Saturday, 18 November 2017

பெண்கள் ஆண்களின் உடைமைகள் அல்ல .

இதைப்பற்றி எவ்வளவோ எழுத்தாகி விட்டது. இது போல் மறுபடியும் எழுத கூடாது என்று தான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறோம். ஆனால், எழுதும்படி சம்பவங்கள் நடக்கின்றன என்பது தான் முழுவது வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன் சென்னை ஆதம்பாக்கத்தில், ' தன்னை காதலிக்க மறுத்தப்  பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறான் ஒரு இளைஞன். நம் இளைய சமூகம் எப்படி கெட்டுப்போய்  இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று. இதில் எங்கு தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்து , அதற்கான தீர்வை கொண்டுவர வேண்டாமா... நம் பிள்ளைகள் நினைத்ததை பெற்றே ஆக வேண்டும் என்ற வெறிபிடித்தவர்களாக வளர்ப்பதில் நாமும் தானே ஒரு காரணமாக இருக்கிறோம். 

இதில் ஒரு ஆணாதிக்கம் மறைந்திருக்கிறது என்பது வருத்தத்துடன் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை. காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு... எரித்து கொலை, காதலித்தால் ஆணவ கொலை என அனைத்து வகையிலுமே பெண்களுக்கெதிராகவே இந்த வன்முறை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பெண்களை உடைமைகளாக பார்க்கும் கண்ணோட்டம் முதலில் மாற்றப்பட வேண்டும். தன்னைப்  போல் பெண்களும் இரத்தமும், சதையும் உள்ள சக மனுசி என்ற தோழமையை நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.!

" வாழ்க்கை எவ்வளவு அழகானது , அதனை எப்படிரசனையோடு  கையாள  வேண்டும், வெற்றி, தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், 

நாம் நினைத்ததெல்லாம் நடப்பதற்கு சாத்தியமா, அல்லது அதனை போராடி பெற முடியுமா , 

தன மேல் திணிப்பதை நாம் யாரும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை எனும்போது , நாம் மட்டும் எப்படி  மற்றவர் மீது  தன கருத்தை திணிக்க முடியும் , அன்பு மட்டுமே மனித வாழ்வின் பிரதானம் ." 
 
என்ற வாழ்வியலை கற்று தருவதில் மிக முக்கிய பங்கு பெற்றோர்களுடையது. அதன் பிறகு ஆசிரியர்கள், உறவினர்கள்,நண்பர்கள் என சமூகம் முழுமைக்கும் இந்த கடமை இருக்கிறதல்லவா... இதனை எப்படி மறந்தோம்.?

பிள்ளைகளின் மீது அன்பு செலுத்துகிறோம் , செல்லம் கொஞ்சுகிறோம் என்று அவர்களை நல்வழி படுத்த தவறி இருக்கிறோம் என்பதை  தான் இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.  

மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கவிடாமல் தடுப்பதற்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். எது செய்தலும் வெளியே வந்துவிடலாம் என்ற அலட்சியப்போக்கும் ஒரு காரணமாக இருக்கின்றது. 

காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. இதன் மூலம் ஜாதி ஒழிக்கப்படும் . எவ்வித கட்டாயமும் இல்லாமல், தன சுயவிருப்பப்படி, ஆண் , பெண்  இருவரும் சேர்ந்து வாழ வழி கிடைக்கிறது. காதல் என்பது இருவரின் விருப்பம். இதிலொருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும்கூட அதனை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற தெளிவை நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். 

இனிமேலும்  விநோதினிகள், நவீனாக்கள், இந்துஜாக்கள் பலியாகாமல் தடுப்பதற்கான வழிகளை முன்னேடுப்போம்.!  

