Saturday, 28 February 2015

மெக்காவில் கோயில் கட்ட இடம் தாருங்கள்.,
மெதினாவில் கோயில் கட்டுங்கள்.,
வாடிகன் சர்ச்சில் பாதி இடம் கோயில் கட்ட இடம் தாருங்கள்
பிறகு ராமர் கோயில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி நாங்கள் முடிவு செய்கிறோம்.. --  ஆதித்யநாத் யோகி. பி.ஜே.பி.. எம்.பி.

" இந்து கோயில்களாக ஆக்கப்பட்ட புத்த விகாரங்கள்,  சமண கோயில்கள் இருந்த இடங்களை முதலில் நீங்கள்    தாருங்கள் என்று கேட்டால் என்ன செய்வீர்கள்..? "

Thursday, 26 February 2015

கோயில்களில் சிறப்பு சலுகை

இன்று  காலை பிரபல வானொலி அலைவரிசை  நிகழ்ச்சி ஒன்றில்,   திருத்தணி கோயில் நுழைவுச் சீட்டு மோசடியில் சிக்கி ஒரு ஊழியர் பணியிடை நீக்கம் செய்திருப்பதைப்  பற்றி மக்களிடம் கருத்து கேட்கப் பட்டது.. அருமையான நிகழ்ச்சி..!  கோயில் என்றாலே பல மோசடிகள் நடை பெறுகின்றன என்பது தெரிந்திருந்தாலும் , நான்  செல்வதில்லை என்பதால் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் நிகழ்ச்சி முழுதும் கேட்டேன். பெரும்பாலும் பெண்கள் தான் கருத்து சொன்னார்கள்...!  சிறப்பு சலுகை என்ற பெயரில் பணம் கொடுத்து , கடவுளை மிக அருகில் பார்ப்பவர்கள் முதல் கடவுளுக்கு போடப்படும் மாலை கூட பணத்தை கொடுத்தால் பக்தர்களுக்கு போட படுகிறது  வரை சொன்னார்கள்.. இது மட்டுமல்லாமல் ஆடை நன்கு அணித்திருப்பவர்களை பார்த்து மிகவும் மரியாதையாக அழைத்து செல்வது, தரிசனம் முடிந்ததும் பணத்தை பெற்றுக் கொண்டவுடன்,அவர்களை ஒருமையில்  அழைப்பது,விரட்டுவது ஆகியவைகளும் நடை பெறுகிறதாம். இரண்டு, முன்று மணிநேரம் வரிசையில் நின்று சாமி கும்பிட செல்வர்களுக்கு குடிநீர்  வசதி கூட செய்து தரப்பட வில்லையாம்...! இன்னும் சில கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கும், தட்டில் காணிக்கை செலுத்துவதற்கும் கூட வலுக் கட்டாயமாக காசு வசூலிக்கப் படுகிறதாம்.. கடைசியில் பல பேருடைய கோரிக்கை என்னவென்றால் இந்த சிறப்பு சலுகை என்ற பெயரில் பணத்தை கொடுத்து சாமியை அருகில் சென்று கும்பிடுவது (வரிசையில் நிற்காமல்) என்ற முறையை அரசு நீக்க வேண்டும் என்பது தான். ( இதை கூட அரசு தான் நீக்க  வேண்டும். கடவுளிடம் கோரிக்கை வைத்தால் நடக்காது என்பதாலோ..!) 

