Monday, 24 April 2017

வெந்தயக்களி

#வெந்தயக்களி 


பச்சரிசி ஒரு கைப்புடியளவு, உளுந்து 100 கிராம்,  வெந்தயம் 50 கிராம், இவைகளை குறைந்த தீயில் சிவக்க வறுத்து , நல்லா நைசாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு , அடி கனமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, கொதி வந்தவுடன், கால்கிலோ ( இனிப்பு அவரவர் விருப்பம் போல, குறைத்தும் கொள்ளலாம்,கூட்டியும்கொள்ளலாம்.) கருப்பட்டியை சீவியோ, உடைத்தோ நீரில் போடவும். கரைந்தவுடன் வடிக்கட்டி , மறுபடியும் கொதிக்க விடுங்கள்.நன்கு கொதித்ததும், தீயை குறைத்து, பொடித்து வைத்திருக்கும் மாவை தூவினாற்போல் தூவிக்கொண்டே கலக்க வேண்டும்.இல்லையென்றால் கட்டிப்பட்டு விடும்.  களி வெந்து கையில் ஒட்டாதபதம் வந்தவுடன் நல்லஎண்ணையை ஊற்றி, இறக்கவும். இது நம் பாரம்பரிய முறை... 

இதுவே இப்போதுள்ள குழந்தைகள் விருப்பப் படுவது போல் செய்ய வேண்டுமானால், கொஞ்சம் நெய்யில், முந்திரி, திராட்சை வறுத்து அல்வா போலும் செய்யலாம்.!


இந்த வெந்தயக்களி உடம்பிற்கு குளிர்ச்சி... செரிமானத்திற்கும் நல்லது.. புரதச்சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. செய்து தான் பாருங்களேன்.! 

ஏற்கப்பட வேண்டிய சமூகமாற்றம்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு தோழி ஒருவருடன் அலைப்பேசியில் ஒரு  உரையாடல். ' மகளிடம் திருமண ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறோம், உனக்கு யார் மீதும் விருப்பம் இருக்கிறதா என்று கேட்டோம், அதற்கு  அவள் அப்படி எல்லாம்  ஒன்றுமில்லை, நீங்களே பாருங்கள் என்று சொல்லிவிட்டாள்' என்று கூறினார். 
பிறகு ஒரு மேட்ரிமோனியல் போயிருந்தபோது , தான் தெரிந்துக்கொண்டு ஒரு செய்தியை மிகவும் அதிர்ச்சியாக என்னிடம் கூறினாள்.

' நாங்க (அவரது இணையரும்) போயிருந்தபோது பக்கத்தில் 65 வயதிருக்கும் ஒருவர் வந்திருந்தார்..பா. அவருடைய மகனுக்கோ,மகளுக்கோ வரன் பார்க்க வந்திருப்பார் என்று நினைத்து, பேச்சு கொடுத்தேன்.. என்ன ஆச்சரியம் என்றால், அவர் அவருக்கே துணை தேடவந்திருக்கிறாரென்றாரே.... பார்க்கலாம். மனைவி இறந்து 10ஆண்டுகள் ஆகிறதாம்... இரண்டு மகன்கள், இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்களாம்...இவரால் தனிமையில் இருக்க முடியல என்பதால் இந்த திருமணம், மணவிலக்கு பெற்றவரோ, கணவனை இழந்தவரோ .. யாராக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்திருக்கிறேன், என்றார்... என்னால் நம்பவே முடியல..பா' என்றார்.

' இதில் என்ன ஆச்சிரியம் இருக்கிறது ' இது நான்.

