Tuesday, 27 March 2018

மத்திய பாஜக அரசின் தமிழர் விரோதப்போக்கு.

மேலாண்மை வாரியம் என்பதுவும், மேற்பார்வை குழு என்பதுவும் ஒன்றாகி விடமுடியுமா...?

மோடி அரசாங்கம் , தமிழகத்திற்கு செய்வதாக சொல்லும்  அனைத்தும் கண்துடைப்பு நாடகமே அன்றி வேறு எதுவுமில்லை.  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், மத்திய பாஜக மோடி அரசும், கர்நாடக அரசும் செவி சாய்க்கவில்லை. இந்த மேற்பார்வை குழு  பார்வையிட்டு, சொல்வதை கேட்கவா போகின்றன.!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், தமிழகத்தில் விவசாயம் என்பதே தொலைந்து போய்விடும்.!

தமிழர்கள் எதற்கெல்லாம் போராடுவது  ... தொடர்ந்து மறுக்கப்படும் காவேரி நீருக்காக, மீத்தேன்  எடுப்பதை எதிர்த்து, கெயில் குழாய் பதிப்பதை எதிர்த்து, நியூட்ரினோ, கூடங்குளம் அணுஉலை, தாமிரபரணி ஆற்று நீருக்காக, நீட் தேர்வு விலக்கிற்காக , பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஜாதி ரீதியாக முறைகேடு, இந்தித்திணிப்பு, நவோதயா பள்ளிகள் மூலம் இருமொழிக்கொள்கைக்கு எதிராக கொண்டுவரும் சதி, மாநில அரசுப் பணிகளில் வடஇந்தியர்களை நுழைப்பது, தற்போது ஸ்டெர்லைட் ... வேண்டுமென்றே, தமிழகத்தை  குறிவைத்து தாக்குவதில் தீவிரமாக இருக்கிறது மோடியின் பாஜக மதவாத, ஊழல், அரசு.!


இதற்கு அனைத்து விதத்திலும் துணையாக, கைகட்டி, அடிமை சேவகம் செய்கிறது,  அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அரசு.!

ஆட்சி மாற்றம் ஒன்றே இவையனைத்திற்கும் தீர்வு என்று மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஈரோட்டில் நடந்து முடிந்திருக்கும் திமுக மண்டல மாநாடு, இதனை உறுதி செய்திருக்கிறது. தீர்மானங்கள் அனைத்தும் பட்டைதீட்டிய வைரங்களாக ஜொலிக்கின்றன.!
 

இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறா....

இரண்டு நாட்களாக காஸ் ஸ்டவ்யில் இலேசாக எரிவாயு கசிவது போன்ற நாற்றம் வந்துகொண்டிருந்தது. புகார் கொடுத்து, உடனே, சீர் செய்ய வரவழைத்தோம். வந்த நண்பர், எல்லாவற்றையும், பரிசோதித்துவிட்டு,

'  டியூப் மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன். மற்றபடி எல்லாம் சரியாக தான் இருக்கிறது ... இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிவிடுஙகள்' என்றார்.

' சரி ... மாற்றி விடுங்கள் ' என்றேன்.

வேலை நடந்துகொண்டிருக்கும்போதே, பேசலாமென்று ஆரம்பித்தேன்...  ( நாம் தான் எல்லோரிடமும் அரசியல் பற்றி பேசுவோமே...) 

' எங்கே இருக்கிறீர்கள் ... இந்த ஏரியா தானா.."

' இல்லை மேடம், நான் நார்த் மெட்ராஸ் , புரசைவாக்கம்...'

' ஓ .. அப்படியா, புரசைவாக்கத்துல எங்கே...?' 

' புவனேஸ்வரி தியேட்டர் தெரியுமா... அதுக்கு பக்கத்துல பெரம்பூர் பேரக்ஸ் ரோட்ல தான்... மேடம் '

' ம்ம்ம் ... தெரியும், நான் பெரம்பூர் தான், அப்பல்லாம் ஷாப்பிங் என்றாலே புரசைவாக்கம் தானே... '

' நான் நினைச்சேன் மேடம் ... நீங்க நல்லா பேசறத பாக்கும்போதே...'

