Tuesday, 8 August 2017

பெண் விடுதலை

#பெண்விடுதலை 

" என் பொண்ணு ரொம்ப நல்லவ... அப்படி எல்லாம் பண்ண மாட்டா.." இந்த சொற்றொடர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் போதே எரிச்சலாக இருக்கும். கோபம் வரும். இதெல்லாம் இந்த தலைமுறையோடு ஒழிந்துவிடும், அடுத்த தலைமுறையில் காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்தேறும் என்று நினைப்பதுண்டு. ஆனால், இன்றும் அதே நிலை தான் தொடர்கிறது  என்பது கூட உண்மை இல்லை... காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணை, ' ஓடுகாலி' என்று பட்டம் கட்டி,  குடும்பத்தை விட்டு  தள்ளி வைப்பார்கள்.எந்த நிகழ்விற்கும் சொல்ல மாட்டார்கள்... சேர்க்க மாட்டார்கள். அவ்வளவு தான்.!

ஆனால் இப்போது நிலைமை இன்னும் மோசமாக போய், ஆணவக்கொலைகள் நடக்கின்றன. சமீபத்தில் நாம் எல்லோரும் படித்து அதிர்ந்த  ஒரு செய்தி, பெண் காதல் திருமணம் செய்துகொண்டதினால், ஒரு குடும்பமே தற்கொலை செய்திருக்கிறது  என்றால், எந்த அளவிற்கு நம் சமூகம் ஜாதியாலும், ஆணாதிக்கத்தாலும், பெண்ணடிமைத்தனத்தினாலும்  புரையோடி போயிருக்கிறது என்பதற்கான சான்று. இதுவே அக்குடும்பத்தின் ஆண்பிள்ளை காதல் திருமணம் செய்திருந்தால், அக்குடும்பம் இந்த முடிவை எடுத்திருக்குமா ... சந்தேகம் தானே. பெண் குழந்தைகளை ஒரு உடைமையாக பார்க்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள் ... மக்களே, ஆண்களை போல் அவரக்ளுக்கும் விருப்பங்கள் உண்டு, இலக்குகள் உண்டு, காதல் உண்டு,  வலிகள் உண்டு, உணர்வுகள் உண்டு. 
ஆணாதிக்கச் சிந்தனையுள்ள  சமூகமே...  உனக்கு இருக்கும் அனைத்தும் அவளுக்கும் உண்டு என்றிருக்கும் போது , உனக்கிருக்கும் விடுதலை உணர்வு மட்டும் ஏன் அவளுக்கும்  இருக்க கூடாது ... சற்று சிந்தியுங்கள் ... ! 

அது ஆண்  பிள்ளையோ, அல்லது பெண்  பிள்ளையோ யாராக இருந்தாலும், நம் பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, இதில் திறமை இருக்கிறது என்பதை அறிந்து , சுயமரியாதையுடன், அவர்கள் வாழ்க்கையை அவர்களின்  சுயத்தில் வாழ , அவர்களை வளர்த்து விட வேண்டும் என்பது எப்படிப்பட்ட கடமையோ, அது போல் தான் அவர்கள் விரும்பிய வாழ்க்கைத்துணையை, இணையர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கானது என்பதையும் உணர்ந்து, அதற்கான புரிதலை அவர்களுக்கு உண்டாக்குவதும் நம் கடமைகளில் ஓன்று என்பதை  இனிமேலாவது, பெற்றோர்கள் உணர்ந்து செயல் பட வேண்டும்.!

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ...மக்கா ...

" பெண் சுதந்திரம் உள்ள நாட்டில் தான் பொருளாதாரமும்,  தொழில் வளர்ச்சியும், அன்பும், அறிவும் , பண்பும் வளர்கிறது.! "

" பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சி தான்  , ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை, முடிவு செய்கிறது.! "

Thursday, 3 August 2017

மாதவிடாய்

இன்று முற்பகல், தையற்கடையில், தைக்கப்பட்ட துணிகள் வாங்குவதற்கு காத்திருந்த போது, எனக்கு பின்னால் ஒரு பெண்மணி அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
50 வயதிற்கு மேல் இருக்கும்.
 
"  எங்கே ... எல்லா வேலையும் இன்னைக்கு நான் செய்யும்படி ஆயிடுச்சி... மருமக வீட்டுக்கு தூரம், ஆடிப்பெருக்கு அதுவுமா... நல்ல புத்தி இருந்தா தானே .. .அதான் இப்படி எல்லாம் ஆகுது .. '

நான் திரும்பி அவரின் முகத்தைப்பார்த்தேன். உடனே, 

' சரி ...ஆனந்தி, நா உங்கிட்ட அப்புறம் பேசறேன், வே;வெளியே வந்திருக்கேன் .. ' என்று அலைப்பேசியை துண்டித்தார்.

