Tuesday, 28 August 2018

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.




அறிஞர் அண்ணா, கலைஞர் இருவரும் தலைமைப் பொறுப்பேற்ற சமயத்தை விட, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது தமிழ்நாடு. சுயநலமிக்க நயவஞ்சக நரிகள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், தளபதி ஸ்டாலின் அவர்கள் திராவிடமுன்னேற்ற கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கிறார். 

இந்த பொறுப்பு மலர் படுக்கை அல்ல. குத்தி கிழிக்கக்கூடிய கூரிய முட்களால் சூழப்பட்டிருக்கும், விலை மதிப்பற்ற ஒரு உயிர். சூழப்பட்டிருக்கும் முட்களை வெட்டி விழ்த்தெறிந்துவிட்டு, பாதுகாப்பான சமூகநீதி பாதையை உருவாக்கி, அதை வெற்றி பாதையாக்கி, வரும் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,ஆதிக்கசக்தியிடம் அடகு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.!

என்றைக்கும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் , தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் வீரமணி என்றால், ஆரியத்த்திற்கு சிம்ம சொப்பனம் தான். ஆதலால் தான், அவர்களை விமர்சிப்பதே  முக்கிய வேலையாக வைத்திருக்கிறது. தளபதி ஸ்டாலினை தங்கள் பக்கம் இழுத்து விட முடியும் என்ற பகற்கனவில் இருந்தது. அது முடியாமல்போகும் பட்சத்தில், அழகிரி மூலம் திமுகவை கைப்பற்ற சூழ்ச்சிவலை பின்னுகிறது. ஆனால், எப்போதும் இந்தப்  போராட்டக்களத்தில், திராவிடம் வெற்றிபெற்றுக்கொண்டே தான் இருக்கும்.  
திராவிடத்திடம் முக்குடைபடுவதே வழக்கமாக கொண்டிருக்கிறது ஆரியம்.!

மிகச் சரியாக வழிகாட்டும் தலைவர்கள் அருகாமையில் இருக்கிறார்கள். அவர்களின் துணை கொண்டும், தனது சிறப்புமிக்க ஆளுமையினாலும், மிகப்பெரிய அளவில்  ஸ்டாலின் அவர்கள் சாதித்து காட்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அன்பு வாழ்த்துகள்.! 

Friday, 10 August 2018

ஆகஸ்ட் - 7


#மறக்கமுடியாதஇரவுஆகஸ்ட் 7

அன்று  இரவு தொலைப்பேசியில் பேசியபோது, குரல் உடைகிறது. உடனே மகன், 
" வீடியோ காலில் பேசுகிறேன் தாத்தா ... " என்று சொல்லிவிட்டு , என் அப்பாவிற்கு  வீடியோவின் மூலம் அழைக்கிறான்.

அலைப்பேசியில், பார்க்கும்போது முகம் அழுதது போல இருந்தது. கண்கள் அதனை உறுதி செய்தன.
" அழுதீங்களா ... தாத்தா ? "
" ம்ம்ம் ... ஆமா, என்னுடைய 15 வயசிலிருந்தே கலைஞரை ரொம்பபிடிக்கும். அதான் ...."

சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, 

"என்ன செய்றது ..வயசாயிடுச்சி... அடுத்ததலைமுறைக்கு வழிவிட்டுட்டு போயிட்டாரு., நிறையவே  செய்ஞ்சிட்டாரு ... அவரை போல இனி யாரும் வரமுடியாது.  அவருக்கே,மெரினாவில் இடமில்லை என்பதயெல்லாம் ஏத்துக்கவே முடியாது...."

உடனே என் மகன், 
" தாத்தா, மூணு தலைமுறைகளை அழ வைச்சிட்டாரு கலைஞர். நீங்க அழுதிருக்கீங்க ...அம்மாவும் அழுதுட்டாங்க... நானும் அழுதுட்டேன் ...
சாப்பிடீங்களா தாத்தா ? " என்றான்.

" இல்லை ... இனிமேல் தான் ..."

