Tuesday, 18 July 2017

சானிட்டரி நாப்கின்ஸ்

பலசரக்கு கடையில் மளிகைப்பொருட்கள  எடுத்துக்கொண்டிருக்கும் போது, பக்கத்தில் ஒரு பெண்ணும் ஒவ்வொரு பாக்கெட்களிலும் விலையை பார்த்தவாறே எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். நடுத்தர  வயது இருக்கும். நானும், அவரும் ஒரே சமயத்தில், ஒரே பொருளை எடுக்க முற்பட்டோம். உடனே இருவரும் சிரித்துக்கொண்டே, 

' நீங்களே எடுங்கள் ... ' என்றேன்.

' பரவால்ல... நீங்க எடுத்துக்கோங்க... பக்கத்துல இருக்கு, அதை நான் எடுத்துகிறேன் ... ' என்றார்.

அதன் பிறகு ஒரு தோழமை ஏற்பட்டு  விட்டது . பேசிக்கொண்டே எடுத்துக்கொண்டிருந்தோம்.
சானிட்டரி நாப்கின் உள்ள அடுக்கின் அருகில் வந்தோம். அப்பெண், ஒரே ப்ராண்டில் சைஸ் வாரியா எடுத்து வைத்தார்.

' எதற்கு பல சைஸ் எடுக்கிறீர்கள் ... சும்மா தெரிந்து கொள்ள தான்.. தப்பா எடுத்துக்காதீங்க... ' இது நான்.

' இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு... வீட்டில் இரண்டு குழந்தைங்க இருக்காங்க.. என் பொண்ணுங்க தான்... பெரியவ 16 வயசு.. சின்னவளுக்கு 13 வயசு.. நானோ  PMS - ல இருக்கேன். எனக்கு நிறைய தேவைப்படுது... அதுங்களுக்கு வேனும்... முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சைஸ், அப்புறம் குறைய,குறைய இன்னொரு சைஸ் னு யூஸ் பண்றோம்... என்ன செய்றது... எனக்கோ எப்பனே தெரியறதில்ல... அப்பப்ப, தகுந்த மாறி யூஸ் பண்ணுவோம். இந்த GST  வந்ததுல ரொம்ப காசு ஆகுது... ஒண்ணொன்க்கும் 12% வரி அப்டினு ஈஸியா போட்டாங்க... நமக்கு இல்ல இந்த கஷ்டம் தெரியும்... '

' ஆமாமா... இதுல வரி போடறது ஏத்துக்கவே முடியாது... ரொம்ப அநியாயமா இருக்கு...'

' ஆமாங்க ... நாம என்ன லட்சக்கணக்குலயா சம்பாதிக்கிறோம்.. பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும், வாழ்க்கையை ஓட்டறதுக்குமே சரியாய் இருக்கு... இதுல இந்த விலைவாசி ஏற்றம், வரி எல்லாம் நம்மள படாய் படுத்துது... இதுல போற எக்ஸ்ட்ரா காசுல பத்து நாள் காய்கறி செலவு பண்ணிடலாம்...'  என்றார்.

இந்நிலை தான் பெரும்பாலான மக்கள் சந்தித்துக்  கொண்டிருக்கிறார்கள்.  வரவுக்கும், செலவுக்கும் சரியாக போய்க்கொண்டிருக்கும் குடும்பத்திற்கே இந்நிலை தான் என்றால், பற்றாக்குறையாய் இருக்கும் குடும்பங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்... இந்த அரசு எவ்வளவு மக்களை கொடுமைப்படுத்துகிறது என்பதற்கான சான்று தான் இவைகள் எல்லாம்.!

சானிட்டரி நாப்கின்களை வரி விதித்திருக்கிறதே ... இந்த அரசு... இது என்ன பெண்கள் விரும்பி ஏற்றுக்கொண்டவையா... இயற்கையில் உடல் ரீதியாக உள்ள ஒரு சுழற்சி முறை. இதற்கு பயன்படுத்தும் நாப்கின்களுக்கு யாரவது வரி விதிப்பார்களா...  என்ன ஒரு அராஜக ஆட்சி முறை இது..!

