Monday, 30 January 2017

ஜாதீயம்

#நந்தினி 


ஐயோ .. என்ன ஒரு கொடுமை ... படிக்கவே முடியவில்லையே ... அந்த பிஞ்சு உடல் எவ்வளவு துடிதுடித்து போயிருக்கும்... !

மனிதர்களாக வாழ தகுதியற்ற மிருகங்கள் இந்நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன ....  இந்நாட்டில் ஜாதி கொடுமை என்றுமே தானாக தீராது...அதற்கான முன்னெடுப்பை இளைய தலைமுறையினரிடம் நாம் தான் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.!

பாதிக்கப்பட்ட பெண் தாழ்ந்தஜாதி என்பதால் ,குற்றமிழைத்தவன் மதம் சார்ந்த  ஒரு அமைப்பைச் சேர்ந்தவன், ஒரு இந்துத்வாவாதி  என்பதால் இதற்கான நீதி மறுக்கப்பட வேண்டுமா ...!

நூற்றுக்கணக்கில், நந்தினிக்களும், கலைச்செல்விகளும் இதற்காக தங்களுயிரை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தவறு இழைத்தவரக்ள் தண்டனை பெற்றாக வேண்டும். மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டவர் வன்கொடுமை சட்டம் இதன்முலம் இதற்கான நீதியை நிலைபெற செய்ய வேண்டும்.!

Wednesday, 25 January 2017

மாணவச் செல்வங்களின் போராட்டமும், அதன் பின்னணியும்.!

மத நல்லிணக்கம் ,
ஜாதி கலக்காத சமத்துவம்,
பாலினம் கடந்த ஒரே சிந்தனை,
வர்க்கம் தாண்டி ஒற்றுமை,
இவையெல்லாத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் இனவுணர்வு,
இன உரிமை சார்ந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டம்.!

இவையனைத்தும் தான் காவிகளின் இந்த ஆக்ரோஷத்திற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.!

நாம் ஒற்றுமையுடன் இருந்தால் அவர்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.!

போராட்டக்களத்தில் தீய சக்திகள் நுழைந்து விட்டால், அவர்களை களை எடுப்பது தான் காவல்துறையினரின் கடமை... அதை விடுத்து, அறவழியில் போராடிய மாணவர்களை கடுமையான முறையில் தாக்குவது,, அதன்பிறகு கடைசி நாளில் போராடிய போராட்ட இளைஞர்களுக்கு உதவிய மீனவர்களையும்  கண்மூடித்தனமாக தாக்கிய முறைகள் அனைத்துமே ஆதிக்க, அதிகாரச் சக்திகளின்  வேலை தான் இது என்பதை நமக்கு உறுதி செய்கின்றன.!


ஓன்று சேர்ந்த மனித ஆற்றலை தவறாக சித்தரிப்பதன் மூலம் மீண்டும் இளைஞர்கள் ஓன்று சேர அச்சப்படும் சூழலை ஏற்படுத்தி, நம் ஒற்றுமையை குலைக்கும் ஒரு மோசமான சதியாக தான் இது இருக்க முடியும்.!

எடுப்பார்  கைப்பிள்ளையாக இருக்கும் மாநில அரசும், அதற்கு பின்புலமாக செயல்படும் மதவாத  மத்திய அரசிற்கும் கடும் கண்டனங்கள்.!


Friday, 20 January 2017

பெருமையும், பெரு மகிழ்ச்சியும்.!