Friday, 10 November 2017

பெண்ணின் உணர்வுகள்

தற்போது இணையதளத்தில், சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கும் "லட்சுமி" என்ற  குறும்படம் பற்றி பலபேர் பலவாறு கருத்து சொல்கின்றனர். நம்மைப்பொறுத்தவரை , பெண் விடுதலை என்பது அவளின் உணர்வுகள் எல்லா வகையிலும் மதிக்கப்பட வேண்டும் என்பதே. எதோ குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்லுதல் அல்ல. குழந்தையிலிருந்து, மூதாட்டி ஆகும்வரை ஏன் , இறக்கும் வரை கூட அவளின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பது தான் கண்கூடு. இந்நிலை மாறவேண்டுமென்றால், ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமென்றால், இம்மாதிரி பாலியல் சார்ந்த  உணர்வுகள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும் பேச வேண்டும். பேசப்பட வைக்க வேண்டும். அனைத்து உணர்வுகளும்  அதிகம் பேசப்பட வேண்டும் என்பதாகும். 

பெண் விடுதலை என்பது , தன்  வாழ்நாள் முழுதும் , சுய விருப்பப்படி முடிவெடுத்தல், வாழ்தல் என்பது தான். அது ஆடை முதல்  கல்வி, பணி, பொருளாதாரம், வாழ்க்கை இணை தேடல், ஓன்று சேர்ந்து வாழ்தல், பிரிதல், தனித்து வாழ்தல், மறுமணம், குழந்தை பெற்றுக்கொள்ளுதல், பாலியல் சுதந்திரம் வரை  அனைத்தும் சேர்ந்தது தான்... இதில் எந்த வரையறையும் வகுக்க முடியாது. அப்போது  தான்  அது முழுமையான சுதந்திரமாக இருக்க முடியும்.!

லட்சுமிகளைக்காட்டி, இது தான் புரட்சி என்றும், இது  அல்ல புரட்சி என்றும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. கொஞ்சம் மேலை நாடுகளையும் பாருங்கள்...  கலாச்சார காவலர்களே... இன்னமும் மதத்தைக்காட்டி , கலாச்சாரம், என்று பெண்களை அடிமைப்படுத்தும் முறை இங்கு இனி செல்லாது. இதோ... இந்த தலைமுறை பெண்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.  இது தான் முதல் படி, இன்னும் சில தலைமுறைகளிலேயேஇந்தபெண்ணடிமைத்தனம் முழுமையாக  உடைத்தெறிக்கப்பட்டுவிடும்.!

" ஓர் அரசகுமாரி தோட்டத்தில் ஒருவனைப் பார்த்து காதல் கொள்கிறாள். அதன் பின் அவன் சேவகன் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா? 
 எப்படிப்பட்ட காதலும் ஒரு சுயலட்சியத்தை, தனதிஷ்டத்தை - திருப்தியை கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை. ஆசையை விட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறொன்றும் இல்லை." 

#தந்தைபெரியார்.
#பெண்ஏன்அடிமையானாள்

1942-ல் எழுதிய புத்தகம். இதனை நம் பள்ளிப்பாடத்திட்டத்தில் வைக்கப்பட  வேண்டிய ஒரு புத்தகம் . 
ஆண்பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக கற்பிக்கப்பட  வேண்டிய புத்தகம். 
காதல் மட்டுமல்ல... பெண் விடுதலைக்கான அனைத்தையும் சொல்லி இருக்கிறார். பெண் மீதானஅடக்குமுறைகளையும், பெண் அடிமையானதற்கான அனைத்து  காரணங்களையும், அதிலிருந்து விடுபெற்று வாழ்வதற்கான வழிமுறைகளையும்  மிக அழகாக 72 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார். 

ஆதலால் , பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை அனைவரும் படியுங்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் படிக்கச்ச்சொல்லி அறிவுறுத்துங்கள். அதனைப்பற்றி விவாதியுங்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள். நல்ல தெளிவான புரிதலை ஏற்படுத்துங்கள் ...நண்பர்களே.!

 " பெண் விடுதலை என்பது அவளின் முழு உணர்வை பொறுத்தது. "
பெண்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பது தான் மிக முக்கியம்.!

Tuesday, 7 November 2017

நவம்பர் 8 , பொருளாதார சீர்குலைவுநாள்

மறுநாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழல். எங்கள் வீட்டிலிருந்து நான் மட்டும் சித்தப்பா குடும்பத்துடன் செல்வதாக ஏற்பாடு. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடியில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. நிச்சயமா போக வேண்டும் .. இக்காலக்கட்டத்தில்  இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் தான் உறவுகளை சந்திக்க  வைக்கிறது. ஆனால் பாருங்கள்... முதல்நாள் இரவு, 8 மணிக்கு தான் தெரியும். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி. தூக்கிவாரிப் போட்டது... 