 ' என்ன ... நீயுமா...! '

' சிறு வயதை  இருப்பதை விட , வயோதிகத்திற்கு தான் துணை அவசியம். இந்த வயதில், அவர்கள் ஒன்றும் லௌகீக வாழ்க்கை வாழ போவதில்லை... ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு மட்டுமே  பரிமாறிக்கொள்வார்கள்... இந்த அன்பு , நட்பை  பிரதானபடுத்துகிறது... இந்த  வயதில் தான், உடல் உபாதைகள், தனிமை, தன்னை யாரும் மதிக்கவில்லை, ஒதுக்கிவிட்டார்கள் என்ற எண்ணம், வெளியில் எலலவற்றையும்  சொல்லமுடியாமை , இதனால் ஏற்படும் மன அழுத்தம் என அவர்கள் ஒரு மன இறுக்கத்திலேயே இருப்பார்கள். இச்சமயத்தில், மனம் விட்டு பேச ஒரு துணை அவசியம் தானே... பெண்கள் கூட மற்றவரிடம் சொல்லி விடுவார்கள், தனக்கான தேவையை தாங்களே பூர்த்தி செய்துகொள்வார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை... சாப்பாடு முதல் வீட்டை பராமரித்தல், மனம் சார்ந்த பிரச்சனைகள் வரை மற்றவரை அதிலும் தன மனதிற்கு நம்பகமானவரை சார்ந்து தான் இருக்கிறார்கள். அதற்காக பெண்கள் அப்படி திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை... ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்கள் விரும்பும் பட்சத்தில் மறுமணம் செய்துக்கொள்ளலாம், இதில் என்ன தவறு இருக்கிறது '  என்று முடித்தேன்.

' சே .. நான் இந்த கோணத்தில் யோசிக்கவில்லையே ... நானும் ஒரு forward thinking person என்று நினைச்சிட்டு இருந்தேன். இந்த விசயத்தில் தப்பா நினைச்சிட்டினே... உன்கிட்ட பேசின பிறகு ஒரு  தெளிவு கிடைச்சிருக்கு ..ப்பா ' என்றார்.

நம் சமூகம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தான்  வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி கொள்வதில் தானே மனம் நிறைவடையும். இந்த அன்பை, நட்பை விட உலகில் வேறேதும் முக்கியமாக இருக்கிறதா ... என்ன...!

#அன்புசூழ்உலகு 

Saturday, 22 April 2017

உலக புத்தக தினம்

என் ஒன்பது வயதில், மளிகை பொருட்களை மடித்துக்கொடுக்கும் துண்டு காகிதங்களை ( அப்போதெல்லாம் நெகிழி பைகளில் பொருட்களை நிரப்பும் வழக்கமில்லை ... ) படிக்கும் பழக்கம், மெல்ல , மெல்ல, அம்புலிமாமா, காமிக்ஸ் என்று ஆரம்பித்து, வார, மாத, இதழ்கள் என தொடர்ந்து, பிறகு  சிறு நாவல்கள்,  சரித்திர நாவல்கள் என  மாறி, பெரியார், அண்ணா, அம்பேத்கர் என கொள்கைகள், தத்துவார்த்தங்கள், கருத்தியல்கள் என  வளர்ந்து வந்திருக்கும் வாசிப்பு பழக்கம் தான் எவ்வளவு அறிவையும், தெளிவையும், உணர வைத்திருக்கிறது. !

வாழும் கடைசி நிமிடம் வரை இந்த வாசிப்பு குறையக்கூடாது என்பது தான் விருப்பமாக இருக்கிறது.! :-)

ஏப்ரல் - 23 , உலக புத்தக தினம்.

வாசிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.! :-)  

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்கள்

உள்ளொன்று வைத்து , புறமொன்று பேசும் மனிதர்களிடையே தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான ஓன்று.

 ' ஜாதியா.. அதெல்லாம் நான் பார்ப்பதில்லைங்க ..' 
என்று சொல்பவர் ஜாதிப்பற்றாளராக இருக்கிறார்.
' எங்கள் வீட்டில் அவங்க விருப்பம் தான் ... நான் எதையும் கட்டாயப்படுத்துவதில்லை ..'
என்று சொல்பவர் பெண்களை தன் அதிகாரத்தின் பிடியிலேயே வைத்திருப்பவராக இருக்கிறார்.
' எனக்கு பரந்த மனப்பான்மை இருக்கிறியாது ' 
என்று சொல்பவர்கள் குறுகிய  மனப்பான்மையுடன் தானே வாழ்கிறார்கள்.!