' இந்த காலத்திலும் இப்படி எல்லாம் யோசிக்கெறீங்களே... உலகம் எவ்வளவோ முன்னேறிக்கிட்டு இருக்கு... நாம தான் இன்னமும் பழசை பேசிகிட்டு இருக்கோம்..!' என்றேன். 

' அதெல்லாம் இல்லைங்க ... எத்தனை காலம் ஆனா  என்ன... பொம்பள பொம்பள தானே ... நமக்குன்னு உள்ளது மாறிபோச்சுதா... இப்படி தான் புதுசா பேசுறோம்னு சொல்லி  எதாவது குழப்பத்தை உண்டாக்குறாங்க..' என்று சொல்லிக்கொண்டே என்னைக்கடந்து கடைக்காரரிடம் சென்றுவிட்டார்.

நான் சில நொடிகள் அவரைப்பார்த்தவாறே நின்றுக்கொண்டிருந்ததை, பார்த்த தையற் கடைக்கார நண்பர், ' உங்க துணி எல்லாம் கொடுத்துட்டேன்..இல்ல அக்கா ..' என்றார். 
அதற்கு மேல் அங்கு நின்றால் அவரின் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற கவலை அவருக்கு. 

' ம்ம்ம் ... கொடுத்திடீங்க.. தேங்க்ஸ்.. சரி வரேங்க...'


வரும் வழியில் இந்த சிந்தனை தான் மூளையில் ஓடிக்கொண்டிருந்தது.. நான் சிறிய வயதில் இருக்கும்போது எங்கள் ஆத்தா (பாட்டி) தான் இப்படி சொல்வார்கள். தீபாவளி சமயம் என்ற நினைவிருக்கிறது... அன்று காலை  இதே நிலை தான்...  :-)

 ' நல்ல நாள் அதுவுமா இப்ப வந்திருக்கு ... பாரு,  வீட்டுக்கு தான்  தரித்திரம் '  என்றார்கள்.

இதற்கும், வீட்டின் தரித்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று அப்போது கேள்வி  எழுந்தது . 
அப்படியே இருந்தாலும் இதற்கு நான் எப்படி காரணமாவேன்..?!
பலகேள்விகள் மனத்தில் எழும். பதில் தான் கிடைக்காது.. ஏனென்றால், நான் அப்போது #பெரியாரை அறிந்திருக்கவில்லையே ...! 

இப்போதும் பெண்கள் இப்படி இருக்கிறார்களே என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது . இந்த அம்மா, இன்னும் ஒருபடி மேலே போய், நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் வரை  முடிச்சு போடுகிறார்... ஏனென்றால் சம்பந்தப்பட்டவர் மருமகள் ஆச்சே...!

இது ஒன்றும் தவறான விசையம் கிடையாது. இயற்கையில் நம்முடைய உடலியக்க செயல் தான். மற்ற கழிவுகள் போல் தான்... கருத்தரிக்கப்படாத முட்டை உடைந்து , மாதம் ஒருமுறை வெளிவரும் சுழற்சி. ஒரு உயிரை உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு அருமையான  உடலியக்க செயல்பாடு என்றெல்லாம் சொல்லி புரிய வைக்கலாமென்றால், கடைக்காரருக்கோ பிசினஸ் போயிடுமோ என்ற பயம்... என்ன செய்வது ... அந்த பெண்மணியை போன்று பலர் இருக்கிறார்கள்... #மாதவிடாய் என்ற ஒரு விசையம் ஏன் இப்படிப்பார்க்கப் படுகிறது என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.! :-(

தந்தை பெரியாரை படிக்கவில்லை என்றால், நானும் இப்படி தான் நினைத்திருப்பேனோ .... அய்யோ... நினைச்சாலே தலைசுத்துதே ... கொஞ்சம் சத்தமாகவே  சொல்லிக்கொண்டேன்.!

வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு.!  :-) :-)








பின்னோக்கி செல்லும் இந்தியா

ஹோட்டல்களில் சாப்பிட முடியாது... ஜிஎஸ்டி கழுத்தை நெறிக்கும்... வீட்டில் சாப்பிட வேண்டுமென்றால், காஸ் சிலிண்டர் இருமடங்குக்கு மேல் உயர்வு... அடுத்தாண்டு முதல், மானியம் கிடையாது. இதில் மாதம் ஒருமுறை 4 ரூபாய் என வருடத்திற்கு 48 ரூபாய் ஏறும்.. அதுவும் இப்போதைய  தகவல்.   போக போக இன்னமும் ஏறும் நிலை வருமே தவிர குறையப்போவதில்லை...டிஜிட்டலில் சோறாக்கி சாப்பிட முடியுமா.. முடிந்தால், பாஜக அரசு அதையும் அமல்படுத்திவிடும்.!