12 வயது குழந்தை முதல், மத்தியவயதுடைய அனைத்துப்பெண்களும் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு வரி விதித்து தான் இந்த அரசாங்கம் நடக்க வேண்டுமா.. இங்கே முகநூலில் சில பதிவுகல் பார்த்தேன். உங்கள் கொள்ளுப் பாட்டிகள் எல்லாம் இதை தான் பயன்படுத்தினார்களா... துணியை பயன்படுத்துங்கள் என்ற மாதிரியான சில அதிமேதாவிகள் பதிவு போட்டிருந்தார்கள். !

அவர்களுக்கு ஒரு கேள்வி  ....

' உங்கள் வீட்டில் உள்ள 12, 13, வயதுள்ள உங்கள் மகளிடமும், நாற்பதின் மத்தியிலும், இறுதியிலும் உள்ள உங்கள் மனைவியிடமும் இதை சொல்லி பாருங்கள்... காரித் துப்புவார்கள்.!

ஏன்... நீங்களெல்லாம் உங்கள் கொள்ளுத்தாத்தா மாதிரி, வெறும் காலுடன்  கட்டைவண்டியிலேயா போகிறீர்கள்...!

மாற்றம் என்பது நம் வசதிக்காக தான்... எனக்கு எந்த முன்னேற்றமும் வேண்டாம்  பழைய பஞ்சாங்கமாகவே தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பீர்களென்றால், நீங்கள் வேண்டுமானால் அப்படி இருந்துகொள்ளுங்கள்... மற்றவர்களிடம் இதனை திணிக்காதீர்கள்.!

Thursday, 13 July 2017

ஆணாதிக்கமும், பெண் விடுதலையும்

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது , ' ரயில் பயணங்களில் ' திரைபபடம் பார்த்து  ரொம்பவே அழுதிருக்கிறேன். கதாநாயகியின் கணவன் திருந்தி, அவளுடன் வாழ்ந்திருக்கலாம்.. கதாநாயகன், அவனை விரும்பும் பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணம் சில நாட்களுக்கு வந்து கொண்டே இருந்தது என்பது உண்மை.!

மறுபடியும் நேற்று, கே டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... இப்போது என்னுடையப்பார்வை வேறு மாதிரியாக இருந்தது. தந்தை பெரியாரின் மூலம் எனக்கு கிடைத்த மனப்பக்குவம், பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை, பெண்ணியம் , இவைகள் தந்த தெளிவு , இதனை ஒட்டியப் பார்வை என்பது மிக அழகாக இருக்கிறது.

 மனிதம் சார்ந்த பார்வையாக உள்ளது. முன்பும் இதே மனிதம் இருந்தது என்றாலும், பழமைவாதத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் மனிதம் அது.!
இந்த முறை பார்க்கும்போது ஏற்பட்ட உணர்வு என்பது, தாலிகட்டிக்கொண்டதாலேயே , 

' ஒரு பெண் ஏன் இவ்வளவு துன்பப்பட வேண்டும்..? '
 மணவிலக்கு பெற்றுக்கொண்டு , தன பழைய காதலனுடன் சேர்ந்து வாழலாமே.. அது மட்டுமல்லாமல், கிளைமாக்ஸில்,  தன்னை நலலவள் என்று நிரூபிப்பதற்கு, ஏன் தன காதலனையே சுட வேண்டும்... அவனுடன் சேர்ந்து வாழ்வதினால் என்ன கெட்டுவிட போகிறது...? ' 

என்ற வினாக்கள் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருந்தன

.பெண் என்பவள்  ஒவ்வொரு காலகட்டத்திலும், தான் சார்ந்திருக்கும் ஒவ்வோரிடமும் தன்னை நல்லவள் என்று மெய்ப்பித்துக்கொண்டே இருக்குமாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறாள் என்பதில் தான் ஆணாதிக்கம் கோலோச்சிக்கொண்டிருக்கிறது என்பது தான் ஆணாதிக்கத்திற்கும், பெண் விடுதலைக்கும் இடையேயான பிணைப்பாக இருக்கிறது. 

