Sunday, 31 December 2017

புத்தாண்டை வரவேற்போம்.

இன்று போல் தான் நாளையும் என்பது தான் நம் நிலைப்பாடு என்ற போதிலும், ஒவ்வொரு நாளும் முடியும்போது, அந்த நாளை நினைத்து பார்ப்பதும், மறுநாளை பற்றிய முன்னேற்பாடுகள் குறித்து சிந்திப்பதும் போன்றது தான் ,  ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அதனைப்பற்றிய நினைவுகள்.!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், நமக்கு புது புது  அனுபவங்கள் கிடைக்கும் இல்லையா...  இந்த ஆண்டில் நிறைய புதிய மனிதர்களை சந்தித்து இருப்போம். புதிய நண்பர்கள்  கிடைத்திருப்பார்கள். நம்பி இருந்த சிலமனிதர்களை பற்றிய தெளிவு கிடைத்திருக்கும். சில நினைவுகள் மகிழ்ச்சியையும், சில நினைவுகள் துக்கத்தையும், சில நினைவுகள் வெறுப்பையும், விரக்தியையும் கொடுத்திருக்கும். ஆனால், எல்லாமே அனுபவங்கள் தான். ஒவ்வொரு நொடியும் நாம் கற்றுக்கொண்டு தானே இருக்கிறோம்.!

நல்ல அனுபவம், இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்பதையும், கெட்ட அனுபவம், இதை இப்படி செய்யகூடாது என்பதையும் தானே  நமக்கு அறிவுறுத்துகிறது. ஆதலால், எல்லா நேரமும்,நாட்களும், மனிதர்களும், நண்பர்களும்,உறவுகளும் நமக்கு அனுபவத்தை கற்றுத்தருபவர்களாக தான் இருக்கிறார்கள் என்ற சிந்தனையுடன் அடுத்த ஆண்டை எதிர்நோக்க தயாராகுவோம்.! 

#Welcome2018 

ரஜினி என்ற அம்பு

ஒன்றுபட்ட இந்து ராஷ்டிரத்தை அமைப்பதே ஆர்.எஸ்.எஸ், பாஜக வின் நோக்கம், இலக்கு எல்லாமே. அதற்கு தன்னால் முடிந்த அனைத்து வழிகளையும் கையாளுகிறது ஹிந்துத்துவா. நேரடியாக தேர்தலை சந்தித்து நேர்மையாக வெற்றி பெற முடியாது என்ற நிலையிலுள்ள மாநிலங்களில், கொல்லைப்புற வாசல் வழியிலாவது உள்ளே நுழைய முயல்கிறது. 
மாநிலக்கட்சிகளை உடைப்பது, தன்னுடைய ஆட்களை வளர்த்து விடுவது போன்ற சித்து வேலைகளை செய்து கொண்டிருக்கிறது ... இப்படிப்பட்ட ஏஜன்ட் தான் ரஜினிகாந்த். அவரின் ஆன்மீக அரசியல் எனும்போதே தெரிகிறதல்லவா ... தன்னுடைய அரசியல் குருவாக சோ ராமசாமியை கொண்ட ரஜினியால் தமிழகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... இதுவரை நம் மாநிலத்திற்கு என்ன செய்துவிட்டார்... ஈழம், மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு,கூடங்குளம் பிரச்சனை, காவேரி பிரச்சனை, நீட் எதிர்ப்பு, ஒக்கி புயல் என எதற்கும் தன்னுடைய எதிர்ப்பை காட்டாத அவர்,  எப்படி தமிழக அரசியலில் செயல்பட முடியும்.?

 அவரை வளர்த்து விடுவதின் மூலம், தமிழகத்தில் ஹிந்துத்துவத்தை வளர்க்க முடியும் ... அதன்ஊடே தன்னுடைய பரந்த இந்து தேசத்தை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
 இந்த சதி தான்  அப்பட்டமாக தெரிகிறதே ... அர்ஜூன் சம்பத், மாலன், நாராயணன், குருமூர்த்தி போன்றோரின் பேச்சு உறுதி செய்கிறதே..!
#பார்ப்பனீயம் அணியும் முகத்திரையை ஒவ்வொரு முறையும் #ஈரோட்டு_கண்ணாடியால் இனம்காணும் போதெல்லாம், புதிது புதிதாக மாற்றிக்கொண்டு உள்நுழைகிறது. அதனை முறியடிக்கவேண்டிய மிக முக்கிய பணி நம் அனைவரிடமும் தான் இருக்கிறது.! :-)

Friday, 29 December 2017

திமுக கவனமாக இருத்தல் நல்லது.

திமுக மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் என்று தோன்றுகிறது. ஆர்.கே நகர் தோல்வியை வைத்து இதனை சொல்லவில்லை. அந்த தொகுதி அதிமுக தொகுதி தான்... திமுக வெற்றி பெறும் என்று நாம் எதிர்பார்த்தது, ஆளும்கட்சியின் மீதுள்ள வெறுப்பு, கோவம், எரிச்சல் முழுதும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை தடுத்துவிடும் என்பதால் தான். 

பணத்தை அள்ளிக்கொட்டி அதிமுகவினர் டெபாசிட் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று தான்.. அதே போல், பணத்தை கொட்டி தான் தினகரனும் வென்றிருக்கிறார். இருப்பினும், பாஜகவின் கோர முகத்தை கிழித்தியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. நோட்டாவை விட பாஜக வாக்குகள் குறைவு என்பதில் மிக்க மகிழ்ச்சி...மாநிலக்கட்சிகளே இருக்காது என்று சொன்ன பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி நான்காமிடத்தில் வந்திருப்பதிலும் மிக்க மகிழ்ச்சி.!

திமுகவின் இந்த தோல்வியை பெரிதுபடுத்தி, பலவீனமடைந்து விட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறது பார்ப்பனீயம் என்பது திண்ணம்.  இந்த தேர்தல் முடிவு உள்ளாட்சித்தேர்தலிலும், அடுத்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றபோதிலும், மக்கள் மனதில் ஒருவித மாயையை திணிக்க முற்படும் இந்த திருகுவேலையை, முறியடிக்கும் விதமாக திமுக தலைமை நன்கு பரிசீலித்து, செயல்படவேண்டிய தருணம் இது.!

Friday, 22 December 2017

தந்தை பெரியாரை சுவாசிப்போம்.


பையன் சமையலறையில் சமைத்து கொண்டிருக்கிறான், பொண்ணு கடைக்கு சென்று இருக்கிறாள் ... ஆணையும், பெண்ணையும் சமமாக வளர்க்கிறோம் என்று தந்தை சொல்வது போலவும்,

எனக்கும், தம்பிக்கும் மட்டும் சொத்தில் பங்கு தருகிறீர்களே, அக்காவுக்கும் தாருங்கள் என்று தந்தையிடம் , மகன் கேட்பது போலவும் ,

 சமீப  காலமாக பண்பலையில்   வடநாட்டின்  தமிழாக்க விளம்பரங்கள் ஒலிபரப்பப்படுகின்றன.!

இறுதியில், பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழ்நதைகளை கற்பிப்போம் என்று முடிப்பார்கள்.!

இதையெல்லாம் 70 , 80 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் #தந்தைபெரியார் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாரே ... 

" வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்து , ஒரு பெண்பிள்ளை இருந்தால், பெண்பிள்ளையை கட்டாயம் படிக்க வையுங்கள் " என்றும்,

" பெண்களின் கையில் உள்ள கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுங்கள்.." என்றும் ,

" பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுங்கள், அது அவர்களின் முன்னேற்றத்திற்கும், தன்மானத்துடன் வாழ்வதற்கும், அனைத்திற்கும் ஆண்களையே நம்பிஇருக்கும்அடிமை  நிலையை மாற்றுவதற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும்   வழி வகுக்கும் " என்றும்.

பெண்கல்வியையையும், பெண்விடுதலையும் , பெண்களுக்கான சொத்துரிமை பற்றியும் விளாவரியாக சொல்லியிருக்கிறார்களே ... அந்த பெண்களுக்கான சொத்துரிமையை , கலைஞரின் திமுக அரசும் சட்டமாக்கியதே.!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் அனைத்தும் நம் சமூகத்தின் வளர்ச்சிக்கான பாதைகள் ...என்றென்றும் நமக்கு தேவையான உயிர்முச்சு  போன்றது.  நம் மக்கள் தான் அதனை சரிவர பயன்படுத்துவதில்லை. முழுமையாகப்படித்து, தெளிவாக உள்வாங்கி, கடைபிடித்தோமானால், நம் சமூகம் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்பதில்தான் ஐயம் உள்ளதோ ... 

பெரியாரின், பெண்ணடிமை ஒழிப்பு  , மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி, மத ஒழிப்பு, கடவுள் மறுப்பு,  சமத்துவம் முதலியவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை நம் தலையாய கடமையாக கொள்வோம்.!

பெரியாரை வாசிப்போம் ... பெரியாரை சுவாசிப்போம்.!

டிசம்பர் 24, தந்தை பெரியார் அவர்களின்  நினைவுநாள்.

 

நம் சமூகத்தின் வாழ்வியலில் பெண்கள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு பார்த்து, பேசிய தோழியிடம் நல விசாரிப்புகளுக்குப்பிறகான உரையாடல்   ...

' ம்ம்ம் ... அப்புறம் எப்படி போகுது வாழ்க்கை..'' 

