Thursday, 23 February 2017

அன்பும், மகிழ்ச்சியும்.!

சில தினங்களுக்கு முன் பேருந்தில் வந்துக் கொண்டிருந்த போது, நான் அமர்ந்திருந்த இருக்கையின் பக்கத்தில், திருநங்கை ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவ்வளவு கூட்டத்திலும் , இடது, வலது, பின்புறம் என் அவரைச் சுற்றி சிறிது இடைவெளி விட்டே மக்கள் நின்றிருந்தார்கள். ஏன் இப்படி.. இன்னமும் இவர்களைப் பற்றிய அச்சம் மக்களுக்கு இருக்கிறது  என மிகவும் வருத்தமாக இருந்தது. இதனை நாம் கவனிக்கிறோம் என்று அந்த சகோதரி தெரிந்துக் கொண்டால், அவர் வருத்தப்படுவாரே என்று  நான் அதிகம் அவரைப் பார்க்கவில்லை.!

ஒரு பேருந்து நிறுத்தத்தில் என் பக்கத்தில் இருந்தவர் இறங்கினார்.  அச்சமயத்தில், ஓரிரண்டு பேர் முந்திக்கொண்டு அமர வந்தார்கள். உடனே நான் என்னுடைய பையை , அந்த இடத்தில் வைத்து விட்டு, அந்த திருநங்கை சகோதரியை, '  நீங்கள் உட்காருங்கள் ' என்றேன் , சிறு புன்னகை தவழ...  அதற்கு அவர், 'இல்லை .. வேண்டாம் 'என்றார்.'  இறங்க போறீங்களா..என்ன ' என்றேன். அதற்கும் அவர், ' இல்லை சிஸ்டர் , கடைசிவரை பெசன்ட்நகர் வரை போறேன் ' என்றார். 'அப்புறம் என்ன .. உட்காருங்கள் 'என்றேன். அதற்குள் அவருக்கு பக்கத்தில் இருப்பவர்கள் ,'  உட்காருமா.. இல்லை வழிய விடு'  என்று சத்தம் போடா ஆரம்பித்து விட்டார்கள்.பின்பு தயங்கியபடியே அமர்ந்தார்.!


அதன்பிறகு 20 நிமிடங்கள் அவருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. முப்பது வயதிற்குள் தான் இருக்கும். நான் ஒரு கேள்வி கேட்டவுடன், சட  சடவென பேச ஆரம்பித்தது விட்டார். அதை அப்படியே இங்கு தருகிறேன்.. ' எனக்கு சேலம் மாவட்டத்தில் உளள ஒரு சிறு கிராமம். ஒரு அக்கா, ஒரு தம்பி, அப்பா, அம்மா, நான் என அழகான குடும்பத்தை சேர்ந்தவள். பத்தாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் தான் இம்மாதிரி சில ஹார்மோன் மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தது.. என்னுடைய நடவடிக்கையைப்பார்த்து, வீட்டில் எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள்... அடித்தார்கள். பிறகு  வீட்டை விட்டு வெளியே வந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். இன்னும் யாரையும் பார்க்கவில்லை.பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.. என்ன செய்வது..?  எங்கெங்கோ அலைந்து பிறகு எங்கள் சங்கம் மூலம் ஒரு வேலையை தேடிக்கொண்டு 4 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன் ' என்றார்.!

மேலும், ' உங்களை மாதிரி, எங்களை புரிந்துக்கொண்டோர் வெகு சிலரே... 'என்று சொல்லும்போது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. உடனே நான், ' கவலை படாதீர்கள் , முன்பை விட  இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது... இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் சரியாயிடும். நீங்கள்  வேலை செய்யுமிடத்தில் எந்த தொந்தரவும் இல்லையே ' என்றேன், அதற்கு, ' சில நேரங்களில் இருக்கும்.. பெரும்பாலும் இருப்பதில்லை.' என்றார். நான் இறங்குமிடம் வந்ததும், ' எந்த நிலையிலும், சோர்வடையாமல், தன்னம்பிக்கையுடன் இருங்கள் ' என்று கைகுலுக்கி விடைபெற்றேன். அப்போது அந்த சகோதரியின் கண்களில் தெரிந்த அன்பு இருக்கிறதே, அதற்கு இவ்வுலகில் எதுவும் இணையில்லை என்றுணர்ந்த  மகிழ்ச்சியில் வீடு வந்து சேர்ந்தேன்.!

அவர்களுக்கு நாம் காசு, பணம் கொடுத்து உதவ வேண்டிய அவசியமில்லை... சக மனிதர்களாக ,அன்புடன் சில வார்த்தைகள் பேசினாலே போதும். அச்சமயத்தில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில், நம்முடைய மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது என்பதை அன்று  உணர்ந்தேன்.!

Monday, 6 February 2017

சசிகலா

கடந்த  சிலஆண்டுகளாக ஜெ தலைமையில் செயல் படாத அரசாக இருந்தது  அதிமுக அரசு.!

பிறகு ஓபிஎஸ். தலைமையில் செயல் பட்டாலும் பின்புலத்தில் பாஜக இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே..!