நீட் மூலம் கல்வியில் கைவைத்தாகிவிட்டது... உண்ணும் உணவிலும் இந்த ஆதிக்கம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது... நாடு 200 , 300 ஆண்டுகளுக்கு பின்னே பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது... கட்டைவண்டியும், விறகு அடுப்பும், ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும்  நிலையையும் கொண்டுவந்து , போராடும் குணமே அற்றுப்போய் , அதனைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் சோற்றுக்காக அடிமைப்படுத்தும் பழைய #மனுதர்மஆட்சியை நிறுவ துடித்துக்கொண்டிருக்கும்  #பார்ப்பனீயத்தை உணர்ந்து, செயல்படவேண்டிய கட்டாயத்தில் நாம்  இருக்கிறோம்.! 

அழியப்போகும் ஜனநாயகம்

நாம் ஒரு கருத்து சொல்லும்போது, அதை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை என்று மற்றவர்கள் சொன்னால் , அதனை புரிய வைக்க முயல வேண்டும். ஆனால், அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டு, தவறான பாதையில் செல்ல நாம் காரணமாக இருக்கக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன்.
சமீபத்தில், ஒரு பெண்ணிடம் தற்போதைய அரசியலைப்பற்றி பேசும் போது,
' யாருமே சரியில்ல... எல்லா கட்சியும், கொள்ளை அடிக்குது... அதான் நான் ஓட்டு போடறதில ..' என்றார்.
' இருப்பவர்களிலே யார் சிறந்தவர், எந்த கட்சி சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஓட்டு போடுங்கள்..' என்றேன்.
' அப்படி போடவேண்டிய அவசியம் என்ன வந்தது... யார் வந்தால் எனக்கென்ன ...'
' அப்படி உங்களைப்போன்றோர் ஓட்டு போடாததினால் தான் கள்ள ஓட்டுகள் மூலம் வேண்டாத கட்சிகள் வெற்றிப்பெறுகின்றன... தவறான ஆட்சிக்கு வழி வகுத்துவிடுகிறது ... '
' நான் ஒருத்தி போடவில்லை என்றால், என்ன ஆகிவிடப்போகிறது...?'
' நீங்கள் நினைப்பது போல் எல்லோருமே நினைத்தால் ஓட்டு முழுதும் ஒரு குறிப்பிட்ட அதிகாரமிக்க கட்சிக்கு போய் சேர்ந்துவிடாதா... யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பது முக்கியம் அல்லவா..' என்றேன்.
அதற்கு மேல் , அவர் எதுவும் பேசவில்லை. சிறு புன்னகையை பதிலாய் தந்தார்.
இதுவரை பலரிடமும் இப்படி பேசியிருக்கிறேன். 80 லிருந்து 90 விழுக்காடு வரை வாக்குகள் நேர்மையான முறையில் பதிவுசெய்யபபடவேண்டும். மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்சி அரசாள வேண்டும் என்பது தான் ஒரு ஜனநாயக நாட்டிற்கான நியதி.
ஆனால்,
" இனி ஜனநாயகம் ஒழிக்கபப்ட்டு விடும் ஆபத்து இருக்கிறது... ஒற்றை ஆட்சி முறை அமலுக்கு வந்துவிடப்போகிறது. யார் வெற்றிபெற வேண்டும் என்பதை கூட அரசே முடிவு செய்யும் நிலை ஏற்படப்போகிறது...! "
இந்த ஒற்றை ஆட்சிமுறை , ஒருவகையில் நமக்கு நன்மையை தரப்போகிறது எனலாம். காரணம், மக்கள் எல்லாவற்றிற்கும் அடக்குமுறைக்கு ஆளாவார்கள். உள்நாட்டுப்போர்கள் அதிகரிக்கும். தீவிரவாதம் தழைத்தோங்கும்... மத, ஜாதி கலவரங்கள் தலைவிரித்தாடும்... ஆங்காங்கே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி, மாபெரும் புரட்சி வெடிக்கும். மாநிலங்கள் தனித்து விடுதலை கோரும் நிலை உண்டாகும். அப்போதாவது ஜாதிவாரியாக பிரிந்து நிற்காமல், ஒன்றிணைந்து நம் மண்ணின் விடுதலைக்கு போராடி, தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைப்போம்.!