' பையன் வேலைக்கு போயிட்டான்... பொண்ணு பைனல் இயர்... அடுத்த வருடம் மாப்பிள்ளை பாக்கணும். ஏதோ போயிட்டு இருக்கு... இப்பெல்லாம் வெறுமை அதிகம் இருக்கு..ப்பா...' சொல்லும்போதே கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

' என்ன செய்வது .. சரி விடுப்பா ... எல்லோருக்குமே அப்படி தான்.... எனக்கு தெரிந்தவரை...,  மனதிற்குள் போட்டு மூடிக்கொண்டு வாழ்க்கை போகும்பாதையிலேயே போய்க்கொண்டு இருக்கிறார்கள். உனக்கு பிடித்த எதாவது ஒன்றை செய்ய பழகிக்கொள்... கொஞ்சம் தேவலாம் என்ற மனநிலைக்கு அது அழைத்து செல்லும். பிறகு அதில் அதிக கவனம் செலுத்தினால், வெறுமைஉணர்வு  அடிக்கடி தோன்றாது... நான் அபப்டி தான் , வேலை நேரம் போக, அது  நல்லா இருக்கோ, இல்லையோ,,, எதாவது எழுதிக்கொண்டிருப்பேன். அல்லது படித்துக்கொண்டிருப்பேன் ... அது எனக்கு பிடித்திருக்கிறது .. அதுபோல உனக்கு பிடித்ததை  முயற்சி செய்யேன்..ப்பா.!' 

இது தான் இன்றைய நம் மத்தியதர, மத்திய வயதுடைய பெரும்பாலான  பெண்களின் நிலைமையாக இருக்கிறது. மத்திய வயதுடைய அனைத்து பெண்களிற்கும் இப்போது திருமணம் நடந்து 20 ஆண்டுகளை கடத்தியிருப்பார்கள். பிள்ளைகள் கல்லூரிப்படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். கணவன்மார்கள் வேலை, குடும்ப பளு, பொருளாதார நிலைமை, பெற்றோர்கள் மருத்துவ செலவு  அதனுடைய அழுத்தம் காரணமாக மனைவிகளிடம் பழைய கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. சரியான் புரிதல் இருப்பதில்லை. பேசவே நேரமும் இருப்பதில்லை. இது தான் நம் சமூகத்தில் உள்ள வாழ்க்கையாக இருக்கிறது.!

இந்த வயதில் உள்ள  பெண்களை எடுத்துக்கொள்ளுங்கள். 99 விழுக்காடு பெற்றோர்  பார்த்து செய்துவைத்த திருமணம். எந்த புரிதலும் இல்லாத கட்டாய காதல், புதிய , பழக்கப்படாத குடும்பம். இதில் அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய நிலையை வலியுறுத்தும் உறவுகள். கூட்டுக்குடும்பம் என்றால் கேட்கவே வேண்டாம். மாமியார், மாமனார் அவர்களையும்  சேர்த்து அனுசரிக்க வேண்டும். அம்மாவிடம் சொன்னால், அப்படி, இப்படி தான் இருக்கும்... நம்ம தான் அட்ஜஸ்ட்  செய்யணும் என்ற அறிவுரை வரும்.  இப்படியே ஓராண்டு போனால், குழந்தை ... அதன்பிறகு குழந்தைகளுக்காகவே வாழ்க்கை என எழுதப்படாத சட்டம் நம் சமூகப்பெண்களுக்கு விதிக்கப்பட்டுவிடும். இதிலிருந்து வெளிவர பெண்களாலும் முடிவதில்லை.  தாய்மை என்ற அன்பு, பாசம், கடமை அவர்களை  கட்டிப்போட்டு தான் விடுகிறது. அபப்டியே காலங்கள் உருண்டோடி, 40 வயதில் ஒரு சலிப்பு, வெறுமை வருவது உண்மை.!

நம் ஆணாதிக்கசமூகம் இதை தான் காலங்காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலைமை அடுத்த தலைமுறைப்பெண்களுக்கு வரகூடாது  என்ற எண்ணம் அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும். தன சுயத்தை எக்காலத்திற்கும், எதற்காகவும் இழக்கவிடாமல் இருக்க அறிவுறுத்த  வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கும், பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணின் உணர்வுகள்,  வாழ்க்கை , வாழ்க்கை இணை , காதல், சக தோழியாக மதித்தல்,  ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து நண்பர்களாக வாழ்தல், இருவருக்குள்ளும் விட்டு கொடுத்தல் போன்ற இந்த அருமையான வாழ்வியலை கற்று கொடுப்போம்.!

இதையெல்லாம் பின்பற்றி வாழ்ந்தால், வெறுமை அண்டாதா என்று கேட்டீர்களென்றால் , நிச்சயம் வரும். அவ்வப்போது வந்தே தீரும். ஆனால், கண்டிப்பாக தொடந்து வந்து மனஅழுத்தத்தை தராது... நம் வாழ்க்கை முறை அதனை சரி செய்துவிடும். நான் அப்படி தான் நினைக்கிறேன் ... உங்களுக்கும் சரியென பட்டால், கடைபிடிக்கலாமே .!



Tuesday, 12 December 2017

கவுசல்யா எனும் மனதிடம் .!


வரவேற்கவேண்டிய ஒரு தீர்ப்பு... திருப்பூர் நீதிமன்றத்திற்கு, தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும் நன்றி .. உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில், திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு. சகோதரி கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்பது.!
சகோதரி கௌசல்யாவிற்கு கிடைத்த நியாயம் மட்டுமல்ல இது ... ஜாதிவெறிக்கு கிடைத்திருக்கும் சம்மட்டி அடி... இனிமேலும் இது போல ஆணவக்கொலைகள் நடக்காவண்ணம் இருப்பதற்கு இந்த தீர்ப்பு வழிவகுக்கும்.!
ஜாதி ஒழிய வேண்டும் என்றால், காதல் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு சமூகசிந்தனையை அச்சமூட்டுவதாய் அமையும் இந்த ஆணவக்கொலைகளுக்கு , தண்டனை கடுமையாக்கப்பட்டால் தான் இந்த குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.
மரண தண்டனை என்ற ஓன்று நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும் கூட , இதுபோன்ற கொடூர கொலைகளுக்கு , அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்டால் தான், இம்மாதிரி குற்றங்கள் இனி நடைபெறாது.
மேலும் குற்றவாளிகள் வேறு நீதிமன்றங்களுக்கு சென்று இந்த தீர்ப்பு நீர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.!

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா


இறந்ததினால் ஒருவர் செய்த தவறு, தவறில்லை என்று ஆகிவிட போவதில்லை. இறந்தாலும் தவறு தவறு தான். இறந்தவர்களைபற்றி மிக தாழ்ந்த நிலையில்  விமர்சிப்பது மனிதத்திற்கு செய்யும் இழுக்கு, நாகரீகமல்ல  என்பது நம் மனதில் காலங்காலமாக பதியவைத்ததின் விளைவு நாம் அவர்களைப்பற்றி பேசுவதற்கு சற்று தயங்குகிறோம்.  ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றியோ , வெளி உலகத்திற்கு வந்த எதையுமே கீழ்த்தரமாக விமர்சிப்பது தான் தவறு... மற்றபடி, பொதுவில்  மற்றும் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு  விசயம் விமர்சிக்கப்படலாம், விவாதிக்கப்படலாம் என்பது என் கருத்து.

அப்படிப்பார்க்கையில், ஜெ . என்ற பெண்மணியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவருடைய விருப்பம். அவர் விரும்பியபடி தான் வாழ்ந்தாரா என்பது அவருக்கு தான் தெரியும். அதனைப்பற்றி மற்றவரகள் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் உணர்வுகளை உற்றுநோக்கும்போது , அவரின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆனால், ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக அவர் என்ன செய்தார், அதில் குறைபாடுகள் இருந்தனவா என்பது தான் நம் முன்னே வைக்கப்படும் கேள்வி. 69% இடஒதுக்கீடு வரைவு சட்டத்தை 9 வது அட்டவணையில் சேர்த்தது என்பது அவரின் ஆட்சியின்  ஜொலிக்கும் வைரமாக காலத்திற்கும் நிற்கும் என்பது  வரலாற்று உண்மை.
ஊழல், பல பார்ப்பனீய சிந்தனைகள் , செயல்கள், திமுகவுடன், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல், எதிர்மறை எண்ணங்கள், செயல்பாடுகள் என அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாது.

 மற்றபடி ஜெ.யின் மறைவு மர்மமானது மட்டுமல்ல... பரிதாபமானதும் கூட.!

Friday, 8 December 2017

மீனவர்களின் துயரம் ....


ஆட்சி, அதிகாரம், பதவிகளில் இருக்கும் நண்பர்களுக்கு ,

இயற்கையின் சீற்றத்தால், காற்றினால்  திசை மாறி தென்கோடியில் உள்ள ஒரு குடிமகன், வடமேற்கு மத்தியில் அதுவும் கடலின் வழியாக வழிமாறி சென்றிருக்கிறான். உடைமைகளை இழந்து, உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒரு வாரகாலமாக கடலில் தத்தளித்து , கண்ணில்பட்ட கரையில் நிராதரவாய் நின்றிருக்கும் அக்குடிமகனுக்கு தேவையான உதவிகளை செய்வது தானே நியாயம். !

காணாமல் போன அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு அரசினுடையது அல்லவா. அவர்கள் சொல்லும் இடம்வரை சென்று, கடலில் தேடும் பணியை முடக்கிவிட இவர்களை எது தடுக்கிறது.?

நாட்டிற்கு நல்ல வருவாய் ஈட்டித்தரும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவனை காப்பற்றவேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

எல்லாவற்றிற்கும்மக்களிடம்  வரி வசூலிக்கும் இந்த நாட்டில், அந்த மக்களுக்கு இன்னல் வரும்போது கைகொடுக்கும் கடமை யாருக்கு இருக்கிறது.?

இன்னும் சொல்லப்போனால், அவர்களை பத்திரமாக, அரசே அவர்களின் வாழ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதும், உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கும் தயாராக இருக்க வேண்டுமல்லவா.!
 அதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசுவதும், அக்கறையில்லாமல் அவர்களை தவிக்கவிடுவதும் எந்த வகையில் நியாயம்.?

இதெல்லாம் போக, தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரி மாவட்டத்தை அறிவிப்பதில் இவர்களுக்கு என்ன தடை ... வழியில்லாமல் பரிதவிக்கும் மீனவர்களை, இந்நாட்டின் குடிமகன்களை காக்க தவறும், இந்த மாநில, மத்திய அரசுகள் இருந்து தான் என்ன பயன்...?