சசிகலா தலைமையில்  என்ன நடக்கிறதென்று தான் பார்ப்போமே ... சரியில்லையென்றால், நிச்சயம் மக்கள் அதற்கான பதிலடியை தருவார்கள்.!

இப்போது மட்டும் பாஜக பின்புலத்தில் இயங்காதா என்று கேட்பவர்களுக்கு :

இயங்குவதற்குகான வாய்ப்புகள்  இருக்கிறது ... ஆனால் ஓபிஎஸ் போல் எதற்கெடுத்தாலும் எடுப்பார்  கைப்பிள்ளையாக இவர் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் அவரை விட இவர் துணிச்சல் மிக்கவர் என்றும் நினைக்கிறேன். தற்போது துணிச்சலான, சுய சிந்தனையுடைய முதலமைச்சர் தான் வேண்டும் தமிழகத்திற்கு.!

Wednesday, 1 February 2017

பட்ஜெட் 2017

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, எங்கள்  அம்மா என்னிடம் மளிகைப் பொருட்களின் பட்டியலை எழுத சொல்வார்கள். மளிகை வீட்டுக்கு வந்ததும், கணக்கை சரி பார்க்க சொல்வார்கள். மாத கடைசியில், செலவு எவ்வளவு செய்திருக்கிறோம் என்ற ஒரு கணக்கையும் சொல்லி எழுத வைப்பார்கள். அதில் மாத செலவிற்கு எடுத்த வைத்த பணம், செலவு செய்த பணம் என்று அதற்கு ஒரு கணக்கு போட்டு சரி பார்ப்பார்கள்.  பெரும்பாலும் மீதம் இருக்காது ... அப்போதைய நிதிநிலைமை அப்படி தான்.!

அம்மாவிற்கு எழுத, படிக்க தெரியும் ... இருந்தும் எதற்கு எங்களிடம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இரண்டாம்முறை உறுதி படுத்திக் கொள்ளலாம் என்று கூட இருக்கலாம். பெரும்பாலும் இம்மாதிரி வேலைகள் என்னிடம்  கொடுப்பது தான் அம்மாவின் வழக்கம்.!

அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ, எங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ பட்ஜெட் தாக்கல் எங்கள் வீட்டில் மாதந்தோறும் போடுவது ஒரு மிகப் பெரிய அனுபவத்தை எங்களுக்கு பெற்று தந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.!

என்னுடைய பதின் பருவத்தில், பட்ஜெட் என்றால் , நம் வீட்டில் போடுவது போல் தான் நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் போடப் படுகிறது என்று அறிந்தேன்... நம் வீட்டில் அம்மா படும் சிரமம் தானே, இவ்வளவு பெரிய நாட்டிற்கு போடுகிறார்கள் ... இதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.!
பிறகு, ஓரளவிற்கு அரசியல் புரிதல் ஏற்பட்டவுடன், இந்த ஆண்டு போடப்படும் பட்ஜெட்டில் , ஏழை மக்களுக்கு ஏதாவது நன்மை இருக்குமா என்று தேடும் பழக்கம் வந்தது... நீண்ட காலம் இதனை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கும் எனக்கு சில ஆண்டுகளாக சலிப்பு ஏற்பட்டிருப்பது உண்மை.!

ஒவ்வொரு ஆண்டும் தான் பட்ஜெட் போடப்படுகிறது ... அது மட்டுமல்லாமல், அவ்வப்போது புதிய திட்டங்கள், ஐந்து  அம்ச திட்டங்கள் என , திட்டங்கள் அதிகம் தான் வகுக்கப்படுகின்றன. சட்டங்கள் இயற்றுவது போல்...!
ஆனால் இந்த சட்டங்களும் சரி .. திட்டங்களும் சரி .. நம் நாட்டில், ஏழை, எளிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் தருவதில்லை என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளக் கூடிய ஓன்று. !

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், ஏழைகள் மேலும், மேலும் ஏழைகள் ஆக்கப்படுவதற்கும் ,

எதற்கு இந்த பட்ஜெட்..?  இது யாருக்கு பயன்படுகிறது..?  
யாருக்காக இந்த பட்ஜெட் போடுகிறார்கள் ..?

என்பதே விளங்கவில்லை.!

ஒவ்வொரு ஆண்டும், ஆளுங்கட்சிகள் இந்த பட்ஜெட்டை பாராட்டுவதும், எதிர்கட்சிகள் குறை கூறுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை... இந்நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதனுக்கும் இந்த பட்ஜெட் எட்டப்படுகிறதா ... என்றால், இல்லை என்பது தானே பதிலாக இருக்க முடியும்..!

இனிவரும் காலங்களில் , அரசு இதனை உணர்ந்து, அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் ஒரு  பயனுள்ள சிறந்த பட்ஜெட்டை நடைமுறைப் படுத்தினால், மக்கள் அனைவரும் சேர்ந்து வரவேற்கும் நிலை ஏற்படும்  ...  அரசு செவி சாய்க்குமா..!!!



' மக்களால் பட்ஜெட் மதிக்கப்பட வேண்டும்  ... பட்ஜெட்டால் மக்கள் மதிக்கப்பட  வேண்டும் .! "

#Budget2017