Monday, 30 December 2019

நீண்ட நாட்களுக்குப் பிறகு " சிறகு மின்னிதழில் " எனது சிறுகதை.   சிறகிற்கு மிக்க நன்றி.

http://siragu.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

Saturday, 27 July 2019

Friday, 21 June 2019

யோகா உடற்பயிற்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை!

" இது உடற்பயிற்சி தானே ... இதுல என்னங்க பிரச்சனை இருக்கு? "

" உடற்பயிற்சியாக மட்டும் பார்க்கப்பட்டால் ஓகே , ஆனால் அதை மதத்துடன் சேர்ப்பது சரியில்லையே?
பல மதத்தை சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில், எல்லோரும் செய்ய வேண்டும் என்று திணிப்பது தவறு தானே? "

" அதான், ஓம் என்று சொல்ல வேண்டியதில்லை என்று சொல்கிறார்களே..." 

" இப்ப இப்படி தான் சொல்வார்கள். வேறு எப்படி சொல்வார்கள்!யோகா கட்டாயம் ஆனபிறகு ,  ஓம் சொல்லியே ஆக வேண்டும் என்ற விதிமுறைகள் வரும்.  இது இப்ப, சிலருக்கு தெரியாது ...  எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும்,   ஓம் என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிலை வரும்போது தான் அது திணிப்பாக தெரிய வரும். மதவெறி என்று புரியும்."

" எனக்கு அப்படி தோணலைங்க ... எல்லாமே சந்தேகமாப்  பார்க்க முடியாது ... இல்லையா "

" எல்லாமே சந்தேகமாக தான் பார்க்க வேண்டும். இந்த ஹிந்துத்வ ஆட்சியில், எல்லாமே நமக்கு எதிராக செய்யப்படும் செயல்கள்  தான். ஒண்ணுமில்ல,  நம் மக்களவையில், வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் போது, அவர்களுக்கு ஏன் அப்படி கோபம் வர வேண்டும். யோசிச்சு பாருங்க... பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், திராவிடம் எல்லாவற்றையும் கூட விட்டுவிடுவோம். இந்திய மொழிகளில் ஒன்று தானே தமிழ்.  #தமிழ்வாழ்க என்பது கூட அவர்களை பதட்டமடைய வைக்கிறது என்றால் என்ன பொருள்? 
அதற்கு ஏன் பாரத் மாதாக்கி ஜே என்று சொல்ல வேண்டும்?
நாம் சமூக தலைவர்களை வாழ்க என்று சொன்னால், அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று எதற்கு சொல்ல வேண்டும்?
அதனால் தான் இவர்களின் அனைத்து செயல்களுக்கு பின்னால் ஹிந்துத்துவம் இருக்கிறது என்பது உறுதி. கை  புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லையே..."

" நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டும் போலவே .."


இது, இன்று காலை, உறவினர் ஒருவருடன் நடந்த உரையாடல். கடைசியில், அவர் சற்று தெளிவடைந்த நிலையில், சிரித்த சிரிப்பு மகிழ்ச்சியைத்  தந்தது. 
தற்போதைய நிலையில் உரையாடல்கள் மிகவும் முக்கியம் என்பதை மீண்டும் உணர்ந்தேன். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் நண்பர்களே,  கிடைக்கும் தளங்களில் எல்லாம், நாம் ஹிந்துத்துவத்தின் பேராபத்தைப்  பற்றி மக்களிடம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.





Saturday, 15 June 2019

Monday, 3 June 2019

 முத்தமிழறிஞர் #கலைஞரின் 96 வது பிறந்தநாள் விழாவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வில் ,   சில மணித்துளிகளுக்கு முன் நடந்து முடிந்திருக்கும், விழா ஒரு மிக அருமையான விழா. நமக்கெல்லாம் இன்னும் புத்துணர்ச்சியூட்டக்கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஆசிரியர் உட்பட, மதசார்பற்ற கூட்டணித் தலைவர்கள் அனைவரின் உரைகள்  ஒவ்வொன்றும் எனர்ஜி டானிக் போன்று இருந்தன. 

" இன்னும் யுத்தம் முடியவில்லை., ஹிந்துத்துவத்திற்கும், திராவிடத்திற்கும் நடக்கும் போர் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றி பெற்றிருக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் திராவிட கொள்கைகளை கையில் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் " 

என்ற ஆசிரியர் அவர்களின்  தாய் கழகத்திற்கே உரித்தான, அறியுறுத்தலும், 

" எங்களுக்கு பெரியார் வழியிலும் போராட தெரியும், அண்ணா வழியிலும் போராட தெரியும் "

என்ற தளபதி அவர்களின் உரையும், வைகோ அவர்களின், உணர்ச்சிமிக்க அதே சமயம் ஆவேச உரையும், எழுச்சித் தமிழர் தோழர் 
திருமா அவர்களின், " இந்தித் திணிப்பு என்பது மொழி திணிப்பு மட்டுமல்ல, கலாசார திணிப்பு " என்றும்,  ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும் காப்பாற்றுவதற்கான , முத்தாய்ப்பான முன்னெடுப்புகளுக்கான உரையும், காங்கிரஸ் ,  கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் , முஸ்லீம் லீக் தலைவர்களின் உரைகளும் நமக்கு உத்வேகத்தை ஊட்டுவதாக இருக்கின்றன. 

தேர்தல் முடிவுகள் வந்தது ஒரு வாரமே  ஆன நிலையில், எத்தனை எத்தனை இடர்கள், ஹைட்ரோகார்பன் கிணறு தோன்றுவதற்கான பணிகள்,  கெயில் குழாய் பதிக்க ஆயுத்தம், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு, இந்தி திணிப்பு என , அவசர, அவசரமாக செயல்படுகிறது மத்திய மோடி அரசு. இனி பாஜக என்னன்ன செய்ய போகிறதோ என்ற பேரச்சம் நம் எல்லோர் மனதிலும் உழற்றிக் கொண்டிருக்கும் போது, இந்த விழா கூட்டத்தின் பேச்சுக்கள், இந்த கொள்கைக் கூட்டணி , தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கப்போகிறது. மதவாத பாஜக மோடி அரசு, என்ன தீங்கு விளைவித்தாலும், அவைகளை எதிர்த்து, போராடி, வென்று காட்டக்கூடியது என்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. 



சிறகில் மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை .  சிறகிற்கு நன்றி ...


http://siragu.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

Friday, 24 May 2019

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்!

நாம் எது நடந்துவிடக்கூடாது என்று நினைத்தோமோ, அது நடந்தே விட்டது. 2014-ல் நடந்தது போல,,,, நேற்றைய தேர்தல் முடிவுகள், தொடக்கத்திலேயே நம்மை மிகவும்  சோர்வடைய தான்  செய்தது. பாஜக வெற்றியை சிறிதும் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், ஒருபுறம் திமுக கூட்டணியின் தொடர் வெற்றி நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 38 - 1 என்று வந்தபிறகு மனம் குதூகலித்தது. அந்த ஒன்றும் நமக்கு வந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. இந்தியாவே, பாஜகவை கொண்டாடும்போது தமிழ்நாடு முழுவதும்  விரட்டியடித்திருக்கிறது என்ற செய்தி, பெரு மகிழ்ச்சியைத் தந்தது!
அதன் பிறகு, தோழர் திருமா அவர்கள் பின்னடைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, முன்னிலை, பிறகு பின்னடைவு என்ற செய்தி மனதை பிசைய தான் செய்தது. ஏதோ தில்லுமுல்லு செய்கிறார்கள் போல என்ற கோபம் வந்தது. இரவு 12.45 வரை இழுக்கடித்து, அதற்கு மேல் முடியாது என்ற நிலை வந்தபிறகு தான் வெற்றி அறிவிப்பை வெளியிட்டார்கள்.  தோழர் திருமா வெற்றி அறிவிப்பைக் கண்டவுடன் தான் படுக்கைக்கு போக வேண்டும் என்று தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். முனைவர் தோழர் திருமாவளவன் அவர்களின் வெற்றி, பேரானந்தம் தந்தது. இழந்த ஒன்றைப் பற்றி(தேனி ) மனம் நினைக்கவில்லை. பரவாயில்லை, போகட்டும், அது நேர்மையான முறையில் பதியப்பட்டதா, எண்ணப்பட்டதா என்று தெளிவில்லை!.