இந்த கட்டமைப்பை உடைத்து விட்டாலே பெண் விடுதலை மற்றும் பாலியல் சமத்துவம் என்பது சாத்தியமாகி விடும் என்பது நிதர்சனமான உண்மை.!

NEET

நீட் தேர்வு என்றால் என்ன... அதனால் நம் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பு என்ன... ஒரு சமூகத்தின் கல்வியை, அதன் மூலம் நமக்கு கிடைக்கும் அறிவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை, நம் உரிமையை எவ்வாறெல்லாம் இந்த தேர்வு பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை, நண்பர்கள், உறவினரக்ள், பொது இடங்கள் என வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம், (முடிந்தால் வாய்ப்பை நாமே உருவாக்கியாவது ) ஏற்படுத்துவோம் ... நண்பர்களே...!

Tuesday, 11 July 2017

உப்பு சத்தியாக்கிரகம்

" நாம் உப்பு வாங்குவதில் சர்காருக்குக் கிடைக்கும்  வரிப்  பணத்தில் சம்பள ரூபமாக நமது தாஸ், நேரு, பட்டேல், சாப்ரூ, சின்ஹா, அய்யர், அய்யங்கார்,ஆச்சாரி.சர்மா,சாஸ்திரி, சாயுபு, நாயர்,முதலியார்,நாயுடு,ரெட்டியார்,செட்டியார், கவுண்டர், என வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி, தேசியவாதிகளும், காங்கிரஸ் தலைவர்களும், காந்தி சிஷயர்களும் மதம் ஒன்றுக்கு, 2000, 3000, 5000, 6000, 7000 விதம் பங்குபோட்டுக் கொள்கிறார்களே ஒழிய யாராவது  வேண்டாமென்று சொல்லி வாபசு செய்து சம்பளத்தை குறைத்து கொண்டார்களா, அல்லது குறைத்துக்கொள்ள திட்டம் ஏதாவது வைத்திருக்கிறாரர்களா.... ?  

ஆகவே இந்தியர்களின் வரி உயர்விற்கும், அவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதற்கும், இந்திய தேசியவாதிகளும், தேசிய காங்கிரசும், அவைகளை ஆதரித்த மகாத்மாக்களும் ஜவாப்தாரிகளா அல்லது வெள்ளைகார்கள் ஜாவாப்தாரிகளா என்று  இப்போது யோசித்துப்பாருங்கள்.! "

-- தந்தை  பெரியார்.
குடியரசு 
( 16.03. 1930 ) 

இந்த செய்தியை நாம் முன்னே, பின்னே படித்திருக்கிறோமா....நான் இப்போது தான் அறிந்துகொண்டேன். குடியரசு தொகுதியில், அய்யா அவர்களின் பதிவிலிருந்து...!

உப்புசத்தியாகிரகத்தைப் பற்றி, பத்தி பத்தியாக பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். இந்த கொள்ளையை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் , பெரியாரை தான் படிக்க வேண்டும். என்ன ஒரு அராஜக  கொள்ளை இது... அதுவும் ஜாதிவாரியாக பங்கு பிரித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களை வெள்ளையனுக்கு வரிக்கட்ட வேண்டாமென்று தூண்டிவிட்டு , தாங்களே தயாரிக்கிறோம் என்று சொல்லி, இவர்கள் அலலவா கொள்ளையடித்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை, மக்கள் பணத்தை கொள்ளையடித்து, அதை ஜாதிவாரியாக பிரித்துக்கொள்வதில் #பார்ப்பனீயம் கைதேர்ந்தது என்பதை  மெய்ப்பித்துக் கொண்டுதானிருக்கிறது.!

