கிறது.

பாத பூஜை : ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்ய வைக்கப்  படுகிறார்கள்... மதிப்பு, மரியாதை என்பது நடந்துக் கொள்ளும் விதத்தில் அல்லவா  இருக்கிறது...!

கன்னியா  வந்தனம் : பெற்றோர்கள் பெண் குழந்தைக்களுக்கு செய்யும் பூஜையாம்...பெண் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியையும், யாரையும் சாராமல் தன் சுய சம்பாத்தியத்தில் வாழும் சுழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமே... இதற்கு எதற்கு ஒரு வழிபாடு.. பூஜை?

கங்கா வந்தனம் : நீர், நிலம் மாசு அடைவதைத் தவிர்க்க இந்த வழிபாடாம்...நீர், நிலம் ஏன்  மாசு அடைகிறது என்பதை விளக்கி, அதை தவிர்க்க கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு அதற்கும் ஒரு பூஜை..!

கோ பூஜை: இது மற்ற ஜீவ ராசிகளை மதித்து போற்றுவது என்று சொல்கிறார்கள்.. மற்ற ஜீவ ராசிகளில் பசு மட்டும் தானா  இருக்கிறது.. மற்ற விலங்குகளையும் போற்றி வழிபடலாமே..?

இதை விட எல்லாம் மிகவும் கொடுமையானது என்னவென்றால் 1008 மாணவர்கள் 1008 மாணவிகளுக்கு பூஜை செய்து அண்ணன்- தங்கை உறவினை மேம்படுத்திக் கொண்டார்களாம்...அண்ணன்-தங்கை உறவை சொல்லிக் கொடுப்பதற்கு பூஜை நடத்தி தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? நட்பு, சகோரத்துவம், அன்பு, பிறரை மதித்தல், ஆகியவற்றிற்கெல்லாம் வழிபாடு, பூஜை என்பதை இந்த இளம் வயதினருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்களின் தன்னம்பிக்கை குறையாதா..? ஆளுமை எப்படி வளரும்? இது என்ன அறிவியல் கண்காட்சியா ..., பள்ளி  மாணவர்களை பங்கு கொள்ள செய்வதற்கு..? மதம் என்ற போர்வையில் வளரும் தலைமுறையினரை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் இந்த போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது..மனிதநேயத்தைப் பற்றி போதிக்க வேண்டிய பருவத்தில் மதத்தை போதித்தால் எப்படி வருங்காலம் செழிப்பாக இருக்க முடியும்?