திமுக கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றிபெற்றது சாதாரணமானதல்ல. அவ்வளவு தான் , இனி திமுக மேலே எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற ஏகடிகம் பேசிய வாய்க்கெல்லாம் பூட்டு போட்டாகிவிட்டது.  தமிழ்நாட்டு மக்கள், மதத்தையும், அரசியலையும் ஒன்றாகப் பார்க்க மாட்டார்கள், இது சமூகநீதி மண், பெரியாரின் மண் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். நாங்கள் கோவிலுக்கு போவோம், சாங்கியம்,  சடங்குகள் கூட செய்வோம், ஆனால், ஒருபோதும், மதவாதத்திற்கு துணைபோக மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர். 

மேலும் இந்த வெற்றிக்கு மிகவும் உழைத்தவர், தளபதி ஸ்டாலின் என்றால் மிகையில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே தொடர்ந்து , தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் பரப்புரை. சுடும் வெயிலையும் தாண்டி எவ்வளவு பயணங்கள். கிராமசபை கூட்டங்கள் , பொதுக்கூட்டங்கள்,  நடைபயணம் என கொஞ்சம் கூட சோர்வில்லாமல் மக்களை சந்தித்தார் தளபதி. அதன் பயன் தான் இந்த அமோக வெற்றி என்று சொல்ல வேண்டும். 
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நம்முடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இனி வரும் காலங்களில், தமிழகம் பல சோதனைகளை, சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு போர்க்களமாக மாற  வேண்டிய சூழல் கூட ஏற்படும். அனைத்தையும் நாம் உறுதியுடன் எதிர்நோக்குவோம். இந்த காவிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும்  சமூகநீதிக்காக  தங்கள் பங்களிப்பை ஈந்த  அனைத்து தலைவர்களின்  பேச்சுக்களை, எழுத்துக்களை, கொள்கைகளை  நம்மால் முடிந்தளவு அனைத்து  தளங்களிலும் கொண்டுபோய் சேர்ப்போம். மக்களை சிந்திக்க வைப்பது ஒன்றே நம்முடைய பணியாக கொண்டு செயல்படுவோம்!

இன்று இந்த தேர்தல் முடிவுகள், இந்தியாவிலேயே,  தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்தது என்பதை காண்பித்திருக்கிறது!

ஆரியத்தின் சூழ்ச்சியை  எதிர்க்க திராவிடம் என்ற ஒன்றினால் மட்டுமே முடியும் என்பதை நடத்திக்காட்டுவோம்! 







Wednesday, 22 May 2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஓராண்டு நினைவஞ்சலி.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, சுத்தமான காற்றுக்காகவும், சுத்தமான நீருக்காகவும் அறவழியில் போராடிய மக்களை சுட்டு வீழ்த்திய படு கேவலமான அரசாங்கம் இது. 16 வயது மாணவி உட்பட 13 பேரை குறி வைத்து , சுட்டு  படுகொலை செய்திருக்கிறது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓராண்டு முடியபோகிறது. ஆனால்,  இதுவரை இதற்கான விசாரணையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. சுடுவதற்கு யார் உத்தரவிட்டார்கள்? முதலமைச்சரே டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறுகிறார். காவல்துறை முதலவரிடம்இருக்கிறது. சுடுவதற்கு நன்கு பயிற்சிபெற்ற ஒரு குழு இறக்கி விடப்பட்டிருக்கிறது. எப்போதும் ரெடியாக வைத்திருக்கும் ஒரு பதிலை, அதாவது, போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டனர் என்பதை  காரணமாக கூறியது காவல்துறை. 
இதில் எந்த சமூகவிரோதிகளும் கலக்கவில்லை. போராட்டம் இனிமேல் வலுபெற்றுவிடக்கூடாது என்ற ஒரே  நோக்கத்தில் தான் துப்பாக்கிசூடு நடந்தேறி இருக்கிறது, ஆவேசமாக காவல்துறையும், சில அதிகாரிகளும் நடந்துகொண்டதையும், வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுவதையும், தீ  வைப்பதையும், சிசிடிவி கேமெராக்கள் , பதிவு செய்துவிடக்கூடாது என்று வேண்டுமென்றே திருப்பி வைப்பதையும், மிக துல்லியமாக கண்டுபிடித்து, அதன் முதல் காணொளியை கூட வெளியிட்டார் தோழர் முகிலன் அவர்கள்.  அதற்குமேல் , அவரை செயல்பட விட்டுவிட கூடாது என்ற காரணத்தினால், கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றியும் இதுவரை எதுவுமே தெரியவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை, கொடுக்கப்பட்ட புகார்களுக்கு  பதிலுமில்லை.

துப்பாக்கிசூடு நடந்து ,ஓராண்டு ஆகிய நிலையில், தற்போது நினைவேந்தல் நிகழ்விற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் காவலர்கள் அங்கு குவிக்கப்படுகின்றனர்.!

இது மக்களுக்கான ஆட்சி அல்ல. மக்களை துன்புறுத்தும் ஒரு ஆட்சி என்பதை ஒவ்வொரு செயலிலும் உறுதிப்படுத்தி கொண்டே  வருகிறது அதிமுக அடிமை அரசு!
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை  எதிர்த்து,  வன்மையான கண்டங்களை தெரிவிப்பதோடு, மக்களிடம் உண்மை நிலையினை , விழிப்புணர்வினை கொண்டுபோய் சேர்ப்போம்!

#WeRememberTuticorinMassacre
#BanSterlite
#WhereIsMugilan?

Monday, 15 April 2019

பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது ... ஏன்???

நாம் பாஜகவை பற்றி புதிதாக இன்று எழுதவில்லை. கடந்த  ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து எழுதிக்கொண்டுதானிருக்கிறோம். இந்த அய்ந்தாண்டு காலகட்டத்தில் நம்மை எங்கே நிம்மதியாக வாழவிட்டது இந்த பாசிச பாஜக அரசு. ஒருவித பதட்டத்துடனும், அச்சத்துடனும் தானே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இனி வரும் காலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், நாம் 100 சதவிகித அடிமை வாழ்க்கையை தான்  வாழ வேண்டிவரும்.  மனிதகுலத்திற்கு பேரழிவு ஏற்படக்கூடிய பேராபத்தும் இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.

பாசிச பாஜகவின் அராஜக ஆட்சியைப்பற்றி , சுருக்கமாக சொல்ல நினைத்தாலும், இது கொஞ்சம் நீண்ட பதிவு தான் நண்பர்களே.

 2014-க்கு பிறகு நாம் எதையும் மறந்திருக்க முடியாது. இருப்பினும், நினைவுபடுத்துதல் இச்சமயத்தில் முக்கியமானது என்று தோன்றுகிறது.  