அதனால் தான் பெரியார் வித்தளையின் போது , ' நாடு வெள்ளையரிடமிருந்து , கொள்ளையரிடம் கை மாறியிருக்கிறது.'  என்ற உண்மையை தோலுரித்து காட்டியுள்ளார்கள்  போலும்.!

பிக் பாஸ்

இதுவரை பிக் பாஸ் ஒரு எபிசொட் கூட,  பார்த்ததில்லை. பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு தோன்றவில்லை. ஆதலால் அதனை பற்றி  எழுத ஒன்றும் தெரியாது. பார்த்தவர்கள் சொல்வதை கேட்டும், இங்கு முகநூலில் படித்ததை வைத்தும் இந்த பதிவு எழுத வேண்டும் என்று எழுதுகிறேன். ஒரே ஒரு விசையம் மட்டும் நன்றாக  புரிகிறது ... 

ஒரு சமூகநலனுக்காக ஒன்றுகூடல் என்பது நன்மை பயக்கக் கூடிய செயலாக இருக்க முடியும்.  ஆனால் கேளிக்கைக்காக, விளம்பரத்திற்காக, பணத்திற்காக, ஒன்று சேர்ந்து இருப்பதற்கு வந்திருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கொஞ்சம்கூட  நாகரீகமில்லாத வகையில் விமர்சித்து, அவர்களை காயப்படுத்தி வெளியேற்றிவிட்டு,  கடைசிவரை  இருப்பவரே வெற்றியாளர் என்று அறிவித்தல் என்ன டிசைன் என்றே புரியவில்லை... 

அங்கே மனிதமும் இல்லை, நாகரீகமுமில்லை, கற்றுக்கொள்ள அறிவார்ந்த எந்த விசையமுமில்லை... மக்களை  சிந்திக்க விடாமல் ஒருவித மாயைக்குள்ளேயே  வைத்திருக்கும் கண்கட்டிவித்தை என்பது மட்டுமே தெளிவாகிறது. எல்லாமே சொல்லிக்கொடுத்தபடி தான் நடக்கிறதென்றால், பார்க்கும் மக்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, முட்டாளாக்கப்படுகின்றனர் என்று தானே பொருள். 

இதன் மூலம் பணம் பார்க்கும் பல பணமுதலைகளுக்கு மட்டுமே இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பணத்தை பன்மடங்கு பெருக்க உதவுகிறது.!  

Monday, 10 July 2017

நேசித்தல்

#நேசித்தல் 

நேசித்தல் என்பது எல்லோருக்கும் பிடித்தமானது தான். அனைவருமே இயற்கையை நேசிக்கிறோம். குழந்தையை நேசிக்கிறோம். நமக்கு பிடித்த அனைவரையும் நேசிக்கிறோம். பிடித்த புத்தகங்கள், கருத்துகள், கொள்கைகள் என எல்லாம் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. நேசிக்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சி, மனநிறைவு போன்ற உணர்வுகள் நமக்கு நல்ல அனுபவத்தை தருகிறது.

உதாரணத்திற்கு, முகநூலில் இந்த எமோடிக்கானை அறிமுகப்படுத்திய தோழர் மார்க்கு அவர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இந்த முறையை அறிமுகப்படுத்திய புதிதில், எனக்கு இந்த ஹார்டின் சிம்பலை பயன்படுத்த ஒரு சிறு தயக்கம் இருக்கும். இதை பயன்படுத்தினால், காதல் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்படுமோ என்ற ஒரு வித அச்சவுணர்வு தான் காரணம். இந்த சிம்பலை பயன்படுத்தியப்பிறகு தான், அன்பு மேல் இன்னும் கூடுதலாக அன்பு ஏற்படுகிறது எனலாம்.! :-) 

நமக்கு நன்றாகவே தெரியும். காதல் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டுமே வருவதல்ல... தாய்-மகன், தந்தை-மகள், தோழர்கள், தோழிகள், குழந்தைகள் மீது,  இவ்வளவு  ஏன்... இறைவன் மீதே , காதலாகி கசிந்து, கண்ணீர் மல்கி என்று பாடவில்லையா  ... , நாம் நேசிக்கும் அனைத்தின் மீதும் காதல் வருவது இயற்கை தானே...!

