Monday, 28 May 2018

பேராபத்தின் பிடியில் தமிழகம்



இயல்பாக நடப்பது அனைத்தையும், எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு தமிழகத்தை போராட்டக்களமாக மாற்ற வேண்டாம் என்று தமிழிசை கூறுகிறார். 13 பேர் (இது கணக்கில் உள்ளவை மட்டுமே, நேர்மையான விசாரணை நடத்தினால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.... ) சுட்டுக்கொல்லப்பட்டது, இயல்பான ஓன்று என்று சொல்ல முடிகிறது என்றால், இவர்களுடைய எண்ணஓட்டம் எதை காட்டுகிறது...???

 நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா...!!!

கடந்த ஒராண்டாகவே, ஒவ்வொரு பிரச்சனை என  நம்மை மிகவும் பரபரப்புக்குள்ளாகவே வைத்திருக்கும் மோடி அரசு, தற்போது, கடந்த வாரம் முழுதும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மூலம், நம் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டு,   எல்லோரையும் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சரியாக உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. மனதிற்கு இதமாக ஒரு பாடல்கூட கேட்க முடியவில்லை. அதற்கான சூழலில் மனம் இயங்கவில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேச முடியவில்லை. ஏதோ ஒரு மெசின் போல உடல் இயங்கிக் கொண்டிருக்கிறது...  மனம் மட்டும் முழுவதும் தூத்துக்குடி மக்களையே சுற்றி, சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன செய்தி வருமோ என்று தொடர்ந்து, மனம் பதைப்பதைத்துக் கொண்டிருக்கிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்து விடுமோ என அச்சம் நிமிசத்துக்கொரு முறை மேலோங்குகிறது. அன்னிய நாடு போல், மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறது ... இந்த தமிழக அரசு. நாம் எல்லாம் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் , அதே சமயம், எதுவும் செய்யவியலா நிலையிலிருக்கும்  சாமானிய மக்கள்.  ஆனால்,  ஆட்சி , அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, இதனைப் பற்றிய கவலை சிறிது கூட இருப்பதாக தெரியவில்லையே. நமக்கிருக்கும் வேதனையில், நூறில், ஒரு பங்கு இருந்தால் கூட, உடனே இதற்கான தீர்வை செய்திருப்பார்கள் அல்லவா. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,
 இந்த இடைப்பட்ட நாட்களில்,  மே 24 அன்று, முகநூல் தந்த முத்தான தோழி ஒருவரின் 
பிறந்தநாள் வந்தது. மிகவும் பிரியமானவள்.  அன்பில் சகோதரியாய், பாசத்தில் மகளாய், பரிவில் தோழியாய் பரிமளிப்பவள். அப்படிப்பட்ட ஒரு தோழிக்கு , மகிழ்ந்து, பிறந்தநாள் வாழ்த்து பதிவு கூட போட முடியவில்லை ... என்னால்.!
 மனஅழுத்தம் தந்த துயரத்தால், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மனம் இடம்தரவில்லை.!
அலைப்பேசியில், அழைத்து பேசும்போது, இந்த மனஇறுக்க நிலையைப்பற்றி கூறியபோது, " அக்கா, இந்த ஸ்டெர்லைட் போராட்டம், இப்படி போய்கொண்டிருக்கிற நிலையில்,  நானும் கொண்டாடும் மனநிலையில் இல்லையக்கா..." என்றாள்.

நம்மை இந்தளவிற்கு மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி விட்டு விட்டு, பாசிச ஆட்சிக்கு கால்பிடிக்கும், இந்த அடிமை ஆட்சியாளர்கள் என்னவென்றால், நட்சத்தி்ர ஒட்டலில் பூப்புனித விழாவில், ஒன்று கூடி மகிழ்ந்து கூத்தடிக்கிறார்கள். எப்படிப்பட்ட மாபாதக கொலைக்காரர்கள் இவர்கள். இவர்களாலா நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில், அருவெறுப்பாக இருக்கிறது.!
மொழி புரியா ஜார்கண்ட் மாநிலத்தில் கூட, மக்கள் ஸ்டெர்லைட்டை தடை செய் என ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இங்கிருக்கும் ஆட்சியாளர்கள், என்னவென்றால், சமூகவிரோதிகள் ஊடுருவியதால், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒரு பொய்யான, எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரணத்தையும், தற்காத்து கொள்வதற்காக என்ற வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல்  கூறுகிறார்கள்.!