நம் சமூகம் முன்னற்றமடைய தடையாக இருப்பது இவைகள்  தான். ஒரு விசையத்தை தெளிவாக உணர்ந்து, புரிந்து, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்டோமானால், இந்நேரம் நம் சமூகம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும்.!




Friday, 21 April 2017

மாற்றமும், பண்பாடும்.

என் பாட்டிக்கு 15 வயதில் திருமணம் நடந்தது... என் அம்மாவிற்கு 19 வயதில் திருணம் நடந்தது ... எனக்கு 22 வயதில் திருமணம் நடந்தது என்றால், என் மகளுக்கு குறைந்தது 25 வயதில் தான் திருமணம் நடக்க வேண்டும். என்பேத்திக்கு அதைவிட கூடுதல் வயது தேவை படலாம். (வருங்காலத்தில் திருமணம் என்ற ஓன்று இல்லாமலும்  போகும் ...அது வேற சப்ஜெக்ட்.) ஏனென்றால், தன்னை பொருளாதார ரீதியில் நிலை நிறுத்திக்கொள்ள ஒரு கால அவகாசம் தேவை படுகிறது. இது தான் ஒரு பெண் விடுதலையின் முன்னேற்றம், சமூக மாற்றம் ... இது ஒரு சிறு  உதாரணம் ,  இந்த இடத்தில் நம் பண்பாடு என்று சொல்லி பழங்காலத்தில்  உள்ள நடைமுறையை பின்பற்ற முடியுமா..இல்லை, பின்பற்றினால் தான் சரியாக இருக்க முடியுமா?

இப்படி தான் நம்மில் பலர் , பண்பாட்டு சீரழிவு  என்று எல்லாவற்றிலும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.  பண்பாடு என்பது, மொழி, கலை, இலக்கியம், உணவு, பண்பு, வாழ்வியல் முறைகள், சிந்தனைகள் என்பவைகளை காப்பது  தான்.. அதிலும் சிந்தனைகள் வளர்ந்துக்கொண்டே இருக்கும். அதன்படி நம் நடைமுறை பழக்கவழக்கங்களும்  மாறுபடும். பழைமைவாதத்தில் நம்பிக்கையுடைய சிலர் இப்படி தான் புரியாமல் வாதிடுகிறார்கள். இதனை பண்பாட்டு சீரழிவு என்று மாற்றத்தை  ஏற்றுக்கொள்ள தயங்கினால், நம் சமூகம் எப்படி முன்னேற முடியும்..! 

வளர்ச்சி என்பது பண்பாட்டுக்கு எதிரானது அல்ல என்பதனை உணரவேண்டும்.

நம் பண்பாட்டு என்பதே வளர்ச்சியின் வெளிப்பாடு தானே.!

' மாற்றம் ஒன்றே மாறாது ' என்பது தான் நிலையான தத்துவமாக இருக்க முடியும்...!

ஒற்றுமை

எந்த மாநிலத்தில் இருந்தாலும் , என் மொழி சமஸ்கிருதம், இதை எங்கள் இந்தி மூலம் பரப்புவோம்! 

எங்கள் மதம் இந்துத்துவம். இதனை இந்து கடவுள்கள் மூலம் எடுத்துச் சொல்லி பரப்புவோம்.!

எங்கள் தலைவர்கள்  கோல்வாக்கர், வீர சவர்க்கர், பட்டேல், இன்னும் பல பார்ப்பனீய ம(த)ட தலைவர்கள்.!

எங்கள் புனித நூல் பகவத்கீதை!
புனிதமாக கருதும் நூல்கள் வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், மனு தர்மம்!

எங்கள் ஒரே குறிக்கோள், அகண்ட  பாரதத்தை உருவாக்குவது.!

இந்த விசயங்களில் ஏதாவது ஒன்றில் பார்ப்பனர்கள் ஒருவருக்கொருவர் முரண்  படுகிறார்களா.?

இதில் மேலும் என்ன ஒரு வியப்பு என்றால், இந்தியாவில் உள்ள பல மொழிகள் பேசும் பல மாநிலங்களில் வசிப்பவர்கள் இவர்கள்.!