நமக்கு சொல்லப்பட்டிருக்கும் விதம் அப்படி... காதல் என்றால், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலானது.. அதுவும் உடல் சார்ந்த காமம் தொடர்புடையது என்று தான் கற்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பது மிகவும் வேதனையான நம்முடைய அறியாமை தான். மேலை நாடுகளில் அன்பு, நேசம், என்ற மனதளவில் உள்ள ஒரு பிரியம் காதலாக தான் பார்க்கப்படுகிறது. ' லவ் யூ ..' என்பதை மிக அழகாக இயற்கையிடமும், மனிதர்களிடமும் , தன்னுடைய மகிழ்ச்சி கலந்த உணர்வை பகிர்ந்துகொள்ள அவர்கள் தவறுவதில்லை. நேசித்தலை விட அருமையான ஒரு விசையம் உலகத்தில் இருக்கவே முடியாது. நலலவன எல்லாவற்றையும் நேசிக்க கற்றுக்கொள்வோம். அதனை சிறிதும் தயங்காமல் வெளிப்படுத்தும் உணர்வை பதிவு செய்வோம்.!    

Tuesday, 4 July 2017

ஜாதி தரும் வேதனையும், மனிதமனங்களின் ஏக்கமும்.!

சில தினங்களுக்கு 29c  பேருந்து புரசைவாக்கம் பகுதி மில்லர்ஸ் சாலையில் வேகமாக போய்க்கொண்டிருந்தபோது, பேருந்து ஒட்டியே ஒரு இருசக்கரவாகனம் வந்துகொண்டிருந்தது. சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு,  தலைக்கவசம் அணித்திருந்ததால், சரியாக கணிக்க முடியவில்லை , (முகத்தை மூடவில்லை...) அந்த முகம் எங்கோ பார்த்த முகமாகவே மனதிற்கு பட்டது  பார்த்துக்கொண்டே இருந்தபோது, பேருந்தை தாண்டி அந்த வாகனம் சென்று விட்டது... அந்த சாலை முடிந்து, புரசைவாக்கம் நெடுஞசாலை சந்திப்பில் சிக்னலில் பேருந்து நின்றபோது மறுபடியும் அதே நபர் ... இம்முறை நன்றாகவே பார்க்க முடிந்தது... நினைவிற்கு வரும் சமயம், அவரும் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். இப்போது அவருடைய பார்வையில்,  எனக்கு முன்பு இருந்த அதே சந்தேகம் , அவருடைய முகத்தில் தெரிந்தது... அப்படி இருக்கையில்,  சிக்னல் விழுந்து, பேருந்து புறப்பட்டு விட்டது. 