Thursday, 19 February 2015

மதம்

டெல்லியில் கிருத்துவ தேவாலயங்கள் தாக்கப் படுகின்றன. .. தீக்கரையாக்கப் படுகின்றன... கிருத்துவப் பள்ளி தாக்கப் பட்டுள்ளது..!  பாபர் மசூதி இடிக்கப் பட்டு இருபத்தி முன்று ஆண்டுகள் ஓடி விட்டன...! ஆனால்  இதுவரை யாரும் தண்டிக்கப் படவில்லை..!!! கடவுள் சொன்னதாகக் கூறிக் கொண்டு ஒரு நாட்டின் மீதே போர் தொடுத்து, பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்தது ஒரு வல்லரசு நாடு.., மதம் என்ற பெயரில் பல தரப் பட்ட மதத்தை சேர்ந்தவர்களை பிடித்து வைத்துக் கொண்டு மிகவும் கொடூரமான முறையில் கொன்று கொண்டிருக்கிறது ஒரு தீவிரவாத அமைப்பு.. இன அழிப்பு என்ற முறையில் ஒரு இனத்தையே அழிக்கும் வேலையில் இறங்கி இன்னமும் அழித்துக் கொண்டிருக்கிறது அண்மை நாடு..!  

இதையெல்லாம் செய்பவர்கள் கடவுள் மறுப்பாளர்களோ , மத எதிர்ப்பாளர்களோ , பகுத்தறிவாளர்களோ மூட நம்பிக்கையை ஒழிக்க முயல்பவர்களோ அல்ல...!!! இதை அனைத்தையும் செய்பவர்கள் கடவுளையும், மதத்தையும் மதிப்பவர்கள்..மதம் மனிதனை கட்டு படுத்துகிறது , ஒழுக்கத்தை போதிக்கிறது,. மனிதத்தை வளர்கிறது என்பது உண்மை என்றால்,  இது எப்படி உலகெங்கிலும் நடந்துக் கொண்டிருக்கிறது? மதத்தை தூக்கி எறிந்தால் மட்டுமே  மனிதநேயம் தழைத்தோங்கும்...! 

Wednesday, 18 February 2015

தாய் மொழி

சில தினங்களுக்கு முன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் ஒரு சிறுவன் , தன் தாய் மொழியான இந்தியைப் பற்றியும் , அங்கு அவனுடைய நண்பர்கள் பற்றியும்  பேசிக் கொண்டிருந்தான். மற்ற நால்வரும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதன் பிறகு மற்றொருவன் அவனுடைய தாய்  மொழி தெலுங்கைப் பற்றியும், திரைப் படத்தைப் பற்றியும் கூற  , இன்னொரு தெலுங்கு பேசும் சிறுவன் அவனை ஆமோதித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்த சிறுவன் அவனுடைய தாத்தா , பாட்டி பற்றியும், கேரளத்தில் உள்ள அவர்களின் வீடு பற்றியும், அந்த ஊரின் சிறப்புகளையும் கூறிக் கொண்டிருந்தான். கடைசியில் இருந்த சிறுவன் என பேசுவதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.. அவன் பக்கத்தில் போய் விசாரித்துப் பார்த்தப் பிறகு தான் தெரிந்தது ... அவன் தமிழ் சிறுவன்....! என்ன ஒரு கொடுமை.. அவனுக்கு தமிழும் தெரியவில்லை. தமிழ் திரைப் படங்கள் பார்த்ததில்லை. அவர்கள் உறவினர்கள் பற்றி தெரியவில்லை. கிராமத்தில் இருக்கும் தன தாத்தா , பாட்டியுடன் பேச முடிவதில்லை...ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் அவர்களிடம் பேசுவதில்லை என்ற
 
எனக்கு அச்சிறுவனைப் பார்க்கும் போது மிகவும் பாவமாக இருந்தது. அது அவனுடைய தவறு இல்லையே...! தகவல் தொழில் நுட்பத்தில் பொறியாளர்களாக பணி  புரியும் பெற்றோர்கள்.., ஆங்கிலம் மட்டுமே பேசப்படும் பள்ளியில் பயில்கிறான்.குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பிலும் பல மொழி பேசும் நண்பர்களுடன் விளையாடுவதால் ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற மனப்பான்மையில் வளர்க்கப் படுகிறான். வீட்டிலும் தமிழ் பேசுவதில்லை...! எங்கே போய்  கொண்டிருக்கிறது தமிழ்ச  சமூகம்...? அவனுடைய பெற்றோர்கள் இதைப் பற்றி கவலை படவில்லை என்பதால் தானே இப்படி ... எப்படி இவர்களால் முடிகிறது?  குழந்தைகளுக்கு  அவர்களுடைய தாய் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அவர்களின் உறவினர்கள், சொந்த ஊர், அவர்கள் சாந்த சமூகம்  பற்றிய சிறப்புகளை கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையல்லவா..!  தன் தாய் மொழி தெரியாமல் பல  மொழிகள் தெரிந்திருப்பதால்  என்ன பயன்..? எத்தனை வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில் அந்த சிறுவனின் முகம் இயலாமையால் வாடி இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை..!


