Wednesday, 30 November 2016

குழந்தைகள் வளர்ப்புமுறை


இன்றைய குழந்தைகள் வருங்கால தூண்கள். அவர்களை பக்குவப்  படுத்துவது நம் அனைவருடைய  கடமை.. வளரும் பருவத்திலிருக்கும் அவர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டுப் போய் சேர்ப்பது அத்தியாவசியமான ஓன்று. ஆதலால்,   நம் குழந்தைகளுக்கு காக்கை, குருவி கதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், வரலாற்று உண்மைகளை கதைகளாக சொல்லி புரிய வைத்தல் மிக முக்கியம்..!

இப்போதுள்ள குழந்தைகள் அதி புத்திசாலிகள்... சரியாகப் புரிந்துக் கொண்டு நம்மையே நிறைய கேள்வி கேட்பார்கள் ... அதற்கு சரியான பதிலை, கருத்தை சொல்லி தெளிவுப் படுத்துவது மிக முக்கியம். இதற்காக நாம் அதிகம் மெனக்கடத் தான் வேண்டும். நிறைய படிக்கவேண்டும். தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்..அதை அவர்களுக்கு  புரியும் விதத்தில் தெளிவாக சொல்ல வேண்டும் என்ற நிறைய விசயங்கள் இதில் இருக்கின்றன.!

நம்முடைய மொழி, இனம் ,பண்பாடு சார்ந்த செய்திகளை  அவர்கள் புரிந்துக் கொள்ளும் படி கதைகளாக பயிற்றுவித்தோமானால், சிறு வயதிலேயே, இனப்பற்று, மொழிப்பற்று, அவரவர் இனத்தை சார்ந்த வரலாறு என அனைத்தும் அவர்கள் மனதில் எளிதில் பதிந்து விடும். மேலும் உலக வரலாறு, சீர்திருத்தங்கள், அறிவியல் முன்னேற்றங்கள், மனிதநேயம்  என ஒவ்வொரு நாளும் ஓன்று வீதம் சொல்லி வளர்ப்பது , பிற்காலத்தில் அக்குழந்தைகள் தன்னலமின்றி , சமூக அக்கறையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும்.!

அன்பு, பரிவு, மனிதம், மனிதநேயம், மக்கள் இவையே முக்கியம் , இவைகளை சார்ந்து தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்ற் வாழ்வியலையும்  கற்றுக்கொடுப்போம்.!  

Thursday, 24 November 2016

பெண்களுக்கெதிரான வன்முறை.

ஒரு பெண்ணை சகதோழியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை ஆண்பிள்ளைகளுக்கு பெண் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்... ஒரு ஆண் அதாவது அப்பா சொல்லித்தருவதை விட ஒரு தாயால் இந்த உணர்வை துல்லியமாக  ஊட்ட முடியும். ஏனென்றால்,  தான் உணர்ந்த அனுபவம் அதற்கு மிகவும் கை கொடுக்கும். பாலியல் சமத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.!

சிறு வயதில் இந்த உணர்வை ஊட்டி விட்டால், எக்காலத்திலும் அந்த ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் மேல் எந்தவொரு இழிவானப் பார்வையும் அண்டாது.. அதை அனுமதிக்கவும் மாட்டார்கள். அவள் என்னுடைய தோழி என்று நினைக்கும்போது எங்கிருந்து வரும் வன்முறை...? பொதுவாக பெண்களை தங்கள் உடைமையாக ஆண்கள் பார்ப்பதினால் தான் பொறாமை, வக்கிரம், அடக்குமுறை என கடைசியில் வன்முறையாக வெளிபடுகிறது.!

மேலும் இன்றைய காலக்கட்டத்தில்  பெண்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியமாகிறது. பெற்றோர்கள் இதற்கு துணை நின்று உதவ வேண்டியது அவர்களின் கடமையாகும். பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிப்போம்.!