' ஏன் ... நல்ல பேசுறவங்க எல்லாம் அங்கே தான் இருக்காங்களா..'

' இல்லை மேடம், தப்பா  நினைக்காதீங்க... இந்த அடையாறு, மைலாப்பூர், அண்ணாநகர், அசோக்  நகர் ஏரியாவுல இருக்குறவங்க எல்லாம் ரொம்ப பேச மாட்டாங்க... கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க...'

' தப்பா நினைக்க இதுல என்னங்க இருக்கு... நீங்க சொல்றது சரி தான்... இந்த ஏரியாவுல இருக்குறவங்க எல்லாம் அதிகம் படிச்சவுங்க, காசு உள்ளவங்க.. அதான்,  படிச்ச கர்வம், காசு  இருக்கிற பணக்காரத்தன்மை  .. அதனால தான் அப்படி இருக்காங்க... இருந்தா,  இருந்துட்டு போகட்டும் .. விடுங்க, அவங்க காசு அவங்களுக்கு, ஆனால், அவர்களைவிட , நம்ம ஏரியாவுல இருக்குறவங்க தான் மனிதர்களை படிச்சவுங்க... மனச படிச்சவுங்க...' என்றேன்.

' நீங்க சொல்றதும் சரி தான்... ஆனால், அதையும் தாண்டி, அவர்கள் பார்வை ஜாதி சம்பந்தப்பட்டது மேடம். கிச்சன்ல செய்ய வேண்டாம். ஸ்டவ்யை பால்கனிக்கு எடுத்துக்கிட்டு போயிடுங்க.. என்பதும், நம்மை பார்த்ததும், சாமான்களை தள்ளி வைப்பதும், நீ வேற ஜாதிக்காரன் , நீ இதெல்லாம் தொடக்கூடாது , என்பது போலவே இருக்கும் மேடம்.'

என்னால கொஞ்சநேரத்துக்கு பேச முடியல... என்ன சொல்றதுனும் தெரியல... பிறகு,

' ஜாதி ஒழிஞ்சுடுச்சுனு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டு இருக்காங்க... அது ஒரு பக்கம் வளர்த்துக்கிட்டே இருக்கு... என்ன செய்றது, நாமும் சொல்லிகிட்டே தான் இருக்கோம், என்னைக்கு ஒழியும்னு தான் தெரியல... அப்படிப்பட்டவங்கள அலட்சியப்படுத்திடுங்க, நாம் யாருக்கும் கீழ்வானவங்களும் இல்ல, யாருக்கும் மேலானவங்களும் இல்ல... உங்க குழந்தைங்களுக்கு சொல்லி வளருங்க... அக்கம் பக்கத்துலயும் சொல்லுங்க, வருங்காலத்திலேயாவது மாறுவாங்க என்று நம்புவோம்.'


' ஓகே  .. மேடம், நீங்க சொல்றது ரொம்ப சரினு தான்படுது, பாக்கலாம், வேலை முடிஞ்சிடுச்சி , நான் கிளம்புறேன்.'


அவர் சென்றபிறகு இதைப்பத்தி, நிறைய யோசித்தேன். இந்த மக்களுக்கு ஜாதி என்ற உணர்வு எப்படி ரத்தத்துல கலந்து ஓடிக்கிட்டு இருக்கு... சில மாதங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டிற்கு வந்த போது, செவிலியர் சொன்னது நினைவிற்கு வந்தது. 

' அக்கா, உங்கள் வீட்டில் தான் கிச்சன் வரை வருகிறேன்., இப்ப தான் ஊரிலிருந்து வந்தபிறகு, உங்கள் எல்லோருடனும் சேர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிடுகிறேன் ' என்றார்.

' ஏனப்பா... அப்பிடி? ' என்றேன்.