அப்போது மணி 9.30. எப்பவும் 8 மணிக்கே சாப்பிடக்கூடியவர்கள். அன்று ஒன்பதரை வரை சாப்பிடவும் இல்லை. இந்த துக்கம், சோகம், அழுத்தம், அழுகை எல்லாமே மூன்று தலைமுறைகளை தாக்கியிருக்கிறது. 

இதுபோல் அனைவரின் வீட்டிலும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கலைஞர் என்ற மாபெரும் ஆளுமை மறைந்துவிட்டார் என்று இப்போதும்கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இப்போது மட்டுமல்ல, என்றைக்கும் அவர் நம் எல்லோரின்  மனதிலும் நீங்கமற நிறைந்திருப்பார் என்பது தான் உண்மை.!

அரசியல் தளத்தில், சமூகநீதி, சமத்துவம், சமூகநலன், ஆகியவற்றிலும், கலை, இலக்கியம், எழுத்து, பேச்சு என அவருடைய பங்களிப்பு, பணிகள் அளப்பரியது. இதுவரை, நாம் தான் இணையத்தில், திராவிடக்கருத்தியல்களைப்பற்றி, திராவிட இயக்கத்தைப்பற்றி, திமுகவைப்பற்றி ,  கலைஞரின் சாதனைகளைப்பற்றி என  சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், ஒருநாளில் மட்டும், அனைத்து  தொலைக்காட்சிகளும் வரிசையாக எல்லாவற்றையும்  பதிவு செய்திருகின்றனவே.!
 
இனி திமுக என்ன செய்தது என்ற கேள்விக்கு இடம் இருக்கிறதா ...   என்ன???

இவ்வளவு சிறப்புவாய்ந்த மாமனிதருக்கு மெரினாவில் இடமில்லை என வரிந்துக்கட்டிக்கொண்டு இறங்கிய ஆரியக்கூட்டத்தையும் ஒரு பதம் பார்த்துவிட்டு தான் ஓய்வெடுத்திருக்கிறார் #கலைஞர் 

இறந்தபிறகும், இவரின் மீது இவ்வளவு வன்மம் என்றால், பார்ப்பனீயம் எவ்வளவு ஆபத்தானது என்பதை,  உணராதவர்கள்  உணரவேண்டும். இல்லையேல், நாம்  உணர வைக்க வேண்டும்.  சமூகம் சார்ந்த சீர்திருத்தங்கள் , மாற்றங்கள், களையெடுத்தல் , முன்னேற்றம் முதலியனவற்றை  ஆரம்பத்தில், நீதிக்கட்சி , அதன் பிறகு  திராவிடர் கழகம்  தொடர்ந்து செய்துவருகிறது. ஆனால், அரசியலை பொருத்தவரை, இவைகளை ஆட்சியின் மூலம், சட்டங்கள் இயற்றி,  செயல்படுத்த  திமுக மட்டுமேயுள்ளது என்பது பார்ப்பனியத்திற்கு நன்கு தெரியும். அதனால் தான் இறப்பிலும்  கூட இந்தயளவிற்கு வன்மத்தை காட்டுகிறது. 

புரியாதவர்களுக்கு கூட இப்போது புரிந்திருக்க வேண்டும். இடம் தர முடியாது என்ற அறிவிப்பு தலைமை செயலர் பெயரில் அறிவிக்கப்படுகிறது. அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடுபவர் அவரின் கணவர். இதற்கிடையில், ஊடகங்களில், இடம் தரக்கூடாது என்று சொல்பவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள்.!

இது ஆரிய-திராவிடப்போரின் உச்சக்கட்டம் என்றே தோன்றுகிறது. இதில் அனைவரும் கைகோர்க்கவில்லையென்றால், தோல்வி நிச்சயம். இனியும் ஒருவரையொருவர் குறைகாணாமல், கருத்துவேறுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றுபட்டு மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். அதற்காக போராடுவோம். தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவோம். திமுகவிற்கு, தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு  துணை நிற்போம். திமுகவும், அனைவரையும் அரவணைத்து, போராட்டகளத்தில் வெற்றிப்பெற்று, தந்தை  பெரியார் அவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்தி, அவர்கள் வழியை பின்பற்றிய பேரறிஞா அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் சிறப்பானப் பணியை செவ்வனே தொடரட்டும். 

