Thursday, 30 March 2017

தாய்

பேருந்தில் எனக்கு முன்னுள்ள காலியான இருக்கையில், ஏறியவுடன் அவசரமாக வந்து உட்கார்ந்தாள் ....சுமாராக  ஏழு வயதிருக்கும் ஒரு சிறுமி, மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன்.  பின்னாலேயே அவளுடைய அம்மாவும்,  அவள் தங்கையும் வந்தார்கள். தங்கைக்கு ஐந்து வயதிருக்கலாம்.
' பாப்பாவுக்கு இடம் கொடு ' என்று சொல்லிக்கொண்டே அவள் தங்கையை சன்னோலோரத்தில் உட்கார வைத்தார் அம்மா.
உடனே அச்சிறுமியின் முகத்தில்  இருந்த சந்தோசம் குறைந்து,  கொஞ்சம் வாட்டமாக மாறியது.

சிறிது நேரத்தில் தங்கை அழ ஆரம்பித்து விட்டாள். உடனே அவர்களுடைய தாய்,

' ஏய்..என்னாச்சு ... ஏன் அழறே..'

' அக்கா என்னை கொட்டிட்டா...' என்று மீண்டும் அதிகமாக அழுகையை தொடர்ந்தாள் .. அவள் ,

' என்ன பண்ண ... குரங்கு ' என்று தன்  மூத்த மகளை  முறைத்தார்.

' அவ என்னை பாக்கவே உடமாட்டேங்குறா... முன்ன,பின்ன ஆடிக்கிட்டே இருக்கா..'

' அதுக்கு அவளை கொட்டிவியா... நீ அக்கா தானே .. ஆடாதன்னு சொல்லு.. இல்லையெனா என்கிட்டே சொல்ல வேண்டியது தானே.. !'
 
இதற்குள் அந்த சின்ன வாண்டு அழுகையை நிறுத்திவிட்டு , அம்மா அக்காவை திட்டுவதை பார்த்து, சிறிதாக புன்முறுவல் செய்து கொண்டிருந்தது.

பிறகு அவர்கள் அம்மா, சிறிய மகளை பார்த்து, ' அவ யாரு.. உன் அக்கா தானே.. அவ இடத்தை உனக்கு விட்டு கொடுத்தா ... இல்ல... அவளையும் பாக்க விடணும்ல. ஆடாம ஒரே இடத்தில உட்காரு..அப்புறம் அடிச்சிட்டானு என்கிட்டே வந்து சொல்ல கூடாது' 
என்று சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன்.

பத்து நிமிடங்கள் கூட இருக்காது... அந்த  சிறுமி, ' அம்மு .. அங்கே பாரேன்... பூனைக்குட்டி ' என்று சன்னலின் வெளியே கைகாட்டி, தன் தங்கையின் தோள்  மீது கைபோட்டு சிரித்தாள்.
' எங்கே... ஆமா.. அழகா இருக்கு.. இல்ல அக்கா..' என்று சொல்லி தன்  அக்காவின் முகத்தைப்பார்த்து சிரித்துக்கொண்டே , இன்னும் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்தாள்.அக்காவும் இன்னும் இறுக்கமாக தோளைப் பிடித்துக்கொண்டாள்.

அப்புறம் என்ன ... ஏதாவது பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்தார்கள் இருவரும்.!

வழக்கமாக நான் இறங்கும் நிறுத்தம் வருவதற்கு ஓரிரு நிமிடங்கள் முன்பு தான் எழுந்து நிற்கும் பழக்கம்  எனக்கு.. அன்றைக்கு, நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு, முதல் நிறுத்தத்திலிருந்து பேருந்து கிளம்பியவுடனே எழுந்திருந்து முன்னே போய் நின்றுக்கொண்டே அந்த சகோதரிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.  