' இல்லைக்கா ... இதுவரை நாலு வீட்டுக்கு ஹோம் டூட்டி போயிருக்கேன். அதுல மூணு  வீடு பிராமின் வீடு, ஒருத்தவங்க யாருனு தெரியாது. ஆனா, பிராமின் கிடையாது. எல்லோருமே, கிச்சனுக்கு வரக்கூடாதுனு சொல்வாங்க, தனியா பேஷண்ட் இருக்குற ரூமுக்குள்ளேயே சாப்பிட சொல்வாங்க.  போனதிலிருந்து, ஒரே தட்டு தான், ஒரே டம்பளர் தான். மறந்து கூட மாத்தி கொடுக்க மாட்டாங்க... இதுல  இரண்டு வீட்டுல, நீ என்ன ஜாதிம்மா ? என்று நேராவே கேட்டாங்க..க்கா .' என்றார்.

இந்த ஜாதி என்ற புற்றுநோய், நம் சமூகத்தில் ஊடுருவி  புரையோட வைத்திருக்கிறது. இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படவில்லையென்றால், உயிரிழப்பு ஏற்ப்படும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்.


"ஜாதி  தான் இந்த சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும் " என்ற அண்ணலின் ஆதங்கமும், 

"மதம், மனிதனை மிருகமாக்கும், ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் " ஏற்ற தந்தை பெரியாரின் நிதர்சன  பார்வையும், 

எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கு, நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.!  :-(



Friday, 23 March 2018

மன மாற்றம் ஒன்றே தீர்வு.!

நண்பர்கள் சிலர் என்னிடம், அடிக்கடிகேட்பதுண்டு ,  ' திராவிடம் இடைநிலை ஜாதியினரை  ஆதரிக்கிறது. தலித்துகளை ஆதரிப்பதில்லை. பெரியாரும் தலித்துகளுக்கு ஆதரவாக பேசியதில்லை ' என்று , ' சூத்திரர்களை மட்டுமே ஆதரித்து பேசியிருக்கிறார் ' என்பது தான் அது. 
அவரகளிடம் நான் சொல்லும் ஒரே பதில்," பெரியார் ஒட்டுமொத்த தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களுக்காக தான் போராடினார்.   அப்போதெல்லாம் இடைநிலை ஜாதி, தலித் என்ற பார்வை கிடையாது. திராவிடர் கழகமே, பறையர் கட்சி, பள்ளர் கட்சி என்று தான் அழைக்கப்பட்டது. இந்து  மத தர்மப்படி, பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்த ஜாதியினர். நாமெல்லாம் அவர்களின் பார்வையில், தாழ்த்தப்பட்டவர்கள் தான். சூத்திரர்கள் தான். " 

இது தான் பெரியாரியப் பார்வை. 
தற்போது, சந்தையூர் நமக்கு என்ன சொல்கிறது...?
இடைநிலைஜாதியினர் தலித்துகளை ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது போய், தலித் என்று சொல்லப்படுபவர்கள் அருந்ததியினரை கேவலப்படுத்துகிறார்கள். ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை தானே.!

அந்த  மக்கள், இந்து மதமே வேண்டாம், பல இன்னல்களுக்கு ஆளாகிய அவர்கள், போராடி, ஒரு கட்டத்திற்கு மேல், சட்டமும் கைவிரித்த நிலையில், இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறோம்என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். இது தான் உண்மை நிலை. ஆரியம் விதைத்த இந்த இந்துமத ஜாதிய கட்டமைப்பு நம் மக்களின் மனதில் ஆழ பதிந்திருக்கிறது. இதனை மனமாற்றம் ஓன்று தான் சரி செய்ய முடியுமே தவிர, திராவிடத்தை குறை கூறி,   என்ன பயன்.. திராவிடம்  என்ற இனப்பெயர் நமக்கான பெருமையை பறைசாற்றுகிறது. திராவிடர் கழகமும், பெரியாரும் இதனை நமக்கு உணர்த்திருக்கிறார்கள். இது தான் வரலாற்று உண்மை. திராவிடக்கட்சிகள் அரசியலுக்காக, வாக்கு வங்கிக்காகசில  ஜாதி சங்கங்களை அனுசரித்து போயிருக்கிறார்கள். இது ஜாதி மேலும் வளர்வதற்கு காரணமாக இருந்தது என்பது வேண்டுமானால், ஓரளவிற்கு உண்மையாக இருக்க முடியும். அதிலும், அதிமுக அதிகம் ஜாதிய சங்கங்களுக்கு துணை போயிருக்கிறது என்பது தான் உண்மை. திமுக சமூகநீதிக்காக பலவற்றை செய்திருக்கிறது  அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் என பலவற்றை சொல்லலாம்.

