Wednesday, 31 May 2017

என் உணவு, எனது உரிமை

மாட்டிறைச்சி சாப்பிட்டால் மனிதனை அடி... கொல்லு .. என்று சொல்லும் உங்கள் மதம், மற்ற நாட்டவர்கள் சாப்பிடுவதற்கும், இதர பயன்பாட்டிற்கும் ஏற்றுமதி செய்யலாம் என்று சொல்கிறதா... அப்படியே சொன்னாலும் இந்த கருத்து நம் நாட்டிற்கு பொறுந்தாதே... இங்கு பல மதங்களை, பண்பாட்டைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு மதசார்ப்பற்ற துணைக்கண்டம் ஆயிற்றே....

மீறியும் ஒரு மதத்தை தான் மக்கள் பின்பற்றவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பொது வாக்கெடுப்பு நடத்தி, உங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவருவோரை சேர்த்துக்கொண்டு பரந்த இந்து பாரதத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். மற்றவர்களை விட்டு விடுங்கள். தனித்தனி நாடுகளாகப்பிரிந்து, ஒரு கூட்டமைப்புத் தத்துவத்தில் அமைத்துக்கொள்கிறோம்.

இனிமேலும் இந்த ஆர்.எஸ்.எஸ். தீவீரவாதகும்பலுடன் மல்லுக்கட்ட நாங்கள் விரும்பவில்லை... முன்னேறுவதற்கு எவ்வளவோ சவால்கள் நம் முன்னே இருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து, உண்ணும் உணவிற்காகவும், பேசும் மொழிக்காகவும், கற்கவேண்டிய  கல்விக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க முடியாது.!

#என்_உணவு  #என்_உரிமை 

#BAN_RSS

#DRAVIDARNAADU

Tuesday, 30 May 2017

அரசியல் பேசும் பெண்கள்.

உட்பேழைக்குள்  சகோதரர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில்,

' அக்கா, நீங்கள் பல அரசியல் செய்திகளை எழுதுகிறீர்கள்... அரசியலை  பலர் விரும்புவதில்லை... நிறைய பேச சொல்லுங்கள் .. அதுவும் பெண்களை அதிகம் பேச சொல்லுங்கள் ' என்று சொல்லி இருந்தார்.

உண்மை தான் அந்த சகோதரர் சொன்னது... பெண்கள் அதிகம் அரசியல் பேச வேண்டும். முன்பை விட  இப்போது பெண்களிடம் அந்த விழிப்புணர்வு வந்திருக்கிறது. அதற்கு மிக முக்கியக் காரணம் முகநூல் என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையில் வந்திருந்த ஒரு செய்தி, பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் சொன்னவை... 

" ஆணுக்கு ஒரு வேலை, பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை... இருவரும் சமமே. ஆணுடன் சேர்ந்து பெண்களும் போராட்டத்தில் இறங்க வேண்டும். நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக்கூடாது. இந்தி வீழ்க, தமிழ் வாழ்க என்றால் போதும்.உடனே ஆச்சாரியார் சிறைப்பிடிப்பார். நீங்கள் சொல்வதைக்கேட்காது, நாட்டுக்குப்  பாடுபடாது உங்களிடத்தில் வந்தால்,ரோஷம் இருக்கும் இடம்பார்த்து அவர்களைக் குத்த வேண்டும். வீட்டிற்குள்ளே அனுமதிக்க கூடாது.  இதேபோல் அநேகநாடுகளில் பெண்கள்தங்கள் கணவன்மார்களை இடித்துத் திருத்தியதாக சரித்திரம் கூறுகிறது.!"

13-11-1938 ஆம் தேதி, சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப்பெண்கள் மாநாட்டில் பெரியார் பேசியது.
( குடியரசு - சொற்பொழிவு - 27-11-1938. )

1938 யிலேயே அய்யா அவர்கள் எப்படி பேசியிருக்கிறார்கள் பாருங்கள் நண்பர்களே...  பெண்கள் கையிலெடுக்கும் எந்த போராட்டமும் வெற்றிபெற்றே தீரும். அது உண்மை தான் என்பதை இப்போதுள்ள பெண்கள் இதனை  மெய்பித்துக்கொண்டு தானே இருக்கிறார்கள். டாஸ்மாக் போராட்டம் இவ்வளவு வலுவாக தொடர்கிறதென்றால் அதற்கு முழு காரணம் பெண்கள் தானே. ஆதலால் நண்பர்களே, உங்கள் வீட்டுப் பெண்களிடம் அரசியல்பேசுங்கள். நாடு நிலவரத்தை புரிய வையுங்கள். மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் அவர்களின் அறிவு, நம் சமூகத்தை  மென்மேலும் உயர்த்த உதவும்.!  :-) 