" எனக்கு எந்த தொந்தரவும் இல்லை... என் வீட்டில் , என் அண்ணன், அப்பா அவர்களுடன் இருக்கும் அதே பாதுகாப்பு உணர்வை  தான் இந்த போராட்டக்களத்திலும் உணர்கிறேன். உணவு கூட எங்களுக்கு கொடுத்தவிட்டு பிறகு தான் நண்பர்கள் சாப்பிடுகிறார்கள்... ஜாதி,மதம் பாலினம் கடந்து, போராடும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதை மிக பெருமையாக உணர்கிறேன்.! "


இன்று காலை பண்பலையில், ' இவ்வளவு இளைஞர்களுடன் சேர்ந்து போராடுகிறீர்களே .. உங்களுக்கு ஏதாவது இடையூறு வருகிறதா? ' என்று கேட்ட கேள்விக்கு , மாணவி ஒருவரின் பதில் தான் இது..! :-)

வாழ்த்துகள் மக்கா ... மிகவும்பெருமையாக இருக்கிறது ... எம் தமிழ் இளைய சமூகத்தை நினைக்கும் போது..!!!  :-) :-) 



இளைஞர்களின் இந்த தன்னெழுச்சி மிகவும் பாராட்டத்தக்கது ...!

பேரன்பும்,வாழ்த்தும், நன்றியும்.! :-)

Wednesday, 18 January 2017

ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல்

பெரியாரியம் பேசிக் கொண்டு எப்படி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு கொடுப்பது என்று பல தோழர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்... நான் இப்போது சொல்ல வரும் கருத்து என் அறிவிற்கு , நான் ஏற்றுக்கொண்ட என் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஜல்லிக்கட்டு என்பது தேவையில்லாத ஓன்று ... மனிதனுக்கும், மிருகத்திற்கும் என்ன வீர விளையாட்டு வேண்டியிருக்கிறது... இதனால் ஆண்டுதோறும் பல மனித உயிர்கள் பலியாகின்றன... மேலும் இதில் ஜாதி ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது... ஆணாதிக்கம் கோலோச்சுகிறது.. மூடநம்பிக்கைகள் மலிந்திருக்கின்றன ..  பாரம்பரியம், பண்பாடு என்று சொல்லிக் கொண்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது , பாரம்பரியம் என்ற ஒரு காரணத்தினால் நம் அறிவுக்கு ஒவ்வாத எதையும்  ஏற்றுக் கொள்ள கூடாது என்பது தான்  கடந்த ஆண்டுகளிலும், ஏன்..,  சென்ற வாரம் வரை கூட என்னுடைய நிலைப்பாடு இது தான்..!

ஆனால் தற்போதைய நிலைமையை உற்றுப் பார்த்தோமானால், இது வெறும் மிருகவதை என்ற காரணத்தினால் மட்டும் தடை செய்யப் பட்ட ஒன்றாக இல்லை என்பது தெளிவாகிறது... இதன் பின்னே ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்து முன்னணி என அனைத்து இந்துத்வா அமைப்புகளும் செயல் படுகின்றன என்பதை உணர முடியும். பார்ப்பனீயம் வெகு சாமார்த்தியமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கிறது...!

எப்படியென்றால், நம் விவசாயத்திற்கும், நம் நாகரீகத்துக்கும் தொடர்புடையது காளை... நம் நாகரீகத்தின் அடையாளச் சின்னமாக இருப்பதும் காளை தான்.  காளையை இதன் மூலம் ஒழித்து கட்டி  
விட முடியும்... காளைக்கும், ஆரியத்திற்கும் வெகுகாலமாக பகை.! செயற்கை ஊசி மூலம் வெறும் பசுக்களையே கருத்தரிக்க வைக்கும் ஒரு முறையை ஏற்படுத்தியப்பிறகு, காளை நம் தமிழர் வாழ்வியலிலிருந்து அகற்றப்பட்டு விடும். நம் வீட்டு விலங்கு காளை அல்ல .. அது ஒரு வனவிலங்கு என்றாகி போகும். ஏற்கனவே காளை, குதிரையாக மாற்றி அமைக்கப்பட்டு, பின்பு நம்முடைய எதிர்ப்பினால் திருத்தியமைக்கப்பட்ட வரலாறு  மீண்டும் மறைந்து போகும்.. மறைக்கப்பட்டு விடும் பார்ப்பனீயத்தினால்.!