சில நிமிடங்களிலேயே, அந்த சகோதரிகளின் மனநிலையை எப்படி மாற்றி விட்டார் அந்த தாய் ... என் சிறுவயதில் எங்கள் அம்மாவும் இப்படி எங்களை  சமாதானம் செய்து வைத்தது நினைவிற்கு வந்தது. விட்டு கொடுப்பதில்  உள்ள மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் நமக்கு  சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பதில் பெரும்பங்கு நம் அம்மாக்களிடம் தான் இருக்கிறது.. :-) :-)

#தாய்  

மத ஒழிப்பு

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளில் எது மிகவும் பிடிக்கும் என்று என்னைக் கேட்டால், 
'  அவர் ஒரு சமூக விஞ்ஞானி ... அதனால் அனைத்துமே பிடிக்கும் ' என்று    தான் சொல்வேன்.

ஏதாவது ஓன்று தான் சொல்ல வேண்டும் என்று கேட்டால், என்னுடைய பதில் இதுவாக தான் இருக்கும்...

" மத ஒழிப்பு என்பதே... ஏனென்றால், மதம் இல்லையென்றால்,
 ஜாதி இல்லை ...
 கடவுள் இல்லை ...
 வேத,மந்திரங்கள் இல்லை ...
 புராண இதிகாசங்கள், சாஸ்திரங்கள், சடங்குகள் இல்லை...
 மூட நம்பிக்கைகள் இல்லை ...
 பெண்ணடிமைத்தனம்  இல்லை ...
 எவ்வித ஏற்றததாழ்வுகளும் இல்லை ..

இவையனைத்தும் இல்லாத சமூகத்தில் தானே  பகுத்தறிவும், மனிதநேயமும் வளரும் ...மானுடப்பற்று  தழைத்தோங்கும்.! "

#பெரியார் 






Saturday, 25 March 2017

பாடமாகும் மனிதர்கள்.


நாம் பல மனிதர்களை கடந்து வந்திருப்போம். அவர்களின் குணாதியங்கள் நம்மை கவர்ந்திருக்கும்...வெறுப்படைய செய்திருக்கும்... ஆச்சரியப்பட வைத்திருக்கும் ... அருவருப்பை ஊட்டியிருக்கும்.. கோபப்பட வைத்திருக்கும்... ஏன் இவ்வளவு, அவர்களின் இந்த குணத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் கூட  மனது வலியுறுத்தும்.. தானே..!

அப்படி ஒரு வியக்கத்தக்க குணாதிசயம் உடைய மனிதர் ஒருவரை இன்று சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இன்று தான் அவரை பார்க்கிறேன். சுமார் 50 வயதுடைய பெண்மணி அவர். பூங்காவில் விளையாடும் குழந்தைகளிடம் அன்பாக விசாரித்துக் கொண்டிருந்தார். பின்பு அங்கிருக்கும் ஐந்தாறு குழந்தைகளுக்கு  தன கைப்பையில் உள்ள  சாக்லேட் (eclairs )களை எடுத்துக் கொடுத்தார். பின்பு அங்கு உட்கார்ந்திருக்கும் பாட்டிகளிடம் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பேசிவிட்டு கிளம்பும் நேரத்தில் தன்னுடைய தண்ணீர் பாட்டிலை கொடுத்து, குடித்தபிறகு பாட்டிலை வாங்கி தன பைக்குள் வைத்துக் கொண்டார்.

இதையெல்லாம் நடந்துக்கொண்டே கவனித்துக் கொண்டிருந்தேன்... பின்பு அவரும் நடப்பதற்கு ஆயுத்தமானவர் போல் நடைமேடையில் வந்து நடக்க ஆரம்பித்தார். எனக்கோ , எங்கே அவர் போய் விடுவாரோ என்ற எண்ணம்... அவரிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.அவருக்காக வேகத்தைக் குறைத்து, நடந்துக்கொண்டே திரும்பிப்பார்த்தேன். அவர் பக்கத்தில் வந்து விட்டார். இருவரும் ஒருசேர பார்த்துக்கொண்டோம். சிறிய புன்முறுவல்...உரையாடலை தொடங்க வேண்டும் என்பதற்காக,  ' தினமும் வருகிறீர்களா .. நான் பார்த்ததில்லை..' என்றேன்.
உடனே அவர்,
 ' இல்லை..ப்பா, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பூங்கா என்று செல்வேன்.' என்றார்... சிரித்தவாறே.