' என்னது... செல்லதா , சே..சே.. புரளியாக இருக்கும். நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பே கிடையாது ' என்றேன்.
தொலைக்காட்சி செய்தி உண்மை தான் என்று உறுதி செய்தது.
சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சரி... வீட்டில் எவ்வளவு 100, 50, 20, 10 ரூபாய்கள் இருக்கின்றன என்று எண்ண  ஆரம்பித்தோம். மிகக்குறைந்த அளவே இருந்தது. எப்போது நிலைமை சரியாகும் என்று தெரியாத காரணத்தால், வீட்டுச்செலவிற்கு போக, என் கையில் 300 ரூபாய் கொடுத்தார்கள்.!

' அய்யய்யோ.. இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது... எப்படியாவது, எங்காவது மாற்றி கொடுங்கள்..' 
 என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன்... 

இணையரும், மகனும் 9 மணிக்கு வெளியே சென்றார்கள். வங்கிகள், ஏடிஎம்கள், கடைகள் என எங்குபார்த்தாலும் அலைந்தது தான் மிச்சம்... கிடைக்கவில்லை... அவரவர் சேர்த்து வைத்த காசை எடுப்பதற்காக, மாற்றுவதற்காக மக்கள் அல்லாடுகிறார்கள்.. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ஒரு 100 ரூபாய்க்குகூட வழியில்லாமல்,  சாலைகளில் அலைந்துக்கொண்டிருக்கின்றனர் மக்கள். 

மாற்றப்போனவர்கள் 11 மணிக்கு வந்து சொன்னதும் எனக்கு அழுகையே வந்துவிடும் அளவிற்கு மனஇறுக்கம். எல்லோரையும் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசையாக இருந்தோம் என்று நினைக்கும்போது கோவமும் வந்தது. 
(முடிந்தமட்டும் திட்டித்தீர்த்தாகி விட்டது ..மோடியை.!)

கடைசியில் ,பக்கத்திலுள்ள மளிகைக்கடை அண்ணாச்சி மூலம் 500 ரூபாய் கிடைத்தது. நிலைமையை சொன்னவுடன். சில்லறை கொடுத்தார். மூன்று 100 ரூபாய், இரண்டு 50 ரூபாய், எட்டு 10 ரூபாய், ஒரு இருப்பது ரூபாய் என 500 ரூபாய்க்கான  தாள்கள். மகன்( பர்ஸை காலி  செய்து) 300  ரூபாய் கொடுத்தான். மொத்தம் 1100 ரூபாய் உடன் மன்னார்குடி சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு, 2016 நவம்பர் மாதத்தில், 9, 10 தேதிகள்.!

இந்த இந்திய தேசத்திலுள்ள அனைவருக்கும், இது மாதிரி அல்லது இதைவிட மோசமான அனுபவத்தை கொடுத்த,  மோடி பாஜக அரசின் பணமதிப்பிழப்பு திட்டம் நிச்சயம் கறுப்புத்தினமாக அனுசரிக்கப்பட  வேண்டிய ஓன்று தான்.!

திட்டமும் தோல்வி... கருப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு நடைமுறைப்படுத்திய ஒரு திட்டம் தோல்வியில் மட்டுமல்ல... ஊழலின் உற்றுக்கண்ணாகவே இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்புண்டோ.!


#BlackdayNov82016



உடல்நலன் முக்கியம்

கடும் காய்ச்சல், உடல்நலமின்மை காரணமாக கடந்த இரு மாதங்களாக எழுத இயலாமல் போனமைக்கு வருந்துகிறேன் ... நண்பர்களே... கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் எதோ ஒரு வகையில் இந்த காலகட்டம் உடல்நிலையை வருத்திக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. உடல்நலனில் கவனமாக இருங்கள் தோழர்களே.  உடல்நிலையில், சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் கூட உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.!