சிந்துசமவெளி நாகரீகம் திராவிடர் நாகரீகம் என்பது அழிக்கப்பட்டு, ஆரிய நாகரீமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விடும். ஆரியர்கள் வந்தேறிகளல்ல .. பூர்வகுடிகள் என்று மாற்றி அமைக்கப்படுவார்கள்.!காளையை அழிக்கும் ஒரு செயலுக்கு பின், பார்ப்பனீயத்தின் இத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் இருக்கிறது  என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.!

சரி .. தந்தை பெரியார் இருந்தால் என்ன செய்திருப்பார்..??? 
ஆதரிப்பாரா .. இல்லை ஆதரிக்க மாட்டாரா..!!!
இதனை ஆதரித்து இருப்பார் என்பது தான் என் கருத்து.. எப்படியென்றால் அவரின் அப்போதைய செயல்பாடுகள் தான் இதனை எனக்கு உறுதி செய்கிறது. 

1.  ''எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் என் சகோதரர்கள் நம்புகிறார்கள்..அவர்களுக்காக அவர்களின் உரிமையை பெற்றுத் தர வேண்டும் 'என்று போராடினார். அந்த உரிமையைப் பெற்றபிறகு , அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்  என்று கோரிக்கை வைத்தார். முதலில் கோவிலுக்குள்ளே போக வேண்டும் என்பது.. அதன்பிறகு கருவறைக்குள் போக வேண்டும் என்பது .. இவ்விரண்டுமே ஜாதி ஒழிப்பிற்கான போராட்டம் தான் (கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் ) என்பதை தோழர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.!

2. அடுத்து, திருமணம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது .. ஆணாதிக்கத்திற்கும், பெண் விடுதலைக்கும் மிகப்பெரிய இடையூறாக இருப்பதே இந்த திருமண முறை தான் என்பது அறிவாசான் அவர்களின் கொள்கை.  'எங்களுக்கு புரோகிதர் இல்லை என்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியும்...ஆனால் தாலி  கட்டி தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நண்பர்களிடம் அதற்கு ஒப்புக் கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.  அதற்கு அவர்களுடைய பதிலும், ' மூடநம்பிக்கையற்ற, பார்ப்பான் இல்லாத சுயமரியாதை  திருமணம் செய்ய ஒத்துக்க கொண்டார்களே .,.அதுவே பாராட்டத்  தக்கது .. அவர்களே பிறகு தாலியற்ற திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் 'என்று கூறினார்கள்  அல்லவா ... அது போல் தான் இதுவும்... நம்முடைய பாரம்பரியம், பண்பாடு என்பது எல்லாம் நம் மாநிலஉரிமை... அதில் தலையிட ஆர்.எஸ்.எஸ் .க்கு என்ன உரிமை இருக்கிறது...!


3. இதில் பாலின சமத்துவம் தேவை, ஜாதி,மத வேறுபாடுகள் களையப்பட  வேண்டும், இல்லை இந்த விளையாட்டை அரசே ஏற்று ,ஒரு மாநில விளையாட்டாக நடத்த வேண்டும் .. மனித உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ...,  இன்னும் சொல்லப்போனால், இந்த விளையாட்டு வேண்டுமா... வேண்டாமா என்பதை மாநிலஅரசும், நம்மக்களும் தான் முடிவு செய்வ வேண்டுமே தவிர மத்திய அரசிற்கோ, இந்துத்துவ அமைப்புகளிற்கோ , வெளிநாட்டு மிருகவதை அமைப்புகளுக்கோ உரிமையில்லை என்பது தான் சரியாக இருக்க முடியும்.!


  4. 'ஆனா, ஆவன்னா ' வே தெரியாத மக்களிடம் போய் ஒரு நீண்ட கட்டுரையை கொடுத்து படியுங்கள் என்று சொன்னால் , எப்படி படிப்பார்கள்.. அலட்சியப்படுத்த தானே தோன்றும்... அது போல் இதுவும்.!


