நேற்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு , மணமான ஆண், மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்தால் குற்றமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற ஒரு தீர்ப்பு , பாலின சமத்துவம் மற்றும் பெண்களை ஒரு காமப்பொருளாக, மனைவி என்பவள் ஆண்களின் உடைமைகளாக பார்க்கப்படும் 497 சட்டப்பிரிவு நீக்கம் மிகச்சிறந்த வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு ... ஏன்???
எல்லாவற்றிலும் பெண்களுக்கு சமத்துவம் கிடைத்துவிட்டதா ... பிறகு எதற்கு இதற்கு மட்டும் சமத்துவம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு....
எனக்கு 13 வயது இருக்கும் காலக்கட்டத்தில், நாங்கள் வசித்துக்கொண்டிருந்தப் பகுதியில், எங்கள் தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி, ஒரு குடும்பம். அப்போதே படித்த குடும்பம். அப்பா ரயில்வேயில் வேலை செய்கிறார். அம்மா இல்ல நிர்வாகி. மூத்த மகளுக்கு மாநில அரசாங்கத்தில் வேலை. அவரின் இணையர், மத்திய தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்றுகிறார். அடுத்த மகன் எம்.ஏ. படித்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிவிட்டு பிறந்ததால், இளைய மகன் என்னுடைய வயது. வெவ்வேறு பள்ளி என்றாலும், ஒரே டியூசனில் படித்துக்கொண்டிருந்ததால், நட்பு ரீதியாக அவரகளின் குடும்பம் பற்றி ஓரளவிற்கு தெரியும். அந்த குடும்பத்தில், அப்போது நடந்த விசயங்களை அம்மா, மற்றும் தெருவில் உள்ள மற்ற அம்மாக்கள் பேசிக்கொள்வார்கள். அப்போது சிறிய வயது என்பதனால், அவ்வளவாக புரியவில்லை. வளர, வளர புரிந்தது. இரண்டாவது மகன் இருக்கிறாரே, அதாவது, தனியார் கம்பனியில் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் மகன், ஒரு பெண்ணை காதலிக்கிறாராம். அதுவும், அப்பெண், ஒரு ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த பெண். அப்போதெல்லாம், அவர்களை கேவலமாக பேசுவார்கள். அவர்களின் கலாச்சாரம் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் நம்மவர்களுக்கு இருக்காது. ஆனால், எனக்கு மட்டும் அவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களுடைய வாழ்வியலை தெரிந்துகொள்வதில் தனி ஆர்வம் உண்டு. அக்குடும்பத்த்து பெண்களின் ஆடை, ஸ்லீவ்லெஸ் கவுன், சிகப்பு உதட்டுச்சாயம், ஹீல்ஸ் வைத்த செருப்பு எல்லாமுமே பிடிக்கும். மிகவும் ரசித்திருக்கிறேன். ஓகே ... நம் பதிவின் நோக்கத்திற்கு வருவோம்.
இந்த செய்தி தெரியவந்ததும், உடனே அவர்களின் மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒத்துக்க மாட்டேன் என்றிருந்த மகனை எப்படியே ஒத்துக்க வைத்து, திருமணமும் நடந்து விட்டது. அந்தக்காவும் அழகாக இருப்பார்கள். ஒரு பரிசோதனைக்கூடத்தில், லேப் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிவதாக கூறினார்கள். ஓராண்டில் ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. ஆனால், அவரின் கணவர், இன்னமும், அந்த ஆங்கிலோ -இந்தியன் பெண்ணிடம் தொடர்பில் தான் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், இந்த உண்மை அந்த அக்காவிற்கு தெரியவந்து, வீட்டில் மிகப்பெரிய சண்டை. பிறகு தன்னுடைய கைக்குழந்தையுடன், அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு ஆறுமாத இடைவெளிக்கு பின், பெரியவர்கள் சமாதானம் செய்து மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அதுவும், ஒரு வருடம் என்று தான் நினைக்கிறேன். மீண்டும் அதே பிரச்சனை... இப்போதும் சண்டைபோட்டு சென்று விட்டார். ஆனால், இம்முறை திரும்பி வரவே இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அவரை கடைசியாக பார்த்திருக்கிறேன். அதன்பிறகு இன்று வரை அந்த அக்காவை பார்க்கவே இல்லை. அவர்களின் மகனும், அந்த ஆங்கிலோ -இந்தியன் பெண் வீட்டிற்கே சென்று விட்டார். திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக கேள்வி. சமீபத்தில், ஆறு மாதத்திற்கு முன்பு, என்னுடன் படித்த அக்குடும்பத்து, இரண்டாவது மகனைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தெரிய வந்த செய்தி என்னவென்றால், அவனுடைய அண்ணன், மாரடைப்பால் இறந்துவிட்டார். ஆங்கிலோ-இந்தியப்பெண்ணிற்கு பிறந்த மகள் மருத்துவராகி இருக்கிறார். மற்றும் அவனுடைய அண்ணி, தனியாக வாழ்த்துக்கொண்டிருக்கிறார். பெற்றோர்கள் இறந்து விட்டனர். உடன்பிறந்தவர்களும் கூட இல்லை. திருமணமாகி தனித்தனியே வாழ்கிறார்கள். மகன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான். திருமணம் கூட ஆகிவிட்டது.