எனக்கு அவரை அடையாளம் தெரிந்தும் பேசமுடியவில்லையே என்ற ஆதங்கம், அவரை எங்கு பார்த்தோம், என்ன பேசினோம் என்று நினைத்துக்கொண்டே பிரிக்களின் சாலையை பார்த்தபடி  இருந்தேன் ... என்ன வியப்பு ... அந்த தோழர் வண்டியின் வேகத்தை குறைத்து நான் செல்லும் பேருந்து கூடவே  என்  சன்னலோரம் வந்து சிரித்துவிட்டு  பெருவிரலை நிமிர்த்தி , ' பொண்ணு பிறந்திருக்கா ...' என்றார். எனக்கோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... அவருடைய அந்த சிரித்தமுகம், அவரின் மகிழ்ச்சியின்  உச்சத்தை பிரதிபலித்தது. நானும் , ' வாழ்த்துகள் ' என்று பெருவிரலை நிமிர்த்தி கூறினேன். அவரும் சிரித்துக்கொண்டே வேகத்தை கூட்டி, விரைந்து பார்வையிலிருந்து மறைந்தார்.!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்,  என் அப்பாவிற்கு மூச்சுத்திணறல்  வந்து, மிகவும் முடியாமல் போய்விட்டது. அச்சமயம் அருகாமையில் உள்ள மருத்துவமனை என்பதால், பெரம்பூரில் உள்ள  பிரபல கருத்தரிப்பு மருத்துவமனையில் சேர்ந்திருந்தார்கள, ICU   - யில் இரண்டு நாட்கள், பின்பு அறையில் இரண்டு நாட்கள் என்று மொத்தம் நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் மூன்றாவது நாள்  காலை , ட்ரிப்ஸ் மாற்ற வேண்டும் என்பதற்காக சிஸ்டரிடம் சொல்ல போனபோது , அங்கே  இளைஞர் ( 30 வயதிற்குள் தான் இருக்கும்...) ஒருவர் கலங்கிய கண்களுடன் நின்றுக்கொண்டிருந்தார். மறுபடியும் வெளியில் வந்து தண்ணீர் பிடிக்கும் போதும் , சற்று தள்ளி அதே வாடிய முகத்துடன் ஏதோ சிந்தனையில் வெறித்துப்பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். பின்பு மதியம்  நான் மருந்து வாங்குவதற்கு தரைத்தளம் போக லிப்ட்டில் ஏறியபோது அவசரமாக உள்ளே வந்தார்.. இம்முறையும் அதே வாடிய முகம், கலங்கிய கண்கள், கூடுதலாக ஒருவித பதற்றம்... சில வினாடிகளுக்கு மேல்  இம்முறை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை... 

' யாருக்கு உடம்பு சரியில்லை ... ' 
' என்னுடைய ஒய்ப் - க்கு தான்ங்க ...' 
' ஓ ... என்னாச்சு .. தெரிஞ்சுக்கலாமா ...' 

அதற்குள் தரைத்தளம் வந்துவிட்டது... அவரும் மாத்திரை வாங்க தான் வருகிறார் என்பது அப்போது தான்  தெரிந்துக்கொண்டேன்.

மருந்துகள் வாங்கிக்கொண்டு இருவரும் மறுபடியும் லிப்ட்டில் வரும் வரை அனைத்தையும் சொல்லி முடித்தார். '

' அவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியைச்  சேர்ந்தவர்கள். இருவரின் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.. வீட்டைவிட்டு வெளியே வந்து நண்பர்கள்  உதவியுடன் பதிவு திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணம் ஆகி ஒருவருடம் ஆனபோதிலும் இரு வீட்டிலும் தொடர்பில்லை... மனைவி கருத்தரித்த இரண்டு மாதத்தில், திடீரென்று  வலி வந்து இருக்கிறது... உதிரப்போக்கும் வந்தவுடன் பயந்து மருத்துவரை அணுகி இருக்கிறார்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், கரு கர்ப்பப்பையில் இல்லாமல் கரு குழாயில் வளர்கிறது.. வளரவிட்டால், இது மிகவும் ஆபத்தில் முடிந்துவிடும்,  இதற்கான சிகிச்சை இந்த பிரபல மருத்துவமனையில் தான் செய்கிறார்கள் என்று அந்த மருத்துவர் இங்கு கைகாட்டியுள்ளார்.
முன்பு இதற்கு சிகிச்சை கிடையாதாம்... கருக்கலைப்பு தான் ஒரே வழியாம்.. இப்போது அப்படியில்லை, அந்த கருவை அப்படியே பத்திரமாக எடுத்து கர்ப்பப்பையில் வைத்துவிடலாம். ஆனால், மருத்துவர்  சொல்லும் ஆலோசனைகளை .தவறாமல் பின்பற்ற வேண்டும். ( மருத்துவத்துறையில் இருக்கும் இந்த வளர்ச்சியை நினைத்தால் பிரமிப்பாக தான் இருக்கிறது... மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்... ! ) அதற்கான சிகிச்சை தான் இப்போது நடந்துக்கொண்டிருக்கிறது. காலையில் தான் அட்மிட் ஆனோம் . நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன் .. வந்து விடுவார்கள்." என்றார்.