ஆனால், ஒரே மாநிலத்தில் வாழும், ஒரே மொழி பேசும் தமிழர்கள் நாம் ... நமக்கு இந்த ஒற்றுமை இருக்கிறதா... சிந்தியுங்கள் தோழர்களே... 

இதற்கும் காரணம் #பார்ப்பனீயம் என்பதை இனிமேலும் உணர்வீர்களா.???  
 

Monday, 17 April 2017

மகிழ்வும், நன்றியும்.

பத்து  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது ..எனக்கு நன்கு தெரிந்த தோழி ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக, தன தந்தை வீட்டில் வசித்து வந்தார். மகன் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தன தந்தை வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார்  பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கிய தோழி , அந்த பகுதியில் இருக்கும் ஒரு நல்ல பள்ளியில் விண்ணப்பித்தார். நுழைவுத்தேர்வு எழுதி அதில் தேர்வாகியும் விட்டான் அவருடைய மகன். சேரும் சமயத்தில், அந்த பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர், தந்தையின் ஒப்புதல் கடிதம் வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் அந்த மாணவனை நிராகரித்து விட்டார். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும், தன நிலையை தோழி வெளிப்படையாக சொல்லியும், அந்த தலைமையாசிரியர் மனம் இறங்கவில்லை...பிறகு வேறு வழியில்லாமல் மற்றொரு ஒரு  பள்ளியில் சேர்த்தார்கள். அப்போது அப்பெண்ணிற்கு இருந்த மனஅழுத்தமும், வேதனையும் வார்த்தைகளால் சொல்லி விட  முடியாது.. அந்த அளவிற்கு விரக்தியின் உச்சத்தில் இருந்தார்.  என்ன  அயோக்கியத்தனம் செய்தாலும், இச்சமூகத்தில் ஆண் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறான் என்பது தான் அது.!


இன்று காலை  கேட்ட ஒரு செய்தி,  இந்நிகழ்வினை நினைவூட்டியது. 

" தனியாக வாழும் பெண்களின் குழந்தைகளுடைய பள்ளி,கல்லூரி சான்றிதழல்களில், அப்பாவின் பெயர் குறிப்பிடவேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது" 

என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி அவர்கள், மனிதவள மேம்பாட்டுத்  துறைக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.!

வரவேற்கப்பட வேண்டிய ஒரு பரிந்துரை. நிச்சயம் செயல் படுத்தப்பட வேண்டும். நல்லது யார் செய்தால் என்ன ... வரவேற்கப்பட வேண்டும் என்பது தானே உலக நியதி.!  

மகிழ்வும், நன்றியும்.!





  

Saturday, 8 April 2017

வெறுமையை போக்க...

நமக்கு பிடித்தவை எல்லாம் ஒரு கட்டத்தில்,  வெறுமையை,சலிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அச்சமயங்களில், வழக்கமான நம் வாழ்க்கை முறையிலிருந்து சற்று விடுபட்டு, நமக்கு தெரிந்த , ஆனால் பழக்கப்படாத நிறைய விசயங்கள இருக்கின்றன அல்லவா... அதில் நாட்டம் செலுத்துங்கள். பிறகு இயல்பாகி விடுவீர்கள். 
உதாரணத்திற்கு நண்பர்களே... ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் ஒருநாள் இருந்துவிட்டு வருவது, ஏதாவது ஒரு சமுகப்பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்வது, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுடன் சிறு உரையாடல், அவர்களின் வாழ்க்கைமுறையை தெரிந்துக் கொள்வது  என செய்து பாருங்களேன். அது நம்மை மேலும் பட்டைத்தீட்டி கொண்டு, சிறப்புடன்  வாழ வழி வகுக்கும்.! :-) 

