Wednesday, 17 October 2018

அர்த்தமுள்ள இந்துமதத்தில் தான் எவ்வளவு கட்டுப்பாடுகள்.!

கேரளாவில், நிலக்கல்லில், கோவிலுக்கு போகும் பெண்பக்தர் கார் மீது கல் வீச்சு.!

செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் கார் மீதும் கல் வீச்சு.!

ஒரு வயதான பெண்மணியை, போராட்டக்களத்தில் அழைத்துவந்து உட்கார வைக்கின்றனர் காவிகள்.!

அனைத்து  வயது பெண்கள் எல்லாம் சேர்ந்து , பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று போராடுகின்றனர்.!

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், ஏன் இந்த வன்முறைகள்...?

இது தான், எப்போதும் அவர்களுடைய தந்திரமாக இருக்கிறது.! 

நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்துவது போல், ஒடுக்கப்படுத்தப்பட்டவர்கள் மூலமாகவே, ஒடுக்கப்படுத்தப்பட்டவர்களை தாக்குவது.!

"  நீ எவ்வளவு தான் முன்னேறினாலும், நீ ஒரு பெண், நீ ஒரு பெண், உன்னுடைய சுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டது , இதற்கு மேல் உனக்கு அனுமதியில்லை என்பதை பெண்கள் மூலமாகவே,, பெண்களுக்கு அச்சுறுத்துவது ..."

அர்த்தமுள்ள இந்துமதத்தில்(!) தான் எத்தனை, எத்தனை கட்டுப்பாடுகள், வன்முறைகள், மனிதநேயமற்ற கோட்பாடுகள்.!

Tuesday, 16 October 2018

பெரியார் உலகத்திற்கான தலைவர்.

பெரியாரை, கன்னடவெறியர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார் என்று சொல்லும் தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றார்கள். பெரியார், சூத்திரர்களுக்கு மட்டும் தான் உழைத்தார். தலித் மக்களை கண்டுக்கவே இல்லை என்று சொல்லும் தலித்தியம் பேசுபவர்களும்  இருக்கிறார்கள்.!

இதற்கெல்லாம் பலபடிகள் பின்னுக்கு  போய் , பாரிசாலன் என்பவர், " கிருஷ்ணதேவாயர் காலத்தில், தமிழர்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்களாம். அவர்களுக்கு பக்கத்தில், பார்ப்பனர்கள் இருந்தார்களாம். பிரிட்டிஷ் ஆட்சி வந்தபிறகு , அந்த பார்ப்பனர்கள் இவர்களை மதிக்காமல், ஆங்கிலேயர்களிடம் போய்விட்டார்களாம். அதனால், தான் பெரியார் பார்ப்பனர்களை எதிர்கிறாராம்." என்று ஏதோதோ உளறிக்கொட்டும் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது. அதில் பேசப்படும் அனைத்தும், எவ்வளவு பொய்கள், பித்தலாட்டங்கள்... 

பெரியார் என்பவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவிற்கு மட்டுமல்ல .. உலகத்திற்கான தலைவர்.

தந்தை பெரியாரை விமர்சியுங்கள். ஆனால், அதற்கு முன்னாள், அவரை நன்கு படித்துவிட்டு வந்து பேசுங்கள். 

இதோ, கீழே கொடுக்கப்பட்டவை, பெரியாரே சொன்னவை....

 இதற்கும் பிறகும், உங்களால் பெரியாரை புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அதில், காழ்ப்புணர்ச்சி மட்டுமே இருக்கமுடியுமே தவிர உண்மை சிறிதும் இருக்க வாய்ப்பில்லை.!

" வலிமையான நாடு வலிமைகுறைந்த நாட்டை ஆக்கிரமிக்க நினைக்குமேயானால் நான் “ஒடுக்கப்படும்” நாட்டின் பக்கம் நின்று பெரிய நாட்டை எதிர்ப்பேன்.

அந்த வலிமை குறைந்த நாட்டில் ஒரு பெரிய மதமிருந்து அது மற்ற மதங்களை “ஒடுக்குமானால்” நான் அந்த பெரிய மதத்தை எதிர்த்து போராடுவேன்.