' உங்களின் அன்பு அணுகுமுறை பிடிச்சிருக்கு... அதான் 
உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தே வேகத்தை குறைத்தேன் ' 

' ஓ... அப்படியா, சந்தோசம். எங்கே இருக்கீங்க?'

இந்த் விசாரிப்பு முடிந்தவுடன், அவர் சொல்லியது தான் மனதை சங்கடப்படுத்தியது.

' வீடே உலகம் என இருக்கும் ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். குலதெய்வம் வழிபாட்டிற்கு செல்லும்போது வேன் விபத்துக்குள்ளாகி மாமனார், மாமியார், கணவர், கணவரின் தம்பி, அவருடைய மனைவி என அனைவரும் ஒரே சமயத்தில்  .இறந்து விட்டனர். நான் மட்டும் , பிழைத்து, மல்டி பிராக்சர் ஏற்பட்டு ஒரு ஆண்டு முழுதும் மருத்துவமனை வாழ்க்கை முடிந்து , இப்போது தான் வெளி உலகை மறுபடியும் பார்க்கிறேன். ஒரே மகன், ஆஸ்திரேலியாவில் இருக்கிறான்...மருமகள், பேரன் இருக்கிறார்கள்.30 வருசமா வீட்டுக்குள்ளே இருந்த எனக்கு இப்ப வீட்ல  இருக்க முடியவில்லை... வேத்து மனுசங்களை பாக்குற சந்தோசம் என் கவலை எல்லாத்தையும் மறக்கடிக்குது...  அதான் இப்படி..! '

என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நடைப்பயிற்சி முடிந்து, சாலையில் பேசிக்கொண்டே வந்து,  சாலை பிரிவில் விடைபெற்றுக்கொண்டோம்.

பெண்களுக்கு தான் எவ்வளவு தன்னம்பிக்கை... வலியின் கொடுமை தாங்காமல், அழுது, வேதனைப்பட்டு, மனா உளைச்சலுக்கு ஆளாகி,  விரைவிலேயே அதிலிருந்து மீண்டு வெளி வரும் வைராக்கியம் பெண்களுக்கு அதிகம் என்றே தோன்றுகிறது.. 

வீடே உலகமென்று வாழ்ந்த ஒரு பெண், இன்று உலகமே வீடு என்று தன்னை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கே உரித்தான ஓன்று என்று நினைக்கிறன்.! :-)



Thursday, 23 March 2017

தற்போதைய மாணவிகளின் சீருடை.

தற்போது, பள்ளிகளில் மாணவிகளின்  சீருடை பெரும்பாலும் சுடிதார் ஆக மாற்றப்பட்டிருக்கும் முறை மிகவும் வரவேற்கத்தக்கது. பேருந்துகளில், ரயில்களில் , மிதிவண்டிகளில் என செல்லும் போது ஆடை விலகல்  பற்றிய பயம் இல்லை. நாங்கள் படிக்கும் காலத்தில் பாவாடை , தாவணி சிஸ்டம் இருந்தது... பேருந்திலோ, ரயிலிலோ செல்லும் போது,  கூட்டத்திலிருந்து ஒருவழியாக நிறுத்தத்தில் இறங்கும் போது , குத்தப்பட்டிருக்கும் பின் கழண்டு போய் தாவணியே கலைந்து போயிருக்கும். இதனை பள்ளிக்கு செல்வதற்குள் சரி செய்தாக  வேண்டும். 