#நவம்பர்25

#பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்புத்தினம்.

இடைத்தேர்தல் சொல்லும் அபாயக்குறி.!

அரவக்குறிச்சி   -  3,162
தஞ்சாவூர்           -   3,806
திருப்பரங்குன்றம்   -  6,930

மொத்தம் 13,898.

இவை, தமிழகத்தில் பா,ஜ.க. மூன்று தொகுதிகளில் பெற்ற  வாக்குகள்.  இக்கட்சி டெபாசிட் இழந்து விட்டது என்று நாம் ஒருபுறம் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.!

கால் பதிக்கவே முடியாத ஒரு மாநிலத்தில் , மூன்று தொகுதியில் மட்டும் அக்கட்சிக்கு வாக்களிக்க கிட்டத்தட்ட பதினான்காயிரம் பேர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒட்டு மொத்த தமிழகத்தில் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கும் குணமுள்ள காவிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.!

பெரியார் மண் இது ... அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது  என்று நாம் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்பதை தான் இந்த வாக்குகள் நமக்கு சொல்கின்றன. இப்போதே கொங்கு மண்டலம் காவி மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம் இனப்பற்று,மொழிப்பற்றை முற்றிலும் இழக்க வைத்துவிடும் தந்திரம் காவிகளுக்கு உண்டு. நாம் எல்லோரும் இந்த விடயத்தில் ஒற்றுமையுடன் செயல் பட்டு , தமிழகத்தில் காவிகள்  கூடாரம்  போட்டுவிட அனுமதித்து விடக்  கூடாது என்பதில்  உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஏற்கனவே ஜாதிகளால் பிளவுண்ட நாம் மதத்தாலும் பிளவு படும் நிலைமையை ஏற்றுக் கொண்டோமானால், மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் மக்களே... எச்சரிக்கையுடன் செயல் படுவோம்.!



Wednesday, 23 November 2016

மனிதர்களின் மனம்.

சில உணர்வுப்பூர்வமான செய்திகளும், அதை சொல்பவர்களும் நம் மனதில் "பச் " என்று ஒட்டிக் கொள்கிறார்கள்.!

நேற்று பேருந்தில் வரும்போது ,  ஒரு பெண்  நுங்கம்பாக்கம் நிறுத்தத்தில் ஏறி என் பக்கத்தில் வந்து அமர்ந்தார் . கூடவே அவரின் நண்பர் நின்றுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கோமதி அக்கா என்பவரின் பேச்சு வந்தது... பொதுவாகவே எனக்கு ஜன்னலோர இருக்கை  மிகவும் பிடிக்கும்.... வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவேன்... நேற்று அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது...மனம் சாலையில் லயிக்கவில்லை... அவர்களின் பேச்சில் ஆழ்ந்தது.. அப்பெண் தன்  நண்பரிடம்  சோகம் தோய்ந்தக் குரலில், ' நாளை கோமதி அக்கா வரமாட்டார்கள்' என்றார். அதற்கு அந்த நபர், 'ஏன்? எங்கேயாவது வெளியில் போறாங்களா?' என்றார். உடனே அப்பெண், ' இல்லை.. நாளை அவங்களோட வீட்டுக்காரரோட நினைவுநாள் .. பாவம். போன வருசம் தான் இறந்தார்.. மழையில் அந்த அக்கா பட்ட கஷ்டம் இருக்கே.. அதை இப்ப நினைச்சாலும் மனசு கஷ்டமா இருக்கு... மழை கொட்டோகொட்டுனு கொட்டியப்ப தான் அவர் ஹாஸ்பிடலில் இருந்தார்...ஒரு வாரம் வரைக்கும் எவ்வளோவோ டிரீட்மெண்ட் கொடுத்து பாத்தாங்க... ரொம்ப அதிகமான குடிப்பழக்கம்... ஒன்னும் பண்ண முடியல...இறந்துட்டாரு.. (இந்த பாழாய்ப் போன குடிப்பழக்கம் தான் எத்தனை குடும்பங்களை சீரழித்திருக்கிறது...!  :-( )  பாடிய எங்கே எடுத்துக்கிட்டு போறதுனே தெரியாம அந்த அக்கா தவிச்சாங்க .. பாருங்க... கொடுமை சதிஷ்..! (அந்த நண்பரின் பெயர் போலும்).' ,  அப்போது தான்  திரும்பி, அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்தேன்... உடனே அந்த சகோதரி, இலேசாக சிரித்துவிட்டு, மீண்டும் தொடர்ந்தார்.' வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு.. கட்டில் மேலே, இன்னொரு கட்டில் போட்டு அதில் அவரை படுக்க வைச்சு, அந்த மழையிலே எங்கேயோ  எல்லாம் அலைஞ்சு, திரிஞ்சு,  பணத்தை ரெடி பண்ணி அடக்கம் பண்ணாங்க..பாருங்க...அதை இப்ப நினைச்சாலும் உடமெல்லாம் சிலிர்க்குது' என்றார். உடனே நான் , ' இப்போது அவங்க எப்படி இருக்காங்க.' என்றேன். ' இரண்டு குழந்தைங்க.. export கம்பெனில வேலை செய்றாங்க... எப்படியோ கஷ்டப்பட்டு தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க.! ' என்றார். 