*ஆட்சிக்கு வந்தவுடனே, சமஸ்கிருத வாரம் என்று அறிவித்தது. அதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியது. அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சம்ஸ்கிருதம் கட்டாய பாடமாக அறிவித்தது. நவோதயப்பள்ளி தமிழகத்தில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் சிலவற்றிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிடைப்பில்  போடப்பட்டுள்ளது.*

* யோகாதினம்  என்ற பெயரில், யோகம்  என்ற உடற்பயிற்சியை, மதத்துடன் சேர்த்து பள்ளிகளில் புகுத்தி, பிறமதத்தினரின் உணர்வுகளை இழிவுபடுத்தியது.*

* மாட்டிறைச்சி தடை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதன்மூலம் இஸ்லாம் மக்களையும், தாழ்த்தபடுத்தப்பட்ட மக்களையும் இன்றுவரை துன்புறுத்தி வருகிறது. இதனால் எத்தனை கொலைகளை அரங்கேற்றி இருக்கிறது இந்த பாஜக அரசு. தடை நீக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும்  கடந்த வாரம்  கூட , பசு மாட்டு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மதவெறியர்களால்  அசாம் மாநிலத்தில், இஸ்லாம் மதத்தைசேர்ந்த ஒரு முதியவர் தாக்கப்பட்டார் என்ற செய்தி வருகிறது.*

* மத மறுப்பு காதல் திருமணம் செய்துகொள்ளும் இந்து பெண்களை, வீட்டினுள் புகுந்து வெளியே இழுத்துவரப்பட்டு, அப்பெண்ணின் முன்னிலையில், இஸ்லாம் மதத்தை சேர்ந்த அவள் கணவனை தாக்குதலுக்கு உட்படுத்துதலும், இருவரையும் பிரித்து, அச்சுறுத்துதல்.*

* கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்று திடீரென்று, ஒரே இரவில், பணமதிப்பிழப்பை கொண்டுவந்து, மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. தங்களுடைய பணத்தை எடுக்கமுடியாமல் , வீதிகளில் அலைந்த மக்கள், இதனால் உயிரிழந்த மக்கள், என அத்தனை அதிலியன்களையும் செய்து முடித்தது. கடைசியில் கறுப்புப்பணம் மீட்கப்படவுமில்லை. இதனால், பாஜக மிகப்பெரிய ஊழலை செய்து முடித்திருக்கிறது என்ற தகவல் இப்போது வந்துகொண்டிருக்கிறது.*

* அடுத்து, நீட்  தேர்வு. இதன்  பாதிப்பு சாதாரணமானதல்ல. நம் கல்வியின் உரிமையை பறிக்க, பாஜக தொடுத்த  முதல் அம்பு  இது தான். நம் கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்து , மகள் அனிதாவின் உயிரை பழிவாங்கியது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில், குலக்கல்வித் திட்டத்தை அமல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தியது பாசிச பாஜக.*

* ஒரே வரி என்ற பெயரில், ஜிஎஸ்டி கொண்டுவந்து சிறு குறு வணிகர்களின் வாழ்க்கையை படு பாதாளத்தில் கொண்டுபோய் விட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கையும் கூட இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.*

* மழை பொய்த்து போனதால், விவசாயம் செய்யமுடியாத விவசாயிகள், கடன் சுமையால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, கடன் தள்ளுபடி கேட்டு போராடியும் அதற்கு செவிமடுக்காத பாஜக அரசில்  தான் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயிருக்கின்றனர்.*

* மீத்தேன், ஹைட்ரோ  கார்பன், கெய்ல் குழாய் பதித்தல், எட்டுவழி சாலை, என எதனை போராட்டங்களை சந்தித்திருக்கிறது தமிழகம்.*

* மீனவர்கள், நெசவாளர்கள், சிறுகுறு வணிகர்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வாதாரத்தையும் இந்த ஐந்து ஆண்டுகளில் தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.*

* சுத்தமான கற்று வேண்டும் என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று  அறவழியில் போராடிய தூத்துக்குடி மக்களில் , 13 பேரை சுட்டு கொன்றிருக்கிறது இந்த பாசிச பாஜக அரசு.*

* பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில், முதலிடத்தை இந்தியா பெற்றிருப்பதும் இதே பாசிச பாஜக ஆட்சியில் தான். குழந்தை ஆசிபா முதல், 275 இளம் பெண்கள் பாதிப்பிற்குள்ளான  பொள்ளாச்சி பயங்கரம் வரை இந்த காவிகளின் பங்கு அதி முக்கியமாக  இருக்கிறது.*

* படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலையில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டிருக்கிறது. பக்கோடா போட்டு பிழைந்துகொள்ளுங்கள் என்று மோடி சொன்ன அவலங்களும் அரங்கேறின.*

* நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி. ஜிடிபி  2 சதவிகிதம் சரிவால், 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.*

* விலைவாசி உயர்வு. மக்களின் கழுத்தை நெறிக்குமளவிற்கு விலைவாசி கடும் உயர்வு.*

* இடஒதுக்கீட்டிற்கு  இடையூறு செய்யும் பொருட்டு, உயர்ஜாதியினர்க்கு பொருளாதரரீதியாக 10% இடஒதுக்கீடு என்று அமல்படுத்தியது.*

* கார்ப்பரேட் கம்பனிகளை வளர்த்து விட்டு, மக்களின் வயிற்றில் அடித்தல், கார்ப்பரேட் சாமியார்களுக்கு வேண்டிய நிதி, நிலம் என பெருமளவில் ஒதுக்கி அவர்களை வளர்த்துவிடுவது.*

* தன்னாட்சி அமைப்புகளான, சிபிஐ, ஆர்பிஐ, முடக்குவதற்கு முயற்சி செய்தது பாஜக ஆட்சியில் தான்.*

* இவர்களின் ஆட்சியில் நடக்கும் அராஜகங்களை  எதிர்த்து கேட்பவர்கள், எழுதுபவர்களை, கொலை செய்வது. (கல்புர்கி, கோவிந்த பன்சாரே, தபோல்கர், கௌரி லிங்கேஷ் ) நம் தமிழகத்தில் , ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் சில உண்மைகளை கண்டறிந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.*

* உச்சநீதிமன்றநீதிபதிகள், தங்களாவே முன்வந்து, ஊடகங்களுக்கு , மக்களாட்சிக்கு பெரும் ஆபத்து என பேட்டி அளிக்குமளவிற்கு மத்திய அரசின் தலையீடு இருந்தது.*

-----------------------------------------------------------------------------------------------------

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பாசிச பாஜக ஆட்சியில் நமக்கு நடந்த அத்தனை கேடுகளையும் சொல்லி மாளாது.

கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், என அனைத்து துறைகளிலும் உள்ள மக்கள் ஒரே கருத்தாக , பாசிச பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது கடைசியாக , இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் 150 பேர் , இராணுவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர் என்ற செய்தியும் வந்திருக்கிறது!

ஆதலால் நண்பர்களே, பாசிச பாஜகவிற்கும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு  வாக்களிக்காதீர்கள்.

ஐந்தாண்டுகளில் , மற்ற முடியாத தேர்தல் இது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு, சர்வாதிகாரம் எழக்கூடிய தேர்தல் இந்த 2019 மக்களவைத் தேர்தல் என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள். இப்போதே 70 லிருந்து 80 சதவிகிதம் சர்வாதிகார ஆட்சி தான் நடந்துகொண்டிருக்கிறது.. மறுபடியும் பாஜகவை தேர்ந்தெடுத்தால், மீதமுள்ளவையும் செயல்படுத்தப்பட்டு, முழு சர்வாதிகார ஆட்சியாக உருவெடுக்கும்.