' உங்கள் இருவரின் பெற்றோரிடம் சொல்லி இருக்கலாமே '  இது நான்..

' ம்ம்ம் ... சொன்னேன். அவளுடைய அப்பா, நாங்க சொன்னதை கேக்காமல் போனா .. இல்ல, அனுபவிக்கட்டும்.. என்று சொல்லி லைனை கட் பண்ணிட்டார்.... என்னுடைய அம்மாகிட்ட சொன்னேன். அப்பாகிட்ட கேட்டுட்டு கட்டாயம் வரேன்னு சொல்லி இருக்காங்க...'  என்று சொல்லும் போது கண்கள் நன்கு கலங்கி விட்டன.

அதற்கு மேல் எதுவும் கேட்கத்  தோன்றவில்லை எனக்கு... 

' எல்லாம் சரியாகி விடும்.. நல்ல டாக்டர் இவர்கள் என்று தான் சொல்லுகிறார்கள்... கவலை படாதீர்கள் ... தைரியமா இருங்க.. உங்க ஒய்ப்க்கும் தைரியம் சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு  வந்து விட்டேன்..

அன்று இரவே எங்கள் தந்தை இருக்கும் அறையின் எதிர் அறைக்கு  பக்கத்து அறையிலிருந்து அவர் வெளியே வருவதைக் கண்டு ,
' எப்படி இருக்காங்க... ICU -விலிருந்து வந்து விட்டார்களா..' என்றேன்.
' ஆமாம்.. ட்ரீட்மெண்ட் சக்ஸஸ்... எடுத்து safe ஆ fix பண்ணிட்டாங்க.. ஆனால் இங்கு ஐந்து நாட்கள் தங்க வேண்டுமாம். பிறகும் கூட பெட் ரெஸ்ட்- ல தான் இருக்கணுமாம்...' என்றார் சற்று சோகம் கலந்த புன்னகையுடன்.
' உங்க அம்மா வந்துட்டாங்களா ..'
' அப்பாகிட்ட பேசிட்டாங்க... நாளைக்கு வருவாங்க ..' என்றார்.

மறுநாள், என் தந்தை டிஸ்சார்ஜ் ஆகும்போது அந்த அறைக்கு சென்று பார்த்துவிட்டு தான் வந்தேன். அந்த நண்பரின் அம்மா வந்திருந்தார்கள். அவரின் முகத்தில் நேற்று இருந்த பதற்றம் இப்போது குறைந்திருந்தது ...மனைவி வயதில் சிறிய பெண்ணாக தெரிந்தார். சற்று பயமும், அதே சமயம் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்கிறார் என்பது தெரிந்தது.. அன்பாக , நம்பிக்கையான சில வார்த்தைகள் பேசிவிட்டு,  வந்தேன். இதுபோன்ற மனநிலையில், அந்த பெண்ணிற்கு அவளுடைய தாயின் நினைவு கட்டாயம் வரும். அவரக்ளின் ஆறுதல் நிச்சயம் தேவை... இந்த பாழாய்போன ஜாதி மனித மனங்களை எப்படியெல்லாம் வாட்டி வதைக்கிறது என்று எண்ணும்போது எரிச்சலும், வேதனையும் தான் மிஞ்சியது.... :-(

அதன்பிறகு பண்பலையில் , அந்த மருத்துவமனை விளம்பரம் வரும்போதெல்லாம் அந்த தம்பதியினரின் முகம் கண்முன்னே வந்து போகும். ' சே ... அலைபேசி எண் வாங்காமல் வந்து விட்டோமே...  ' என்று தோன்றும்.

அந்த இளைஞரை தான் இப்போது பேருந்தில் போகும்போது பார்த்தேன்.. என்ன ஒரு மகிழ்ச்சி... மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது... அந்த தோழரின் அம்மா வந்தது போல் , அவருடைய மனைவியின் அம்மாவும் , குழந்தையைப்  பார்க்கவாவது வந்திருப்பார்கள் என்று எண்ணி எனக்குள்ளே நிறைவான பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.! :-) :-)