நம் உரிமையை முதலில் தக்கவைத்துக் கொள்வோம் ... நம் பண்பாட்டுச் சின்னம், பாரம்பரியம், நம்முடைய வரலாறு சொல்லும் வரலாற்று சான்றுகள் இவைகளை பாதுகாப்போம். அதன்பிறகு தேவையில்லாத, நம் ஒற்றுமைக்கு ஒத்துவராத , நம் இனத்திற்கு அச்சத்தை ஊட்டக்கூடியவைகளை களையெடுப்போம்... நண்பர்களே..!


தற்போது தன்னெழுச்சியாக உருவாக்கி இருக்கும் இளைஞர் கூட்டத்தை ஆதரித்து, அவர்களை மென்மேலும் பண்படுத்தி, நம் உரிமைகளின் மீது தாக்கப்படும்  மத்திய அரசின் அனைத்து தாக்குதல்களையும் புரிய வைத்து போராட்டத்தை பெரும் புரட்சியாக உருவாக்குவோம் ... இப்போது அவரக்ளுக்கு ஆதரவாக இருப்போம் நண்பர்களே..! 

மாநில சுயாட்சியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது... மாநில உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருப்போம். ஆரியம் ஒரு விடயத்தில் தீவிரமாக இருக்கிறது என்றால், அதன் பின்னால்,   ஏதோ மிகப்பெரிய  அழிவு காத்துக் கொண்டு  இருக்கிறது என்பதை நம் அறிவாசான் அய்யா அவர்களே மிக தெளிவாக நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள் என்பதை உணருங்கள்...  நன்கு சிந்தியுங்கள் ... மேலோட்டமாக பார்த்து விட்டு, இந்த பதிவு  ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான பதிவு  என்ற கண்ணோடத்தில் மட்டுமே என்று எண்ணி விடாதீர்கள் நண்பர்களே.!

Friday, 13 January 2017

இனிய பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

விவசாயம் பொய்த்து , விவசாயிகளின் இறப்பு தொடர்வது என்பது மிகப்பெரிய அளவில் வருத்தத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.!
இவ்வாண்டு முழு மனநிறைவுடன் வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை ...!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்.!

Thursday, 12 January 2017

ஜல்லிக்கட்டு என்ற போர்வையில் மூக்கை நுழைக்கும் மத்திய அரசு.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  - பொன்னார்.

இப்போது தெரிகிறதா ... ஜல்லிக்கட்டிற்கு பின் என்ன இருக்கிறது என்று...!

ஜல்லிக்கட்டு என்பது ஒரு சப்பைக்கட்டு .. அவர்களை பொறுத்தவரை...!

ஜல்லிக்கட்டு தேவையா, தேவை இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும்.!

அதில் ஜாதி ஆதிக்கம் இருக்கிறது என்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.!

மனித உயிர்கள் பலியாகின்றன என்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.!

அது பழந்தமிழ் பண்பாட்டு விளையாட்டுகளில் ஓன்று ... தற்போதைய காலத்திற்கு இது தேவை தானா என்ற விவாதமும் ஒருபுறம் இருக்கட்டும்.! 

அதனை கட்டுப்படுத்த மாநில அரசு இருக்கிறது... இது மாநில அரசின் உரிமை... பண்பாடு என்பதும், மக்களின் உணர்வுகள்  என்பதும், அந்தந்த மாநில மக்களின்  வாழ்வியலை பொருத்தது ... அந்த அரசின்  கடமையைப் பற்றியது.!

இதை காரணமாக கொண்டு, மாநிலஅரசை கலைக்க முற்படுவது என்பது சர்வதிகார ஆட்சியாக தான் இருக்க முடியும்.!


தங்கள் கொள்கைகள் மூலம் மக்களை நெருங்க முடியாதவர்கள் , தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தை பழி வாங்கும் செயலாக தான் இது இருக்க முடியும்.!