தமிழ்நாட்டை வளமாக்கிட, மேலும் உயர்த்திப்பிடிக்க நாமும் உதவியாக இருப்போம் .! 

பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிசங்கள்.!











 

Tuesday, 7 August 2018

கலைஞர்

கலைஞர் , கலைஞர் , கலைஞர்  மனம் முழுக்க அவர் மட்டுமே .... வேறு எந்த சிந்தனையும் உள்நுழைய முடியவில்லை. 

என்னுடைய பத்து வயதில் கலைஞருடைய பேச்சைமுதன்முதலாக  நேரில் கேட்டிருக்கிறேன். அதுவரை அரசியல், தமிழ், சமூகம் சார்ந்த பார்வையும், பற்றும் சிறிதும் கிடையாது. அவருடைய பேச்சோ,குரலோ, நகைச்சுவையோ எது என்று தெரியவில்லை...  ஏதோ ஓன்று  முழுவதுமாக   ஈர்த்தது. அதன்பிறகு தான்  தமிழ் மீது ஆர்வம் வந்தது. தமிழ்ப் பாடத்தை ரசித்து படித்திருக்கிறேன். அரசியல் , சமூகம் சார்ந்த புரிதலை அனா, ஆவன்னா போட்டு துவங்கி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். பிறகு பதினெட்டாவது வயதில் பெரியாரைப் படிக்க ஆரம்பித்தவுடன், முழு தெளிவும் கிடைத்தது எனலாம்!.

கலைஞர் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல... இந்திய வரலாற்றிலும் முதன்மையானவர். கல்வெட்டில் பதிய வேண்டிய அளவிற்கு சாதனைகளைப்  படைத்திருப்பவர். இந்தியாவிற்கு சமூகநீதியையும், சமத்துவத்தையும் கற்றுக்கொடுத்தது தமிழ் நாடு என்பது எந்தயளவிற்கு உண்மையோ, அதுபோல், பெரியாரின் சமூகசீர்திருத்த கொள்கைகளை சட்டமாக்கியத்தில் கலைஞருக்கு மிகச்சிறந்த  பங்குண்டு.!

#என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார் கலைஞர்.
#போராளிகளுக்கும் சாதனையாளர்களுக்கும் மறைவு என்ற ஓன்று கிடையாது 

Saturday, 4 August 2018

பிரசவம் என்பது விளையாட்டல்ல.!

கடந்த இரு தினங்களாக சில பதிவுகளை படித்து வருகிறோம். சுகபிரசவம் என்பது அலோபதியில் செய்வதில்லை இயற்கை வைத்தியம் சிறந்தது என்பது போன்ற பதிவுகள். இதற்கும் பலருடைய ஆதரவு இருக்கிறது என்பது வேதனையான விசயம். இயற்கை வைத்தியம் சிறந்தது தான் .எதற்கெல்லாம் சிறந்தது... தலைவலி, காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு, உணவு செரியாமை  என சில வலிகளுக்கு தேவலாம். அதுகூட, சரியாகவில்லை என்றால், மருத்துவரை அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காலம் இது. !

பிரசவம் என்பது அப்படிப்பட்ட விசயமா.....?