திராவிடம்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பேசிய தமிழ்தேசியவாதிகளும், திராவிடம் இந்து கடவுள்களிடம் அழிந்துவிட்டது என்று சொன்ன குருமூர்த்தி வகையறாக்களும் , திராவிடத்தை முன்னெடுப்பதால் தமிழகம் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது... அதனால் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழர்கள் என்ற முன்னெடுப்பை கையாளுங்கள் என்ற சமஸ் மூலம் சொல்லவைத்த ஹிந்து ராம்களும், நானும் திராவிடன் தான் என்று சொல்லி அணைத்து அழிக்கும் செயலில் ஈடுபட முயன்ற பார்ப்பனியம், 

"இன்று வீறு கொண்டு முன்னே நடைபோடும் திராவிடத்தை கண்டு மிகவும் திகைத்து தான் போயிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தெரியாது ... ஆரியம் இருக்கும் வரை திராவிடமும் இருக்கும் என்பது. திராவிடம் என்பது ஒரு கட்சியின் பெயரோ, ஒரு அமைப்பின் பெயரோ இல்லை, அது ஒரு இனத்தின் பெயர்... ஒரு வாழ்வியலின் பெயர்... ஒரு இனத்துக்குரிய நாகரீகத்தின் பெயர் என்பது.!
 ஆரியம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பெரியார் என்ற கைத்தடி ஒரு தட்டுத்தட்டி அடக்கி வைக்கும். இன்றைக்கும் பெரியார் என்றால் ஆரியத்திற்கு நடுக்கம் இருப்பது உண்மை தானே.!"


"  இனத்தால்  திராவிடன் , மொழியால் தமிழன் " என்பதை நம் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகு தூரமில்லை.  பார்ப்பனீயம் தன கோரமுகத்தை காட்டும் போதெல்லாம், திராவிடம் உயர்ந்தோங்கி வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.!

Wednesday, 24 May 2017

திராவிடத்தின் வாயிலாக நம் மாநிலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம்.

எங்கள் தந்தை இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். ஜம்மு, காஷ்மீர் முதல் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை கிட்டத்தட்ட எல்லா இந்திய மாநிலங்களிலும் பணி  புரிந்த அனுபவம் மிக்கவர்கள். பொதுவாகவே எனக்கு விவரம் தெரிந்தது முதல் தனது அனுபவங்களை தானாக வந்து சொல்ல மாட்டார்கள்.  நாமாக கேட்டால் அனைத்து செய்திகளும் வெளி வந்துவிடும். 
ஆனால் கேட்பதில் ஆர்வம் என்பது எனக்கு எட்டாம் வகுப்பிலிருந்து தான் வந்தது. எப்போதுமே அப்பாவும், அண்ணனும் தான் விவாதிப்பார்கள். நானும்,அம்மாவும் கேட்டுக்கொண்டு இருப்போம். என் தங்கை சிறியவள் என்பதால் இதில் ஆர்வம் இருக்காது. அந்த கேட்கும் பழக்கம் தான்  எனக்கு பலத்தரப்பட்ட செய்திகளை கற்றுத்தந்தது. அதன் பிறகு விவாதத்தில் நானும் கலந்துக்கொள்வேன். 

கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் , அப்பா, அப்போதைக்கு பணிபுரியும் அந்த மாநிலம்,ஊர், அந்த மக்கள் என அனைத்தையும் விவாதித்து இருக்கிறோம். அப்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் மக்களின் உணவு முறை, வாழ்வியல், இயற்கை பற்றிய செய்திகளாகத் தான் இருக்கும். அதன் பிறகு நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறை,இம்மாதிரி கலந்துரையாடல்களை மறக்கடிக்க வைத்து விட்டது  என்று தான் சொல்ல வேண்டும்.