Wednesday, 11 January 2017

பொங்கல் பண்டிகையை பொது விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கியதாக அறிவித்த 24 மணி நேரத்திற்குள் ,அந்த அறிவிப்பை பின்வாங்கி மீண்டும் பட்டியலில் சேர்த்திருக்கிறது மத்திய பாஜக அரசு.!

இதற்கு சமூக வலைத்தளங்களும் மிக முக்கிய காரணங்களில் ஓன்று. அனைவரும் ஓன்று சேர்ந்து எதிர்த்த எதிர்ப்பு மத்திய அரசை நிலைகுலைய செய்திருக்கிறது என்றால் மிகையில்லை. நம்முடைய ஒற்றுமை உணர்த்திய வெற்றி இது.!

இது சாதாரண பிரச்னை அல்ல ... இன்று விருப்ப விடுமுறை என்பவர்கள் ,நாளை விடுமுறையே இல்லை என்பார்கள். அதன் பின்பு கொண்டாடவே கூடாது என்பார்கள் .. இது சற்று மிகையாக தோன்றினாலும் இதெல்லாம் நடக்கக் கூடியதே.. மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்ன கூட்டமல்லவா இது.!

தந்தை பெரியாரின் முயற்சியில் நீதிக்கட்சி அல்லவா இதனை ஒழித்துக் கட்டியது... கல்வியில், வேலையில் இடஒதுக்கீடு, பெண் விடுதலை, பெண்களுக்கு சொத்துரிமை, சுய மரியாதையை திருமணம், இது போல் பலவற்றை சொல்லலாம்.. திராவிடர் கழகம் ஏன்ன செய்து கிழித்தது என்று சொல்பவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.!

இவ்விசயத்திலும், நம் ஆசிரியர் அய்யா . கி. வீரமணி அவர்கள், செய்தி வெளிவந்த உடனே, புத்தகக்காட்சி புத்தக வெளியீடு விழாவில் தன்னுடைய கடுமையான கண்டனத்தை வலிமையுடன் தெரிவித்தார்கள். எப்போதும் சமூகப்பிரச்னை, இனப்பிரச்சனை, பண்பாட்டுப்பிரச்சனை என அனைத்திற்கும் முதலில் குரல்கொடுப்பது திராவிடர் கழகம் தான்.!

இதனுடைய இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். நண்பர்கள் படித்து தெரிந்துக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறேன்.!

திமுக செயல் தலைவர் . திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும்  உடனே எதிர்ப்பை தெரிவித்து போராட்ட நாளையும் அறிவித்தார்கள். தமிழர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்தனர்.! 

நம்முடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது ... இதனை உணர்ந்து அனைவரும் ஓன்று சேர்ந்து நம் மீது திணிக்கப்படும் அனைத்து திணிப்புகளையும் எதிர்த்து போராடி வெல்ல வேண்டும்.!



http://viduthalai.in/headline/136163-2017-01-10-12-07-37.html






Thursday, 5 January 2017

ஒற்றுமை .. காலத்தின் கட்டாயம்.

ஐந்து விரலும் ஒன்னாவா இருக்கு... 

இந்த சொற்றொடரை நாம் எல்லோரும் கேட்டிருப்போம்.!
இன்று காலை காய் நறுக்கிக் கொண்டிருந்தபோது இடதுகை  பெருவிரலை கவனக்குறைவினால் நறுக்கிக் கொண்டேன்... ஆழமான வெட்டு தான்.! கையை தண்ணிரில் காட்டி, பிறகு துடைத்துவிட்டு பாண்ட்ஏய்ட் போட்டும் இரத்தம் வழிந்தது...  மேலேயே மற்றொரு பாண்ட்ஏய்ட் போட வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் செய்யும் அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்யமுடியவில்லை. கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது...  இரண்டு நாட்களுக்கு இப்படி தான்.!