இந்த ஜாதி என்ற கட்டமைப்பு உடைக்கப்பட்டு வேண்டுமென்றால்,மதமற்றவர்களாக மாற வேண்டும் என்பது தான் சரி. இல்லையென்றால், குறைந்தபட்சம் வேறு மதத்திற்கு மாற வேண்டும்.அக்காலத்தில் மதம் மாறியவர்களும் இந்த காரணத்திற்காக தான் மாறினார்கள்,  இன்று மாறுபவர்களும் இதே காரணத்திற்கு தான் மாறுகிறார்கள். மக்கள் மதம் மாறுவதை காட்டிலும் மனம் மாறுவதே சிறந்தது என்பதால் தான் மதமற்றவர்களளாக மாறவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் . சக மனிதனை மதிக்க வேண்டும். சமத்துவம் தழைத்தோங்க வேண்டும் என்றால், மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும் என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி.!

Tuesday, 20 March 2018

விஎச்பியின் ராமராஜ்ய ரதயாத்திரை

ர(த்)த யாத்திரை நமக்கு தேவையில்லாத, அதே சமயம் ஆபத்தான  ஓன்று .... ஏன்..?

ராமர் கோவிலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? 
பிள்ளையாரும், ராமனும், தமிழர்களுக்கு பரிச்சயமானவர்களா? 
பிறகு எதற்கு, கடந்த சில ஆண்டுகளாலாக  விநாயகர் ஊர்வலம் , இப்போது ராமன் கோவில் கட்ட வேண்டுமென்ற  ர(த்)த யாத்திரை.?
இந்தியாவை, பரந்த இந்துராஷ்டிரியமாகவும், ராமராஜ்யம் நிறுவவும், ,மனுதர்ம ஆட்சியை நடத்த வேண்டுமென்பதும் , இந்துத்துவம் தங்களை குருவாக கருதும் கோல்வாக்கரின் விருப்பம், கொள்கை வெறி.  ஆதலால் தான்,  ஆர்.எஸ்.எஸ்., பாஜக மூலம் தன்னுடைய கொள்கையை நிலைநிறுத்த , மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு வியாபாரத்தை கையில் எடுத்திருக்கிறது . தமிழ்நாட்டில், தேர்தல் மூலம் நேர்மையாக தங்களால் வெற்றி பெற முடியாது ,  அது  நடவாது  என்பதால், இப்படி ஒரு தகிடுதித்தம்.!

400 ஆண்டுகளாக இருந்த ஒரு மசூதியை,  400 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ராமன் கோவில் இருந்ததாக கூறி  இடித்தார்கள். பின்பு அங்கு தான் கோவில் கட்ட வேண்டும் என்று அவ்வப்போது ரத்த யாத்திரை நடத்துவார்கள் இந்த ஹிந்துத்துவவாதிகள். யாத்திரைக்கு பின்பு, மத கலவரத்தை தூண்டிவிடுவார்கள். இவையெல்லாம் வழக்கமாக  நடப்பது வடநாட்டில்...! 

நம் தமிழகத்தில், மத நல்லிணக்கம் என்பது மிகச் சிறப்பானதொன்று. அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும், சகோதர பாசத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். நம் மக்களிடம் உள்ள ஒற்றுமையையே குலைத்து, அதில் குளிர்காய பார்க்கிறது ஆரியம்.!