வெகு நாட்களுக்குப்பிறகு, இன்று அதற்கான வாய்ப்பு கிடைத்தது எனலாம்.  இன்று காலை அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏரி ,குளங்களை தூர் வாருவது, அதைப்பற்றி தமிழிசை விமர்சித்தது பற்றியும்  டாபிக் வந்தது. அப்போது,

' எதற்கெடுத்தாலும் எதாவது குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ... இந்த திராவிடக்கட்சிகளின் அரசியலைப்பற்றி,  பாஜக மட்டுமல்ல... அனைத்து கட்சிகளுமே இந்த விசயத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்...! ' என்றேன்.

இதற்கு அப்பாவின் பதில், சற்று நீண்ட பதிலாக இருந்தது.. ஆனால் அது உண்மையாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அவர்களின் அந்த அனுபவ பதிலை , அப்படியே இங்கு தருகிறேன்.

" இங்கே தமிழ்நாட்டுல இருக்கிற அளவுக்கு, வட மாநிலங்களில் சமூகநீதி விழிப்புணர்வோ, கல்வி அறிவோ கிடையாது. குறிப்பாக நம் கிராமங்களிலும், வடமாநில கிராமங்களிலும் பார்த்தா  தான் தெரியும். எந்த அளவுக்கு நம் அரசியல் கட்சிகள் நம் மாநிலத்தை உயர்த்தி இருக்கின்றன என்று...  இங்கு இருப்பவர்களை, உ.பி.,  ம.பி.,  மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஏதாவது குக்கிராமத்தில் ஒரு வாரம் தங்க சொன்னால் தெரிந்து  விடும்.  ஒரு நாள் கூட வசிக்க முடியாத அளவிற்கு அடிப்படை வசதிகளே இல்லாத கிராமங்கள் தான் அங்கு அதிகம்.  அப்போது தான், ஜாதி கொடுமைகளும், தீண்டாமை கொடுமைகளும்,  பெண்ணிய அடக்கு முறைகளும்,மத கலவரங்களும் எந்தளவிற்கு இருக்கின்றன என்பதை உணர்வார்கள்.

அது மட்டுமல்ல... திராவிட ஆட்சிக்கு முன்னாள் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றும் நம் மாநிலம் செழுமையாக இருந்துவிடவில்லை. பக்தவத்சலம் ஆட்சியில் கடும்  அரிசி பஞ்சம். அரிசியை ரேசன் கடையில் வாங்கும் நிலை இருந்தது. காமராசர் காலத்தில் ஓரளவிற்கு வளர்ச்சித்திட்டங்கள், கல்வி வளர்ச்சி என வந்தாலும், கிராமங்களில் தீண்டாமையும், பெண்ணடித்தனமும், மூடபழக்க  வழக்கங்களும் 
இருந்துக்கொண்டு தான் இருந்தன. அவரையும் முழுமையாக மத்திய அரசு இயங்கவிடவில்லை. திராவிடக் கட்சிகள்  வந்த பிறகு தான், இந்த குறைபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வந்தன. அதிலும் , இதில் பெரும் பங்கு   திமுகவிற்கு இருக்கிறது. பெண்ணுரிமையோ, சமூகநீதிக்கான சமத்துவமோ திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இன்னமும் பல கிராமங்களில் ஜாதி கொடுமைகள் இருக்கிறது என்றாலும், இந்த அம்பது ஆண்டுகளில் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை.இரண்டாயிரம் ஆண்டுகள் நம் மூளையில் திணிக்கப்பட்ட ஒரு விட(ச)ம் 50 ஆண்டுகளில் முழுதுமாக துடைக்கப்படுவது அவ்வளவு எளிதல்ல.! "


நானும் படித்து, தெரிந்து கொண்டதை வைத்து ,  இது தான் உண்மை நிலை என்பதை உணருகிறேன். தந்தை பெரியார் அவர்களின் இந்த திராவிடர் என்ற உணர்வு நம்மை புரட்டிப்போட்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.  அவர் தோற்றுவித்த , திராவிடர் கழகம் எல்லாவற்றிற்கும் முதன்மை காரணமாக இருந்திருக்கிறது என்பதில் சிறிதும் அய்யமில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது , நம் மாநிலம்  ஒரு நல்ல வளர்ச்சி, மாற்றம் , சமூகநீதி ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது போதவே போதாது... இன்னும் நிறைய, நிறைய மாற்றங்கள் தேவை. அதனை அவரவர்களால் இயன்றதை  உண்டாக்குவோம். அதை விடுத்து, குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால், என்றைக்கும் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும். 