பிறகு இருவரும் மந்தைவெளியில் இறங்கி விட்டார்கள்.


அச்செய்தியை கேட்டதிலிருந்து, இந்த நிமிடம் வரை, அந்த கோமதி அக்கா என்பவரின் நினைவு வைத்துக் கொண்டே இருக்கிறது ... அவரை பார்க்கவில்லை என்றாலும், அவரைப்பற்றி சொன்ன , இந்த சகோதரியின் முகம் மனதில் பதிந்து விட்டது.!

பேருந்துகளில், ரயில்களில் என எவ்வளோவோ பேர்களை நாம் சந்திக்கிறோம்.. ஆனால், சிலரின் பேச்சு, அவர்கள் சொல்லும் செய்திகள் மட்டும் நம் மனதை விட்டு அகலுவதே இல்லை.!!! :-(

Friday, 18 November 2016

தற்போது பெண்களின் நிலைமை.!

உண்மையில் பெண்களின் நிலைமை தான் இந்த ஒரு வார காலமாக பெரும் சிக்கல்..... என்ன சமைப்பது.. இருக்கிறதை வைத்து பிள்ளைகளுக்கு என்ன மதிய உணவு கொடுப்பது... மாலை பள்ளியிலிருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு என்ன சிற்றுண்டி செய்வது என்பது தான் அது.!

செலவு செய்ய கையில் காசில்லாமல், அதே சமயம் சத்துள்ள சமையல் செய்வது என்பது அனைத்து பெண்களுக்கும் இப்போதுள்ள தலைவலி.! 

சகோதரி ஒருவரின் புலம்பல், குமுறல்...
' எப்படியோ அட்டையை வைத்து, மளிகை, காய்கறிகள், பழங்கள்,பெட்ரோல் , பிள்ளைகளின் டியூஷன் பீஸ் என்று ஒப்பேத்தியாச்சி... ஆனால் இந்த வாட்டர்கேன் போடற அண்ணனுக்கு தான் ஒரு வாரமா காசு கொடுக்கமுடியல... என்னைக்கு தண்ணீர் கொடுக்காமல் நிறுத்த போகிறாரோ... தெரியல.! '

சிறு வணிகம் சிதைந்து, பெரு வணிகம் பெருக , மக்களின் வாழ்வாதாரம் முடங்க வைத்தப்  பெருமை மோடியையே சாரும்.!!! :-(




Tuesday, 15 November 2016

பணத்தட்டுப்பாடு.!

ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் வங்கியில் பணம் மாற்ற நாங்கள் வரிசையில் நின்றபோது , எங்களுக்கு முன்னால் ஒரு குடும்பம் நின்றிருந்தது... கணவன், மனைவி, 20 வயதில் ஒரு மகன், 15, வயதை ஒத்த ஒரு மகள் மற்றும் 10 வயதில் ஒரு மகன் நின்றிருந்தார்கள்.. அவர்கள் முறை வந்ததும், பணத்தையும், ஆதார் அட்டையின் நகல்  மற்றும் புரத்திச் செய்த விண்ணப்பத்தையும் கொடுத்தார்கள்... அதற்கு அந்த காசாளர் இரண்டு இரண்டாயிரம் தாள் தான் கொடுக்க முடியுமென்றார்..அதற்கு, அக்குடும்பத்தின் தலைவர்  உடனே,' கொடுங்க சார், எப்படி கொடுத்தாலும் பராவல... மாத்திக் கொடுத்தா  போதும் ' என்றார்.(எல்லோரையும்  போல் மிகவும் சிரமப்  பட்டிருப்பார் போலும்) அந்த நிலையிலும் எல்லோரும் சிரித்து விட்டார்கள். பின்பு ஒவ்வொருவரையும் அழைத்து பணம் கொடுக்கப் பட்டது.வாங்கியவுடன் அவரின் மனைவி, ' இவ்வளவு நேரம் நின்றதலெனக்கு கால் வலிக்கிறது.. இனிமேல் போய் சமைக்க முடியாது, எங்கேயாவது வெளியில் சாப்பிடலாம்' என்றார். உடனே அவரின் சிறிய மகன் , ' ஆமாம் அப்பா... எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்' என்றான். அடுத்து, பெரிய மகன், ' எனக்கு மொபைல் ரீசார்ஜ் செய்யணும், நெட்பே ஃக் போடணும்' என்றான். மகள்  ஓன்றும் சொல்லாமல்   அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  (தந்தையின் சிரமங்களை பார்த்து, தங்களின் தேவைகளைக்குறைத்துக் கொள்வதில் மகள்களுக்கு நிகர் மகள்களேதான்.!)

எல்லோரிடமும் பணத்தை வாங்கி பர்சில் வைத்தபடியே, ' அவங்கங்க கவலை அவங்களுக்கு... என் கவலை எனக்கு.!' என்று சொல்லிவிட்டு , சிரித்துக் கொண்டே , வங்கியை விட்டு செல்ல தயாரானார் அக்குடும்பத்தின் தலைவர்.!

நிச்சயம் ஓட்டலில் தான் சாப்பிட்டு இருப்பார்களென நினைக்கிறேன்.! :-) :-)

கருப்புப்பணப்பிரச்னை.!

 கறுப்புப்பணம் வெளிக்கொணர்தல், ஒழித்தல் என்று கையில் எடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. வின் இந்த முயற்சி, அரசியல் நாடகம் மட்டுமல்லாமல் , மக்களை மேலும் மேலும் பிச்சைக்காரர்களாக ஆக்கும் கொடுமையான செயல்  என்று தான் கூற முடியும்.!

சிறு, குறு வணிகம் சிதைந்து போவதற்கும், பெரு வணிகம் தழைத்தோங்கவும் செய்யப்பட்ட தந்திரம்தான் இது... நாம் வங்கிகளில் மாற்றும் 2000 ரூபாய் சில்லறையாக மா ற்றமுடியவில்லை... பக்கத்து அண்ணாச்சி கடையில் ஒரு கிலோ துவரம் பருப்போ, ஒரு லிட்டர் எண்ணெயோ வாங்க முடியவில்லை... ஏனென்றால் மீதி சில்லறை கொடுக்க அவர்களிடம் 100, 50 ரூபாய்கள் இல்லை. நம்மிடமும் இல்லாததால், அட்டை பயன்படுத்தும் பெரு வணிகர்களிடம் அதாவது பெரிய பல்பொருள் அங்காடிகளைத் தேடி போக வேண்டியுள்ளது. நமக்கு பழக்கமான கீரைக்கார அம்மாவிடம் ஒரு கட்டு கீரை வாங்க முடியவில்லை. இந்த சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் வருந்தத்தக்க உண்மை. காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் என அனைத்தும் வாங்குவதற்கு  பல்பொருள் அங்காடிக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த மோடி அரசு.!