இதற்கு, நம் மாநில அரசை கைக்குள் போட்டுகொண்டு, இந்த ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல், அதை எதிர்த்து போராடும் நம் தலைவர்களையும், மறியல் செய்யும் மக்களையும், தொண்டர்களையும்  கைது செய்தல் என்பதும், 144 தடை ஆணை பிறப்பிப்பதும் நம் மண்ணிற்கு உகந்ததா... சரியானது தானா..?

இரண்டாவது, தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முடியாது., ஏனெனில்,  இது பெரியார் மண். மத கலவரங்கள் நடவாத மண், காந்தியார் இறந்தபோது இந்தியா எங்கிலும், கலவரங்கள் நடந்த சமயத்தில் கூட, இங்கு அமைதி பூங்காவாக  இருந்ததற்கான காரணம், பெரியார் , அமைதி காக்க வேண்டும் என்று அறிவித்த, அறிவிப்பே காரணம். இவ்வாறு நம்முடைய வரலாறு இருக்கையில், மக்களின் அறியாமையாகிய பக்தி என்ற மூடத்தனத்தைக் காட்டி,  மக்களை தங்களுடைய  மாயவலையில் விழசெய்வதும் ஒரு காரணம்.!

விழிப்புடன் இருங்கள் மக்களே ... இன்று பக்தி எனப்படுபவை அனைத்தும், நாளை ஆதிக்கசக்திகளாக வெளிப்பட்டு நம்மையே தாக்கி விடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணருங்கள்.!

பெரியார்.


மீண்டும், மீண்டும், பெரியாரை சீண்டும் காவிகள் ... நாடு முழுவதும் அன்று வியாபித்திருந்த ஆதிக்க சக்தியையும்,   மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியையும் எதிர்த்து, போராடி வெற்றி கண்டவர் #எங்கள்பெரியார்.

இன்றைக்கும் உங்களுக்கு சவாலாக இருக்கிறார் என்றால்,  என்றைக்கும் வெற்றி பெறுபவர்  எங்கள் பெரியார் தான்.!

எந்த மாநிலங்களிலும், இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் மட்டும், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தலைவர்களும் கைதாகியிருக்கிறார்கள் என்ற இந்த ஒரு சான்று  போதாதா ... காவி அரசியல்வாதிகளுக்கு.!


கருத்தை, கருத்தோடு மோத துணிவில்லாமல், சிலையை, அதுவும், இரவில் யாருக்கும் தெரியாமல் உடைத்துவிட்டு செல்லும் கோழைகள் நீங்கள். பெரியார் என்பவர்  தனிப்பட்ட மனிதரல்ல. அவர் ஒரு தத்துவம். அவர் ஒரு சகாப்தம். அவர் ஒரு வாழ்வியல் சித்தாந்தம். ஒரு மானுடவியலாளர் என்ற முறையில், இந்த உலகிற்கே சொந்தமானவர்.  பெரியார்  கொள்கைகளாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில்  வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதை , சமீபத்தில் தானே மெய்ப்பித்தார்கள் எம் மாநில மக்கள் என்பதை இந்த மதவாதிகள் மறக்க வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.!

#தமிழ்நாடுபெரியார்மண் 

Thursday, 15 March 2018

ஸ்டீபன் ஹாக்கிங் எனும் மாமேதை.


"இறந்தும் இறவாதவர் " என்ற கூற்றுக்கு மிகசிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த மாபெரும் மனிதர்.

அறிவியல் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் மிகுந்த வருத்தமிருக்கிறது...  அறிவியலாளர் #ஸ்டீபன்ஹாக்கிங் மரணம்... :-( :-(
லண்டனில், பிரபல பேராசிரியரும்,  இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதருமான,  இந்த அறிவியலாளர், விஞ்ஞானி.!