ஒவ்வொரு வீட்டிலும்  உண்டாகும் மாற்றமே , சமுகமாற்றம் என்பதை உணர்ந்து செயல் படுவோம்... நண்பர்களே.! 

Tuesday, 23 May 2017

தற்போதைய தேவை , தமிழர்களின் ஒற்றுமை

#தமிழீழம் என்பது தமிழர்கள் அனைவரின் கனவு, விருப்பம், இலக்கு. ஆனால் கடந்தகாலம் நமக்கு உணர்த்தியது என்னவென்றால், அங்குள்ள ஈழத்தமிழர்களால் மட்டும் அது சாத்தியமில்லை என்பது தான். உலகம்முழுதும் நம் தமிழினம் விரிந்து, பரவிக் கிடந்தாலும் நம்மால் சாதிக்க முடியாமல் போனது மிகவும் வேதனையான ஓன்று.

இங்குள்ள தமிழர்கள் அனைத்து துறைகளிலும் உள்ள உயர் பதிவிகளில் அமர்ந்து, நமக்கென இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பது ஓன்று தான் சிறந்தவழியாக இருக்க முடியும். அதற்கு நம்மை நாம் இங்கு நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது நிதர்சனம். ஆனால் நாம் தான் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு இருக்கிறோமே... காலம் காலமாக இந்த ஒற்றுமையின்மை தான் நம்மை இலக்கு நோக்கி நகரவிடாமல் தடுக்கிறது. ஒரு படி ஏறினால், இரண்டு படி கீழே விழும்படி செய்கிறது.!

இந்த நிலையை தான் #பார்ப்பனீயம் மிகச் சரியாக , தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் மீண்டும் ஆரியத்திற்கு அடிமைகளாய் ஆகிவிட்டோமானால்,  தமிழகமும் தன சுயாட்சி உரிமையை இழந்துவிடும். ஈழமும் கனவாகவே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே ... நம் உரிமைகளை இழக்காமல், நம்மை இங்கு நிலைநிறுத்திக் கொண்டால் தான், நாளை ஈழத்திற்காக நாம் குரல் கொடுக்க முடியும் என்பதை... #ஒற்றுமை மிக முக்கியம்.!

தமிழீழம் தமிழர்களின் தாகம்.

மறந்திட தான் இயலுமா ... மே - 17...
எம் தமிழீழ உறவுகளைக் கொன்று குவித்து, மண்ணில் புதைத்த நாளாயிற்றே...
எட்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும்
நம்மின மக்கள் அச்சத்துடனே வாழும்
கொடுமையினை என்ன சொல்ல...
வாய் மூடி , மௌனித்து
வேடிக்கைப் பார்த்த
சர்வதேச சமூகம் பதிலுரைக்கும் காலம்
விரைவில் வந்தே தீரும்.

**********************************************************************************************************************
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கும், ஷாகா ஊர்வலத்திற்கும் அனுமதி ... உயிர் நீத்த ஈழத்தமிழர்களின் நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு, கைது, தாக்குதல் என்பது எத்தகைய அராஜக செயல்.!



தமிழர்கள் ஒன்றுப்படுத்துவிடக்கூடாது என்பதில் பார்ப்பனீயம் எவ்வளவு கவனமாக இருக்கிறது... நம்மவர்கள் இதனை தெளிவாகப் புரிந்துகொண்டு, நம் கருத்துவேறுபாடுகளை களைந்து, தமிழர்நலன் என்றமட்டில் ஒற்றுமையுடன் செயல் பட்டால் வெற்றி நம் பக்கம் வருவது உறுதி.!
*******************************************************************************************************************

நாம் செய்ய வேண்டியவை.

அது அதிமுகவை வைத்து வந்தாலும் சரி ... ரஜினியை வைத்து வந்தாலும் சரி ... பாஜகவால் இங்கு நிலைத்து இருக்க முடியாது... ஏனென்றால் அவர்கள் கொள்கையற்றவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் மதமும்,அவர்களின் மொழியும் மட்டுமே... அதனை திணித்து விடலாம் என்பது ஒரு பகற்கனவு.அவர்களுடைய வாழ்வியலும், நம்முடைய வாழ்வியலும் என்றைக்கும் பொருந்தாது. ஒன்றுகொன்று  நேர் எதிரானது...பாஜக என்பது ஒரு மாயை. நீண்டநாட்கள் காட்சிப்பட படுத்த முடியாத அளவிற்கு மாயத்தோற்றம் நிறைந்த ஒரு கட்சி.! 