இப்போது விசயத்திற்கு வருவோம்... ஐந்து விரல்களும் வேறு வேறு அளவில், ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் இணைந்தால் தான் நாம் செய்ய வேண்டிய செயல் முழுமை பெறுகிறது. அதில் ஓன்று உடன்படவில்லை என்றாலும்  செய்யும் செயலில் சீர்மை இருப்பதில்லை.!

இந்த உவமை எல்லாவற்றிற்கும் பொருந்தும். குடும்பம், அலுவலகம், கட்சி, நாடு என அனைத்திற்கும் பொதுவானது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனி கருத்துகள் இருக்கின்றன. அதுவே குடும்பம், ஒரு அமைப்பு,கட்சியென்று வரும்போது அனைவரும் ஒன்றுபடவில்லையா... அது போல் தான் நாடும். நான் இங்கு குறிப்பிடுவது நாட்டு மக்களை.!

இன்று நம் மக்கள் பல வழிகளில் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர் ...  மதவாதம், பண மதிப்பிழக்க செய்ததன்விளைவு, பணமியில்லா வர்த்தகம், வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வங்கிகளில், ஏடிம் களில் நெடுநேரம் நிற்க வேண்டிய சூழல், தமிழக மீனவர்கள் பிரச்னை, நெசவாளர்கள் பிரச்னை,  சுற்றுச்சுழல் பிரச்னை , இப்போது நம் அனைவரையும் கலங்க வைத்திருக்கும் விவசாயிகள் தற்கொலை,அதிர்ச்சி மரணப்  பிரச்னை என பல பிரச்னைகள் நம்முன்னே குவிந்திருக்கின்றன.!


ஆனால் நம் அரசியல் கட்சிகள் ஒன்றைக்கொன்று குறை சொல்லிக்கொண்டும், ஒருவருக்கொருவர் பகைப் பாராட்டிக் கொண்டும் இருக்கின்றனர். நாம்  பல கருத்துவேறுபாடுகளால் வேறுபட்டிருக்கலாம்... நம் விரல்களை போன்று.! 

ஐந்து விரல்களும், இரு கைகளும் சேர்ந்து பல செயல்களை செய்வது போல், நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை கடந்து, ஓன்று சேர்ந்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை களைவதற்கு முயற்சி மேற்கொண்டால் மக்களும் ,அவர்களுடன் சேர்ந்து போராட  முன் வருவார்கள். !

இதனை உணர்ந்து அரசியல் கட்சிகள் எல்லாம் ஓன்று சேர்ந்து ஒற்றுமையுடன் போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.!

Wednesday, 4 January 2017

மூடநம்பிக்கையில் உழலும் நம் மக்கள்.

குடும்பதோழி  ஒருவரை வெகுநாட்களுக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சந்தித்து ஓராண்டிற்கு மேல் இருக்கும். அப்போது அவர்களுடைய மகளுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று பிரபல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். 

அதன்பிறகு சில தினங்களுக்கு முன் அவரை பார்த்தேன்... நலம் விசாரணை எல்லாம் முடிந்தவுடன் , அவரே சொன்னார்... இப்போது சிகிச்சை தொடரவில்லை என.!

' ஏன்... செலவு அதிகமாகிறதா ' இது நான்.

அதற்கு அவர்  ' இல்லை ..இல்லை.... குடும்ப ஜோசியரிடம் அவளுடைய ஜாதகம் காண்பித்தேன்... இன்னும் ஓராண்டிற்கு அவளுக்கு நேரம் சரியில்லையாம். எவ்வளவு தான் செலவு செய்தாலும் நல்லது நடக்கறது கஷ்டம்.. அடுத்த தை  வரை எடுத்த காரியம் கைகூடாது... அதற்குப்  பிறகு ராஜயோகம் தான் என்றார் ,  அதனால் ஓராண்டிற்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்று நிறுத்தி விட்டோம்' என்றார்.!

ஓராண்டு நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டவர்கள் எப்படி இந்த மூடநம்பிக்கைக்கு ஆளானார்கள் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.!