 இதற்கிடையில், பேருந்தில் பயணித்தப்போது, பேருந்திலும் சரி, வெளியே சாலையிலும் சரி, மக்கள் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் உற்று கவனித்துக் கொண்டிருக்கையில், இவர்களை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பாதிக்கவில்லையா என்ற எண்ணம் மனதை ரணமாக்கிய வேளையில், கண்களில்,  கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. கலங்கிய கண்களுடன், பக்கத்தில் அமர்ந்திருந்த சகோதரியைப் பார்த்தேன். அவருக்கு ஒன்றும் புரியாமல், என்ன என்று கண்களால் வினவினார். " தமிழ்நாட்டு அரசியல் பற்றிய பார்வை இருக்கிறதா ... " என்று கேட்டேன். உடனே, 
" இல்லாமலா ... இங்கு என்ன ஆட்சியா நடக்கிறது, காட்டு தர்பார் கூட இந்தளவுக்கு கொடூரமாக இருக்காதுங்க ... போராட்டம் நடத்துறவுங்கள சுட்டு கொல்றாங்கனா ஹிட்லர் ஆட்சி போல இல்லையா, அவுங்க எதுக்கு போராடுறாங்கனு தெரியாதா,  இந்த கவர்மெண்ட்க்கு. இவங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது சிஸ்டர் , நாசமா தான்  போயிடுவாங்க... " என பொரிந்து தள்ளிவிட்டார். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள், எதைச் செய்தாலும், மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று தப்புகணக்கு போடுகிறது... மத்திய அரசாங்கம். அதற்கு கால் பிடித்துக் கொண்டிருக்கிறது ... மாநில அரசாங்கம்.!

இனி, இவர்கள் அராஜகம் தாங்கமுடியாமல், மக்கள் கிளர்ந்தெழ தான் போகிறார்கள். ஒவ்வொரு போராட்டத்தையும் சமூகவிரோதிகள் ஊடுருவியதாக பழிபோட்டு, போராட்டகாரர்களை ஒடுக்கப் பார்க்கிறது, இந்த கையாளாத அரசு. மெரினா புரட்சியின்போது, சொல்லப்பட்ட அதே காரணம் , இப்போதும் சொல்லப்படுகிறது. அப்போது கேட்கப்பட்ட அதே கேள்வி தான் இப்போதும் பொது மக்களால் கேட்கப் படுகிறது. ஆனால், அரசிடமி்ருந்து தான் இன்று வரை பதிலில்லை. பதில்  சொல்லவும் முடியாது. ஏனென்றால், அதில் உண்மை இல்லையென அனைவருக்கும் தெரியும். சமூகவிரோதிகள் ஊடுருவினால், களையெடுப்பது தான், அரசின் கீழ் இயங்கும் காவல்துறையின் கடமையே தவிர, பொதுமக்களை, பள்ளி மாணவியை , போராடும் மக்களை அடித்தும், சுட்டு கொல்லுவதும் அல்லவே.!

இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வு, படுகொலை என்பது தமிழக மக்களின் மீது அதிகார செருக்கில்,  பாசிச ஆட்சியால், ஏவப்பட்ட மறக்க முடியாத, மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம், கொடுமை. நானும் , தொலைக்காட்சியைப்பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்றால், ஓன்று, உங்களுக்கு தெரியாமல் தலைமைசெயலர் செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், ஒரு முதலமைச்சர் கீழ் இயங்கும், ஒரு துறை அவருக்கு தெரியாமலே இயங்குகிறது என்றால், இந்த அளவிற்கு பொறுப்பற்ற ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. தெரிந்திருந்து நடந்திருந்தால், அது மாபெரும்குற்றம்.சொந்தநாட்டு மக்களையே சுட்டு கொள்வது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. ஆதலால், இதற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஆட்சியை விட்டு விலக வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை உடனே மூடப்பட வேண்டும். இனியாவது சுற்றுச்சுழல் எவ்வித  பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல், தமிழகமெங்கும் மக்களின் புரட்சி என்ற மாபெரும்  எரிமலை வெடிக்கும்போது, அந்த வெப்பத்தின் தாக்கத்தை, எதிர்கொள்ள முடியாமல், நீங்கள் அனைவரும் சுக்குநூறாக சிதறுண்டு போவீர்கள். எச்சரிக்கை.!

#Ban_Sterlite
#Getdown_EPS&OPS
#Ban_Vedanta
#Getdown_Bjp
#பேராபத்தின்_பிடியில்_தமிழகம் 

Thursday, 17 May 2018

மறக்கத்தான் இயலுமா... மே 17.


மறக்க தான் இயலுமா... #மே17

ஆண்டுகள் பல கடந்தாலும், நம் குருதியோடு கலந்த  உணர்வுகள் மங்குவதில்லை. யுத்தகாலத்தில், உண்ண முடியாமலும், உறங்கமுடியாமலும் நாம் தவித்த தவிப்புகள் இன்றும் நம்மை கலங்கவைக்கிறதென்றால், #ஈழம் என்ற சொல், ஒரு நிலப்பரப்பின், ஒரு நாட்டின்  பெயர், என்பதோடல்லாமல்,  உலகின் அனைத்து மூலைகளிலும் பரவியிருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு என்பது தான் உண்மை. எத்தனை தலைமுறைகள்  கடந்தாலும், இந்த உணர்வு தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது உறுதி. சிறிதும் மனிதநேயமற்ற முறையில், ஒரு இனப்படுகொலையை நடத்திமுடித்துவிட்டு, பெண்களையும், குழந்தைகளையும்,  துன்புறுத்தி கொன்று, மருத்துவமனைகளிலும், குண்டுபோட்டு தாக்கி, சமாதானம் வேண்டி,  வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களையும் கொன்று  குவித்து போர்க்குற்றங்கள் அனைத்தையும் செய்து விட்டு, இன்னமும், காணாமல் போன நம் சகோதரர்கள்பற்றி தெரியவில்லை, இளம் விதவைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள் , முள்வேலிமுகாம்களில் அகதிகளாக சித்ரவதைப் படுகிறார்கள் என்பது சகித்துக்கொள்ள முடியாத கொடுமைகள் அல்லவா... இவ்வளவும் செய்துவிட்டு,  இந்த சர்வதேச சமூகத்தின் முன்பு, மிக மிக, இயல்பாக சிங்களஅரசு நடைபோடுகிறதென்றால், ஐக்கியநாடு சபை, மனித உரிமை ஆணையம், உலக அமைதி மற்றும் சமாதான அமைப்புகள் எல்லாம் எதற்காக இருக்கின்றன என்றே தெரியவில்லை...???

எதிர்காலத்தில், ஈழம் என்ற தமிழர்களுக்கான நாடு உருவாவது உறுதி.  அதனை  தடுக்க எவராலும் முடியாது என்பதும் உறுதியான ஓன்று.!

#மே_17
#ஈழப்போராளிகள்_அனைவருக்கும்_எங்களின்_வீரவணக்கங்கள் 

Tuesday, 15 May 2018

ஒற்றுமையுடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம்.!

தென்னிந்தியாவில் பாஜகவால் வரமுடியாது என்பது பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது... விரைவில், தமிழ்நாடும் திரிபுராவாக மாறும்.!
- எச்.ராஜா.