மாணவர்கள் போல் ஆடைப்பற்றிய கவலை இல்லாமல்  நாம் மட்டும் இம்மாதிரி இருக்க வேண்டி இருக்கிறதே என்று பல நேரங்களில் மனம் எரிச்சலடையும். நிறைய சங்கடங்கள் இதில் இருக்கிறது. விலகாமல் இருக்கிறதா என்பதில் கவனம் அவ்வப்போது இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாட்டு நேரங்களில் சொல்லவே வேண்டாம். இதற்காகவே விளையாடாமல் தவிர்த்த நாட்கள் எல்லாம் உண்டு. ஆங்கிலப்பள்ளிகளில் இருக்கும் பினோபார்ம், பேண்ட்-ஷர்ட், சுரிதார் சீருடைகளை பார்க்கும்போது மிகவும் ஆசையாக இருக்கும். ஏன் நம் பள்ளிகளில் மட்டும் இம்மாதிரி இல்லை என்ற ஏக்கமும், எரிச்சலும் தோன்றும்.! 

இப்போது அந்நிலை மாறியிருப்பது மகிழ்ச்சியே... பேருந்துகளிலும், ரயில்களிலும், சைக்கிள்களும் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. என்னஒரு பிரச்னை என்றால், சில பள்ளிகளில் மட்டுமே துப்பட்டாவிற்கு பதில், half - coat முறை வைத்திருக்கிறார்கள். அதை அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றினால் நன்றாக இருக்கும்.! 

மேலும் பள்ளிகள் இந்த சீருடை விசயத்தில் ஆண்- பெண் பாகுபாடில்லாமல் இருபாலாருக்கும் ஒரேமாதிரியான பேண்ட்-ஷர்ட் முறையை கடைப்பிடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.! :-) :-) 

    

Monday, 20 March 2017

சிட்டுக்குருவி

சிறுவயதில் எங்கள் வீட்டில் கோழி வளர்ப்பார்கள்... அவைகளுக்கென்றே கம்பு வாங்கி உணவாக போடுவது வழக்கம். ஒரு கைப்பிடி  கம்பை தூவினாற்போல் போட்டால், கோழிகள் கொத்தித் தின்றுவிட்டு போகும் ...  மீதியை இந்த சிட்டுக்குருவிகள் வந்து சாப்பிடும்... சிட்டுக்குருவிகள் கொத்தி தின்னும் அழகே தனி தான்...கிணற்றடியில் தேங்கி  நிற்கும் நீரை உறிஞ்சி குடிப்பதும் , நாம் கிட்டே போனால் , பயப்படுவது போல் இந்த இரண்டு குட்டி கால்களால் வேகமாகநடந்து ஒரு அடி சென்று விட்டு, நம்மை நிமிர்ந்துப்பார்க்கும் தோழமை  இருக்கிறதே...  :-) 

இப்போதைய தலைமுறையினர் அந்த வகை சிட்டுக்குருவிகளை பார்த்து இருக்கவே மாட்டார்கள் என்பது வேதனையான ஓன்று.! 

#சிட்டுக்குருவிகள்தினம் 
#மார்ச்20

Friday, 17 March 2017

நவீன ஆணாதிக்கம்

 " செல்லம் ... இந்த ஷர்ட்டை கையில துவைச்சிடு... மெஷின்ல போடாத..."

"ஏன் .."

" வெரி எஸ்பென்சிவ் .. புது ஷார்ட்... மெஷின்ல போட்டா பாழாயிடும் "

" நான் கூட நேத்து தான் மேனிக்குர் பண்னேன்... கை  பாழாயிடும்..."

" ஹேய் ... " (கெஞ்சல் குரலுடன்)

" டோன்ட் வொரி... என் கையும், உங்க துணியும் absolutely safe யா இருக்கும்.! "


ஜேர்மன் டெக்னாலஜில செய்த சோ அண்ட் சோ மோட்டார் கொண்ட வாஷிங் மெஷின்... துணிகளை மென்மையாக துவைக்கும் என்ற துணி துவைக்கும் இயந்திரத்திற்கான விளம்பரம் இது... வானொலியில் கேட்டது...! :-)


உண்மையில் பெண்களின் முன்னேற்றம் இந்த நிலையில் தான் உள்ளது.. 'துவை ' என்ற அதிகாரத் தோரணை மாறி கெஞ்சலுயுடனும்,கொஞ்சலுடன் கூடிய அணுகுமுறையில் பெண்களை அடிமைப்படுத்துவது.. அதுவும் சுய சம்பாத்தியத்தில் உள்ள பெண்களிடம் மட்டும் தான் இந்த கெஞ்சல்கள்... வீட்டில் இருக்கும் பெண்களிடம் பெரும்பாலும் அதே பழைய அதிகாரப்  போக்கு தான்.!