 ' அது உண்மையோ, பொய்யோ ... ஜோசியர் சொன்னது ஒருபுறம் இருந்துவிட்டு போகட்டும்.. நீங்கள் சிகிச்சையை மேற்கொண்டிருக்கலாமே..'  என்று கேட்டேவிட்டேன்.


அதற்கு அவர், ' அவர் எங்கள் குடும்ப ஜோசியர், அவர் சொல்வது அப்படியே நடக்கும். அதனால் தான் எதற்கு வீண் செலவு என்று தான் நிறுத்தி விட்டோம். ' என்றார் மறுபடியும்.

எப்படி நம்பிக்கையுடன் ஒரு செயலை செய்துக் கொண்டிருக்கும்போது, இந்த மூடநம்பிக்கை உள்ளே புகுந்து , நம்பிக்கையையும் குலைத்து, செயலையும் தடுத்திருக்கிறது.!

நம் மக்கள்  போட்டிபோட்டுக் கொண்டு ஏமாறுவதற்கு முதன்மை இடத்தில் இருப்பதால்  , ஏமாற்றுபவர்கள் மிக எளிதாகஅவர்களை  ஏமாற்றி விடுகிறார்கள்.!  :-(

பின்குறிப்பு : குழந்தை பிறக்கவில்லை என்றால் ஆதரவற்றை குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்கலாம் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு... இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வது என்பது தேவையற்ற ஓன்று..அதிலும் வசதிக்குறையானவர்கள் கடன் வாங்கி செலவு செய்வது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஓன்று.!

#மூடநம்பிக்கை #ஜோதிடம் #ஏமாறும்_மக்கள் 


அம்மா சமாதி...

பேருந்தில் ஏற வரும் நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் நடத்துனரிடம், ' இந்த பஸ் எங்கே போகுது?' என்றார். 
அதற்கு நடத்துனரின் பதில், ' அம்மா சமாதிக்கு போகுது..! '.


எனக்கு தெரிந்து மெரீனா கடற்கரை, சென்னை பல்கலைக்கழகம், பிரசிடெண்சி கல்லூரி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டுமானால், அண்ணா சமாதி என்று கேட்டு வளர்ந்திருக்கிறோம்... பிறகு அதுவே எம்.ஜி.ஆர். சமாதியாகி போனது.!

இப்போது அந்த இடம் ' அம்மா சமாதி' ஆகி கொண்டிருக்கிறது.!!
மக்களின் மறதியா ... இல்லை .. இது மாற்றமா... புரியவில்லை.!!!
:-) :-

Monday, 2 January 2017

மத்திய வயதுடைய பெண்களின் மனச்சோர்வு

நாற்பது வயது  மத்தியிலும், இறுதியிலும் உள்ள பெண்கள் மிக வலுவிழந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை. உடலில் ஏற்படும் ஹார்மோன் இழப்பு பிரச்னையினாலும், குடும்பத்திற்காக பல பொறுப்புகளை செய்து ஓய்ந்து போன மனநிலையில் இருப்பவர்கள்.!

குழந்தைகள் வளர்ந்து அவர்கள் படிப்பு, வேலை என்று இருக்கும் சமயம்... அவர்களுக்கு அவர்களுடைய பிரச்சனையே பெரிதாக இருக்கும் வயது.. தன அம்மா பற்றி பெரிதாக நினைக்க நேரமில்லாத வயது.. கணவர்களுக்கோ  அவர்கள் பணிச்சுமை, வீட்டு சுமை, வீட்டுக்கடன், பிள்ளைகளின் படிப்பு, பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான திருமண செலவு என்ற மன ஓட்டத்தில் மட்டுமே இருப்பார்கள்... மற்றவற்றைப் பற்றி சிந்திக்க வாய்ப்பு இருப்பதில்லை... இந்த காலக்கட்டத்தில் தான் பெண்களின் PMS ( Post menopause stage ) என்ற உடல் சோர்வுடன் கூடிய அடிக்கடி மற்றும்  நீண்ட நாட்கள்  இரத்தப்போக்கு  ஏற்படுகிறது. இதனால் மன ரீதியாகவும்  சில மாறுதல்கள் ஏற்படுகின்றன.!