மனிதத்தை விட மதமும், ஜாதியும் பெரிது என்று வலியுறுத்தும் ஒரு கட்சியோ, அமைப்போ வெற்றிப்பெற்றதாக சரித்திரத்தில் இடம் பெறவில்லை. அவர்களின் நோக்கம் என்றைக்குமே நிறைவேறாத நோக்கமாக தான் இருக்க முடியும். இந்த இந்திய துணைக்கண்டம் பல நாடுகளாக சிதறுவதற்கான முதல்படி தான் , அவர்களின் இந்த ஒன்றுபட்ட பாரதம் என்ற முன்னெடுப்பு.!

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான்... நம் வரலாற்றை, தமிழர்களின் சிறப்பை, சிந்துசமவெளி நாகரீகத்தை, கீழடியை,  திராவிட வாழ்வியலை , நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மிக முக்கியமாக பார்ப்பனீயத்தைப்பற்றிய உண்மை முகத்தை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு புரிய வைப்போம். சொத்து, பணம், சேர்த்து வைப்பதைக்காட்டிலும், இவைகளை நம் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்வோம். அவர்கள் வாழும் காலம் ஆபத்தான காலமாக இருக்க கூடும். அதிலிருந்து அவர்களை மீட்டுக்கொள்ள இந்த அறிவுச்சுரங்கம் தான் உதவியாக இருக்க  முடியும்.!

Wednesday, 17 May 2017

அன்பும், அலட்சியமும் .!

சில தினங்களுக்கு முன்னால், மருத்துவமனையில், வரிசைப்படி காத்திருந்தபோது, இரு இணையர்களை பார்க்க நேர்ந்தது... இரு மனைவிகளும் கருவுற்றிருக்கிறார்கள்.

ஒரு இணை இளம் இணையர்கள். இருவருக்கும் முப்பது வயதிற்குள் தான் இருக்கும்... முதல் குழந்தை போலிருக்கிறது... ஏழு மாதம் இருக்கலாம்.

இரண்டாவது இணையர்கள் முப்பத்திலிருந்து, நாற்பது வயதிற்குள் இருப்பார்கள்., ஒரு மகன் இருக்கிறான்.. ஐந்து வயது இருக்கும். இது இரண்டாவது குழந்தை என்று தெரிகிறது... இவருக்கும் ஏழு அல்லது எட்டு மாதம் இருக்கலாம்.

இதில் என்ன விசயமென்றால், இரு கணவன்மார்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் பார்ப்பதற்கு, வேடிக்கையாகவும், அதே சமயம் சற்று வேதனையாகவுமிருந்தது.

இளம் கணவன் மனைவி பக்கத்திலேயே இருக்கிறார். அலைபேசியில் அழைப்பு வந்தாலும், எடுத்து உடனே ,
 ' மச்சான் .. நான் ஒய்ப் அழைச்சுக்கிட்டு டாக்டர்கிட்டே வந்திருக்கேண்டா... அப்புறம் உன்னை கூப்பிடுறேன்.' என்று கூறி வைத்து விடுகிறார். 
மனைவி சிறிது முகம் வாடினாலும், ' என்னாச்சு..பா ... எதாவது வலி இருக்கா' என்று துடித்து தான் போகிறார். 
' இங்கேயே ரொம்ப லேட்டா ஆயிடுச்சி... போவும்போதே ஏதாவது சாப்பிட்டுவிட்டு போயிடலாம்... டா ' என்று  வாஞ்சையுடன் தோளில் கைபோட்டவாறே சொல்கிறார்.

இப்போது இங்கே வருவோம்... இரண்டாவது இணை... இந்த பெண்ணின் கணவனை நான் வெகுநேரம் வரை பார்க்கவே இல்லை... இவர் தன் மகனுடன் தான் அமர்ந்திருந்தார். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும், மற்றவர்களுடன் ஏதாவது பேசியபடி இருந்தார். அவர்களுடைய முறை வரும்போது,
' செல்லம்... அப்பாவை கூப்பிடு, வெளியே இருப்பாங்க' என்றார்.
உடனே அந்த வாண்டுவும், வெளியே ஓடி போய், சில வினாடிகளில் தன அப்பாவுடன் வந்தது.
' எவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க...?'
' போன்ல பேசிகிட்டு இருந்தேன்... பிரென்ட் ரவி தான்.. உனக்கு தெரியும்ல...' 
' அதுக்குன்னு இவ்வளவு நேரமா..'
' சரி ... இவ்வளவு லேட்டாவுதே ... வீட்டுல ஏதாவது செஞ்சு  வைச்சிட்டு வந்தியா... இவன் வேற போனவுடன் பசிக்குதுன்ப்பான்..'