Friday, 7 April 2017

சமஸ் கட்டுரை ... கடைந்தெடுத்த பார்பனீயக்கட்டுரை

ஆரிய ஜனதா கட்சி , இந்து ஜனதா கட்சி  என்று வைத்துக்கொள்ளாமல் பாரதிய ஜனதா கட்சி என்று வைத்திருக்கிறதாம்.. அதனால் நாமும் திராவிடத்தை விடுத்து தமிழை முன்னிறுத்த வேண்டுமாம்... பிறகு தமிழ் பேசும் பார்ப்பனர்களையும் சேர்த்து செயல் பட வேண்டுமாம்.! _"சமஸ்"

புத்தத்தில் நுழைந்து, நெறிகளை மாற்றி மதமாக்கிய பார்ப்பனீயம் இப்போது நம்மிடம் நெருங்கிறது. இதையெல்லாம் தெரிந்து தானே, பெரியார் தெளிவாக சொல்லியிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு சிலையின் கீழும் கடவுள் மறுப்பு கொள்கை எழுதபட வேண்டுமென்றும், பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்க்கக்கூடாதென்றும்.!
என்ன ஒரு கணிப்பு ... #பெரியார்_பெரியார்_தான் :-)

Tuesday, 4 April 2017

சிறப்பு குழந்தைகள்.

#ஏப்ரல்2 
#சர்வதேசஆட்டிசம்தினம்

இந்த குழந்தைகளை நாம் அனைவரும் கடந்து வந்திருப்போம். அதன் பிறகு குறைந்தது ஒரு மணிநேரமாவது அக்குழந்தைகளைப்  பற்றி நினைத்துக்  கொண்டிருக்கும் நம் மனம்... அந்த அளவிற்கு நம் மனதை பாதிக்கும் ஒரு விசயம் அது. நமக்கே அப்படி இருக்கும் போது பெற்றோர்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி  தெரிய வேண்டியதில்லை.. ஆனால் , இந்த குறைபாடை சரி செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு வியாதி அல்ல .. குறைபாடு என்பது தான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. சரியான நேரத்தில் இதற்கென மருத்துவத்தை மேற்கொண்டால் முழுதும் சரி செய்துவிட முடியும். இந்த குறைபாட்டை ஒன்றரை முதல் இரண்டு வயதிற்குள் கண்டு பிடித்துவிட முடியுமாம்.  உடனே வைத்தியம் செய்தால் மற்ற குழந்தைகள் போல் இவர்களும்  இயல்பாக வாழ முடியும்,. அவர்களுடன் சேர்ந்து படிக்க முடியும், விளையாட முடியும் என்று மருத்துவம் சொல்கிறது.

அதற்கான அறிகுறிகள் :

1. பெயர் சொல்லி கூப்பிட்டால் எவ்வித வினையும் காட்டாமல் இருப்பது.
2. நேருக்கு நேர் நம் கண்களை பார்க்க முடியாமல் தடுமாறுவது  .. எங்கோ       பார்த்துக் கொண்டிருப்பது.  
3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் தனித்து இருப்பது.
4. முக்கியமாக பேச்சு வர தாமதமாதல். ஒரு  வயதில் ஒரு வார்த்தையும், 
     ஒன்றரை வயதில் இரு வார்த்தைகள் சேர்த்தும், இரண்டு வயதில் ஒரு 
     வாக்கியமாக பேசுதல் என்பது தான் இயல்பு... இதில்  ஏதும் மாற்றம்           இருந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.


இந்த அறிகுறிகள் இருந்தாலும் நாமாகவே ஒரு முடிவிற்கு வந்து விடாமல் மருத்துவரை பார்த்து, ஆலோசனை செய்து, இந்த குறைபாடு என்று உறுதியானவுடன் , மனஉளைச்சலால் காலம் தாழ்த்தாமல் உடனே சிகிசசையை மேற்கொள்ள வேண்டுமாம்.

ஆதலால் நண்பர்களே.. உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு இம்மாதிரி இருந்தால் , இம்முறையை மேற்கொள்ள சொல்லுங்கள்.

இவை அனைத்தும் இத்துறையில் பணியாற்றும்  மருத்துவர் ஒருவர் பண்பலையில் சொன்ன  பயனுள்ள தகவல்கள்.!

#அன்புசூழ்உலகு