தன்னை யாரும் மதிப்பதில்லை... கவனிக்கவில்லை, எல்லோரையும் இந்த வீட்டில் கவனித்துக் கொள்கிறோம்... ஆனால் நம்மை யாரும் நினைக்கக் கூட இல்லையென்ற மனச்சோர்வு சேர்ந்து பல பெண்களை வாடி வதைக்கிறது.!


இந்த நிலைமையை  பொதுவாக மத்திய வயதுடைய பெண்கள் எல்லோரும் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயம். இதில் யாரையும் குறை சொல்லி பயனில்லை... வீட்டில் உள்ள பிள்ளைகள், கணவர் புரிந்துக் கொள்ளுதல் மிக அவசியம்... அப்படியே இல்லையென்றாலும், இதற்காக ஏங்கி, ஏங்கி  தங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ள வேண்டாம் தோழிகளே..!

இதனால் மனப்பிறழ்வு  ஏற்பட வாய்ப்பிருக்கிறது என மருத்துவ ஆய்வு சொல்கிறது... அதனால் இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், கவனம் செலுத்துங்கள் சகோதரிகளே..! 

நம்  உடல்நலனை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்.. அதன் படி நடக்க முயற்சி செய்யுங்கள். கணவரிடம் மனம் விட்டு பேசுங்கள்,  வேலை செய்ய முடியவில்லை என்றால் வீட்டில் சொல்லிவிட்டு ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மனம் விட்டு பேச நல்ல நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி செய்யும்போது யாருடனும் பேசாமல் நடந்துவிட்டு வீட்டுக்கு வந்து விடாதீர்கள். இயற்கையை ரசியுங்கள், குழந்தைகளை ரசியுங்கள், சாலையில் நடக்கும் விசயங்களை உற்று கவனியுங்கள், மிக முக்கியமாக சமூகப்பிரச்னைகளை அலசுங்கள், விவாதியுங்கள்.!

அடுத்து, உங்கள் தனிமையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எழுதுவது, படிப்பது, வரைவது, பாடுவது, என எது பிடிக்கிறதோ அதை செய்ய பழகுங்கள்... இவ்வளவு நாட்கள் நாம் செய்ய நினைத்து , செய்ய முடியாமல் போன நம் விருப்பங்களை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.வாய்ப்பு உள்ளவர்கள் சமூக சேவையிலும் ஈடு படலாம். இது நம்மை இன்னும்  உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும்.!


ஆதலால் இவ்வயதில் உள்ள பெண்கள் தங்களை பற்றி தெரிந்துக் கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பது நல்லது.... எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது.. மனச்சோர்வு  வேண்டாம். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்... எளிதாக  மகிழ்ச்சியுடன் இந்த காலக்கட்டத்தை  கடந்து விடலாம்.. தோழிகளுக்கு வாழ்த்துகள்.! :-) :-)

Sunday, 1 January 2017

2017 - புத்தாண்டு வாழ்த்துக்கள்.! :-)

வரும் 2017 - ஆம் ஆண்டில், என்னென்ன புது சட்டங்களைப் போட்டு, மக்களை அவதிக்குள்ளாக்கப் போகிறதோ மத்திய மோடி அரசு ... !
அவற்றில் நல்லவனவற்றை (!) ஆதரித்து, அல்லவனவற்றை துணிச்சலுடன்(?) எதிர்த்து, மாநில உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளுமா தமிழக அதிமுக அரசு.!

இவற்றையெல்லாம் பகுத்தறிவுடன் எதிர்கொள்ள தயாராகுவோம் ... மக்களே.!

" யாதும் ஊரே ... யாவரும் கேளீர்.! "

நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.! :-)