பாலின சமத்துவம் என்றால் என்ன... பெண்கள் படித்து, தன்  சுயகாலில் நின்றால் மட்டும் போதுமா...  இம்மாதிரியான வேலைகள் இன்னும் பெண்களிடம் மட்டும் தானே இருக்கிறது. ஆண் பிள்ளைகளுக்கு , தங்கள் வேலைகளை தாங்களே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்ததாத வரை இந்நிலை நீடிக்கத்தான் செய்யும்..!

ஆகவே... தோழிகளே... துணி துவக்கவும், சமையல் செய்யவும், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் , தன்னுடைய வேலையை தானே செய்யவும் நம் ஆண்பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம்.!  :-)


Wednesday, 15 March 2017

பேரன்பும், பெரு மகிழ்ச்சியும்.!

அன்பு செலுத்துவதிலும், நட்பு பாராட்டுவதிலும் என் நினைவு தெரிந்தவரை, என்னிடம் உள்ள சிறந்த குணங்களாக நான் விரும்புபவை... இந்த ஒரு மனப்பாங்கு, எனக்கு  எங்கள்  அம்மாவிடம் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவிற்கு அன்பைப் பொழிய கூடியவர்... #எங்கள்அம்மா.!

கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்த குணங்கள் இன்னும் அதிகமாக இருப்பதாக ஒரு உணர்வு. பாலினம் கடந்து எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் பல நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது ... எனக்கு.!  

பெண் என்பதால், பலகட்டுப்பாடுகள், நிபந்தனைகள் என்று வளர்க்கப்படும் நம் சமூகத்தில், பெண்கள் நிறைய மகிழ்வான சுதந்திர அனுபவங்களை இழந்திருக்கிறார்கள்.  எனக்கும் அதே... இழந்த அந்த சுதந்திரங்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றது போன்ற அருமையான உணர்வு இது... நமக்கான இந்த உலகில் சிறகை விரித்து ஆசை தீர பறக்க வேண்டும் என்ற அழகியல் நிறைந்த உணர்வு இது... பெண் என்பதைத் தாண்டி, நானும் ஒரு மனித இனத்தைச் சேர்ந்த மனுசி என்ற வெளிப்பாடு மட்டுமே மனதில்  குடி கொண்டிருக்கிறது.  உடலியல் ரீதியாக ஏற்படும், உடல் சோர்வு, மனச்சோர்வு நிறைந்திருக்கும் இந்த  நாற்பதின் மத்தியில், இறுதியிலும் உள்ள காலக்கட்டத்தில் இப்படியொரு உணர்வை அனைத்து தோழிகளும் உணர்ந்திருப்பார்களா .... தெரியவில்லை... 

ஆனால் என்னால் உணர முடிகிறது... மிகுந்த மகிழ்ச்சியையும் உணர முடிகிறது... !  

பெரிதாக ஒன்றுமில்லை... நம் பார்வையை அகலப்படுத்தினாலே போதும். சமூகப்பார்வை நம்மை மென்மேலும் பண்படுத்தி, அடுத்தக் கட்ட நகர்வை நோக்கி அழைத்து செல்கிறது. பார்வை மட்டுமே நமக்கு இந்த மாற்றத்தைக் கொடுக்கிறதென்றால், செயல்பாடு இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.வாய்ப்புள்ள தோழிகள்  அதனையும் பின்பற்றினால், நாம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பொருள் உள்ளதாக இருக்கும். அன்பு, மனிதநேயம், நட்பு நம் வாழ்வை சிறப்புள்ளதாக மாற்றி அமைக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.  :-) :-)  


Thursday, 9 March 2017

மகளிர் தினம்

பெண்மையைப் போற்ற வேண்டாம் ... பெண்களை பாதுகாக்க வேண்டாம் ... அவர்களுக்கான இடத்தை அவர்களிடமே விட்டு விடுங்கள் ... அவர்களே நிரப்பிக் கொள்வார்கள்.! 