Thursday, 12 February 2015

இந்து ஆன்மீக சேவை கண்காட்சி

இந்து ஆன்மீக சேவை கண்காட்சி என்ற பெயரில் இந்த ஒரு வார காலமாக இவர்கள் நடத்தும் கூத்து இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது? பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் , சிறுமிகள் ஆகியோரை அழைத்து, எல்லாவற்றிற்கும் வழிபாடு, பூஜை நடத்தி, இளம் பிஞ்சுகளின் மனதில் மதம் என்ற நஞ்சை புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லா மதத்தினரும் பயிலும் பள்ளியில் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரில் நடக்கும் கண்காட்சிக்கு  ( உண்மையில் பிரச்சாரம் ) மாணவர்களை அழைத்துக் கொண்டு போக முடியும்? இதற்கு பள்ளி நிர்வாகமும் உடந்தையாக இருக்கிறது.

பாத பூஜை : ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்ய வைக்கப்  படுகிறார்கள்... மதிப்பு, மரியாதை என்பது நடந்துக் கொள்ளும் விதத்தில் அல்லவா  இருக்கிறது...!

கன்னியா  வந்தனம் : பெற்றோர்கள் பெண் குழந்தைக்களுக்கு செய்யும் பூஜையாம்...பெண் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியையும், யாரையும் சாராமல் தன் சுய சம்பாத்தியத்தில் வாழும் சுழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமே... இதற்கு எதற்கு ஒரு வழிபாடு.. பூஜை?

கங்கா வந்தனம் : நீர், நிலம் மாசு அடைவதைத் தவிர்க்க இந்த வழிபாடாம்...நீர், நிலம் ஏன்  மாசு அடைகிறது என்பதை விளக்கி, அதை தவிர்க்க கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு அதற்கும் ஒரு பூஜை..!

கோ பூஜை: இது மற்ற ஜீவ ராசிகளை மதித்து போற்றுவது என்று சொல்கிறார்கள்.. மற்ற ஜீவ ராசிகளில் பசு மட்டும் தானா  இருக்கிறது.. மற்ற விலங்குகளையும் போற்றி வழிபடலாமே..?

இதை விட எல்லாம் மிகவும் கொடுமையானது என்னவென்றால் 1008 மாணவர்கள் 1008 மாணவிகளுக்கு பூஜை செய்து அண்ணன்- தங்கை உறவினை மேம்படுத்திக் கொண்டார்களாம்...அண்ணன்-தங்கை உறவை சொல்லிக் கொடுப்பதற்கு பூஜை நடத்தி தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? நட்பு, சகோரத்துவம், அன்பு, பிறரை மதித்தல், ஆகியவற்றிற்கெல்லாம் வழிபாடு, பூஜை என்பதை இந்த இளம் வயதினருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்களின் தன்னம்பிக்கை குறையாதா..? ஆளுமை எப்படி வளரும்? இது என்ன அறிவியல் கண்காட்சியா ..., பள்ளி  மாணவர்களை பங்கு கொள்ள செய்வதற்கு..? மதம் என்ற போர்வையில் வளரும் தலைமுறையினரை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் இந்த போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது..மனிதநேயத்தைப் பற்றி போதிக்க வேண்டிய பருவத்தில் மதத்தை போதித்தால் எப்படி வருங்காலம் செழிப்பாக இருக்க முடியும்?