கவனம் தேவை ... இன்று,  சில கிராமங்களை, ஒரு மாவட்டத்தை , கேரளத்துடன் சேர்த்து விடுங்கள் என்று சொல்லும் இந்த மாநில, இந்த நாட்டின் குடிமகன்களை, நாளை, வேறு ஒரு நாட்டுடன் சேர்த்து விடுங்கள் என்று சொல்ல வைத்து விடாதீர்கள் .... ஆட்சியாளர்களே.!


Saturday, 18 November 2017

பெண்கள் ஆண்களின் உடைமைகள் அல்ல .

இதைப்பற்றி எவ்வளவோ எழுத்தாகி விட்டது. இது போல் மறுபடியும் எழுத கூடாது என்று தான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறோம். ஆனால், எழுதும்படி சம்பவங்கள் நடக்கின்றன என்பது தான் முழுவது வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன் சென்னை ஆதம்பாக்கத்தில், ' தன்னை காதலிக்க மறுத்தப்  பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறான் ஒரு இளைஞன். நம் இளைய சமூகம் எப்படி கெட்டுப்போய்  இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று. இதில் எங்கு தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்து , அதற்கான தீர்வை கொண்டுவர வேண்டாமா... நம் பிள்ளைகள் நினைத்ததை பெற்றே ஆக வேண்டும் என்ற வெறிபிடித்தவர்களாக வளர்ப்பதில் நாமும் தானே ஒரு காரணமாக இருக்கிறோம். 

இதில் ஒரு ஆணாதிக்கம் மறைந்திருக்கிறது என்பது வருத்தத்துடன் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை. காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு... எரித்து கொலை, காதலித்தால் ஆணவ கொலை என அனைத்து வகையிலுமே பெண்களுக்கெதிராகவே இந்த வன்முறை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பெண்களை உடைமைகளாக பார்க்கும் கண்ணோட்டம் முதலில் மாற்றப்பட வேண்டும். தன்னைப்  போல் பெண்களும் இரத்தமும், சதையும் உள்ள சக மனுசி என்ற தோழமையை நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.!

" வாழ்க்கை எவ்வளவு அழகானது , அதனை எப்படிரசனையோடு  கையாள  வேண்டும், வெற்றி, தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், 

நாம் நினைத்ததெல்லாம் நடப்பதற்கு சாத்தியமா, அல்லது அதனை போராடி பெற முடியுமா , 

தன மேல் திணிப்பதை நாம் யாரும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை எனும்போது , நாம் மட்டும் எப்படி  மற்றவர் மீது  தன கருத்தை திணிக்க முடியும் , அன்பு மட்டுமே மனித வாழ்வின் பிரதானம் ." 
 
என்ற வாழ்வியலை கற்று தருவதில் மிக முக்கிய பங்கு பெற்றோர்களுடையது. அதன் பிறகு ஆசிரியர்கள், உறவினர்கள்,நண்பர்கள் என சமூகம் முழுமைக்கும் இந்த கடமை இருக்கிறதல்லவா... இதனை எப்படி மறந்தோம்.?

பிள்ளைகளின் மீது அன்பு செலுத்துகிறோம் , செல்லம் கொஞ்சுகிறோம் என்று அவர்களை நல்வழி படுத்த தவறி இருக்கிறோம் என்பதை  தான் இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.  

மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கவிடாமல் தடுப்பதற்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். எது செய்தலும் வெளியே வந்துவிடலாம் என்ற அலட்சியப்போக்கும் ஒரு காரணமாக இருக்கின்றது. 

காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. இதன் மூலம் ஜாதி ஒழிக்கப்படும் . எவ்வித கட்டாயமும் இல்லாமல், தன சுயவிருப்பப்படி, ஆண் , பெண்  இருவரும் சேர்ந்து வாழ வழி கிடைக்கிறது. காதல் என்பது இருவரின் விருப்பம். இதிலொருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும்கூட அதனை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற தெளிவை நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். 

இனிமேலும்  விநோதினிகள், நவீனாக்கள், இந்துஜாக்கள் பலியாகாமல் தடுப்பதற்கான வழிகளை முன்னேடுப்போம்.!  

Friday, 10 November 2017

பெண்ணின் உணர்வுகள்

தற்போது இணையதளத்தில், சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கும் "லட்சுமி" என்ற  குறும்படம் பற்றி பலபேர் பலவாறு கருத்து சொல்கின்றனர். நம்மைப்பொறுத்தவரை , பெண் விடுதலை என்பது அவளின் உணர்வுகள் எல்லா வகையிலும் மதிக்கப்பட வேண்டும் என்பதே. எதோ குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்லுதல் அல்ல. குழந்தையிலிருந்து, மூதாட்டி ஆகும்வரை ஏன் , இறக்கும் வரை கூட அவளின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பது தான் கண்கூடு. இந்நிலை மாறவேண்டுமென்றால், ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமென்றால், இம்மாதிரி பாலியல் சார்ந்த  உணர்வுகள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும் பேச வேண்டும். பேசப்பட வைக்க வேண்டும். அனைத்து உணர்வுகளும்  அதிகம் பேசப்பட வேண்டும் என்பதாகும். 

பெண் விடுதலை என்பது , தன்  வாழ்நாள் முழுதும் , சுய விருப்பப்படி முடிவெடுத்தல், வாழ்தல் என்பது தான். அது ஆடை முதல்  கல்வி, பணி, பொருளாதாரம், வாழ்க்கை இணை தேடல், ஓன்று சேர்ந்து வாழ்தல், பிரிதல், தனித்து வாழ்தல், மறுமணம், குழந்தை பெற்றுக்கொள்ளுதல், பாலியல் சுதந்திரம் வரை  அனைத்தும் சேர்ந்தது தான்... இதில் எந்த வரையறையும் வகுக்க முடியாது. அப்போது  தான்  அது முழுமையான சுதந்திரமாக இருக்க முடியும்.!

லட்சுமிகளைக்காட்டி, இது தான் புரட்சி என்றும், இது  அல்ல புரட்சி என்றும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. கொஞ்சம் மேலை நாடுகளையும் பாருங்கள்...  கலாச்சார காவலர்களே... இன்னமும் மதத்தைக்காட்டி , கலாச்சாரம், என்று பெண்களை அடிமைப்படுத்தும் முறை இங்கு இனி செல்லாது. இதோ... இந்த தலைமுறை பெண்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.  இது தான் முதல் படி, இன்னும் சில தலைமுறைகளிலேயேஇந்தபெண்ணடிமைத்தனம் முழுமையாக  உடைத்தெறிக்கப்பட்டுவிடும்.!

" ஓர் அரசகுமாரி தோட்டத்தில் ஒருவனைப் பார்த்து காதல் கொள்கிறாள். அதன் பின் அவன் சேவகன் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா? 
 எப்படிப்பட்ட காதலும் ஒரு சுயலட்சியத்தை, தனதிஷ்டத்தை - திருப்தியை கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை. ஆசையை விட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறொன்றும் இல்லை." 

#தந்தைபெரியார்.
#பெண்ஏன்அடிமையானாள்

1942-ல் எழுதிய புத்தகம். இதனை நம் பள்ளிப்பாடத்திட்டத்தில் வைக்கப்பட  வேண்டிய ஒரு புத்தகம் . 
ஆண்பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக கற்பிக்கப்பட  வேண்டிய புத்தகம். 
காதல் மட்டுமல்ல... பெண் விடுதலைக்கான அனைத்தையும் சொல்லி இருக்கிறார். பெண் மீதானஅடக்குமுறைகளையும், பெண் அடிமையானதற்கான அனைத்து  காரணங்களையும், அதிலிருந்து விடுபெற்று வாழ்வதற்கான வழிமுறைகளையும்  மிக அழகாக 72 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார். 

ஆதலால் , பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை அனைவரும் படியுங்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் படிக்கச்ச்சொல்லி அறிவுறுத்துங்கள். அதனைப்பற்றி விவாதியுங்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள். நல்ல தெளிவான புரிதலை ஏற்படுத்துங்கள் ...நண்பர்களே.!

 " பெண் விடுதலை என்பது அவளின் முழு உணர்வை பொறுத்தது. "
பெண்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பது தான் மிக முக்கியம்.!

Tuesday, 7 November 2017

நவம்பர் 8 , பொருளாதார சீர்குலைவுநாள்

மறுநாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழல். எங்கள் வீட்டிலிருந்து நான் மட்டும் சித்தப்பா குடும்பத்துடன் செல்வதாக ஏற்பாடு. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடியில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. நிச்சயமா போக வேண்டும் .. இக்காலக்கட்டத்தில்  இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் தான் உறவுகளை சந்திக்க  வைக்கிறது. ஆனால் பாருங்கள்... முதல்நாள் இரவு, 8 மணிக்கு தான் தெரியும். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி. தூக்கிவாரிப் போட்டது... 

' என்னது... செல்லதா , சே..சே.. புரளியாக இருக்கும். நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பே கிடையாது ' என்றேன்.
தொலைக்காட்சி செய்தி உண்மை தான் என்று உறுதி செய்தது.
சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சரி... வீட்டில் எவ்வளவு 100, 50, 20, 10 ரூபாய்கள் இருக்கின்றன என்று எண்ண  ஆரம்பித்தோம். மிகக்குறைந்த அளவே இருந்தது. எப்போது நிலைமை சரியாகும் என்று தெரியாத காரணத்தால், வீட்டுச்செலவிற்கு போக, என் கையில் 300 ரூபாய் கொடுத்தார்கள்.!

' அய்யய்யோ.. இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது... எப்படியாவது, எங்காவது மாற்றி கொடுங்கள்..' 
 என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன்... 