அந்த அக்காவின் நிலைமையிலிருந்து பாருங்களேன். பெற்றோர் செய்துவைத்த திருமணம். சரியாக அமையவில்லை. 25 வயதில் கணவனைப்பிரிந்தவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மகனுக்காக மட்டுமே வாழ்ந்து, மகனும், தன்னைவிட்டு பணி நிமித்தமாக வெளிநாடு சென்றபிறகு, தற்போது தனியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இதில், அவருடைய தவறு எதாவது இருக்கிறதா...???
எதற்கு இந்த தண்டனை???
மணவிலக்கு பெற்றுக்கொண்டு, வேறு ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவரின் பெற்றோரும் முயற்சிக்கவில்லை, உடன்பிறந்தவர்களும் உணரவில்லை.!
இந்த 30 ஆண்டுகளில், அவருக்குப்பிடித்த ஒரு நல்ல மனிதரையாவது அவர் சந்தித்திருக்க மாட்டாரா???
இவருடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்காதா???
தன்னை உணர்ந்த, தன்னை மதிக்கும் , ஒரு நல்ல நண்பன் வேண்டும் என்ற ஏக்கம் இருந்திருக்காதா... என்ன ???
இல்லையென்ற பதில் வந்தால், அது இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் மீதுள்ள அச்சத்தினால் சொல்லும் பொய்யாக தான் இருக்க முடியும்.. அந்த ஏக்கம், எதிர்பார்ப்பு வருவது தானே இயல்பு.
இந்த அக்காவை போன்று ஆயிரமாயிரம் பெண்கள் நம் சமூகத்தில் இருப்பார்கள். இது தான் நிதர்சனம். இவர்கள் தங்களை, தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு வாழ பழக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். இவராவது பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவரின் கல்வியும், பொருளாதாரமும், தனியாக வாழ துணிச்சலை கொடுத்திருக்கிறது.
கல்வியறிவு இல்லாத பெண்கள் என்ன செய்வார்கள்?
பிடிக்காத வாழ்வை ஏற்றுக்கொண்டு, தங்களுக்குளேயே, புழுங்கி வாழ்ந்து சாவார்கள். அது முடியவில்லையென்றால், தற்கொலை செய்துகொண்டு சாவார்கள். இது தானே காலகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தை, சுக்குநூறாக உடைத்திருக்கிறது இந்த தீர்ப்பு என்பது தானே மறுக்கமுடியாத உண்மை.
" கற்பு என்ற ஓன்று இருக்குமானால், அது இருபாலாருக்கும் வேண்டும். ஆண் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் வாழலாம்,. பெண் மட்டும் ஒரு கணவருடன் தான் வாழவேண்டும் என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது. அன்பில்லாத, தனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழாமல், மணவிலக்குபெற்றுக்கொண்டு, வெளியில் வந்து தனக்கு பிடித்தவருடன் வாழும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். "
என 90 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறாரே .. #தந்தைபெரியார்.