அந்த சிறு மதங்களில் சாதி இருந்து அதில் மேல் சாதிக்காரன் சிலரை கீழ் சாதியென “ஒடுக்கினால்” நான் கீழ்சாதிக்காரன் பக்கம் நின்று மேல்சாதிக்காரனை எதிர்ப்பேன்

அந்த கீழ்சாதிக்காரன் ஒரு தொழிற்சாலை நடத்தி ஒரு முதலாளியாக நின்று தொழிலாளிகளின் “உரிமையை பறிப்பானேயானால்”  நான் தொழிலாளி பக்கம் நின்று முதலாளியை எதிர்ப்பேன்.

நான் உழைப்பவன் என்கிற பெயரில் அந்த தொழிலாளி வீட்டில் பெண்ணை “ஒடுக்குவானேயானால்” நான் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் இருந்து அந்த தொழிலாளியை எதிர்ப்பேன்."

- பெரியார்.

Thursday, 11 October 2018

சர்வதேச பெண்குழந்தைகள் தினம்.

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். இங்கே பெண்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூட முடியவில்லை. அதுவும், பெண்களுக்கு பாதுகாப்பு  இல்லை என்று சொல்வது போய், தற்போது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லக் கூடியளவிற்கு  பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கும்  காலத்தில் நாம் இருக்கிறோம்.!
மாற்றப்படவேண்டியவை இங்கு நிறைய இருக்கின்றன. எந்தவொரு மாற்றமும், சீர்திருத்தமும் நம் வீடுகளிலிருந்து துவங்குவோம்.!

#அக்டோபர்11
#சர்வதேச_பெண்குழந்தைகள்_தினம் 

Tuesday, 9 October 2018

பரியேறும் பெருமாள் BABL (மேல ஒரு கோடு)

திரையிடப்பட்டு 10 நாட்களுக்குப்பிறகு தான்  பார்க்க முடிந்தது. அதற்குள், எத்தனை, எத்தனை முகநூல் பதிவுகள், வாட்ஸ்ஆப் பதிவுகள் என படித்து, ஓரளவிற்கு கதை தெரிந்துவிட்டது. அப்படியிருந்தும், போய் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே, மனம் கனக்க தொடங்கிவிட்டது. கண்களில் நீர் வழிவதை தடுக்கமுடியவில்லை. படம் முடிந்தும், மனஅழுத்தம் தொடர்கிறது. அந்த பாதிப்பிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். இதில் யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது . பார்த்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்திருக்கும். 
அப்படி என்ன தான் சொல்லப்பட்டிருக்கிறது .. அந்த படத்தில்???
நிஜத்தை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை, நடந்துகொண்டிருக்கும் உண்மைகளை அப்படியே சற்றும் பிசகாமல், வாழ்ந்துகாட்டிருக்கிறார்கள். அதனால் தான், அதில் சினிமா தனம் கொஞ்சம் கூட இல்லாமல், பார்பபவர்களையும், புளியங்குளம் என்ற ஊருக்கே அழைத்து  சென்று, அந்த வாழ்வியலோடு சேர்ந்து நம்மையும் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் தோழர் மாரி செல்வராஜ் அவர்கள்.
எல்லோருமே எழுதிவிட்டார்கள். நாம் என்ன எழுத போகிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால், இப்படம் தொடர்ந்து எழுதப்பட வேண்டும். பேசப்பட வேண்டும். விவாதத்திற்கு உட்பட வேண்டும். அப்போது தான் பரியன்கள் நாடு முழுவதும் அறியப்படுவார்கள். ஜாதிவெறியின் வன்மத்தை, இந்தளவிற்கு எந்த தமிழ் சினிமாவும் இதற்கு முன்னால் சொன்னதில்லை. உங்களுக்கு தெரிந்த, அறிந்த, பழகிய அனைவரிடமும் இப்படத்தைப் பார்க்க சொல்லுங்கள். பார்த்தவர்களை, உரையாடச் சொல்லுங்கள். 