நம் சொந்த பணத்தையே வங்கிகளில் எடுக்க முடியவில்லை... மாற்ற முடியவில்லை... பலமணி நேரம் செலவழித்து, 30 ATM சென்டர்களுக்கு சென்றால் அதில் மூன்று தான் செயல்பாட்டில் இருக்கிறது.. அதிலும் ஏகப்பட்ட மக்கள் கூட்டம்.  கடன் அட்டை வைத்திருப்பவர்கள் பெரிய கடைகளில்  அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை... இதனால்  யாருக்கு லாபம்???  ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் தவிக்க விட்டு விட்டு , இந்த கறுப்புப்பணம் ஒழிப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.!

ஆரம்பத்தில், இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நிதியமைச்சர் இப்போது நிலைமை சீரடைய மூன்று வாரங்கள் ஆகுமென்று கூறுகிறார்... பிரதமர் மோடியோ 50 நாட்கள் ஆகுமென்கிறார்... இவர்கள் சொல்வதை பார்த்தால் அதற்குமேலும் இழுக்கடிப்பார்கள் என்று தோன்றுகிறது.. இப்போதே மக்கள் பணத்திற்கு வழி இல்லாமல் திண்டாடுகிறார்கள். மேலும் இந்த நிலைமை  சரி செய்யப்படவில்லை என்றால் மக்களின் கதி என்னாவது..???  பெட்ரோல் போட முடியாமல், வாடகை கொடுக்க முடியாமல், சாப்பிட முடியாமல் அவதி  படுவோர் தான் அதிகம்.! கிட்டத்தட்ட அனைத்து சிறு கடைகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடைக்கிறது....  இது மட்டுமல்லாமல், இணையதள வர்க்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பணமில்லா வணிகத்தை முன்னெடுக்கிறார்கள்...  எந்த வகையில் பார்த்தாலும், நடுத்தர மக்களும், ஏழை மக்களும் தான் மிகவும் பாதிப்புக்குள்ளாகுகிறார்கள்..!

இவர்களின் இந்த முயற்சியினால் பெரு வணிகர்களும், கார்ப்பரேட் கம்பனிகளும் பெருத்த லாபத்தை அடைவார்கள் என்பது தான்  நிதர்சனமான உண்மை. முன்னரே அனைத்து பெரு முதலாளிகளுக்கும் அறிவிக்கப்பட்டு, ஒப்புதல் வாங்கப்பட்டு, அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டப்  பின்னரே இந்த  அறிவிப்பினை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்... இதனை அறியாத அப்பாவி மக்கள் சிலர்  உண்மையில் கறுப்புப்பணம் ஒழிக்கப் பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.!

போதாக்குறைக்கு இப்போது, கைகளில் மாய் வைக்கிறார்களாம்... வாக்களித்து தேர்வு செய்த மக்களை இதை விட கேவலப் படுத்த முடியாது என்று கருதுகிறேன்.! 

மக்கள் இதனை உணர வேண்டும்... இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் போராட்டம் தான் ஒரே வழி.!

Tuesday, 8 November 2016

ஜோசியம்

என்னுடைய சிறு வயதில், எங்கள் வீட்டிற்கு  நாமக்கார ஜோசியர் ஒருவர் , ஆறு மாதமோ, ஒரு வருடமோ இடைவெளி விட்டு வருவார்.. எங்கள்அம்மாவிற்கு இதில் நம்பிக்கை இருந்ததினால், வரும் போதெல்லாம் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்க்கச் சொல்வார்கள். அவரும் ஏதாவது சொல்லி விட்டு பணம் வாங்கி கொண்டு செல்வார்.!