பெரியாரின் கருத்துகள், கொள்கைகள் ஒவ்வொன்றாக வெற்றிபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அது ஒரு default . எது நியாயமோ, எது நேர்மையோ, எது உண்மையோ அது வென்று தானே வேண்டும்.
இந்த தீர்ப்பு, ஆண்களை தப்பிக்க விடுகிறது. பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பார்வையில் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தோமானால், பெண் விடுதலை என்பது முழுவதும் சாத்தியமாகாது. பெண்கள், கல்வி, பொருளாதாரம், திருமணம், ஆகிய உரிமைகளை தாண்டி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லக்கூடியது. இது அடுத்த படி என்பதை விட, இது தான் பெண்களின் விடுதலைக்கான நுழைவாயில் என்பது என்னுடைய கருத்து. இது ஒரு தனிமனித சுதந்திரம் என்பது மட்டுமல்லாமல், பாலியல் சுதந்திரமாக பார்க்கப்பட வேண்டும். இவ்வளவு காலம், திருமணம் என்ற ஒன்று பெண்களை முன்னேறவிடாமல், கட்டிப்போட்டு வைத்திருந்தது. மேலும், இந்த தீர்ப்பு, சம்பந்தப்பட்டவர்கள் மணவிலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனால், குடும்ப கட்டமைப்பு சிதைந்துவிடும் என்று சொல்வது ஒரு வகையில், சரி என்று எடுத்துக்கொண்டாலும், இந்த குடும்ப கட்டமைப்பு தானே இவ்வளவு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அவர்களை முன்னேற விடாமல், அழுத்தி வைத்திருந்தது என்பதையும் பார்க்கக் வேண்டுமல்லவா. அது மட்டுமல்ல ... பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு பதில், பிரிந்துவந்து, பிடித்தவருடன் வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
கலாச்சாரம் சீரழிந்துவிடும் என்று, கலாச்சாரத்தை, முகமூடியாக அணிந்து கொண்டு வரும் கலாச்சார காவலர்கள், நீங்கள் மதிக்கும், புராண, இதிகாசங்கள், பெண்களை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக சித்தரித்திருக்கிறது, சூதாட வைக்கும் ஒரு பொருளாக, உடைமையாக பார்த்திருக்கிறது , பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என கேவலப்படுத்தியிருக்கிறது என்பதை உணர வேண்டும்.
" கணவன் எப்படிப்பட்டவனாகினும், மனைவி அவனுக்கு பணிவிடை செய்தல் வேண்டும். அப்போது தான் அவள் ஒரு பதிவிரதை."
என்று சொல்லும் மனு(அ)தருமத்தின் பெண்ணடிமைத்தனத்தை, இந்த தீர்ப்பு , அடித்து நொறுக்கி இருக்கிறதல்லவா.!!!
இதையும் மீறி , உங்களின் மனத்தடைக்கு கலாச்சாரம் தான் காரணம் என்றால்,
கத்துவாவில், 9 வயது குழந்தையை கோவிலில் கட்டிப்போட்டு, 7 நாட்கள் 5 பேர்கள் தொடந்து பாலியல் வன்புணர்வு செய்து, மிகவும் கொடூரமாக கொன்றார்களே ... இதோ நம் சென்னையில், காது கேளாத, பேசமுடியாத 7 வயது குழந்தையை, 69 வயது வரையுள்ள கிழவன் வரை 6 மாதகாலம் தொடந்து பாலியல் பலாத்காரம் செய்தனரே , இதையெல்லாம் உங்கள் கலாச்சாரம் அனுமதிக்கிறதா ... அப்படிப்பட்ட கலாச்சாரம் இருந்து தான் என்ன பயன்???
பெண்ணடிமைத்தனத்தை வளர்த்துவிட்டுக்கொண்டிருக்கும், இந்த பாஜக ஆட்சியில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்ததே வியக்குரியதாக இருக்கிறது. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்காமல், சமமாக பார்க்கப்படுவதற்கு வழிவகை செய்து, அதற்கு எதிராக இருந்த 497 சட்டப்பிரிவை நீக்கியது என்பது, வரவேற்க வேண்டிய, மிக அருமையான ஒரு தீர்ப்பு.!