இணையரும், மகனும் 9 மணிக்கு வெளியே சென்றார்கள். வங்கிகள், ஏடிஎம்கள், கடைகள் என எங்குபார்த்தாலும் அலைந்தது தான் மிச்சம்... கிடைக்கவில்லை... அவரவர் சேர்த்து வைத்த காசை எடுப்பதற்காக, மாற்றுவதற்காக மக்கள் அல்லாடுகிறார்கள்.. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ஒரு 100 ரூபாய்க்குகூட வழியில்லாமல்,  சாலைகளில் அலைந்துக்கொண்டிருக்கின்றனர் மக்கள். 

மாற்றப்போனவர்கள் 11 மணிக்கு வந்து சொன்னதும் எனக்கு அழுகையே வந்துவிடும் அளவிற்கு மனஇறுக்கம். எல்லோரையும் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசையாக இருந்தோம் என்று நினைக்கும்போது கோவமும் வந்தது. 
(முடிந்தமட்டும் திட்டித்தீர்த்தாகி விட்டது ..மோடியை.!)

கடைசியில் ,பக்கத்திலுள்ள மளிகைக்கடை அண்ணாச்சி மூலம் 500 ரூபாய் கிடைத்தது. நிலைமையை சொன்னவுடன். சில்லறை கொடுத்தார். மூன்று 100 ரூபாய், இரண்டு 50 ரூபாய், எட்டு 10 ரூபாய், ஒரு இருப்பது ரூபாய் என 500 ரூபாய்க்கான  தாள்கள். மகன்( பர்ஸை காலி  செய்து) 300  ரூபாய் கொடுத்தான். மொத்தம் 1100 ரூபாய் உடன் மன்னார்குடி சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு, 2016 நவம்பர் மாதத்தில், 9, 10 தேதிகள்.!

இந்த இந்திய தேசத்திலுள்ள அனைவருக்கும், இது மாதிரி அல்லது இதைவிட மோசமான அனுபவத்தை கொடுத்த,  மோடி பாஜக அரசின் பணமதிப்பிழப்பு திட்டம் நிச்சயம் கறுப்புத்தினமாக அனுசரிக்கப்பட  வேண்டிய ஓன்று தான்.!

திட்டமும் தோல்வி... கருப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு நடைமுறைப்படுத்திய ஒரு திட்டம் தோல்வியில் மட்டுமல்ல... ஊழலின் உற்றுக்கண்ணாகவே இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்புண்டோ.!


#BlackdayNov82016



உடல்நலன் முக்கியம்

கடும் காய்ச்சல், உடல்நலமின்மை காரணமாக கடந்த இரு மாதங்களாக எழுத இயலாமல் போனமைக்கு வருந்துகிறேன் ... நண்பர்களே... கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் எதோ ஒரு வகையில் இந்த காலகட்டம் உடல்நிலையை வருத்திக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. உடல்நலனில் கவனமாக இருங்கள் தோழர்களே.  உடல்நிலையில், சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் கூட உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.!

Saturday, 16 September 2017

வாழ்க பெரியார் ... வளர்க பகுத்தறிவு !

தொண்டு செய்து பழுத்த பழம் ..
தூய தாடி மார்பில் விழும் ..
மண்டைச்  சுரப்பை உலகு தொழும்...
மனக்குகையில் சிறுத்தை  எழும். 
அவர்தாம் பெரியார்.!
- பாவேந்தர்.

இப்போது தமிழகம் இருக்கும் ஆபத்தான காலகட்டத்தில், #தந்தை பெரியாரை மூலை, முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம், பார்க்கும் மனிதர்களிடம் எல்லாம் கொண்டு போய்  சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவரவர்களால் முடிந்தமட்டும் பரப்புரை செய்வோம் நண்பர்களே ...

இது தான் நம் அறிவாசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியாக மனதில் நிறுத்துவோம்.!

வாழ்க பெரியார் ... வளர்க பகுத்தறிவு.!

Friday, 15 September 2017

அரசியல் கற்றுக்கொடுப்போம் ...நம் பிள்ளைகளுக்கு.!

இதோ மூன்றாண்டுகள் ஆட்சி முடிவடைந்து விட்டது. இன்னும் சொல்லியபடி, பலஆயிரம் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கூட  செய்து தரப்படவில்லை. பல கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை. அதுவும் வடஇந்தியாவில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். இப்போதும் கூட, வித்யா பாலனையும், அமிதாப் பச்சனையும்  கழிப்பறையை பயன்படுத்துக்கள் என்று சொல்லவைத்து நடிக்க வைக்கின்றனர்.!

இந்நிலையில், மும்பைக்கும், குஜராத்திற்கும் இடையே புல்லட் ரயில் ஒண்ணேகால் லட்சம் கோடி செலவிட்டு ஓட வைக்கபோகிறது ...  பாஜக மோடி அரசு. இது தேவையானது தானா... இதெல்லாம் யார் வீட்டுப்பணம். மக்களின் வரிப்பணம் அல்லவா. அதிலும் அந்த இரு மாநிலங்களுக்குமட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்திற்கு  நாடே வரி கட்ட வேண்டுமா... ஜிஎஸ்டி மூலம் மாநில வருவாயை குறைத்து, மத்தியஅரசின் பையிற்குள் போட்டுக்கொள்கிறது. எங்கள் மாநிலத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்க முடியாது. அது வெள்ளமானாலும் சரி, புயலென்றாலும் சரி, மழை பொய்த்து, விவசாயம் இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டாலும் சரி, எதற்கும் நிதி கொடுக்க  முடியாது என்று கைவிரிக்கும் ஒரு அரசாங்கம், வடக்கே தங்களுக்கு கோடிக்கணக்கில் நம்முடையப்பணத்தையும் சேர்த்து ஆடம்பரத்திற்கு செலவிடுகிறதென்றால், என்ன ஒரு ஏமாற்றுத்தனம்..!

மாநில உரிமைகளை பறிப்பதில் , குறியாக இருக்கும் இந்த மோடி அரசு நீடித்தால், எவ்வகையிலும் வடக்கும், தெற்கும் ஒத்துப்போக முடியாது. அப்படியே ஒத்துப்போக வேண்டுமென்றால், கூட்டமைப்பாக இருக்க முடியுமே தவிர, ஒரே நாடாக இருப்பதில், இனி எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இப்போது இல்லையென்றாலும், வருங்காலத்தில் இது தான் நடக்கப்போகிறது. இனியாவது, நம் பிள்ளைகளுக்கு சிறப்பான அரசியல் கற்று தருவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி தள்ளி வைத்தது போதும். சாக்கடையை சுத்தப்படுத்துவது எப்படி என்று சொல்லி தருவோம்.!

சமூகத்தைப்பற்றி சிந்திப்பது தான் #அரசியல் என்ற உண்மையை  தெளிவாக புரிய வைப்போம் ... மக்கா.!   

Monday, 11 September 2017

தமிழக பள்ளி கல்வித்துறை

பள்ளி கல்வித்துறை என்று ஒரு துறை ... அதற்கு அமைச்சர் என்ற ஒருவர். அவருக்கு கீழே பணிப்புரிய உதவியாளர், செயலர், காரியதரிசி, ஆட்சியர், மற்ற ஊழியர்கள் ... இவர்கள் அனைவருக்கும் ஊதியம், வாகன வசதிகள், மருத்துவ செலவுகள்... இன்னும் இதர வசதிகளுக்கான செலவுகள், இதற்கான கட்டிடம் , அதற்கு ஆகும் செலவுகள் ... etc..., இதற்கெல்லாம் யாருடைய பணம் செலவழிக்கப்படுகிறது.... எல்லாமே மக்களின் வரிப்பணம் தானே ...!
ஆனால் வட இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பாடம் நடத்துவதற்கு எதற்கு இத்தனை செலவுகள் ... எங்கள் பள்ளி கல்வித்துறை தோல்வியடைந்து விட்டது என்று நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டியது தானே ...
ஏற்கனவே, தமிழக அரசு அடிமைப்பட்டு, மத்திய அரசிடம் அடிபணிந்து கிடக்கிறது. இதில், கல்வியை அவர்களிடம் அடகு வைத்து விட்டோமானால், நம்மினம் தலை நிமிரவே முடியாது. இதற்கு நம் ஆசிரியர்கள் எதிர்த்து போராடியே தீர வேண்டும்... இல்லையேல், கல்வி மறுக்கப்பட்ட இனமாக மீண்டும் அடிமைப்பட வேண்டிய சூழ்நிலை உருவாககூடிய பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது.!

கல்வி நம் உரிமை

நண்பர்களே...

நிதி ஆயோக் மூலம் அரசுப்பள்ளிகள் தனியார் மயமாக்கப்படவுள்ளது. நவோதயா பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதன்முலம் இந்தி கட்டாயமாக்கப்படும்.  மாநில பாடத்திட்டம்  நீட் தேர்வின் மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டு , மத்திய பாடத்திட்டமுள்ள பள்ளிகள் அதிகரிக்கப்போகின்றன. தமிழ்மொழி மறக்கடிக்கப்ட்டு,இந்தியும், சமஸ்கிருதமும் நம் வருங்கால சந்ததியினருக்கு கற்பிக்கப்படவுள்ளன. இந்த பள்ளிகளில் படிக்க முடியாதவர்கள் கல்வி மறுக்கப்பட்டு, அடிமைகளாக்கப்படுவர். முழுக்க முழுக்க காவிமயமாக்கப்பட்டுவிடும். இவையனைத்தும் ஓரிரு ஆண்டுகளுக்குள் செய்து முடித்துவிடும் பாஜக அரசு.

இவைகளை தடுக்க வேண்டுமானால், உணவங்கள், துணிக்கடை, வீதி, பலசரக்கு கடை, பூங்கா, பேருந்து நிலையம், ரயில் நிலையம், முட்டுச்சந்து (முடிந்தால் கோயில் உட்பட) என பல இடங்களில், அனைத்து மக்களிடமும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஒற்றை ஆட்சி திட்டத்தைப் பற்றியும், நீட் பற்றியும்,  மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை பற்றியும் சொல்லிக்கொண்டே இருங்கள்.  புரியும் படி  தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். சரியான முறையில் போராட்டங்கள் நடக்க வழி வகுப்போம்.  நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன்... நண்பர்களே,  நம்மால் முடிந்தவரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.!

