Tuesday, 26 May 2015

நினைவேந்தல்

நம்மிடையே பலருக்கு இந்த குலதெய்வ வழிபாடு  என்பது குறித்த சரியான தெளிதல் இல்லை என்பது என் கருத்து. முன்னோர்களை வழிபடுதல் என்பது சரி தானே என்று சில முற்போக்குவாதிகள் கூட கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இதை வலியுறுத்தவும் செய்கிறார்கள்..! இந்த வாதம் எப்படி சரியாக இருக்க முடியும்..? நாம் காணாத கடவுளை வணங்குவதை விட நம்முடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதரை வணங்குதல் சரி என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளுதல் ஒரு வகையில் அறியாமை தான்..!

அது நம் முன்னோர்கள் ஆக இருந்தாலும் சரி ..., ஒரு குழுவின் தலைவனாகவோ அல்லது ஒரு இனத்தின் தலைவனாகவோ இருந்தாலும் சரி.., அவர்களை நினைவு கூறுதல் என்பது சரியான ஓன்று. அது நம் சந்ததியினருக்கும், அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் அவரைப் பற்றிய செய்திகள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி என்பது வரை இது சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.. இது எப்போது வழிபாடு என்று ஆகிறதோ அப்போதே மூட நம்பிக்கையில் சேர்ந்து விடும்..!

இப்படி தானே புத்தர், ஏசு, மகாவீரர், நபிகள் நாயகம் போன்றவர்களின் நெறிகள் மதமாக்கப் பட்டன்...! இதை தெரிந்து தான் தந்தை பெரியார் அவர்கள், அவரின் ஒவ்வொரு சிலையின் கீழும் கடவுள் மறுப்பு கொள்கையை பதிவு செய்ய சொன்னார்கள்..! சற்று சிந்தித்துப்  பார்த்தால் உண்மை விளங்கும். இதை நாம் ஏற்றுக் கொண்டோமானால் நாளை காந்தி மதம், ஐயனார் மதம், வீரனார் மதம் என்று பல மதங்கள் பெருகிக் கொண்டே போகும் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறதே..! மக்களால் இதை தாங்கி கொள்ள முடியுமா..? அப்படியே முடியுமென்றாலும் நம் பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஒன்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..? ஒருவரிடம் நாம் வைத்திருக்கும் மரியாதை, மதிப்பு பக்தியாக மாறி விட நாம் அனுமதிக்க கூடாது.!

Thursday, 21 May 2015

ஏற்றுக்கொள்ளுதல் என்ற பண்பு

படிப்பு, பணம், ஆடம்பர வாழ்க்கை என்பதில் மட்டுமே  நம்முடைய தேடல் அனைத்தும் சென்றதன் விளைவு வாழ்வியலை கற்க தவறி விட்டோமே என்று தோன்றுகிறது..!  ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஒரு பண்பு, விட்டுக்கொடுத்தல் என்ற குணங்கள் குறைந்துக் கொண்டே வருகிறது நம் சமூகத்தில்..! இன்றைய நாளிதழில் நான் படித்த (முதல் பக்கத்திலேயே ..) செய்தி தான் எனக்கு இந்த உணர்வை தூண்டி இந்த பதிவை பதிவு செய்ய காரணமாக அமைந்தது..!

மதுரையில் நேற்று நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு.., ஒரு பெண் தன்னுடன் வாழ பிடிக்காத கணவரையும், அவர் வீட்டரையும் உயிருடன் எரித்து கொலை செய்தது...ஏமாற்றமும், வெறுப்பும், சினமும் சேர்ந்து அந்த பெண்ணை பழிவாங்க தூண்டியிருக்கிறது.! இதுவும் ஒரு வகையில் அறியாமை தான்..!

இது தான் உண்மை, இது தான் இயல்பு என்பதை உணர்ந்து, அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது தான் இதற்கு காரணம்..! பிடிக்காதவருடன்  வாழ்வதை விட பிரிந்து வந்து தனியாக வாழலாம் அல்லது புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.. இதை எல்லாம் விட இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதாவது நம்மால் முடிந்தயளவு பங்களிக்க வேண்டும் என்ற உணாவு இல்லாமல் போயிருக்கிறதே...??!!   தன்னை விரும்பாத பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்றுவது, இணையர்களிடையே கருத்து வேறு பாடு காரணமாக தற்கொலை செய்து கொள்ளுதல், பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், எதையும் தாங்கிக் கொள்ளும் மனதிடம் இல்லாமை மற்றும் பிரச்சனைக்களை கையாளும் விதம் தெரியாமல் முடங்கி, சோர்ந்து போதல்  போன்றவைகள்அதிகமாகிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது..,  இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாழ்வியலைப் பற்றிய ஒரு புரிந்துணர்வை சிறு வயதிலேயே கல்வி மூலம் கொடுப்பது இக்காலத்தின் கட்டாயமாகிறது..!

  

Friday, 8 May 2015

.மகிழ்ச்சி

காலை எழுந்ததும், கையில் செய்தித்  தாளை எடுத்து  படித்துக் கொண்டு , இருக்கும் இடத்தில் காலை காபியை எதிர் பார்க்கும் ஆண்களா நீங்கள் .... அவர்களுக்காக.: 

ஒன்றும் பெரிதாக வேண்டாம்... சிறிய சிறிய வேலைகள் தான்.. உங்கள் இணையர்களுக்கு உதவி செய்து பாருங்கள்.. அவர்கள் முகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று  ..! என்ன தான் நேர மேலாண்மை, திட்டமிடல்  மன அழுத்தத்தை குறைக்குமென்றாலும்,  காலை  நேர பரபரப்பு பெண்களுக்கு ஒரு பெரிய தலை வலி தான்..!  முன்பெல்லாம் பெண்கள் எழுந்தவுடன் வேலையை கவனிப்பார்கள்.. ஆனால் இப்போது நடைப் பயிற்சி என்பது அத்தியாவசியமாகி விட்டது. பயிற்சியை முடித்து, மிகவும் சோர்வுடன் வேலையை ஆரம்பிக்கும் போது யாராவது சிறு  உதவி செய்தால் கூட அது மிகப் பெரிய உதவியாக தெரியும்..!

காலை சிற்றுண்டி, மதிய உணவு, மதிய உணவை  டப்பாக்களில் கட்டுதல் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களை ஆயுத்தப் படுத்துவது என்னும்  பணி  சுமையினால் கோபம், எரிச்சல் என  மன அழுத்தத்திற்கு ஆளாதல் என்பது இயல்பு.. ! இந்த நேரத்தில் காய்கறி நறுக்கிக்  கொடுப்பது, பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களை தயார் படுத்துவது, சீருடை எடுத்து வைத்தல், தண்ணீர்  பாட்டில்களில் நீர் நிரப்பி வைத்தல்  என சிறு சிறு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளலாமே...! இதனால் இணையர்களுக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது..முயற்சி செய்து பாருங்கள்...மகிழ்ச்சியாக உணர்வீர்கள்..!!!!