அப்படி ஒரு சமயம் வந்தபோது, எங்கள் அப்பா, அண்ணன் ஜாதகத்தை கொடுத்து  பார்க்கச் சொன்னார்கள் அம்மா.  அவரும் பல பாசிட்டீவ்களும், சில நெகட்டீவ்களும் சொன்னார்.. நெகட்டிவ் விசயங்களுக்கு சில பரிகாரமும் சொன்னார்.! 

 அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சற்று தொலைவில் நான் கணிதப் பாடம் போட்டு கொண்டிருந்தேன். எங்கள் அம்மாவிற்கு என்ன தோன்றியதோ .. தெரியவில்லை, என் ஜாதகத்தைக் காட்டி பார்க்கச் சொன்னார்கள். அதற்கு அவர்,' இந்த ஜாதகம் அமோகமாக இல்லையென்றாலும், சுமாரான ஜாதகம். எல்லோருக்கும் பிடிக்கும் குணாதிசியங்கள் உள்ள பெண். ஆனால் சரஸ்வதி கடாட்சம் சிறிது கூட இல்லை... அதனால் படிப்பு வராது.. எட்டாம் வகுப்பு தாண்டுவதே கஷ்டம் என்றாரே.. பார்க்கலாம்.!'.  

அந்த வயதில் அவர் சொல்வது உண்மை என்று நம்பி , மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்... உடனே என் அம்மா , என்னைப்பார்த்து , நான் அழுவதற்கு தயாராகி விட்டேன் என்பதை புரிந்துக் கொண்டு  அவரிடம், ' சரி ஜோசியரே.. விடுங்கள்...  பொம்பளைப்பிள்ளை படிச்சு என்னா பண்ணப்போது..? நல்ல இடம் அமைஞ்சா சரி.! ' என்றார்கள். அவர்களை தவறு சொல்லி என்ன பயன்.. அப்படித் தானே இந்த சமூகம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது..!!! :-( :-(

அதன் பிறகு இரண்டு நாட்கள் அதையே நினைத்து, நினைத்து தனியே அழுவேன். பிறகு இயல்பு நிலைக்கு வந்து விட்டேன். எப்போதும் போல் படித்துக் கொண்டிருந்தேன்... இதற்கென்று சிரத்தையோடு எல்லாம் படிக்கவில்லை... ஆனாலும், பரீட்சை எழுதும் போதும், விடைத்தாள்  கொடுக்கும் போதும் அந்த நாமக்கார ஜோசியர் சொன்னது நினைவிற்கு வரும்... :-)   :-)

ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்பு முதல் தேர்வு , காலாண்டுத் தேர்வு விடைத்தாள் கொடுக்கும் போதும் அவர் சொன்னது நினைவிற்கு வந்தது... இதில் என்னவொரு சிறப்பென்றால், இதுவரை பத்து ரேங்கிற்குள் வந்த நான், அந்த தேர்வில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தேன்... :-) :-) அச்சமயம் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.!  அந்த ஆண்டு முழுவதும் முதல் மூன்று இடத்திற்குள்ளேயே  வந்து கொண்டிருந்தேன். கடைசியில் இறுதித் தேர்வு நடந்து முடிந்தது... அப்போதெல்லாம் openday  என்பதெல்லாம் கிடையாது. போஸ்ட் கார்டில் தான் ரிசல்ட் வரும். promoted என்று வந்த கார்டைப் பார்க்கும் போது, ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே... அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை... உடனே எங்கள் அம்மாவிடம் போய், ' அம்மா அந்த நாமக்கார ஜோசியர் சொன்னது பொய் ஆயிடிச்சு.. பாத்திங்களா.., நான் ஒன்பதாவது போக  போகிறேன் ' என்றேன். அதற்கு அம்மா, ' அதை இன்னுமா நினைச்சுகிட்டு இருக்கே... நல்ல பொண்ணு நீ.. அவங்க சொல்றது எல்லாமே அப்படியே நடக்காது... சிலது நடக்கும், சிலது நடக்காது' என்றார்கள்.!  :-) 