100, 200 ஆண்டுகளுக்கு முன்பு, நம் முன்னோர்கள் அடிமைகளாக வாழ்ந்த வாழ்க்கையை, நம் வருங்கால சந்தியினருக்கு கொடுத்து விடாதீர்கள். நாமே, நம் பேரன், பெயர்த்திகளின் தலையில் மண்ணை அள்ளிகொட்டக்கூடிய படு பாதக செயலை செய்ய வேண்டாம். 

#பாசிச பாஜக கூட்டணியை படு தோல்வியடைய செய்வோம் 

#திமுக, காங்கிரஸ் விசிக, கம்யூனிஸ்ட் மார்க்சிய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கொமதேக  கூட்டணியை அமோக வெற்றிபெற செய்வோம்.



 

Monday, 8 April 2019

பெரியார் ஒரு தத்துவ எரிமலை.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், பெரியாரின் சிலை உடைக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனங்கள். இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்,  இந்த மாநில அரசு.  

#பெரியாரின் உருவ சிலையை நாம் மிகவும் மதிக்கிறோம். அதைவிட அவருடைய கொள்கைகளை, திராவிடக் கருத்தியல்களை மதிக்கிறோம், போற்றுகிறோம். பின்பற்றுகிறோம், பரப்புரை செய்கிறோம் என்பது தானே உண்மை. இன்று உடைக்கப்பட்டிருக்கும் தந்தை பெரியாரின் ஒரு  சிலை, நாளையே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சிலைகளாக உருவெடுக்கும் என்பதும்,  இன்னும் பல மடங்கு பெரியார் இளைஞர்களின் மத்தியில் சென்றடைவார் என்பதும், இங்கு இருக்கும் ஆரியக்கூட்டத்திற்கு விளங்காது. ஆயிரம் முறை குட்டுப்பட்டாலும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவு இல்லை. தோல்வி  அச்சத்தில் இருக்கும் மத்திய, மாநில ஆளும் கட்சிகள் தேர்தல் நேரத்தில், எதையாவது செய்து குழப்பங்கள் விளைவிக்கலாம் என்று நினைக்கிறது. மேலும் , இதனால்  கலவரங்களைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் தேர்தலையே நிறுத்த கூட தயங்காது இந்த குள்ளநரிக்கூட்டம்!

" பெரியார் ஒரு தத்துவ எரிமலை, வெடித்தால் அதன் தாக்கத்தை தாங்கமுடியாது.."

என்பதை உணர்ந்து செயல்படட்டும் #பார்ப்பனீயம் 





Sunday, 7 April 2019

சிறகு மின்னிதழில்,  " தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல் படட்டும்" என்ற தலைப்பில்   வெளிவந்திருக்கும் எனது  கட்டுரை .. சிறகிற்கு நன்றி!

http://siragu.com/ 

Saturday, 30 March 2019

தற்போதைய அரசியல் தெளிவை உண்டாக்குவோம்!

" எலெக்சன்  வருதே ...  நீங்க யாருக்கு ஒட்டு போடுவீங்க ..."
" அது வந்து அக்கா ... ஹி ஹி .."
" பரவாயில்ல .. சொல்லவேண்டா, ஆனா மோடிக்கு மட்டும் போட்டுராதீங்க..."
" சே, சே .. நீங்க வேற  அக்கா, நான் எப்பவும் ரெட்டைஇலைக்கு தான் போடுவேன் ..."
 
நான் அதிர்ச்சியாகி,

" ஐயையோ.. மோடியோட தான் ரெட்டை இலை சேர்ந்திருக்கு... அங்கே போட்டாலும், மோடிக்கு தான் ஜெயிப்பார்.."

" அப்படியா அக்கா... எனக்கு தெரியாதே, அதான் எங்க வூட்டுக்கார் கமலுக்கு போடசொன்னுச்சோ..." ( அப்பாவியாக... )

" கமலுக்கு போட்டாலும் , எலெக்சனுக்கு பின்னாடி மோடிக்கு போக வாய்ப்பிருக்கு... எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்போது ரெட்டைலைக்கு  போட்டீங்க .. சரி,  இப்ப இருக்குற நிலையில நீங்க உதயசூரியனுக்கு போட்டா மட்டும்தான் நாடு உருப்படும். இல்லையான, நாளைக்கு நம்ம பிள்ளைங்க படிக்க முடியாது, பொண்  குழந்தைங்க பாதுகாப்பா இருக்க முடியாது, ஏழைங்க வாழ முடியாது ... நாம போடுற ஓட்டு தான் நாட்டை ஆளுற தலைவரை முடிவு செய்யும்... அதனால நல்லா யோசிச்சு ஒட்டு போடுங்க ..ப்பா..."

" சரி அக்கா, நீங்க சொன்னபிறகு தான்  கொஞ்சம் புரியுது... நமக்கு வேலையே சரியா இருக்கு ..இதையெல்லா யார் நமக்கு சொல்றா... "

" இனிமே, எவ்வளவு தான் வேலையானாலும்,ஓட்டு போடுறப்ப யோசிச்சி போடுங்க ..."

இன்று காலை எங்கள் குடியிருப்பில் வேலை செய்யும் சகோதரி ஒருவருடனான உரையாடல் இது!

அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற செய்தி கூட தெரியாமல் நம் மக்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அனைத்து தன்னதிகார அமைப்புகளையுமே தன்  கட்டுப்பாட்டிற்குள்  வைத்துக்கொண்டு, ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தும் பாஜக, மீண்டுமொருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால், சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும்!

அமமுக, மக்கள்நீதிமய்யம் உட்பட திமுக கூட்டணிக்கு போடாத ஓட்டுக்கள் அனைத்தும் பாஜகவை ஆதரிக்கும் ஓட்டுகளாகவே மாற வாய்ப்பிருக்கிறது. இருக்கும் இந்த குறுகிய காலகட்டத்தில், மக்களிடம்  இந்த செய்தியை, தற்போதைய அரசியல் நிலவரங்களை கொண்டுபோய் சேர்ப்பதில் நம்முடைய பணி தலையாய இடத்தை பெறுகிறது!







தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மண்டலமா!

 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்புணர்வு சம்பவங்களை அடுத்து, மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொல்லப்பட்ட  கோவை  6 வயது குழந்தை ,  தற்போது சேலத்தில் தனியாக அல்லது நண்பர்களுடன், காதலர்களுடன் செல்லும் பெண்கள் என 90 பேருக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதியாக ஆகிவிட்டது போல தோன்றுகிறது . அம்மண்டலத்தில் காவிகள் வளர்ந்துவிட்ட சூழலில்,  நம் பண்பாடு சீரழிந்துவருகிறது என்பதை தான் இந்த கொடுமையான நிகழ்வுகள் காட்டுகின்றன. ஏற்கனவே, அரியலூரில் நந்தினி என்ற 16 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடுரமான முறையில் கொல்லப்பட்டாள். அதற்கு பின்புலத்திலும், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவன் இருக்கிறான் என்று கூறப்பட்ட நிலையில், அந்த வழக்கு என்னவானது என்றே தெரியவில்லை. தற்போதும், கோவை 6 வயது சிறுமி கொல்லப்பட்ட குற்றத்திலும், இந்து பாரத் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, இது குடிபோதை, ஜாதிவெறி, மதவெறி  காமவெறி, பணம் பறித்தல் என்பதையெல்லாம் கடந்து, பெண்களை குறிவைத்து, கலவரங்களை தூண்டக்கூடிய உத்தியா அல்லது தமிழக  பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் ஆணாதிக்க, ஆரிய வழிமுறைகளா என்ற சந்தேகம் வருகிறது.