' ம்ம்ம் ...அப்புறம், நீங்க என்ன வெளியிலே வாங்கியா கொடுக்க போறீங்க... இட்லி ஊத்தி வைச்சுட்டு தான் வந்திருக்கேன்...'

இது வியப்பாக தான்  இருக்கிறது... மனைவிடம் முதல் குழந்தைக்கு காட்டும் ஆர்வம், பரிவு, அன்பு இரண்டாவது குழந்தைக்கு இல்லாமல் போவதேன்...ஒரு மிகப்பெரிய அலட்சியம் மேலோங்குகிறது ஆண்களிடம்.!


Monday, 15 May 2017

அடித்தட்டு பெண்களின் இன்றைய நிலைமை.

கடந்த வாரம் மூன்று நடுத்தர வயதுடைய பெண்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூவருமே நாற்பதின் மத்தியில் இருப்பவர்கள். முதலாமவர், சமையல் வேலை செய்கிறார். இரண்டு மகன்கள். ஒருவன் கல்லூரியிலும், மற்றொருவன் பள்ளியிலும் படிக்கிறார்கள். தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு , பகல் நேரம்முழுவதும், மூன்று வீடுகளில் சமையல் செய்து சம்பாதிக்கிறார். 

இரண்டாமவர், கட்டிட  வேலை செய்து வருகிறார்.  இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் கல்லூரியிலும், மகள்  பள்ளியிலும் படிக்கிறார்கள். காலை எழுந்தவுடன் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வேலைக்கு வந்தால் வீடு போய் சேர இரவு ஆகிவிடும். இரவு சென்றவுடன் மறுபடியும் சமையல் செய்து, சாப்பிட்டுவிட்டு  படுக்க தினமும் 12 மணி ஆகி விடுமாம்.

மூன்றாமவர், வீட்டுவேலை செய்கிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்களுக்கு சரியாக படிப்பு வரவில்லை.. ஏதோ கிடைத்த வேலை செய்கிறார்கள். மகள்மட்டும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். இவருக்கும் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினால், நான்கு வீ ட்டு வேலை முடித்து திரும்பி வீடு செல்ல  மாலை ஆகிவிடும்.

இந்த மூன்று பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை ... என்னவென்றால், மூவரின் கணவன்மார்களும்  குடிகாரர்கள். வீட்டுக்கு பணம் கொடுப்பதில்லை. இந்த பெண்களின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது. அது மட்டுமல்ல... குடித்துவிட்டு வந்து, தினமும் சண்டை, அடி என நிம்மதியில்லா  வாழ்க்கை. குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரரின் நச்சரிப்பு வேறு... தினமும் சண்டை போட்டு கத்திக்கொண்டிருந்தால், வேறு வீட்டுக்கு சென்று விடுங்கள் என்ற மிரட்டல் வேறு.

நான் சந்தித்த இந்த  மூன்று பெண்களும், சொல்வது என்னவென்றால், " குடித்து தொலையட்டும்... வீட்டு செலவிற்கு பணம் கூட கொடுக்க வேண்டாம். நான் பார்த்துக்கொள்வேன். தினமும் சண்டை போடாமல், சாப்பிட்டுவிட்டு தூங்கினால் போதும்.!"

இந்த பெண்களுக்கு தான் எவ்வளவு சகிப்புத்தன்மை, ஆளுமை, நிர்வாகத்திறன், மனப்பக்குவம்  என்று எண்ணும்போது மிகவும் வியப்பாகத்  தான் இருக்கிறது. இந்த மூன்று பெண்களையும் தனித்தனியே  தான் சந்தித்தேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு மூவரும் ஒரே பதிலை தான் தந்தார்கள்.!