ஒவ்வொரு காட்சியும் நம்மை பல கேள்விக்குள்ளாக்குகிறது. பரியன் ஆங்கிலம் தெரியாமல், கேலிசெய்யப்படும்போது, கிராமங்களில், இன்னமும் சரியான ஆங்கில கல்வி , ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.  இடைநிலை ஜாதியினரின், ஜாதிவெறி  கொடுமை, தீண்டாமை  எந்தளவிற்கு ஒடுக்கப்படுத்தப்பட்ட , தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களின் மீது தாக்கி, அவர்களின் வாழ்வை சின்னாபின்னமாக ஆக்குகிறது என்பதை இதைவிட தெளிவாக, நேர்மையாக, பக்குவமாக சொல்லிவிட முடியாது. தோழியின் இல்ல திருமணத்திற்கு செல்லும் பிரியன் மீது தாக்குதல் நடத்தி, அவனுடைய முகத்தில் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு ஜாதிவெறி இருக்கிறது என்பதை பார்க்கும்போது, இப்படிப்பட்ட சமூகத்திலா  நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கோவமும், குற்றவுணர்ச்சியும் மேலோங்குகிறது. பரியனின் தந்தையுடைய வேட்டியை உருவி, ரோட்டில் கையை கூப்பி, கதறி அழுதபடி, ஓடவிடும் காட்சி இருக்கிறதே,  சகமனிதனை , மனிதனாக மதிக்காத, இந்த ஜாதிய கட்டமைப்பு சமூகத்தின் மீது, உச்சப்பட்ச அருவெறுப்பு  வந்ததை மறுப்பதற்கில்லை. 

ஜாதிவெறிபிடித்த, அந்த வில்லன் கிழவனை காட்டும்போதெல்லாம், ' ஐயோ.. இப்ப என்ன செய்ய போகிறானோ .. ' என்ற அச்சம் படம் முழுவதும் இருந்துகொண்டே இருந்தது. ஆனந்த்கள் அதிகமாக உருவாக வேண்டும். அப்போது தான் பரியன்கள்  ஊக்குவிக்கப்படுவார்கள். கல்லூரி முதல்வர்,  சொல்வது போல், பரியன்கள் மேலே வருவதற்கு, கல்வி மட்டும் தான் அவர்களுக்கான முதல்படி. பெரியார் போராடி வெற்றிபெற்ற இடஒதுக்கீடு இச்சமூகத்தை மேலே ஏறவைக்கும் ஏணியாக இருக்கிறது. அண்ணலும், பெரியாரும்  இந்த ஜாதியொழிப்பிற்கு ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்.   இருந்தும் இன்னமும், இப்படி தான் இருக்கிறது என்பதை சகித்துக்கொள்ளமுடியவில்லை. படிப்பதற்கு இடஒதுக்கீடு என்ற உரிமை கிடைத்தும், இவர்கள் படித்து மேலே வருவதற்குள், எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது மிகவும் கொடுமையான விசயமாக இருக்கிறது.

" இந்த விண்வெளியுகத்திலும்,  ஒரு தனிமனிதன் தன்னுடைய கடுமையான முயற்சிகளுக்கு  பிறகே, தன்னுடைய ஜாதியின் எல்லைகளை மீறி, வாழ முடியும். ஜாதியைப் பற்றி, நுட்பமான, ஆழமானப் பார்வை கிடைக்கும்போது,  அதற்கான தீர்வுகளும் நம் கண்ணில் புலப்படும் " 

என்று பேராசிரியர் தொ.பரமசிவன் தன்னுடைய பண்பாட்டு அசைவுகள் நூலில் சொல்லியிருப்பார். அது தான் இப்படம் சொல்லும் கருத்தும். நடந்துக்கொண்டிருக்கும், உண்மைகளை நம் கண்முன்னே காட்டியிருக்கிறார். இதற்கான தீர்வு, இந்த ஜாதிய சமூகத்தில் வாழும் மக்களாகிய நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிளைமேக்ஸ் மிகச்சிறப்பு. அது தான் இப்படத்தை, சினிமாதனத்திலிருந்து, அப்பாற்பட்ட இயல்புநிலைக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. மக்களை சிந்திக்க வைக்கும், இம்மாதிரி படங்கள் அதிகம் வர வேண்டும். இப்படத்தை 10 நாட்களில், இந்த அளவிற்கு வெற்றிபெற்ற வைத்ததில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் தோழர் ரஞ்சித் அவர்களுக்கும், இயக்குனர் தோழர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கும், படத்தில் நடித்த மொத்த படக்குழுவினருக்கும் எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் தகும்.  

மேலும், மேலும், பரியன்கள் அதிகளவில் வருவதற்கு வாழ்த்துகள்.!