அது எதுவாக இருந்தாலும்,  குற்றவாளிகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் நேர்மையான, நியாயமான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கடுமையாக  தண்டிக்க வேண்டுமென்றால், நிச்சயம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் தேவை.!


Sunday, 10 March 2019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா!



144 தடை உத்தரவை மீறி, இந்தி எதிர்ப்புப் பிரசார ஊர்வலம் சென்றதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, இவர் செய்தது சட்டபடி குற்றம் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது,  நீதிபதியிடம்,

" எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாக போரிடுவது எமது கடமையாகும். மொழிப்பற்றை மறப்பது நாட்டிற்குத் துரோகம் செய்வதாகும்." 
என்று பதிலளித்தார் #அன்னைமணியம்மையார்.
 
தொடர்ந்து, 

"அதற்காகச்  சட்டத்தை மீறுவது சரியா?"
" சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக் கூட ஒழிப்பதாயிருக்கிறது."
" உங்கள் மதம் என்ன?"
" எனக்கு எந்த மதமும் கிடையாது."
" உங்கள் ஜாதி? "
" திராவிட ஜாதி "
" தடையுத்தரவை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்கக்கூடாது?  சமாதானம் எதாவது சொல்கிறீர்களா? "
" நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றிற்கும். தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்கத் சித்தமாயிருக்கிறேன். தராளமாய் செய்யுங்கள்."
" தங்களுக்கு இரண்டு மாத வெறுங்காவல் தண்டனையளிக்கிறேன்."
"மிக்க மகிழ்ச்சி.. வணக்கம்."

அன்னை மணியம்மையாரின் மனதிடத்திற்கான சான்று இந்த உரையாடல்.
#தோழர்ஓவியா அவர்களின், "கருஞ்சட்டைப் பெண்கள் " நூலிலிருந்து.

" பெரியாரின் தொண்டுக்கு முழுக்க, முழுக்க, என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னை பாவித்துக்கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக்  குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சிகொண்டேன்."
பிறிதொரு சமயத்தில், #அன்னைமணியம்மையார் சொன்னவை. 

" பெரியார் வாழட்டும் என்று தன்  துடிக்கும் இளமையைப் பெரியாருக்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை, அன்னை என்று சொல்லாமல், நாம் வேறு என்ன என்று புகழ்வது!"

#புரட்சிக்கவிஞர்பாரதிதாசன் 

இப்படி பெரியருக்காகவும், அவர்தம் கொள்கைக்காகவும் தன வாழ்நாளையே அர்ப்பணித்தவர் #அன்னைமணியம்மையார். அது மட்டுமா, விடுதலையில், பல கட்டுரைகளை எழுதிய கட்டுரையாளராகவும், "கந்தபுரணமும்,ராமாயணமும்" ஒன்றே என்ற நூலை எழுதிய எழுத்தாளராகவும், வடநாட்டில் கொண்டாடப்படும் ராம்லீலாவிற்கு எதிராக ராவணலீலா நடத்திக்காட்டியவராகவும், உலகிலேயே ஒரு நாத்திக அமைப்பிற்கு தலைமை தாங்கிய முதல் பெண்ணாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக #தந்தைபெரியாரை 94 வயதுவரை தாய்போல பாதுகாத்து வாழவைத்தவரும் #அன்னைமணியம்மையார் அவர்கள்.

இன்று #அன்னைமணியம்மையாரின் நூற்றாண்டுவிழா.! (10.3.1920)

இந்நாளில் வாழ்த்துகள் பரிமாறுவதுடன் சேர்த்து, அவர்தம் செய்வதற்கரிய செயல்பாடுகளை நினைவு கூறுவோம்!

வாழ்க பெரியார்! வாழ்க மணியம்மையார்! வளர்க பகுத்தறிவு!

Wednesday, 6 March 2019

அனுபவங்கள் ஒரு பாடம்!!

நம்ம எல்லோருக்குமே, இப்ப நாம வாழுற இந்த வாழ்க்கையை விட, நம்முடைய சிறுவயது பள்ளிப்பருவ வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் தானே. அது அவ்வளவு வசதியா இருந்திருக்காது. நிறைய வசதி குறைவுகள் இருந்தது என்றாலும் , நம் மனது அந்த வாழ்க்கையை தான் தேடுது. 

குழாய் திறந்தா உடனே தண்ணீர் வராது. குடிக்கிறதுக்கும், புழங்கறத்துக்கும் கிணற்றில் இறைக்க வேண்டும். சாப்பிட வீட்டில் எந்த ஸ்னாக்ஸ்சும் இருக்காது. மூன்று வேளை  உணவு மட்டுமே. எப்பயாவது அம்மா வீட்டிலேயே பலகாரம் செய்து கொடுத்தால் மட்டும் தான். அந்தந்த சீசனில் காய்க்கும் பழங்கள் தள்ளுவண்டியில் வீட்டு வாசலேயே கிடைக்கும். நம்ம தெருவிலேயே கண்ணாம்பூச்சி, நொண்டியடித்தல், பாண்டி, ஸ்கிப்பிங், தென்னம்மட்டையை கொண்டு கிரிக்கெட் விளையாடுதல், கல்லாங்கா, இப்படி விளையாண்டிருக்கோம். நண்பர்களோட சண்டை போடுவோம். உன் பேசி கா என்று சொல்லிவிட்டு,  கொஞ்ச நேரத்துலே பழம் விட்டு  பேசிடுவோம். 

வருசத்துக்கு இரண்டு தடவை மட்டுமே புது  டிரஸ் எடுப்பாங்க.. தீபாவளி, பிறந்தநாள் என்று. பள்ளிக்கூடத்துக்கு மதியம் சாப்பாடு மட்டுமே தான் எடுத்துக்கிட்டு போவோம், தண்ணிப்பாட்டில் எல்லாம் கிடையாது. ஸ்கூல் குழாய்ல கைவைச்சு  குடிப்போம். சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம்  நிறைய சிரிப்போம். ரொம்ப கொஞ்சமா அழுதிருப்போம். முக்கியமா எந்த கவலையும் இல்லாம வாழ்ந்திருக்கோம். பொறுப்புகள் கிடையாது. எதிர்பார்ப்புகள் கிடையாது. ரொம்ப சந்தோசமா இருந்த நாட்கள் அவை. அதை இப்ப நினைச்சா கூட மகிழ்ச்சியா இருக்கு. திரும்பவும் வராதா என்ற ஏக்கமும் கூடவே வருது.!

ஏன் இதையெல்லாம் எழுதுறேன்னு தெரியல. எழுதணும்னு தோணுது.எழுதும்போது மகிழ்ச்சியா  இருக்கு. ஆனா பாருங்க நண்பர்களே, நாம இப்ப இப்படி நினைச்சு சந்தோசப்படுற மாதிரி நாம குழந்தைகள் படமாட்டங்க. நினைச்சு சந்தோசப்பட அவங்களுக்கு எதுவுமே இல்லை , ஏன்னு கேட்டீங்கன்னா, அவங்களுக்கு தான் நாம் அந்த அனுபங்களை கொடுக்கலையே. எப்பப்பார்த்தாலும் படி, படி,  பர்ஸ்ட்  ரேங்க் எடு , ஏன் இந்த சப்ஜெக்ட்ல 3 மார்க் குறைஞ்சுது, கான்செண்ட்ரேட் இல்ல அதான், ஒழுங்கா படி என்று ஒரே அட்வைஸ் தான், வெளியே விளையாட முடியாது. யாருமே வெளியே விளையாடுறதல்ல. வீட்டுக்குளே, வீடியோ  கேம்ஸ், மொபைல், டிவி, கம்ப்யூட்டர் னு மெஷின்களோட பழக  பழக்கப்படுத்தியிருக்கோமே!