அரச பயங்கரவாதம்


காங்கிரஸ் ஊழல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டே,பாஜக  மிகப்பெரிய ஊழலை செய்து முடித்திருக்கிறது ... இது மேலும் மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு தான் அதிகமிருக்கிறது. பாஜகவின் அனைத்து திட்டங்களும், முயற்சிகளும் தோல்வி தான்.. மக்கள் மத்தியில் இவர்களின் செல்வாக்கு குறைந்துக்கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. !
ஆதலால் தான், தங்கள் ஆட்சியில்லா மாநிலங்களை குறி வைத்து, தகர்த்து, குறுக்கு வழியில் வருவதற்கு முயல்கிறது. ஒற்றை ஆட்சி என்ற சர்வாதிகாரத்தை கையில் எடுக்க எத்தனிக்கிறது.  இந்த அடாவடி செயலுக்கு, தமிழக மக்கள், மற்றும் அனைத்து எதிர் கட்சிகளும் ஓன்று சேர்ந்து தக்க பதிலடி கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு அனைவரும் தங்கள் கருத்துவேறுபாடுகளை தவிர்த்து, ஒன்றிணைய வேண்டும்.!!
ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துமஹாசபை, VHP , இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ராம் சேனா, சிவசேனா என அனைத்தும் பார்ப்பனீயத்தில் ஊறி  திளைத்த விஷ ஜந்துக்கள் தான். இனியும் மக்கள் விழிப்படையவில்லை என்றால், நம் சந்ததியினரை அடிமை மாக்களாக்க நாம் துணை போகிறோம் என்பது வரலாற்றில் பதிவு செய்த  குற்றத்திற்கு ஆளாவோம்... மக்கா.!!!

போராட்டம் வெல்லட்டும்.

இதை தானே எதிர்பார்த்தோம் ... செல்வங்களா... 
ஜல்லிக்கட்டின்போது கூடிய இளம் சிங்கங்கள் நீட்டிற்கு கூட வில்லையே என்ற வேதனை  நம்மை வருத்திக்கொண்டிருந்தது.!

மாணவர்களும், இளைஞர்களும் திரள் திரளாக கூடி, " நீட்டை ரத்து செய் , அனிதாவிற்கு நீதி வழங்கு ," எனும்  முழக்கங்கள்  வானை பிளக்கின்றன.. தமிழகமெங்கும், மற்றும் டெல்லி, வளைகுடாநாடுகள், அமெரிக்காவில் பல இடங்கள் என போராட்டங்கள் தொடர்கின்றன. என்ன ஒரு கொடுமையென்றால், அந்த குழந்தை அனிதா, தன உயிரை ஈந்து, இப்போராட்டத்தை வலுவாக்கி இருக்கிறாள் என்பது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது ... !

" வாழ்த்துகள் ...மாணவ தங்கங்களே... போராட்டம் வெல்லட்டும்.! "


அனிதா எனும் மருத்துவர்

மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையே உலுக்கிப் போட்டிருக்கிறது. சிறந்த மருத்துவராக வர வேண்டிய அந்த அறிவார்ந்த குழந்தை அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறது... நீட் எனும் பார்ப்பனீய சூழ்ச்சியால்.!
இன்னும் நம்மால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லையே ... 

ஆங்காங்கே போராட்டங்கள்... எங்கு சென்றாலும் இதே பேச்சு. உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் கொதித்து போயிருக்கிறார்கள். ஆனால் இந்த பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய  பல #நல்லகுணாதியங்கள் கொண்டவர்களாயிற்றே... 
நம்மால் தாங்கவே முடியாத (அனிதாவின் மரணத்தை), அக்குழந்தையின் உயிரற்ற உடலை முழுவதும் வெள்ளை துணியால் சுற்றி கட்டப்பட்டிருக்குமாறு   அப்படிப்பட்ட  #மனதைஅறுக்கக்கூடியசித்திரத்தை போட்டிருக்கிறது ... #துக்ளக்.
அதிலும் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடுவதாக உரையாடல்கள் வேறு...
யார் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று தமிழகமக்களுக்கு தெரியாதா...
துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தியின் செயல்பாடுகள் அனைத்தும் நம்மினத்திற்கு எதிராகவே இருக்கிறது . அதன்பிறகு தான் நம் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது  இங்கிருந்துகொண்டு டெல்லிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் வேலை யாருடையது என்பது தமிழக மக்கள் உணராமல் இருக்கிறார்கள் என்றா நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்...!

இதோ வந்துவிட்டது மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுக்கும் இந்த  போராட்டங்கள்... இது மென்மேலும் மக்கள் போராட்டமாக வளர்ந்து வெடிக்கும்.   பறிக்கப்பட்ட அனைத்து மாநில உரிமைகளும் பெறும்வரை ஓயாது இந்த போராட்டம்.!

இவை அனைத்திற்கும் #பார்ப்பனீயம் விலை கொடுக்க தான் வேண்டும். இல்லையேல், தமிழக மக்கள் கொடுக்க வைப்பார்கள்.! 

ஆழ்மனம்

நம்முடைய ஆழ் மனத்த்திற்கு தான் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது... எங்கோ, எப்போதே, யாராலோ, கேட்ட,பார்த்த, படித்த செய்திகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, ஏதோ ஒரு சமயத்தில் வெளிப்படுகிறது. நம் மனம் வலிமையாக இருக்கிறதென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.. ஆனால், நம் உள்மனம் நம் அனுமதியில்லாமலே பல செய்திகளையும், காட்சிகளையும் பதிவு செய்துக்கொள்கிறது.சில நேரங்களில், நம் உள்மனம் , நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், தனிச்சைக்காக செயல் படுகிறது.!

சுற்றிலும் கும்மிருட்டு ... கண்ணெதிரே ஆறேழு உருவங்கள், அனைத்தும் வடிவமில்லா கருப்பு உருவங்கள் ... கண்ணின் கருவிழி மட்டும் சிவப்பு ,  உதட்டின் நிறம் கரும் சிவப்பு, நாக்கோ இரத்தம் சொட்டுவது போல் நீளமாக இரத்தத் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது . அனைத்து உருவங்களும் பலநிலைகளில் இருக்கின்றன. முதலில் உள்ளது நின்றுகொண்டும், அதன் பக்கத்தில்,  மற்றொன்று மண்டியிட்டுக்கொண்டும், சற்று தள்ளி, மூன்று உருவங்கள் உட்கார்ந்துக்கொண்டும், கொஞ்சம் தள்ளி, சிறிது இடைவெளியில் இரு உருவங்கள் சாய்ந்தவாறு உட்கார்ந்துகொண்டும், தங்கள் கோர முகத்தை காட்டியபடி, என்னையே உற்றுநோக்கி, பயமுறுத்துவதுபோல் கத்திக்கொண்டிருக்கின்றன. 

பயங்கர அதிர்ச்சி ... பயத்தில் நானும் கத்துக்கிறேன். ஆனால் அது அலறல் இல்லை... தவிப்பு , அரை மயக்கத்தில் , ஒன்றும் செய்ய இயலாதபோது, அதாவது எனக்கு ஆபத்து இருக்கிறது,, ஆனால் என்னால் எதிர்க்க முடியவில்லை என்பது போன்ற உணர்வு,இதனால் ஏற்படும் தவிப்புடன் கூடிய ஒரு ஓலம் என்றே நினைவிருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த தங்கையும் அலறிக்கொண்டு , என் கைகளை பற்றிக்கொண்டு எழுந்திருக்கிறாள். கூடவே நானும் எழுந்திருக்கிறேன். ஆனால், அந்த உருவங்கள் அப்படியே , அந்நிலையிலிருந்து சற்றும் மாறாமல், அப்படியே முறைத்தபடி, கத்திக்கொண்டிருக்கின்றன. நாங்கள் போட்ட சத்தத்தில், எல்லோரும் விழித்து, எழுந்து உட்கார்ந்து, என்ன நடக்கிறதென்றே தெரியாமல், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்து, பயந்த என் தங்கையின் மகன், அலறி இருக்கிறான். பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த என் சித்தப்பா வந்து , லைட் போட்டதும்,  அவ்வளவு நேரம் எனக்கு முன்னே தெரிந்த அந்த கோர உருவங்கள் மறைந்துவிட்டன. நான் உட்கார்ந்து இருக்கிறேன், என் உறவினர்கள் அனைவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். 

' என்னாச்சு .. என்னாச்சு .. என்று ஒரே கேள்வி,,, இவங்க இரண்டு பெரும் கத்தினாங்க.. ' என்று எல்லோரும் சொல்கிறார்கள். 

' என்ன .. நான் கத்தினேனா ...'

' ஆமாம்க்கா ... நீங்க கத்தினீங்க ..' இது தங்கை.

' அப்படியா, எனக்கு தெரியலையே...' 

சற்றுமுன் வரை பார்த்த முகங்கள் நினைவில் இருக்கின்றன... கத்தினது நினைவில் இல்லை... யாரிடமும் எதுவும் பேசாமல் யோசிக்கிறேன்... யோசிக்கிறேன்.. ' ஆமாம் ... நான் கத்தினேன்.. ஆனால் அது அலறலோ, கத்தலோ இல்லை... மிகுந்த தவிப்புடன் கூடிய ஓலம். ' இப்போது நன்கு நினைவிற்கு வருகிறது ..  அந்த கோரமுகங்களைப்பார்த்து பயத்திருக்கிறேன். எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் ஓலமிட்டு இருக்கிறேன்.