பேரண்ட பெருவெடிப்பாகட்டும் ... காலப்பயணம் பற்றிய கருத்தாகட்டும் ... கருப்பு துளைகளின் வியப்புக்குரிய தகவல்கள் ஆகட்டும்... குவாண்டம், அணுக்கரு அறிவியல் ஆகட்டும் ... அனைத்தையுமே, ஒரு சக்கரநாற்காலியில் அமர்ந்தபடியே, தன்னுடைய அதி புத்திகூர்மையினால், பல அறிவியல் உண்மைகளை நமக்கு அளித்தவர் தான் இந்த மாபெரும் மேதை. தன்னுடைய 21 வயதில் நியூரான் நரம்பு சம்பந்தமான ஒரு பிரச்னையால்,கழுத்திற்கு கீழே முழுவதும் செயலிழந்த நிலையில், பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். இதற்கு,  அவருக்கு பெரிதும் துணையாக நின்றது, அதி நவீன தொழிநுட்ப மருத்துவம் என்ற பெருமையை பெறுகிறது. அவருடைய கண் அசைவிலேயே என்ன பேசுகிறார் என்பதற்கு குரலாக மாற்றிய மருத்துவமும், தகவல் தொழில்நுட்பமும் ஆற்றிய பணி அளவிடற்கரியது. 55 ஆண்டுகள் இதே நிலையில் இருந்து நமக்கு எத்தனை, எததனை தகவல்களை, உண்மைகளை, கண்டுபிடிப்புகளை அளித்திருக்கிறார் இந்த மாபெரும் மனிதர்.  

இந்த மனிதகுலமே தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது அய்யா...!

அரசாங்கங்களின் புரிதலின்மை.!



அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில், அந்த அரசு ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கி, குறைந்தபட்ச வயது 21 என்றும் உயர்த்தி, சட்டமியற்றியிருக்கிறது ... அந்த மாநில அரசு. மேலும் அமெரிக்கா அரசாங்கமே, துப்பாக்கி வழங்கும் முறையை ஏற்று, அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆயுத்தமாகிறது.  கடந்த மாதம், முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில், 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பலியாகினர். இம்மாதிரி நிகழ்வுகள் இனி தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்து, இந்த சட்டத்தை இயற்றி இருக்கிறதாம்.!
இங்கு நம் தமிழக அரசு, அரசு பள்ளிகளில், மாணவ, மாணவிகளை கண்காணிப்பதற்கும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பதால், அவற்றை தடுப்பதற்காக என்ற ஒரு காரணத்தை கூறி, கண்காணிப்பு கேமரா வைப்பது போல்தான் இதுவும் என்று தோன்றுகிறது. ஒரு கேமரா ஒரு மாணவனையோ, ஆசிரியரையோ நல்வழி படுத்திடமுடியுமா... கண்காணிப்பு கேமராவுக்கு பின்னால் தவறு செய்வது என்பது அவ்வளவு கடினமான விசயமா..?
இந்த இரு விசயங்களிலும் சரி ... நன்மைக்கு பதில் தீமை விளைவது உறுதி. தவறுகள் செய்ய கூடாது என்று மனதில்உணரவைத்து ,மனிதத்தை வளர்ப்பது தானே முக்கியம். அதை விடுத்து, இதுபோன்ற அரைகுறை நடைமுறைகள் எதிர்வினைகளை அல்லவா ஏற்படுத்திவிடும். குற்றங்கள் நடந்தால், அதனை சீராய்ந்து, களைவது தானே சரியான முறையாக இருக்க முடியும். அதனை செய்யாமல், ஒரு குற்றத்தை தடுக்க, மற்றொரு குற்றத்தை தூண்டிவிடுவது எந்த வகையில் நியாயம்..?
எனக்கு தெரிந்து, கொசு ஒழிப்பிற்காக, கொசுவர்த்தி சுருள், குட்நைட், ஆல் அவுட் என்ற திரவங்கள், இப்போது அட்டை போன்ற ஓன்று என காலத்திற்கு தகுந்தவாறு கண்டுபிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் , அந்த திரவ பாட்டிலின் மீதே கொசு அமர்ந்து இருக்கிறது. இவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை உள்வாங்கி கொண்டு, இன்னும் அதிக எதிர்ப்பாற்றலை பெற்று கொள்கிறது கொசுக்கள். கொசுஉற்பத்தியை தடுக்க வேண்டிய முறைகளான, சாலைகளில் நீர்த்தேக்கம், சாக்கடை போன்றவற்றில் சுத்தத்தை கையாளாமல், கொசு ஒழிப்பு என்பது சாத்தியமில்லை என்ற உண்மையை குழிதோண்டி புதைத்துவிட்டு, அரசு, கார்ப்பரேட் கம்பனிகள் கைகோர்த்து, காசு பார்ப்பது போல், பிரச்சனைகளை மேலும் மேலும் பெரிதாக்கிக்கொண்டே இருப்பது, உலகத்தின் பல அரசுகளுக்கு வழக்கம் என்றே தெரிகிறது.! 