எந்நிலையிலும் பெண்கள் தங்கள் சுயத்தை இழக்காதிருப்பதே, மகளிர் முன்னேற்றத்திற்கான சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்.!

  " பெண்களைப் பொறுத்தவரை எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாகப் படிக்க வேண்டும். மூட நம்பிக்கை சிறிதும் அற்றவர்களாக இருக்க வேண்டும்.சிங்காரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்க கூடாது. துணிச்சல் இருந்தால் கல்யாணம் செய்துக் கொள்வதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.! "
பெண்கள் விடுதலை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ( திருச்சி.,14-3-1972.) ஆற்றிய உரை.

" அனைத்து சகோதரிகளுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.  "     :-)  :-)

Thursday, 2 March 2017

கற்றல்


ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடித்து, பள்ளிக்குச் செல்லும் முதல்நாள் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும் தானே... புது டீச்சர், புது வகுப்பு, புது புத்தகங்கள் என அனைத்தும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு நாளாக தான் இருக்கும்.. அது போல் ஏழாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு விடுமுறை  முடித்து, எட்டாம் வகுப்பறைக்கு  மிகவும் மகிழ்ச்சியுடன்,   ' கோடை விடுமுறை கழித்த விதம் ' என்ற கட்டுரையுடன் சென்ற நாள்  அது. அப்போதெல்லாம் அந்த முறை இருந்தது.. அவரவர்கள் என்ன முறையில் விடுமுறையை கழித்தார்கள் என்பதை கட்டுரையாக எழுதி வர வேண்டும். இப்போது  இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த முறை ஐந்தாம் வகுப்பிலிருந்தே தொடக்கி விடும் என்று நினைக்கிறன்... முதல்நாள் எந்த பாடமும் நடக்காது. மாணவர்கள் அறிமுகம், மற்றும் கோடை விடுமுறை கழித்த விதம் என்ற கட்டுரை வாசிப்பு என குதூகலமாகச் செல்லும் .!


ஆசிரியர் வரும்வரை, ஒருவர் கட்டுரையை, மற்றொருவர் படிப்பது வழக்கம். என்னுடைய கட்டுரை எப்போதும் போல் சாதாரணமாக இருந்தது... என்னுடைய கட்டுரையை என் தோழி ஷீலாவிடம் கொடுத்துவிட்டு , அவளுடைய கட்டுரையை நான் படித்துக் கொண்டிருந்த சமயம், கட்டுரையின் நடுவில் அவள் எழுதியிருந்த விசயம் சற்று அதிர்ச்சிக்குள்ளாகியது. அது என்னவென்றால், ' தூறல் நின்னுப் போச்சு' என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் வரதட்சணை 
பற்றிச் சொல்லியிருந்தார்கள். நமது சமூகத்தில், வரதட்சணை என்பது பெண்களின் வாழ்க்கையை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன் என்று எழுதி இருந்தாள். இதனைப் படித்த நான், 

' சினிமா பத்தி எழுதி இருக்கியேப்பா... டீச்சர் திட்டப்போறாங்க... அழிச்சிடு ..' என்றேன்.

' சே.. சே.. நான் அழிக்க மாட்டேன், என்ன தான் சொல்றாங்க ..பாப்போமே ..' என்றாள் படு சாதாரணமாக...!

எனக்கோ  பயம் கலந்த ஆர்வம்... ஆசிரியர் வருகைக்காக காத்துக்  கொண்டிருந்தேன். ஆசிரியர் வந்தார். மாணவ-ஆசிரிய அறிமுகம் முடிந்தது.. பிறகு ஒவ்வொருவராக கட்டுரையை கொண்டுவாருங்கள் என்றார். கட்டுரையைப் படித்துவிட்டு நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள் ... திருத்தங்கள் இருந்தால் சுட்டிக்காட்டுவார்கள். மிக சில கட்டுரைகள் மட்டும் , அதாவது மிகவும்நன்றாக இருக்கிறது என்று அவர் உணரும் பட்சத்தில், அந்த மாணவனைனோ,மாணவியையோ படிக்கச் சொல்லி பாராட்டுவார்கள். கைத்தட்டலும் கிடைக்கும்.!