ஆனால், இதையெல்லாம் செய்தது நானா.. எனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே... கடவுள் நம்பிக்கை போகும்போது, சேர்ந்தே பேய் நம்பிக்கையும் போய்விட்டதே... நான் எப்படி பயந்தேன். இப்போது எல்லாம் தெரிகிறதே அப்போது மட்டும் ஏன் பயந்தேன்...எப்படிப்பட்ட நிலையிலும் எதிர்த்து போராடும் துணிச்சல் என்னவானது ... ஒன்றும் புரியவில்லை,  ஆனால் அது கனவல்ல... அது மட்டும் உறுதி.. அந்த உருவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தமாதிரி தான் உள்ளது. நேரில் தான் பார்த்தேன். அதை கனவென்று சொல்லி சமாதானம் செய்துகொள்ள முடியாது. இதை வெளியில் சொல்லவும்முடியது. ஏனென்றால், நான் ஒரு பெரியாரியவாதி என்பது எல்லோருக்குமே தெரியும். மற்றவர்களை விடுங்கள். எனக்கே நான் பொய்யாக கனவென்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. நேரில் பார்த்தேன் என்று சொலலவும் மனம் வரவில்லை... எனக்கே இப்படி என்றால், நம்பிக்கை உள்ளவர்கள் நம்பி விடுவார்களே... ஏன் இப்படி.. வந்த இடத்தில் பெரியார் கொள்கைகளை பரப்ப ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் எதுவும் என்னல தெளிவாக விளக்க  முடியவில்லையே... !

நிச்சயம் இம்மாதிரி மூடநம்பிக்கைகள் எனக்கு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கிடையாது... டாக்டர் கோவூர் அவர்களின் புத்தகம்  படித்திருக்கிறேன்.  என்ன இருந்தாலும், நிச்சயம் என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, நானே நேரில் பார்த்த உணர்வு..  அது கனவில்லையே.. அதோடு மட்டுமல்லாமல், ஓலமிட்டிருக்கிறேன். சே.. என்னடா இது .. என்று குற்றயுணர்ச்சியுடன்,  திருச்சியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தேன். 

இது கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட என்னுடைய நேரடி அனுபவம்.! :-) :-) 

வந்தவுடன், முதலில் அனைத்தையும் என் மகனிடம் சொல்லி முடித்தேன். சில நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருந்தான். பிறகு ,

 ' உங்களுக்கு , sub-conscious mind கடுமையா வேலை செய்திருக்கிறது. conscious mind சுத்தமா வேலை செய்யல... அதான் இப்படி... சின்ன வயசுல பார்த்த, கேட்ட , பல விசயங்கள் உங்கள் ஆழ்மனதில் பதிந்து, இப்போ , எப்படியோ வெளியே வந்திருக்கு... conscious  mind -க்கு தெரியும்...  நீங்கள் ஒரு நாத்திகர், இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று... ஆனால் , உங்கள் sub- conscious mind ல இதை நீங்க ஆழமா பதியவைக்கல... அதான்  எதோ ஒரு சமயத்தில் இப்படி வெளியாகி இருக்கு..' என்றான்.

நாம் நம் ஆழ்மனதை பயிற்சி செய்தல் மிக முக்கியம். நம்முடைய ஆசைகள், இலக்குகள், கொள்கைகள், எண்ணங்கள் அனைத்தும் ஆழமாக பதிய வைத்தல் நல்லது. அதுவும் நலல்வனவற்றை மட்டுமே பதிய வைக்க வேண்டும். தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்துவிட வேண்டும். நம்முடைய ஆழ்மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்நிலையிலும் நாம் நாமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆழ் மனதில் என் வாழ்க்கையின் நடுவில் நான்,   உணர்ந்து, தெளிந்த பெரியாரியம் இன்னும் ஆழமாக பதியவேண்டும் . மேலும் நம் ஆழ் மனம் லாஜிக் பற்றி சிந்திக்காது... தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் செய்திகளை மட்டும் வெளி கொணரும். நமக்கு இருக்கும் அறிவை பயன்படுத்த முடியாது என்பது உண்மை செய்தி என்பதை பல காணொளிகளில் பார்த்து தெரிந்துகொண்டேன். அது தான், பலர், நான் நேரில்பேய்யைப்  பார்த்தேன் என்று நம்புகிறார்கள் என்பதை என் அனுபவத்தின் வாயிலாக உணர்தேன். இது ஒரு நல்ல அனுபவமாக தான் இருந்தது... நேரில் பார்த்ததாக சொல்லும் மனிதர்களுக்கு புரிய வைக்க முடியும். இருப்பினும் ,  இன்னும் இதைப்பற்றி மனநல  ஆலோசகரிடம் பேச வேண்டும். அதிலும், இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்போது இந்த பதிவின் ஆரம்பத்திற்கு செல்லுங்கள்... எல்லாமே புரியும்.!



Tuesday, 8 August 2017

பெண் விடுதலை

#பெண்விடுதலை 

" என் பொண்ணு ரொம்ப நல்லவ... அப்படி எல்லாம் பண்ண மாட்டா.." இந்த சொற்றொடர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் போதே எரிச்சலாக இருக்கும். கோபம் வரும். இதெல்லாம் இந்த தலைமுறையோடு ஒழிந்துவிடும், அடுத்த தலைமுறையில் காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்தேறும் என்று நினைப்பதுண்டு. ஆனால், இன்றும் அதே நிலை தான் தொடர்கிறது  என்பது கூட உண்மை இல்லை... காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணை, ' ஓடுகாலி' என்று பட்டம் கட்டி,  குடும்பத்தை விட்டு  தள்ளி வைப்பார்கள்.எந்த நிகழ்விற்கும் சொல்ல மாட்டார்கள்... சேர்க்க மாட்டார்கள். அவ்வளவு தான்.!

ஆனால் இப்போது நிலைமை இன்னும் மோசமாக போய், ஆணவக்கொலைகள் நடக்கின்றன. சமீபத்தில் நாம் எல்லோரும் படித்து அதிர்ந்த  ஒரு செய்தி, பெண் காதல் திருமணம் செய்துகொண்டதினால், ஒரு குடும்பமே தற்கொலை செய்திருக்கிறது  என்றால், எந்த அளவிற்கு நம் சமூகம் ஜாதியாலும், ஆணாதிக்கத்தாலும், பெண்ணடிமைத்தனத்தினாலும்  புரையோடி போயிருக்கிறது என்பதற்கான சான்று. இதுவே அக்குடும்பத்தின் ஆண்பிள்ளை காதல் திருமணம் செய்திருந்தால், அக்குடும்பம் இந்த முடிவை எடுத்திருக்குமா ... சந்தேகம் தானே. பெண் குழந்தைகளை ஒரு உடைமையாக பார்க்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள் ... மக்களே, ஆண்களை போல் அவரக்ளுக்கும் விருப்பங்கள் உண்டு, இலக்குகள் உண்டு, காதல் உண்டு,  வலிகள் உண்டு, உணர்வுகள் உண்டு. 
ஆணாதிக்கச் சிந்தனையுள்ள  சமூகமே...  உனக்கு இருக்கும் அனைத்தும் அவளுக்கும் உண்டு என்றிருக்கும் போது , உனக்கிருக்கும் விடுதலை உணர்வு மட்டும் ஏன் அவளுக்கும்  இருக்க கூடாது ... சற்று சிந்தியுங்கள் ... ! 

அது ஆண்  பிள்ளையோ, அல்லது பெண்  பிள்ளையோ யாராக இருந்தாலும், நம் பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, இதில் திறமை இருக்கிறது என்பதை அறிந்து , சுயமரியாதையுடன், அவர்கள் வாழ்க்கையை அவர்களின்  சுயத்தில் வாழ , அவர்களை வளர்த்து விட வேண்டும் என்பது எப்படிப்பட்ட கடமையோ, அது போல் தான் அவர்கள் விரும்பிய வாழ்க்கைத்துணையை, இணையர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கானது என்பதையும் உணர்ந்து, அதற்கான புரிதலை அவர்களுக்கு உண்டாக்குவதும் நம் கடமைகளில் ஓன்று என்பதை  இனிமேலாவது, பெற்றோர்கள் உணர்ந்து செயல் பட வேண்டும்.!

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ...மக்கா ...

" பெண் சுதந்திரம் உள்ள நாட்டில் தான் பொருளாதாரமும்,  தொழில் வளர்ச்சியும், அன்பும், அறிவும் , பண்பும் வளர்கிறது.! "

" பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சி தான்  , ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை, முடிவு செய்கிறது.! "

Thursday, 3 August 2017

மாதவிடாய்

இன்று முற்பகல், தையற்கடையில், தைக்கப்பட்ட துணிகள் வாங்குவதற்கு காத்திருந்த போது, எனக்கு பின்னால் ஒரு பெண்மணி அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
50 வயதிற்கு மேல் இருக்கும்.
 
"  எங்கே ... எல்லா வேலையும் இன்னைக்கு நான் செய்யும்படி ஆயிடுச்சி... மருமக வீட்டுக்கு தூரம், ஆடிப்பெருக்கு அதுவுமா... நல்ல புத்தி இருந்தா தானே .. .அதான் இப்படி எல்லாம் ஆகுது .. '

நான் திரும்பி அவரின் முகத்தைப்பார்த்தேன். உடனே, 

' சரி ...ஆனந்தி, நா உங்கிட்ட அப்புறம் பேசறேன், வே;வெளியே வந்திருக்கேன் .. ' என்று அலைப்பேசியை துண்டித்தார்.

' இந்த காலத்திலும் இப்படி எல்லாம் யோசிக்கெறீங்களே... உலகம் எவ்வளவோ முன்னேறிக்கிட்டு இருக்கு... நாம தான் இன்னமும் பழசை பேசிகிட்டு இருக்கோம்..!' என்றேன். 

' அதெல்லாம் இல்லைங்க ... எத்தனை காலம் ஆனா  என்ன... பொம்பள பொம்பள தானே ... நமக்குன்னு உள்ளது மாறிபோச்சுதா... இப்படி தான் புதுசா பேசுறோம்னு சொல்லி  எதாவது குழப்பத்தை உண்டாக்குறாங்க..' என்று சொல்லிக்கொண்டே என்னைக்கடந்து கடைக்காரரிடம் சென்றுவிட்டார்.