தமிழ்நாடு துயரத்தில், ஆபத்தில் இருக்கிறது....

ஒக்கி புயலில் சிக்கிக்கொண்டவர்களை ,மீனவர்கள் செல்லும் நாட்டிக்கல் தூரம் வரை கடலுக்குள் சென்று மீனவர்களை காப்பற்ற முடியவில்லை ...
காட்டு தீயில் மாட்டி, உயிருக்கு போராடும் பிள்ளைகளை இரவு என்பதால் மீட்புப்பணி கடினம் என்ற ஒரு காரணத்தை கூறி, (இரண்டே ஹெலிகாப்டர்களை வைத்துக்கொண்டு , அதிலும் ஒன்றில் எரிவாயு பற்றாமல் போய்விட்டது) காப்பாற்ற முடியவில்லை...
கடலில் எண்ணெய் கொட்டிவிட்டால், தொழில்நுட்பம் வளர்ந்து வந்திருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வாளியில் அள்ளி வெளியில் ஊற்றுவது ஓன்று தான் வழி என்று ஊற்றி பல கடல்வாழ் உயிரினங்களை கொன்று குவித்தவர்கள் ...
இவர்களை நம்பி தான்,
நம் தமிழ்நாடு மாநிலத்தில் கூடங்குளம் அணு உலை இருக்கிறது.!
கல்பாக்கம் உலை இருக்கிறது.!
நியூட்ரினோ ஆய்வகம் உருவாக போகிறது.!
கெயில் குழாய்கள் பதிக்க போகிறார்கள் .!
போதாக்குறைக்கு, மரக்காணம் முதல், கன்னியாகுமரி வரை, எங்கு வேண்டுமானாலும், ஒரே உரிமம் பெற்ற, தனியார்நிறுவனம் மீத்தேன் வாயு எடுக்கலாம். கிணறுகள் தோண்டி கொள்ளலாம் என்று மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.!

Thursday, 8 March 2018

இனிய மகளிர்தின வாழ்த்துகள் செய்தி.!

போற்றப்பட்ட வேண்டியதா பெண்ணியம் ... ?
மதிக்கப்பட அல்லவா வேண்டும்.!

 சமத்துவமும், தோழமையும், அன்பும், நேசமும் உணர்வுகள் மதிக்கப்படும் இடத்தில் தானே இருக்க வாய்ப்பிருக்கிறது. மனித இனத்திலேசரிபாதியாக இருக்கும் பெண்கள் மதிக்கப்படுதலே மிக முக்கியம். மகளிர்தின கொண்டாட்டங்கள் என்பது வெறும் சம்பிரதாயமாக மட்டுமில்லாமல், ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டுமென்றால், நம் பள்ளி கல்வித் திட்டத்தில், " பெண் ஏன் அடிமையானாள்?" என்ற தந்தை பெரியாரின் புத்தகத்தை சேர்க்க வேண்டும் என்பது தான் சரியான முன்னெடுப்பாக இருக்கமுடியயும். இந்த நாளில் தமிழக அரசிடம் இந்த முக்கிய கோரிக்கையை முன் வைப்போம்.! 

Tuesday, 6 March 2018

பெரியார்.