எங்கம்மாவுக்கு கிடைத்த அனுபவம் எனக்கு கிடைக்கல, எனக்கு கிடைத்த அனுபவம் என் குழந்தைக்கு கிடைக்கல என்றால் இது என்னங்க வாழ்க்கை. அதில் என்ன சிறப்பு இருக்கு? குழந்தைகள் தனிமையிலும், வெறுமையிலும் வளர்ந்தா, நம்முடைய நாளைய சமூகம்   சீரழிந்து போய்விடாதா? அதனால, இனிமேலாவது, விழித்துக்கொள்வோம்.
குழந்தைகளுக்கு, படிப்பைத்தாண்டி, அனுபவ அறிவு, புத்தக வாசிப்பு முதலிவற்றை அறிமுகப்படுத்தி, நல்ல அனுபவங்களை பெறுவதற்கு  வழி வகுத்துக்கொடுப்போம்.!

Monday, 25 February 2019

ஒரு நாட்டின் பிரதமர் செய்யும் செயலா இது!

உத்தரபிரதேசத்தில், கடந்த மாதம் கும்பமேளா ஆரம்பிக்கும் சமயத்தில், பல துப்புரவுப்பணியாளர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும். ஆற்றில் குளிக்கவரும் சாதுக்கள் வரும்போது எதிரில் வரக்கூடாது என்றும் கூட அச்சுறுத்தப்பட்டனர். இதில், உச்சப்பட்சமாக, ஆற்றை ஒட்டிய சாலையில் வைக்கப்பட்டிருந்த, சாதுக்களின் பைகளை நகர்த்திவைத்துவிட்டு, பெருக்கிய, ஒரு துப்புரவுப்பணியாளரை, ' எப்படி எங்கள் பைகளை நீ தொடலாம்?' என்று மோசமாக தாக்கி, கையை உடைத்தார்கள் என்ற செய்தி கூட வந்தது!

இப்போது என்னவென்றால், நாட்டின் பிரதமர், அய்ந்து (சரியாக தெரியவில்லை, இன்னும் கூடுதலாக கூட இருக்கலாம்) துப்புரவுப்பணியாளைர்களை நாற்காலியில் அமரவைத்து, அவர்களின் கால்களை  கழுவுகிறார். தான் செய்த பாவங்களை போக்குவதற்காக செய்கிறாரா? அது உண்மையென்றால், தான் , இந்த நாட்டின் மக்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த தீங்குகளை , பாஜக மூலமாக, ஆர்.எஸ்.எஸ் கட்டளைகளை நிறைவேற்றியதற்கு வருந்தி அரசியலை விட்டே விலகியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காததால்,  இது உண்மையில்லை! 

பிறகு, எதற்கு இந்த நாடகம்? வரப்போகும் தேர்தலுக்காக  தானே!
மீண்டும் மக்களை ஏமாற்றி, அரியணையில் அமர்ந்து, இன்னும் படுபாதாளத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கும் ஒரு ஏமாற்று நாடகம் என்பது மக்களுக்கு நன்றாகவே விளங்கும். இன்னும் சொல்லப்போனால், வடநாட்டுமக்களுக்கே இப்போது புரிகிறது!

இது எல்லாவற்றையும் விட, ஒரு நாட்டின் பிரதமர் செய்யும் செயலா இது? 
உலகளாவிய அளவில், மற்ற நாடுகள் என்ன நினைக்கும் என்ற எண்ணம் கூட இல்லையே.  ஒரு மத தலைவர் செய்தால், புண்ணியம் தேடிக்கொள்ள செய்கிறார் என்று விட்டுவிடலாம். ஆனால், ஒரு மதசார்பற்ற நாட்டினுடைய பிரதமர் அல்லவா இப்படி செய்கிறார். பிரதமருடைய வேலை இதுவல்லவே!

 துப்புரவுத்தொழிலாளர்களின்  மீது அவ்வளவு கரிசனமா... அப்படி இருப்பது உண்மையென்றால், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கட்டும். அவர்களின் குழந்தைகளுக்கு தேவைப்படும் சலுகைகள் வழங்கட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தட்டும்.
முதலில், அவர்களை மனிதர்களாக மதிக்கட்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, அவர்களின் காலை கழுவினால், அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடுமா?

அதிநவீன  ராக்கெட்விடும் நாட்டில் தான், மனித கழிவை மனிதனே அள்ளும் கொடூரமான அவலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதையே கூட, மோடி எழுதிய ' கர்மயோக்'  புத்தகத்தில், மலமள்ளும் தொழிலாளிகள் கடவுளுக்கு சேவை செய்வது போன்ற புண்ணியம் கிடைக்கும் என்று தானே எழுதியிருக்கிறார். இவர்களின் இந்துத்துவச் சித்தாந்தத்தில், வருணாசிரமம் இருக்க வேண்டும், தீண்டாமை இருக்க வேண்டும். அதை வைத்து தங்கள் பிழைப்பு நடத்த வேண்டும். தேவைப்படும் சமயத்தில், இதுமாதிரி சில நாடகங்களை நடத்தி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இவர்களின் குறிக்கோள்!

தற்போது, கடந்த ஐந்தாண்டுகளில், மோடி அரசால் தாங்கள் பட்ட இன்னல்கள் மூலம் ,  மக்கள் நன்றாவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், நாமும் அவ்வப்போது, பாஜகவின் கொடூரமுகங்களை  நினைவுபடுத்திக்கொண்டும், பாசிச பாஜகவை தோற்கடியுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டும் இருப்பது நம்முடைய கடமை!



 



Thursday, 21 February 2019

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீது திணிக்கப்படும் ஒரு வன்முறை!

காலையில் அலைபேசியில்  மகனிடம்  பேசும்போது, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைக்கப்போவதாக இந்த அடிமை அதிமுக அரசு, மத்திய மோடி அரசின் ஆணையின் பெயரில் அறிவித்திருக்கிறது.  என்ற  இந்த தகவலை சொன்னேன் . அப்போது அவன், ' ஏன் எல்கேஜி யிலிருந்து, 12 வதுவரை தொடர்ந்து பப்ளிக் எக்ஸாம் வைக்க வேண்டியது தானே ? ' என்று கோவமாக கேட்டான். 
' எல்கேஜியில் , ரைம்ஸ் சொல்ல தெரியலையா, அடுத்தவருசமும் நீ எல்கேஜி படி, ஒன்,டூ, த்ரீ, டுவெண்ட்டி வரை சொல்ல தெரியலையா.. நீ அடுத்தவருசமும் யுகேஜி படி' என்ற சட்டம் கொண்டுவரட்டும்... ஒரு மிகப்பெரிய புரட்சியே வெடிக்கும் , இவங்க  சொல்ற தரம் எல்லாம் நம்ம படிக்கக்கூடாது என்பதற்காக  தான் என்று சொன்னான் , இப்படியே அந்த  உரையாடல் நடந்தது.  அப்போது நினைவிற்கு வந்த ஒரு செய்தியை அவனிடம் பகிர்ந்துகொண்டேன்.

  இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு முன்பு, உறவுக்கார பெண் ஒருவர், நல்ல கம்பனியில் பொறியியலாளராக பணியாற்றிவந்தார். அரசுப்பள்ளியில் படித்தவர். அப்போதைய நுழைவுத்தேர்வையும் வெற்றிகொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, நல்ல வேலையில்  இருந்தார். நீண்டநாட்களுக்குப்பிறகு, அவரைச் சந்தித்தபோது,  ' சிறுவயதிலேயே நீங்கள் நன்றாக படிப்பீர்களா ?' என்று நான் கேட்ட கேள்விக்கு, சில நொடிகள் சத்தமாக சிரித்துவிட்டு, பிறகு சொன்னார். 
' நான் ரொம்ப மக்கு. அதிலும் கணக்கு வரவே வராது. எப்பவுமே அதில் குறைந்த மார்க் தானெடுப்பேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது, எங்க டீச்சர், அப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லி, அப்பாவிடம் எச்சரித்தார்கள். காலாண்டு , அரையாண்டு இரண்டிலும் கணக்கில் பெயில் மார்க் வாங்கியிருக்கா .. உங்க பொண்ணு, முழு ஆண்டு பரீட்சையில், இப்படி வாங்கினால், அடுத்த ஆண்டும் இதே வகுப்பில் தான் படிக்க வேண்டும். அதனால், நல்லா படிக்க சொல்லுங்க..' அப்படியெல்லாம் வார்னிங் வாங்குனவ தான்.. ஒன்பதாம் வகுப்பிற்கு பிறகு தான் என்னமோ படிக்க வேண்டும் என்று வெறித்தனமா தோணிச்சி... அப்புறம் வாங்குனதெல்லாம், 50, 60, 70 கூடிகிட்டே போச்சு... பத்தாம் வகுப்பிலே, எங்க பள்ளியிலேயே, கணக்குபரிட்சையில் நான் தான் முதல் மார்க்கு. 94 மார்க் எடுத்தேன் ' என்று சொன்னார். தற்போது அவர், அமெரிக்காவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.

இதல்லாம், மற்ற மாநிலங்களைவிட  தமிழ்நாட்டில் சாத்தியப்படும். ஒன்பதாம் வகுப்பிற்குப்பிறகு, மிக நன்றாகப்படித்து, நுழைவுத்தேர்வை வெற்றிகொள்ள முடியுமளவிற்கு அப்பெண்ணிற்கு அறிவுவளர்ச்சி வந்திருக்கிறது, வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது நம் கண்ணால் கண்ட சான்று. இதுபோல் பலர் இருப்பார்கள். ஆனால், தற்போதிருக்கும், காவிகளின் அரசும், அதற்கு அடிமைசேவகம்  புரியும் இந்த அதிமுக அரசும் ,  தரம் என்று சொல்லிக்கொண்டு, தகுதித்தேர்வு, பொதுத்தேர்வு என்று வைப்பது எல்லாம், புதியகல்விக்கொள்கையின் ஒரு பகுதி தான்.அவர்களின் புதியகல்விக்கொள்கை என்பது, நவீன குலக்கல்வித்திட்டமே ஆகும். மனு (அ)தர்ம  ஆட்சியின் ஒரு கூறு தான். " சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே "  என்ற பார்ப்பன, பாசிச கொடூரத்தின் உச்சக்கட்டம்.

இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இதற்கான ஆணையை திரும்ப பெறும்வரை, எதிர்த்துக்கொண்டே இருப்பது நம் எல்லோருடைய கடமை!

Thursday, 14 February 2019

காதலர்தின வாழ்த்துகள்!

காதலர்தின செய்தி :

கண்டதும் காதல் என்ற இன கவர்ச்சிக்கு ஆளாகாமல், நன்கு பேசி, பழகி, நல்ல நண்பர்களானதும், அவரவர் சுயத்தை, தனித்துவத்தை  மதிக்குமளவிற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டபிறகு காதலர்கள் ஆகுங்கள். ஒருவரை ஒருவர் சாராமல், பொருளாதாரத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டபின், இணையர்களாக வாழ்க்கையில் இணையுங்கள்.

அன்பு மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடியதும், ஜாதி, மதத்தை ,  பெண்ணடிமைத்தனத்தை அடித்து நொறுக்கக்கூடிய பேராற்றல் காதல் திருமணங்களுக்கு இருக்கிறது. ஆதலால் காதல் செய்வீர்!

காதலர்தின வாழ்த்துகள்! 

Monday, 4 February 2019

பெண் சுதந்திரம் குற்றங்களை தடுக்கும்!

பெண்கள் மீது நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஆதிக்கம், அடக்குமுறை  என்பது மிக கொடுமையானது. சுதந்திரமாக சிந்திப்பதிலிருந்து, செயல்படுவது , தீர்மானிப்பது வரை, எல்லாமுமே காலம் காலமாக ஆண்கள் வசம் வைத்திருக்கிறார்கள். இன்னும் சில நேரங்களில், ஆணாதிக்கசிந்தனையுள்ள பெண்களை கூடவே வைத்துக்கொண்டும் தங்கள் விருப்பங்களை, எண்ணங்களை சாதித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக, பெண் தற்கொலை,  கணவனை கொலை செய்த மனைவி, தாய் குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை, கள்ளகாதலால் பெற்ற குழந்தைகளையே தாய்  கொலை, கள்ளகாதலால் மனைவி கணவனை கொலை செய்தாள்,என இப்படிப்பட்ட செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. இம்மாதிரி செய்திகளை விமர்சிப்பவர்கள், அது அனைத்து தளங்களிலும், படித்தவர், படிக்காதவர், வயதானவர்கள், மத்திய வயதையுடையவர்கள், இளைஞர்கள், வசதியானவர்கள், வசதி குறைந்தவர்கள் என எவ்வித வேறுபாடுகளுமின்றி  அனைத்து மக்களும் கைநீட்டி குற்றம் சுமத்துவது பெண்களை மட்டும் தான். இப்படி சொல்வதால் இதனை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. இந்த மாதிரி வன்முறை, கொலை, தற்கொலை முதலியவைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இந்த மாதிரி குற்றங்கள் ஏன் தற்சமயம் அதிகம் நிகழ்கின்றன என்பதனை நாம் சிந்திப்பதில்லை. உடனே, சம்பந்தப்பட்ட பெண்ணை குற்றம் சுமத்தி, இந்த சமூகம் இதற்கு காரணமில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் எதார்த்தம். சற்று சிந்தித்தோமானால், இதற்கு பின்னால் உள்ள வலிகள், ரணங்கள், அவஸ்தைகள், மனஇறுக்கம், வெறுமை, என்பவைகள் தான் என்பது விளங்கிவிடும். இன்னமும், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. தனக்கு பிடித்த இணையைத்தேர்ந்தெடுக்க உரிமையில்லை. சிறு வயதிலேயே திருமணம், பக்குவமடையாத வயதிலேயே தாய்மை அடைதல், வீட்டில், தனக்கான சுதந்திரம் கிடைப்பதில்லை. ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், தான் நினைத்த வாழ்க்கையை வாழ அனைத்து பெண்களாலும்  முடிவதில்லை. இது தான் குற்றங்களை அதிகரிக்க செய்கின்றனவா என்ற கேள்வி எழுமானால், இதுவும் முக்கிய காரணம் என்பது தான் உண்மை. இந்த ஆணாதிக்கம் என்பது ஆண்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதில்லை. ஆணாதிக்கச் சிந்தனையுள்ள பெண்களும் இதில் அடங்குவார்கள்.  