என்னுடைய முறை வந்தபோது , படித்துவிட்டு, ' ம்ம்ம் ... நல்லாயிருக்கு, சொற்களை பயன்படுத்துதல் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும் ' என்ற அறிவுறுத்தலோடு அனுப்பப்பட்டேன். எனக்கு அடுத்து செல்பவள் தான் ஷீலா. நான் போய் உட்கார்ந்தவுடன் , மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்... அவளை திட்டப்போறாங்களோ என்ற அச்சத்துடன்.!

என்ன ஒரு வியப்பு ... படித்துக் கொண்டிருந்தார் .. இடையில் சிறு புன்முறுவல், என்னால் நம்ப முடியவில்லை.. என் தோழியை ஏறிட்டுப் பார்த்து விட்டு , மறுபடியும் சிரித்தார்கள். பிறகு, 
' இதை நீ தான் எழுதினீயா...?'
' ஆமா .. டீச்சர், நான் தான் எழுதினேன்..'
'வீட்டில யாரவது சொல்லிக் கொடுத்தார்களா..' 
' இல்லை.. டீச்சர்.. நானே எழுதினேன்.'

' வெரி  குட்... இபப்டி தான் எழுதணும்., எல்லோரும் ஒரேமாதிரி, நூலகம், பூங்கா ,கடற்கரை, வெளியூர், போனதாக மட்டும் தான் எழுதுறீங்க... இந்த பொண்ண பாருங்க...' என்று சொல்லி அவளையே படிக்கவைத்து கைத்தட்டலும் பெற வைத்தார் ஆசிரியர்.
 பிறகு, 
' நாம் பார்க்கும் அனைத்து விசயங்களிலும் நலல்து, கேட்டது என கலந்து தான் இருக்கும்... கெட்டத விட்டுட்டு, நல்லதை மட்டும் எடுத்துக்கணும்..சினிமாவிலும் நல்ல செய்திகள் சொல்லப்படுகின்றன. அதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

இதையே எங்கள் வீட்டில் என் அம்மா பலமுறை சொல்லி இருக்கிறார்கள்.. அப்போதெல்லாம் பெரிதாக தெரியாத இந்த அறிவுரை, இப்போது ஆசிரியர் சொன்னவுடன் அப்படியே மூளையில் 'பசக்' என்று ஒட்டிக்கொண்டது.  அன்றே என் அம்மாவிடமும் இதை சொன்னேன். பள்ளியில்நடக்கும் சுவாரசியமானவை அனைத்தும் அம்மாவிடம் சொல்லும் பழக்கம் உண்டு...  அதற்கு, அவர்கள்,

 ' நான் சொல்லும் போதெல்லாம் கேக்க மாட்டே.. இப்ப டீச்சரே சொல்லிட்டாங்கல.. இனிமேலாவது கேளு' என்றார்கள்.! 
 இன்றுவரை அதை நான் கடைப்பிடிப்பதுடன், பேசும் நண்பர்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி... :-)

நான் படித்தது அரசு பள்ளி, அப்போது  பொது அறிவு, கற்பனைத்திறன், வாழ்வியல் என வாழ்க்கைக்கு தேவையானவற்றை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கற்பித்தார்கள்... !

அடுத்த தலைமுறையை நாம் தனியார் பள்ளிகளில் சேர்த்து , வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மட்டும் உருவாக்கி இருக்கிறோம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. 
பொது தேர்விற்கு மொட்டை அடித்தால், தேர்ச்சி பெறுவோம் என்ற மூட நம்பிக்கைகளை ஆசிரியர்களே வலியுறுத்துதல் மிகவும் கண்டனத்துக்குரியது.!