 பாவம்.. எங்கள்  அம்மா மட்டுமல்ல... பல பெண்கள்,   பிரச்சனைகள் இல்லா  எதிர்காலத்தை தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்கப்படுவதால், அவர்களின் விருப்பம்  நம்பிக்கையாக மாறுகிறது என்று அப்போது எனக்கு தெரியவில்லை...!

Tuesday, 1 November 2016

நவீன வரதட்சணை.

வரதட்சணையை  நாசூக்காக வலியுறுத்தும் விளம்பரம் ஒன்றை தோழர்கள் தொலைக்காட்சிகளில் ஓரிரு நாட்களாக பார்த்திருக்கலாம்.. பிரபல கடை ஒன்றின் விளம்பரம் அது.!

புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் கோவிலில் பேசிக் கொள்ளும் உரையாடல் அது... " அந்த புது மணமகன் , பெரிய டிவிக்கும், ஏ.சி. க்கும், பிரிட்ஜ் க்கும் ஆசைப் படுகிறான்.. அதை தன் புது மனைவியிடம் சொல்கிறான்... அதற்கு அப்பெண் , அதையெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் என்று வெகு அலட்சியமாக பதிலளிக்கிறாள். பின்னால் வரும் அப்பாவோ , சற்று தயங்கத்துடன் சிந்திக்கும் சில நொடிகளில் , அவருக்கு பின்னே வரும் ஒருவர் (அது நண்பரோ, உறவினரோ தெரியவில்லை...) கவலை வேண்டாம்.. இவையெல்லாம் சுலப தவணை முறையில் இப்போது கிடைக்கிறது  .. என்று கடையின் பெயரை சொல்கிறார்.!


இது சிறு விளம்பரம் என்றாலும் கூட , இதன் பாதிப்பு நம் வீட்டு வரவேற்பறை வரை வந்து நம் மீது திணிக்கப் படுகிறது ... அந்த மணமகன் கேட்பது சரியென்றும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் , அப்பெண் தன் அப்பா செய்ய வேண்டியது அவருடைய கடமை என்பது போலவும், அது சுலப தவணையிலாவது வாங்கித்  தர வேண்டும் என்பது  ஒரு பெண்ணைப் பெற்ற தந்தையின் கடமை போலவும் வரதட்சணை இக்காலத்திலும் திணிக்கப் படுகிறது என்றால் நம் சமூகம் எப்படி  மேம்படைய முடியும்...?


ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ அவர்களுக்கு நல்ல கல்வியறிவை ஊட்ட வேண்டியது தான் பெற்றோரின் கடமை.. அதை வைத்து , அவர்கள் எப்படி தங்கள் வாழ்வில் நல்ல முறையில் முன்னேறுகிறார்கள் என்பது அவரவர் திறமையில் இருக்கிறது.!

சுயச்சார்ப்பு  பற்றி நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தல் மிக முக்கியம்.  சுயச்சார்ப்புள்ள இருவர், தங்கள் வாழ்க்கையை தொடங்குவது எப்படி என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். வாழ்நாள் முழுவதும், அவர்களின் தேவையை அவர்களே பூர்த்திச் செய்யக்கூடிய அளவிற்கு,  அவர்களின்மனப்பக்குவம் துணை நிற்கும்.!

இன்னமும் இம்மாதிரி, பழைய பஞ்சாங்கத்தையே பேசிக் கொண்டிராமல், அழகான, தெளிவான , பயனுள்ள வாழ்வியலை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.!