இதனை, வழக்கம் போல் சிரித்துவிட்டு அலட்சியப்படுத்துவது இனிமேலும் சரியல்ல என்று தான் தோன்றுகிறது.  இந்த உறுதியும், ஆணவமும் எப்படி அவர்களுக்கு வருகிறது என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்று. 

தற்போது, அவர்களின் கைவசம் அனைத்து துறைகளுமே இருக்கின்றன. ராணுவம், நீதித்துறை, புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் அனைத்தையுமே, ஏற்கனவே, மத்திய அரசின் ஆட்சியமைப்பிற்குள்  கொண்டு வந்துவிட்டது. ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சி தானே தற்போது நடந்துகொண்டிருக்கிறது. வருங்காலத்தில், தேர்தல் இல்லாத சர்வாதிகார ஆட்சி வரக்கூடும். அல்லது வெற்றிபெறும் கட்சி அவர்களுடையதாக மாற்றப்படும் பேராபத்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன!

இன்னமும், பொது எதிரி யாரென்று தெரியாமல், நமக்குள் ஒற்றுமை இல்லையென்றால், இந்த நிலை வருவதை நம்மால் கூட தடுக்க முடியாது என்பதை மறுப்பதற்கில்லை.!

Saturday, 12 May 2018

செவிலியர் தினம், மே-12

" அக்கா, கொஞ்சம் பொறுத்துக்கோங்க... வலிக்கும். ஆனால், உங்களுக்கு பிடிச்சவுங்களை நினைச்சிகோங்கக்கா... வலிக்காது." என்று நோயாளியின் வலியை, தன வலியாய் உணரும் போதும் சரி.,

" ஏன் சாப்பிட மாட்டேங்கிறீங்க... சீக்கிரம் வீட்டுக்கு போய், உங்க மகனுக்கு சமைச்சு போட வேண்டாமா... பாருங்க, அம்மா இல்லாம எப்படி முகம் வாடி போயிருக்கு..." என்று உடல் மற்றும் மனதளவில்  சோர்ந்து போயிருக்கும் நம்மை ஊக்கமடைய வைக்கும்போதும் சரி, 

" என்ன தங்கச்சியா நினைச்சிகோங்கக்கா... அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்று உச்சக்கட்ட சகிப்புத்தன்மையுடன் , யாரென்றே தெரியாத நம்மிடம், மிக்க அன்புடன் நம்மை அணுகும்போதும் சரி,

நெகிழ்ச்சி என்ற உணர்வை, உண்மையில் உணரும் தருணம் என்ற ஓன்று இருக்கிறதென்றால், குறைந்தது  4 நாட்கள் முதல் ஒருவாரம் வரையாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருக்கும் செவிலியருடன் நாம் வாழ்ந்த வாழ்க்கை தான் என்பதை  என்னால் அறுதியிட்டு கூறமுடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன் , குடலிறக்க அறுவைசிகிச்சை செய்து, 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது கிடைத்த அனுபவம் இருக்கிறதே, வெறும் சொற்களால் சொல்லிவிட முடியாது. அவர்களின் சேவை மனப்பான்மை என்பது மிகவும் சிறப்புவாய்ந்த ஓன்று. எக்காலத்திற்கும் நாம் அவர்களுக்கு  நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.!

செவிலியர்கள் என்ற அந்த மனிதநேயர்கள் என்றைக்கும் மதிக்கப்பட வேண்டியவர்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள்.!

அனைத்து செவிலியர் தோழர்களுக்கும்  செவிலியர்தின வாழ்த்துகள்.!  
#May12




Monday, 7 May 2018

அரசியல் பேசுவோம் ... புரிதலைஏற்படுத்துவோம்.!