#பரியேறும்பெருமாள் 

Monday, 1 October 2018

மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அரசுகள்.!

மக்களுக்கு விருப்பமில்லாதவற்றை அரசு செய்யாது என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, மறுபுறம் , தங்களுக்குரிய மக்கள்விரோதப் போக்கையே கடைபிடித்துக்கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இதோ, இன்று, தமிழகத்தில், மூன்று இடங்களில் ஹைடிரோகார்பன் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. அதில் ஓன்று, ஒஎன்ஜிசிக்கும், மற்ற இரண்டு வேதாந்தா குழுமத்திற்கும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, மக்கள் கருத்து என்ற பெயரில், வேறு இடத்திலிருந்து, ஆட்களை கொணர்ந்து, அவர்களுக்கு சாதகமாக சொல்ல வைத்து விட்டது. இன்னும் பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கவேண்டும். அவ்வளவு தான். அதன்பிறகு அதுவும் இயங்க தொடங்கிவிடும். போராட்டத்தை, துப்பாக்கிசூடு மூலம் நிறுத்தியாகி விட்டது. உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் கொடுத்தாகிவிட்டது.  ஆலை திறப்பதினால், அவர்களுக்கு என்ன கேடு வந்துவிட போகிறது.நோயினால், இறப்பவர்கள் நம் மக்கள் தானே. ஒடுக்கப்படுத்தப்பட்ட மனிதவளம் ஆரோக்கியமாக இருந்தால், அவர்களுக்கு ஆபத்து என தெரிந்து தானே செய்கின்றன.!

இன்னும் என்ன பாக்கி இருக்கிறது ...  நியூட்ரினோ, எட்டுவழிசாலை. அதுவும் இதேபோல் தகிடுதித்தம் செய்தாவது காரியத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். கனிமவளங்களை அழித்தல், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, பொருளாதாரம் என அனைத்தையும் முடக்கிவிட்டு, அதன்முலம் தங்களின் மனுநீதியை பறைசாற்றிக்கொள்ள எத்தனித்திருக்கிறது #பார்ப்பனியம். அதன் கைக்கூலிகளாக நம் மாநில அரசு செயல்படுகிறது. இன்று வடக்கிலிருந்து ஒரு குரல்... சுமித்ரா மகாஜன் மூலமாக ... ' இடஒதுக்கீடு நாட்டின் வளர்ச்சியை கொடுக்குமா?' என்ற ஒரு கேள்வி.!

இடஒதுக்கீடு இதுவரை வளர்ச்சியை கொடுக்கவில்லையா... ஒடுக்கப்படுத்தப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகவும், வக்கீல்களாகவும், ஆசிரியர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும், கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறி இருக்கிறார்களே ...  ஒரு சமூகமே முன்னேறிக்கொண்டிருக்கிறது. அது முன்னேற்றமாக தெரியவில்லை அவர்களுக்கு.! 
ஏனென்றால், அவர்களை பொருத்தவரை, நாமெல்லாம் மனிதர்களே அல்ல என்பது தான்.!

நேற்று, ஒரு காணொளியில், அய்யா. சுபவீ அவர்கள் பேசும் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர்கள் ஒன்றை தெளிவாக சொல்கிறார்கள்....
" நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால், யாரை எதிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்."
இந்த புரிதல் தான் இப்போது நம் எல்லோருக்கும் தேவை. நாம் எதிர்க்க வேண்டியவர்கள், மக்கள் நலனில் விருப்பமில்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால், மக்களுக்கு கெடுதல் செய்வதில் முனைப்பு காட்டுபவர்கள். ஒற்றை தத்துவத்தில் நம்பிக்கைகொண்டு, அதை செயல்படுத்த துடித்துக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசும் ,  மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் அடகுவைத்துவிட்டு துணைபோய் கொண்டிருக்கும் , அதிமுகவும் தான் என்பதை   உணர வேண்டும் நணபர்களே. இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில், நாம் எல்லோரும், அவரவர்கள் தளத்தில் இருந்துகொண்டே  செயல் படுத்துவோம். இனியும் தாமதிக்காமல், விரைவாக இந்த பணி முடிப்போம். புற்று போல் பேரழிவை தரக்கூடிய இந்த இரு ஆட்சிகளையும் விரட்டியடிப்போம்.!