நான் சில நொடிகள் அவரைப்பார்த்தவாறே நின்றுக்கொண்டிருந்ததை, பார்த்த தையற் கடைக்கார நண்பர், ' உங்க துணி எல்லாம் கொடுத்துட்டேன்..இல்ல அக்கா ..' என்றார். 
அதற்கு மேல் அங்கு நின்றால் அவரின் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற கவலை அவருக்கு. 

' ம்ம்ம் ... கொடுத்திடீங்க.. தேங்க்ஸ்.. சரி வரேங்க...'


வரும் வழியில் இந்த சிந்தனை தான் மூளையில் ஓடிக்கொண்டிருந்தது.. நான் சிறிய வயதில் இருக்கும்போது எங்கள் ஆத்தா (பாட்டி) தான் இப்படி சொல்வார்கள். தீபாவளி சமயம் என்ற நினைவிருக்கிறது... அன்று காலை  இதே நிலை தான்...  :-)

 ' நல்ல நாள் அதுவுமா இப்ப வந்திருக்கு ... பாரு,  வீட்டுக்கு தான்  தரித்திரம் '  என்றார்கள்.

இதற்கும், வீட்டின் தரித்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று அப்போது கேள்வி  எழுந்தது . 
அப்படியே இருந்தாலும் இதற்கு நான் எப்படி காரணமாவேன்..?!
பலகேள்விகள் மனத்தில் எழும். பதில் தான் கிடைக்காது.. ஏனென்றால், நான் அப்போது #பெரியாரை அறிந்திருக்கவில்லையே ...! 

இப்போதும் பெண்கள் இப்படி இருக்கிறார்களே என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது . இந்த அம்மா, இன்னும் ஒருபடி மேலே போய், நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் வரை  முடிச்சு போடுகிறார்... ஏனென்றால் சம்பந்தப்பட்டவர் மருமகள் ஆச்சே...!

இது ஒன்றும் தவறான விசையம் கிடையாது. இயற்கையில் நம்முடைய உடலியக்க செயல் தான். மற்ற கழிவுகள் போல் தான்... கருத்தரிக்கப்படாத முட்டை உடைந்து , மாதம் ஒருமுறை வெளிவரும் சுழற்சி. ஒரு உயிரை உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு அருமையான  உடலியக்க செயல்பாடு என்றெல்லாம் சொல்லி புரிய வைக்கலாமென்றால், கடைக்காரருக்கோ பிசினஸ் போயிடுமோ என்ற பயம்... என்ன செய்வது ... அந்த பெண்மணியை போன்று பலர் இருக்கிறார்கள்... #மாதவிடாய் என்ற ஒரு விசையம் ஏன் இப்படிப்பார்க்கப் படுகிறது என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.! :-(

தந்தை பெரியாரை படிக்கவில்லை என்றால், நானும் இப்படி தான் நினைத்திருப்பேனோ .... அய்யோ... நினைச்சாலே தலைசுத்துதே ... கொஞ்சம் சத்தமாகவே  சொல்லிக்கொண்டேன்.!

வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு.!  :-) :-)








பின்னோக்கி செல்லும் இந்தியா

ஹோட்டல்களில் சாப்பிட முடியாது... ஜிஎஸ்டி கழுத்தை நெறிக்கும்... வீட்டில் சாப்பிட வேண்டுமென்றால், காஸ் சிலிண்டர் இருமடங்குக்கு மேல் உயர்வு... அடுத்தாண்டு முதல், மானியம் கிடையாது. இதில் மாதம் ஒருமுறை 4 ரூபாய் என வருடத்திற்கு 48 ரூபாய் ஏறும்.. அதுவும் இப்போதைய  தகவல்.   போக போக இன்னமும் ஏறும் நிலை வருமே தவிர குறையப்போவதில்லை...டிஜிட்டலில் சோறாக்கி சாப்பிட முடியுமா.. முடிந்தால், பாஜக அரசு அதையும் அமல்படுத்திவிடும்.!

நீட் மூலம் கல்வியில் கைவைத்தாகிவிட்டது... உண்ணும் உணவிலும் இந்த ஆதிக்கம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது... நாடு 200 , 300 ஆண்டுகளுக்கு பின்னே பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது... கட்டைவண்டியும், விறகு அடுப்பும், ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும்  நிலையையும் கொண்டுவந்து , போராடும் குணமே அற்றுப்போய் , அதனைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் சோற்றுக்காக அடிமைப்படுத்தும் பழைய #மனுதர்மஆட்சியை நிறுவ துடித்துக்கொண்டிருக்கும்  #பார்ப்பனீயத்தை உணர்ந்து, செயல்படவேண்டிய கட்டாயத்தில் நாம்  இருக்கிறோம்.! 

அழியப்போகும் ஜனநாயகம்

நாம் ஒரு கருத்து சொல்லும்போது, அதை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை என்று மற்றவர்கள் சொன்னால் , அதனை புரிய வைக்க முயல வேண்டும். ஆனால், அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டு, தவறான பாதையில் செல்ல நாம் காரணமாக இருக்கக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன்.
சமீபத்தில், ஒரு பெண்ணிடம் தற்போதைய அரசியலைப்பற்றி பேசும் போது,
' யாருமே சரியில்ல... எல்லா கட்சியும், கொள்ளை அடிக்குது... அதான் நான் ஓட்டு போடறதில ..' என்றார்.
' இருப்பவர்களிலே யார் சிறந்தவர், எந்த கட்சி சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஓட்டு போடுங்கள்..' என்றேன்.
' அப்படி போடவேண்டிய அவசியம் என்ன வந்தது... யார் வந்தால் எனக்கென்ன ...'
' அப்படி உங்களைப்போன்றோர் ஓட்டு போடாததினால் தான் கள்ள ஓட்டுகள் மூலம் வேண்டாத கட்சிகள் வெற்றிப்பெறுகின்றன... தவறான ஆட்சிக்கு வழி வகுத்துவிடுகிறது ... '
' நான் ஒருத்தி போடவில்லை என்றால், என்ன ஆகிவிடப்போகிறது...?'
' நீங்கள் நினைப்பது போல் எல்லோருமே நினைத்தால் ஓட்டு முழுதும் ஒரு குறிப்பிட்ட அதிகாரமிக்க கட்சிக்கு போய் சேர்ந்துவிடாதா... யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பது முக்கியம் அல்லவா..' என்றேன்.
அதற்கு மேல் , அவர் எதுவும் பேசவில்லை. சிறு புன்னகையை பதிலாய் தந்தார்.
இதுவரை பலரிடமும் இப்படி பேசியிருக்கிறேன். 80 லிருந்து 90 விழுக்காடு வரை வாக்குகள் நேர்மையான முறையில் பதிவுசெய்யபபடவேண்டும். மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்சி அரசாள வேண்டும் என்பது தான் ஒரு ஜனநாயக நாட்டிற்கான நியதி.
ஆனால்,
" இனி ஜனநாயகம் ஒழிக்கபப்ட்டு விடும் ஆபத்து இருக்கிறது... ஒற்றை ஆட்சி முறை அமலுக்கு வந்துவிடப்போகிறது. யார் வெற்றிபெற வேண்டும் என்பதை கூட அரசே முடிவு செய்யும் நிலை ஏற்படப்போகிறது...! "
இந்த ஒற்றை ஆட்சிமுறை , ஒருவகையில் நமக்கு நன்மையை தரப்போகிறது எனலாம். காரணம், மக்கள் எல்லாவற்றிற்கும் அடக்குமுறைக்கு ஆளாவார்கள். உள்நாட்டுப்போர்கள் அதிகரிக்கும். தீவிரவாதம் தழைத்தோங்கும்... மத, ஜாதி கலவரங்கள் தலைவிரித்தாடும்... ஆங்காங்கே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி, மாபெரும் புரட்சி வெடிக்கும். மாநிலங்கள் தனித்து விடுதலை கோரும் நிலை உண்டாகும். அப்போதாவது ஜாதிவாரியாக பிரிந்து நிற்காமல், ஒன்றிணைந்து நம் மண்ணின் விடுதலைக்கு போராடி, தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைப்போம்.! 

Tuesday, 18 July 2017

சானிட்டரி நாப்கின்ஸ்

பலசரக்கு கடையில் மளிகைப்பொருட்கள  எடுத்துக்கொண்டிருக்கும் போது, பக்கத்தில் ஒரு பெண்ணும் ஒவ்வொரு பாக்கெட்களிலும் விலையை பார்த்தவாறே எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். நடுத்தர  வயது இருக்கும். நானும், அவரும் ஒரே சமயத்தில், ஒரே பொருளை எடுக்க முற்பட்டோம். உடனே இருவரும் சிரித்துக்கொண்டே, 

' நீங்களே எடுங்கள் ... ' என்றேன்.

' பரவால்ல... நீங்க எடுத்துக்கோங்க... பக்கத்துல இருக்கு, அதை நான் எடுத்துகிறேன் ... ' என்றார்.

அதன் பிறகு ஒரு தோழமை ஏற்பட்டு  விட்டது . பேசிக்கொண்டே எடுத்துக்கொண்டிருந்தோம்.
சானிட்டரி நாப்கின் உள்ள அடுக்கின் அருகில் வந்தோம். அப்பெண், ஒரே ப்ராண்டில் சைஸ் வாரியா எடுத்து வைத்தார்.

' எதற்கு பல சைஸ் எடுக்கிறீர்கள் ... சும்மா தெரிந்து கொள்ள தான்.. தப்பா எடுத்துக்காதீங்க... ' இது நான்.

' இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு... வீட்டில் இரண்டு குழந்தைங்க இருக்காங்க.. என் பொண்ணுங்க தான்... பெரியவ 16 வயசு.. சின்னவளுக்கு 13 வயசு.. நானோ  PMS - ல இருக்கேன். எனக்கு நிறைய தேவைப்படுது... அதுங்களுக்கு வேனும்... முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சைஸ், அப்புறம் குறைய,குறைய இன்னொரு சைஸ் னு யூஸ் பண்றோம்... என்ன செய்றது... எனக்கோ எப்பனே தெரியறதில்ல... அப்பப்ப, தகுந்த மாறி யூஸ் பண்ணுவோம். இந்த GST  வந்ததுல ரொம்ப காசு ஆகுது... ஒண்ணொன்க்கும் 12% வரி அப்டினு ஈஸியா போட்டாங்க... நமக்கு இல்ல இந்த கஷ்டம் தெரியும்... '

' ஆமாமா... இதுல வரி போடறது ஏத்துக்கவே முடியாது... ரொம்ப அநியாயமா இருக்கு...'

' ஆமாங்க ... நாம என்ன லட்சக்கணக்குலயா சம்பாதிக்கிறோம்.. பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும், வாழ்க்கையை ஓட்டறதுக்குமே சரியாய் இருக்கு... இதுல இந்த விலைவாசி ஏற்றம், வரி எல்லாம் நம்மள படாய் படுத்துது... இதுல போற எக்ஸ்ட்ரா காசுல பத்து நாள் காய்கறி செலவு பண்ணிடலாம்...'  என்றார்.

இந்நிலை தான் பெரும்பாலான மக்கள் சந்தித்துக்  கொண்டிருக்கிறார்கள்.  வரவுக்கும், செலவுக்கும் சரியாக போய்க்கொண்டிருக்கும் குடும்பத்திற்கே இந்நிலை தான் என்றால், பற்றாக்குறையாய் இருக்கும் குடும்பங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்... இந்த அரசு எவ்வளவு மக்களை கொடுமைப்படுத்துகிறது என்பதற்கான சான்று தான் இவைகள் எல்லாம்.!

சானிட்டரி நாப்கின்களை வரி விதித்திருக்கிறதே ... இந்த அரசு... இது என்ன பெண்கள் விரும்பி ஏற்றுக்கொண்டவையா... இயற்கையில் உடல் ரீதியாக உள்ள ஒரு சுழற்சி முறை. இதற்கு பயன்படுத்தும் நாப்கின்களுக்கு யாரவது வரி விதிப்பார்களா...  என்ன ஒரு அராஜக ஆட்சி முறை இது..!

12 வயது குழந்தை முதல், மத்தியவயதுடைய அனைத்துப்பெண்களும் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு வரி விதித்து தான் இந்த அரசாங்கம் நடக்க வேண்டுமா.. இங்கே முகநூலில் சில பதிவுகல் பார்த்தேன். உங்கள் கொள்ளுப் பாட்டிகள் எல்லாம் இதை தான் பயன்படுத்தினார்களா... துணியை பயன்படுத்துங்கள் என்ற மாதிரியான சில அதிமேதாவிகள் பதிவு போட்டிருந்தார்கள். !

அவர்களுக்கு ஒரு கேள்வி  ....

' உங்கள் வீட்டில் உள்ள 12, 13, வயதுள்ள உங்கள் மகளிடமும், நாற்பதின் மத்தியிலும், இறுதியிலும் உள்ள உங்கள் மனைவியிடமும் இதை சொல்லி பாருங்கள்... காரித் துப்புவார்கள்.!

ஏன்... நீங்களெல்லாம் உங்கள் கொள்ளுத்தாத்தா மாதிரி, வெறும் காலுடன்  கட்டைவண்டியிலேயா போகிறீர்கள்...!

மாற்றம் என்பது நம் வசதிக்காக தான்... எனக்கு எந்த முன்னேற்றமும் வேண்டாம்  பழைய பஞ்சாங்கமாகவே தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பீர்களென்றால், நீங்கள் வேண்டுமானால் அப்படி இருந்துகொள்ளுங்கள்... மற்றவர்களிடம் இதனை திணிக்காதீர்கள்.!

Thursday, 13 July 2017

ஆணாதிக்கமும், பெண் விடுதலையும்

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது , ' ரயில் பயணங்களில் ' திரைபபடம் பார்த்து  ரொம்பவே அழுதிருக்கிறேன். கதாநாயகியின் கணவன் திருந்தி, அவளுடன் வாழ்ந்திருக்கலாம்.. கதாநாயகன், அவனை விரும்பும் பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணம் சில நாட்களுக்கு வந்து கொண்டே இருந்தது என்பது உண்மை.!

மறுபடியும் நேற்று, கே டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... இப்போது என்னுடையப்பார்வை வேறு மாதிரியாக இருந்தது. தந்தை பெரியாரின் மூலம் எனக்கு கிடைத்த மனப்பக்குவம், பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை, பெண்ணியம் , இவைகள் தந்த தெளிவு , இதனை ஒட்டியப் பார்வை என்பது மிக அழகாக இருக்கிறது.

 மனிதம் சார்ந்த பார்வையாக உள்ளது. முன்பும் இதே மனிதம் இருந்தது என்றாலும், பழமைவாதத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் மனிதம் அது.!
இந்த முறை பார்க்கும்போது ஏற்பட்ட உணர்வு என்பது, தாலிகட்டிக்கொண்டதாலேயே , 

' ஒரு பெண் ஏன் இவ்வளவு துன்பப்பட வேண்டும்..? '
 மணவிலக்கு பெற்றுக்கொண்டு , தன பழைய காதலனுடன் சேர்ந்து வாழலாமே.. அது மட்டுமல்லாமல், கிளைமாக்ஸில்,  தன்னை நலலவள் என்று நிரூபிப்பதற்கு, ஏன் தன காதலனையே சுட வேண்டும்... அவனுடன் சேர்ந்து வாழ்வதினால் என்ன கெட்டுவிட போகிறது...? ' 

என்ற வினாக்கள் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருந்தன

.பெண் என்பவள்  ஒவ்வொரு காலகட்டத்திலும், தான் சார்ந்திருக்கும் ஒவ்வோரிடமும் தன்னை நல்லவள் என்று மெய்ப்பித்துக்கொண்டே இருக்குமாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறாள் என்பதில் தான் ஆணாதிக்கம் கோலோச்சிக்கொண்டிருக்கிறது என்பது தான் ஆணாதிக்கத்திற்கும், பெண் விடுதலைக்கும் இடையேயான பிணைப்பாக இருக்கிறது. 

இந்த கட்டமைப்பை உடைத்து விட்டாலே பெண் விடுதலை மற்றும் பாலியல் சமத்துவம் என்பது சாத்தியமாகி விடும் என்பது நிதர்சனமான உண்மை.!

NEET

நீட் தேர்வு என்றால் என்ன... அதனால் நம் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பு என்ன... ஒரு சமூகத்தின் கல்வியை, அதன் மூலம் நமக்கு கிடைக்கும் அறிவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை, நம் உரிமையை எவ்வாறெல்லாம் இந்த தேர்வு பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை, நண்பர்கள், உறவினரக்ள், பொது இடங்கள் என வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம், (முடிந்தால் வாய்ப்பை நாமே உருவாக்கியாவது ) ஏற்படுத்துவோம் ... நண்பர்களே...!

Tuesday, 11 July 2017

உப்பு சத்தியாக்கிரகம்

" நாம் உப்பு வாங்குவதில் சர்காருக்குக் கிடைக்கும்  வரிப்  பணத்தில் சம்பள ரூபமாக நமது தாஸ், நேரு, பட்டேல், சாப்ரூ, சின்ஹா, அய்யர், அய்யங்கார்,ஆச்சாரி.சர்மா,சாஸ்திரி, சாயுபு, நாயர்,முதலியார்,நாயுடு,ரெட்டியார்,செட்டியார், கவுண்டர், என வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி, தேசியவாதிகளும், காங்கிரஸ் தலைவர்களும், காந்தி சிஷயர்களும் மதம் ஒன்றுக்கு, 2000, 3000, 5000, 6000, 7000 விதம் பங்குபோட்டுக் கொள்கிறார்களே ஒழிய யாராவது  வேண்டாமென்று சொல்லி வாபசு செய்து சம்பளத்தை குறைத்து கொண்டார்களா, அல்லது குறைத்துக்கொள்ள திட்டம் ஏதாவது வைத்திருக்கிறாரர்களா.... ?  

ஆகவே இந்தியர்களின் வரி உயர்விற்கும், அவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதற்கும், இந்திய தேசியவாதிகளும், தேசிய காங்கிரசும், அவைகளை ஆதரித்த மகாத்மாக்களும் ஜவாப்தாரிகளா அல்லது வெள்ளைகார்கள் ஜாவாப்தாரிகளா என்று  இப்போது யோசித்துப்பாருங்கள்.! "

-- தந்தை  பெரியார்.
குடியரசு 
( 16.03. 1930 ) 

இந்த செய்தியை நாம் முன்னே, பின்னே படித்திருக்கிறோமா....நான் இப்போது தான் அறிந்துகொண்டேன். குடியரசு தொகுதியில், அய்யா அவர்களின் பதிவிலிருந்து...!

உப்புசத்தியாகிரகத்தைப் பற்றி, பத்தி பத்தியாக பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். இந்த கொள்ளையை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் , பெரியாரை தான் படிக்க வேண்டும். என்ன ஒரு அராஜக  கொள்ளை இது... அதுவும் ஜாதிவாரியாக பங்கு பிரித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களை வெள்ளையனுக்கு வரிக்கட்ட வேண்டாமென்று தூண்டிவிட்டு , தாங்களே தயாரிக்கிறோம் என்று சொல்லி, இவர்கள் அலலவா கொள்ளையடித்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை, மக்கள் பணத்தை கொள்ளையடித்து, அதை ஜாதிவாரியாக பிரித்துக்கொள்வதில் #பார்ப்பனீயம் கைதேர்ந்தது என்பதை  மெய்ப்பித்துக் கொண்டுதானிருக்கிறது.!

அதனால் தான் பெரியார் வித்தளையின் போது , ' நாடு வெள்ளையரிடமிருந்து , கொள்ளையரிடம் கை மாறியிருக்கிறது.'  என்ற உண்மையை தோலுரித்து காட்டியுள்ளார்கள்  போலும்.!