என்னுடைய கேள்வி : 
"இவ்வளவு பேசுகிறீர்களே... ஒரு தனி ஆளாக குடும்பத்தை நடத்தக்கூடிய திறமையும் உங்களுக்கு இருக்கிறது. அப்புறம் எதற்கு, உங்கள் கணவர்களை கட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். அவர்களால் ஒரு பயனுமில்லை. வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட வேண்டியது தானே " 

அவர்களின் பதில் :   

" குடிகாரனாக, வீட்டுக்கு உதவாதவனாக  இருந்தாலும், அவன் இருக்கும் போது எந்த ஆம்பிள்ளையும் நம்மை அண்ட முடியாது அக்கா. இல்லைனா, பால்காரனிலிருந்து, மளிகைக்கடை, தண்ணி கேன் போட்றவன், அக்கம்பத்துல இருக்கிறவன், வீட்டு சொந்தக்காரர் வரைக்கும் கை வைக்க பாக்குறானுங்க... இரண்டாவது, புருஷனை விரட்டுவிட்டுட்டு ஊர் மேய்யறானு பேசறதை கேக்கறதை தடுக்கலாம்."


இது தான் அடித்தட்டு பெண்களின் இன்றைய நிலைமை. அவர்களின் இந்த கோபம் தான் , டாஸ்மாக்கை எதிர்த்து தெருவில் இறங்கி போராட வைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்  ஆனால் ஆண்களின் இந்த வக்கிரப்புத்தியை என்ன செய்வது... எப்படி நீக்குவது ... தன்னை தற்காத்துக்கொள்ள உதவாக்கரை என்றாலும் ஒரு ஆண்துணை தேவை என்ற நிலையில் பெண்கள்  இருக்கும் சமூகம் எப்படி மேம்படும்.?

நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிகவும் அதிகமிருக்கிறது  என்பது மட்டும் புலனாகிறது.! :-(   

Friday, 5 May 2017

அன்பும், பண்பும்

பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது... நிற்கக்கூட இடமில்லாமல் ஆண், பெண் என அனைவரும் அவதிப்படுகிறார்கள்.. அதுவும் இந்த  வெயில் காலத்தில் என்றால் சொல்லித்  தெரிய வேண்டியதில்லை. ஒரு கைக்குழந்தையை தூக்கியபடி ஒரு தம்பதியினர் ஏறினர். அந்த தாய் இடம் ஏதாவது இருக்கிறதா என்று தேடுகிறார். நான் சன்னலோர இருக்கையில்  அமர்ந்திருந்தேன். எழுந்திருச்சு இடம்கொடுக்கலாம் என்று நினைக்கும் பொழுதிலே, என் இருக்கையின் எதிர் இருக்கையின் முன்னே உள்ள இருக்கையில் இருந்த ஒருவர் எழுந்திச்சு , 

' நீங்கள் உட்காருங்கள் சிஸ்டர்' என்றார்.

பக்கத்தில் மற்றொரு ஆண் உட்கார்ந்திருப்பதால் , அந்த பெண் சற்று தயங்கினார்... தன் கணவனைப் பார்த்தார். உடனே அவர் , தன மனைவியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு , அந்த இருக்கையில் அவர் அமர்ந்துக்கொண்டார். அந்த பெண் பெண்களின் இருக்கை பக்கம்வந்து நின்றுக்கொண்டார்.

இடம் கொடுத்தவருக்கோ முகம் வாடி  போய்விட்டது. மனதில் நிச்சயம் கண்டபடி தீட்டித் தீர்த்திருப்பார்.

அந்த பெண்ணைப் பார்த்தால், மிகவும்பயந்த சுபாவமாக தெரிகிறார். எல்லாவற்றிற்கும் கணவனின் அனுமதி கேட்பார் போலிருக்கிறது...அந்த  கணவனுக்குதான்  என்ன ஒரு ஆணாதிக்கம்... கைகுழந்தையுடன் நிற்கும் தன் மனைவி  மற்றொரு ஆணின் பக்கத்தில் அமர்வது கூட , தவறாகதெரிகிறது என்றால், அவர்களின் அதிகார, ஆணவப்போக்கை என்னவென்று சொல்வது..!


இதில் இந்த மூன்று நபர்களில் , இடம் கொடுத்தவர் அன்பில், பண்பில், மனிதநேயத்தில்  உயர்ந்து நிற்கிறார்.!

பெண்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ஆண்கள் தான் எவ்வளவு அழகாக தெரிகிறார்கள்.!  :-) :-)