 எங்கள் ஆத்தா (அப்பாவின் அம்மா) பிரசவத்தின் போது தான் உயிரிழந்தார்கள். அப்போது அவர்களுடைய வயது 35 தான். வெளிவரமுடியாத குழந்தையை, வயிற்றை அமுக்கி, நாள்  முழுவதும் அவஸ்தைக்குள்ளாக்கி , கதற, கதற குழந்தையை வெளியே வர வைத்திருக்கிறார்கள். மிக அதிக உதிரப்போக்கின் காரணமாகவும், வலி தாங்கமுடியாமலும், தொப்புள்கொடி சரியாக அறுக்காததாலும், மயக்கநிலைக்கு சென்று கடைசியில் இறந்திருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்போது தான் இம்மாதிரி உயிரிழப்புகள் அரிதாக இருக்கின்றன. 60, 70 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஒருவர் அல்லது பலர் என்ற விகிதத்தில் பெண்கள் இறந்திருக்கிறார்கள். இது சர்வ சாதாரணம். அப்போதெல்லாம் பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பு போன்றது. ஆதலால் தான், பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது பிடித்தது எல்லாம் செய்துகொடுத்து சாப்பிடும் பழக்கமே  வந்தது என்று எங்கள் அம்மா எனக்கு சொல்லியிருக்கிறார்கள். குழந்தையை பிளசெண்டா சுற்றிகொளவ்து என்பதை கொடி சுற்றி பிறப்பது , குழந்தை திரும்ப முடியாமல், வெளிவர சிரமப்பட்டு, மூச்சுத்திணறி இறத்தல், குழந்தை வெளிவர முடியாத  நிலையில் அதிக வலி காரணமாக, தாய்மார்களுக்கு புத்தி பேதலித்தல், மற்ற உடல் உபாதைகள், என்ற பல சிக்கல்கள் ஏற்பட்டு  பல குழந்தைகள் இறந்திருக்கின்றன. தாய்மார்களும் இறந்திருக்கிறார்கள்.  தாயும் சேயும் பிழைப்பது கடினம், எதாவது ஒரு உயிர் தான் பிழைக்க வைக்க முடியும் என்ற சொல்லாடலை நாம் இப்போது எங்கேனும் கேட்க முடிகிறதா... ?

அக்காலத்தில், வீட்டில் பிரசவம் பார்த்தார்கள் என்றால், அங்கு, அனுபவமிக்க மருத்துவச்சி என்ற ஒருவர் இருப்பார். அவர் தான் பிரசவம் பார்ப்பார். அப்படியிருந்தும் இறப்புகளை  தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. இந்த இறப்பு விகிதம் அதிக அளவில் குறைந்திருக்கிறது என்றால், அதற்கு மருத்துவமனை சிகிச்சை என்பது மறுக்கமுடியாத ஓன்று. இதில் வியாபாரம் இருக்கிறது என்று சொல்வத்தில் உண்மை இருக்க தான் செய்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. கல்வி, மருத்துவம் என எல்லாமே வியாபாரமாக போன காலத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது வெட்கப்பட வேண்டிய விசயம் தான். ஆனால், அதற்காக, இந்த தவறுகளை திருத்திக்கொள்ள, நீக்க  முயற்சி செய்யவேண்டுமே  தவிர, தவிர்க்கிறோம் என்ற நிலைக்கு செல்லுதல் என்பது எப்படி அறிவுடையமை ஆகும்?

. இதிலென்ன உச்சகட்டக் கொடுமையென்றால், அங்கீகாரம் பெற்ற நிறுவனமோ, நல்ல பயிற்சிபெற்ற ஆசிரியர்களோ இல்லாமல், ஒருவார இலவச பயிற்சி என்றும், உன் குழாய் மூலம் கற்றுக்கொண்டு பிரசவம் பார்ப்பது என்பது தான். இதனை ஏற்றுக்கொள்ள தான் முடியுமா..???

யூ டியூப் மூலம் கற்றுக்கொள்ள பிரசவம் என்ன பிரியாணி செய்வது போன்றதா...!!!

ஒரு உயிரை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமா...???

இதிலும்  கூட ஆணாதிக்கசிந்தனை இருக்கிறதென்றால், சிறிதும் சகித்துக்கொள்ள முடியாது. விழிப்புணர்வு ஏற்படுத்துவது  மிகவும் அவசியம். இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் வராமல் தடுப்பது அரசின் தலையாய கடமை.!

மிக விரைவில், இந்த விசயத்தில் தமிழக சுகாதார துறை கடும் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது...  தமிழக அரசிற்கு மிக்க  நன்றி.!