செருப்பொன்று வீசினால் , அங்கே சிலை ஓன்று முளைக்கும் என்பது தமிழ்நாட்டில், திராவிடர் இயக்க வரலாறு. இங்கே ஒரு பெரியார் சிலை உடைக்கப்படுமானால், (உடைக்க முடியாது என்பது வேறு விசயம்) என்ன நடக்கும் என்று இந்த காவிகளுக்கு தெரியவில்லை போலும். எண்ணிக்கையில்லா சிலைகள் பல்கி பெருககூடிய வாய்ப்பை அல்லவா நமக்கு ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். இன்னும் பெரியளவில்,  பெரியாரின் கொள்கைகள் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் என்பது தானே உண்மை. எப்பவுமே, இலவச விளம்பரம் அவாளால் (எச்.ராஜா) கொடுக்கப்படுவது தானே வாடிக்கை. எவ்வளவு தான் பேசினாலும்  உங்களால் பெரியாரின் சுண்டுவிரலை கூட அசைக்க முடியாது என்பது தானே  நிதர்சனம். 

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் ... உயிருடன் இருக்கும் போதும் சரி (உடலளவில் மட்டும் இறந்திருக்கிறாரே , தவிர கொள்கைகளாக என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறந்த சமூக விஞ்ஞானி ) இறந்து 44 ஆண்டுகள் ஆகியும் சரி ... உங்க அவாளுக்கு சிம்மசொப்பனமாக இன்றும் ஒருவர் விளங்குகிறாரென்றால், அவர் தாம்  #பெரியார்.

வாழ்க பெரியார்  ... வளர்க பகுத்தறிவு 

Saturday, 3 March 2018

நெடுந்தொடர்கள் என்னும் சமூகசீர்கேடு.

நெடுந்தொடர்கள்  வந்த புதிதில், ஆர்வத்தில் சில தொடர்கள் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிலும், படு மோசமான வில்லி(ன்), அநியாயத்திற்கு பொறுமையான பெண்கள் என காட்டப்படுவது எழுதப்படாத  சட்டம். ஆணாதிக்கம், மாமியார் கொடுமை, மருமகள்கொடுமை, பெண்ணடிமைத்தனம், பொறாமை, என அனைத்து தீயகுணங்களும் காட்டப்படும். சில ஆண்டுகளிலேயே இந்த சலிப்பு வந்துவிட்டபடியால், சுத்தமாக பார்ப்பதை நிறுத்தி விட்டேன். இப்போது, யாராவது வீட்டிற்கு வருபவர்கள், அல்லது தொலைக்காட்சி மாற்றும்போது எதேச்சையாக பார்க்க நேரிடும்போது தான் தெரிகிறது ... முன்பை விட , எந்த அளவிற்கு இந்த நெடுந்தொடர்கள் மக்களை, குறிப்பாக பெண்களை படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.

செய்வினை வைத்தல், ஜோசியம், ஜாதகம், பேய்பிடித்தல், ஆவிகள் பழிவாங்குதல், மந்திரம், மாயம் , பேய்  ஓட்டுதல், சாமி ஆடுதல், கடவுளுக்கு பரிகாரம் செய்தல், பக்தி என்ற பெயரில், மன்னிக்கவே முடியாத படிக்கு மூடநம்பிக்கைளைப்  பரப்புதல் என்ற நாசவேலையை  செய்துகொண்டிருக்கிறது. நம் வீட்டின் வரவேற்பறையினுள்ளே வந்து, நம் பெண்களின் சிந்தனைகளை எப்படியெல்லாம் சிதைத்து வருகிறது. அவர்களுக்கு தெரியாத, மூடநம்பிக்கைகளை மேலும், மேலும் திணித்து, இன்னும் படுகுழியில் அல்லவா புதைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டிலுள்ள பெண்கள், வயதானவர்கள் மட்டுமல்லாமல், இவர்களுடன் சேர்ந்து  பார்க்கும், குழந்தைகளின் மனதையும் சேர்த்து அல்லவா கெடுத்துக் கொண்டிருக்கிறது.!


இந்த உலகில், சமூகத்தில் பார்க்கப்பட வேண்டியவை , கவனிக்கப்படவேண்டியவை, திருத்தப்படவேண்டியவை என எவ்வளவோ இருக்கிறது. முதலில் இந்த மாயையிலிருந்து வெளியில் வாருங்கள் ... தோழிகளே.!