கடந்த ஓராண்டாகவே , நம்மை மிகவும் பரபரப்பாக  வைத்திருக்கிறது இந்த மத்திய,மாநில அரசுகள். அதிலும், கடந்த சில நாட்களாகவே, நம்மிடம் மனஅழுத்தம்  அதிகயளவில் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. நம்மை, வளர்ச்சி,முன்னேற்றம் நோக்கி சிறிதும் சிந்திக்காத அளவிற்கு,பிரச்சனைகளை எதிர்த்து, போராட்டம் நடத்துமாறும்,  இருக்கும் நிலைமைகளை தக்கவைத்துக்கொள்வதற்குமான மனநிலையிலேயே கொண்டு செல்கிறது மத்திய மோடி அரசு.அதற்கு, துணை போகிறது மாநில அதிமுக அரசு. இந்த ஓராண்டிற்குள் எத்தனை பிரச்சனைகள், ஸ்டெர்லைட், நியூட்ரினோ,மீத்தேன், ஹைடிரோகார்பன், கெயில், கோலா, போன்ற இயற்கை வளங்களை சிதைப்பதிலும், காவேரிமேலாண்மை வாரியம் அமைப்பதில், தாமதம் காட்டி, நம் விவசாயத்தை ஒழிப்பதிலும், சமூகநீதியிலும் கைவைத்து, நீட் தேர்வைநடுத்துவதிலும் என எவ்வளவு மனஉளைச்சல்களை தருகிறது இந்த காவி அரசு.

20 லட்சம் பேர்கள் எழுதும் வசதியுள்ள இந்த மாநிலத்தில்,ஒரு லட்சத்து,ஏழாயிரம் பேர்கள் எழுதும் தேர்விற்கு,  தேர்வு மையங்கள்  அமைக்கமுடியாதா ...  என்ன .. .?
கேரளாவிற்கும், ராஜஸ்தானிற்கும் அனுப்புகிறது என்றால், இவர்களின் காழ்வுணர்ச்சி என்னவென்று தெளிவாகிறது. ஹேர்கிளிப், மூக்குத்தி , கொலுசு, முதற்கொண்டு அகற்ற வேண்டுமென்று விதிகள் விதிக்கிறது, மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்தியக்கல்வி வாரியம்.  எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளாக்க முடியுமோ, அந்த அளவிற்கு 17, 18 வயது நம் குழந்தைகளை சித்ரவதை படுத்துகிறது , இந்த காவி கும்பல்.  இந்த நீட் தேர்வினால், கடந்த ஆண்டு, நம் அறிவு செல்வமான அனிதாவை இழந்தோம், இந்த ஆண்டு, பெற்றோர்களை இழக்கிறோம். என்றால், இவர்களின் நோக்கம் தான் என்ன என்று புரிகிறதல்லவா. நம்மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்விகளில், வடமாநில மாணவர்களை கொண்டுவந்து உட்காரவைத்து, நம் மாணவர்களை படிக்க விடாமல் செய்வதற்கான யுக்தி தான் இந்த நீட் தேர்வு. இதிலும், தேர்வே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த நம்மை, நம் மாநிலத்தில் வைக்க வேண்டுமென்று கேட்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மோடி அரசு. நுழைவுத்தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் இந்த அரசு, நாளை, கவுன்சிலிங் என்றால், டெல்லி வா என்றும், மருத்துவ இடங்கள் எங்கோ, வடகிழங்கு மாநிலங்களில் ஒதுக்கப்படும் நிலைமையை  ஏற்படுத்தக்கூடும்.

பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள் என பன்முகத்தண்மையுள்ள, மதசார்பற்ற நாடு என்ற பெயரில், உலகளவில் பெயர்பெற்றிருக்கும் இந்த இந்திய ஒன்றியத்தை, ஒற்றை ஆட்சி என்ற தன்னுடைய இலக்கில், கல்வி முதற்கொண்டு அனைத்து  மாநில உரிமைகளை, பறிப்பதில் குறியாய் இருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு. இந்துமத சாஸ்திர, மனுதர்ம சாஸ்திரப்படி, நாட்டை ஆளவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இனியும் நாம், பேசாமல் இருந்தோமானால், மீண்டும் அடிமைகளாக வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும் பேராபத்து இருக்கிறது. ஆகவே, நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருக்கிறோம் என்பதை உணர்ந்து, நம்மால்,முடிந்தமட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த முயல் வேண்டும். அவரவர்கள் நிலையிலிருந்து, தங்களால்முடிந்தவரை, இந்த அபாயத்தைப்பற்றி விளக்குவோம். அதற்கான கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. தவறவிட்டோமானால், நம்மை அடுத்துவரும் தலைமுறையினர் மன்னிக்கமாட்டார்கள். இதற்காக, கூட்டம்போட்டோ,தெருமுனை பிரச்சாரமோ கூட செய்ய வேண்டும் என்பதில்லை. நம் அக்கபக்கத்திலிருப்போர்,உறவினர்கள், நண்பர்கள், நம் குடியிருப்புகளில் வேலைசெய்யும் சகோதரர்கள்,சகோதரிகள், என அனைவரிடமும் அரசியல் பற்றி பேசுவோம். நாட்டின் நிலை என்னவென்று  புரியவைப்போம். 10 வயதிற்கு மேலுள்ள குழந்தைகளிடம் கூட,அவர்களுக்கு புரியும் வகையில், அரசியலை கற்று கொடுப்போம். தமிழகத்தின், கடந்தகால அரசியலையும், நிகழ்கால அரசியலையும்,  சமூகநீதியையும், திராவிடத்தையும், நம்முடைய வாழ்வியலையும், கற்பிப்போம். 




#அரசியல்_பேசுவோம் #புரிதலை_ஏற்படுத்துவோம் 

Tuesday, 1 May 2018

உழைப்பாளர்தின வாழ்த்துகள்.!

உலகெங்கிலும் , நிறமும், பொருளாதாரமும் தான் அதிகாரத்தன்மையை நிலைநிறுத்தி, அதன் மூலம் ஏழை, பணக்காரன் என்ற பேதத்தை உண்டாக்கி, முதலாளி, தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், இந்த இந்திய தேசத்திலோ, இந்த இரண்டையும் வருணத்தில் இணைத்து, எப்போதுமே சமதத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தந்திரமாக பிறப்பிலேயே பேதம் கற்பித்து, இதனை, இந்த ஜாதிய கட்டமைப்பை உண்டாக்கிய கடவுளால் கூட மாற்ற முடியாது என்ற ஹிந்துத்துவத் தத்துவத்தை பரப்பியுள்ளனர். 

அதன் தொடர்ச்சி தான், உன்னுடைய கடமையை செய், ஆனால், அதற்கான உரிமையை கேட்டுவிடாதே, எப்போதும் அடிமையாக இருந்துகொண்டே வாழ்ந்து மடி என்று போதிக்கும், வலியுறுத்தும், 

' கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே ' 

என்ற சொற்றொடர்.!


ஊழியத்திற்குக்கேற்ற ஊதியம், நியாயமாக நிர்ணயிக்கப்பட்ட நேரம்  என்பது தான் நீதி, நேர்மை, உரிமை என ஒடுக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து போராடி, தங்கள் உரிமையை நிலைநாட்டிக்கொண்ட மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு தினம் #மேதினம்.  உழைப்பாளர்களுக்கான ஒரு தினம். உழைப்பை மதிக்க வேண்டும் என்று பறைசாற்றிய ஒரு தினம்...மே  1 - ஆம் தேதியான இன்றைய தினம். நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.!

அதிகார வர்க்கம் என்றைக்கும் அடங்கிவிடாது. நேரம், காலம் பார்த்து, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, அடிமைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தும். விழிப்புடன் இருக்க வேண்டியது நம் கடமை. . வரலாறுகளை அடுத்த தலைமுறையினருக்கும் கற்பிப்போம்.!  

#தொழிலாளர்தினவாழ்த்துகள் 


#MayDay