எல்லாமே சரியாக இருந்தும் தவறு, குற்றம் நடக்கிறது என்றால் அது விதிவிலக்கு. விலக்கு எப்போதும் விதியாகாது. அதைப்பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. அது கண்டனத்துக்குரியது.  நாம் பெரும்பான்மை பற்றி தான் பேசுகிறோம். எவ்வளவு காலத்திற்கு, எல்லா பெண்களுக்கும், தங்கள் பிரச்சனைகளை சகித்துக்கொண்டு வாழ்வார்கள், தன்னுடைய உணர்வுகளை மதிக்காத பட்சத்தில், உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்ற உணர்வு வரும்போது சில தவறுகளும், குற்றங்களும் நடக்கின்றன.பெண்களுக்கான முழு சுதந்திரம் கிடைத்துவிட்டால், இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவது குறையும். நல்ல கல்வியறிவு, பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ தன்னை தகுதிபடுத்திக்கொண்டு, தனக்கான இணையை தானே தேர்ந்தெடுத்து கொள்ளுதல், கருத்துவேறுபாடுகள் அதிகமானால், பிரிந்து, நல்ல நண்பர்களாக வாழ்தல், என நம் சமூகம் மாறிவிடுமானால், அதைவிட மகிழ்ச்சி, முன்னேற்றம்  வேறேதுவும் இருக்க முடியாது. வளர்ந்த நாடுகள் எல்லாம் பெண் சுதந்திரத்தை ஆதரிக்கின்றன .. வரவேற்கின்றன !

இனியாவது தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் பெண் சுதந்திரம். பெண் முன்னேற்றம் என்பது  வீட்டின் முன்னேற்றம் என்பது மட்டுமில்லை ... அது ஒரு நாட்டின் முன்னேற்றமும் கூட!



Wednesday, 30 January 2019

காந்தியடிகளை நினைவு கூறுவோம்!

 காந்தி நினைவுதினம், இறந்த தினம்  (30.1.1948 ) என்று தான் சொல்வார்கள். ஆனால், எப்படி இறந்தார் என்று சில பேருக்கு சிறு வயதில் தெரியாது. எனக்கும் அப்படி தான்.   பிறகு சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தார் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பலருக்கு தெரியாது. எனக்கும் அப்படி தான். யாரோ சுட்டுவிட்டார்கள், அரசியல் காரணமாக என்று சொல்லப்பட்டது. நாங்கள் சிறு வயதாக இருந்த போது தீவிரவாதி என்ற சொல் பிரபலம் இல்லை. 80 களுக்கு பிறகு ' தீவிரவாதி ' என்ற சொல், நடிகர் விஜயகாந்த் மூலம் அறியப்பட்டது. 70 களில் பிறந்தவர்கள் தீவிரவாதம் பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆதலால், காந்தி எப்படி, யாரால், ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்வி மனதில் இருந்தாலும், அதனை பெரிதாக யாரிடம் கேட்க தோன்றவில்லை என்பதுவும் ஒரு காரணம். அப்போதிருந்த  அம்மாக்கள் அவ்வளவு படித்திருக்கவில்லை. அப்பாவிடம் கேட்டிருந்தால் ஒருவேளை தெரிந்திக்கலாம். ஏனோ, கேட்கவில்லை. மேலும், பல அப்பாக்களுக்கு உண்மை காரணம் தெரிந்திருக்குமா என்றும் தெரியவில்லை. இது இப்போதும் கூட பொருந்தக்கூடியது தான். 

எனக்கு எப்படி தெரிந்ததென்றால், 10 வகுப்பு படிக்கும்போது, என் அண்ணன் மூலம் தெரிந்துகொண்டேன். அப்போது  என்னுடைய அண்ணன், பெரியாரின் பக்கம் சென்றுகொண்டிருந்த சமயம்... அப்புறம் என்ன, அரசியல் வரலாறுகள், உண்மைகள் முழுமையாக தெரிந்துவிடுமல்லவா. காந்தி ஹிந்துத்துவ, பார்ப்பனிய வெறியால் கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டு கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன். 
அவனுக்கு எதற்கு அவ்வளவு வன்மம்? காந்தி சுதந்திரத்திற்கு பின்பு, முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்ற உண்மைகள் தெரிய வந்தன. 
பெரியாரைப் படிக்க ஆரம்பித்தபிறகு, முழு வரலாறும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கு இந்த உண்மைகளை. நடந்த வரலாறுகளை நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மதவெறி எந்தளவிற்கு பேராபத்தானது என்பதை புரிய வைக்க வேண்டும். 
அவர்களால், மகாத்மாவாக ஆக்கப்பட்ட காந்தி, பின்னாளில், அவர்களாலேயே சுட்டு கொல்லப் பட்டிருக்கிறார் என்றால், இந்த சனாதனம் எத்தகைய கொடூரம் நிறைந்தது, தனக்கு சாதகமாக இருக்கவில்லை என்றால், அது காந்தியாக இருந்தாலும் கொன்றுவிடுவோம் என்ற கொள்கை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். பற்றி  என்று வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டாமா!

காந்தி படுகொலையைப்பற்றி, தந்தை பெரியார் கூறியவை:

" மதத்திற்கும், அரசிற்கும் சம்பந்தம் இருக்க கூடாது என்று சொன்ன 56 ஆம் நாள் பார்ப்பனரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியை மகாத்மா ஆக்கியவர்கள் பார்ப்பனர்கள். அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் அவர்கள். அவர்களே, அவரைச் சுட்டுக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று."

மேலும் ஒரு செய்தி, காந்தியார் மத ஒற்றுமையை வலிறுத்துகிறார், முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார் மற்றும் மதசார்பற்ற குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார், அதோடு மட்டுமல்ல, உண்மையை உணர்ந்து, வருணாசிரமத்திற்கு எதிரான கருத்தை பேச ஆரம்பித்திருக்கிறார் என்றதுமே, இனி பார்ப்பனீயம் காந்தியை விட்டு வைக்காது என்று பெரியார் முன்கூட்டியே எச்சரித்தும் இருக்கிறார்.

இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். இப்போதிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக அரசு, காந்தியையும் வணங்குகிறது. அவரைக் கொன்ற கோட்ஸேவிற்கும் சிலை வைத்து தியாகியாக்க முயற்சி செய்கிறது என்ற உண்மையை, இரட்டை வேடத்தை,  நம் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவோம்!







Wednesday, 23 January 2019

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது சரியானது தானா?

நான் படித்தது எல்லாம் , ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளி தான் . அதில், பத்தாம் வகுப்பு வரை, கோ- எட்.பள்ளி, மற்ற இரு ஆண்டுகள் பெண்கள் பள்ளி. இத்தனை ஆண்டுகள் படித்தபோதும், ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ ஒருவர் கூட உயர் ஜாதி என்று சொல்லிக்கொள்ளும்,  பிராமணர் வகுப்பை சாராதவர்கள். சொல்லப்போனால், அனைவருமே ஏழை பிள்ளைகள் தான். நாங்கள் வசித்த பகுதியிலும் கூட அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால், அது ராணுவ பயிற்சி இடமாக இருந்த ஒரு பகுதி. அதனால், ராணுவத்தினருக்கு மட்டும் பிளாட் போட்டு விற்க வேண்டும் என்று அரசின் ஏற்பாடு. அதன் மூலம் தான் எங்கள் அப்பாவிற்கும் கிடைத்ததாக செய்தி. ஆனால், அங்கே, அருகிலேயே, பி அண்ட் சி மில் மற்றும் ரயில்வே கேரேஜ், ஐசிஎப் இருந்ததால், அப்பணியில் இருப்பவர்களும் வசித்தார்கள்.
எல்லோருமே, மத்தியதர மற்றும் அதற்கும் கீழேயுள்ள மக்கள் தான்.

எங்கள் பகுதியிலிருந்து 10 நிமிட நடை தூரமுள்ள பகுதி, ஜவஹர் நகர் என்பது. அதில், பார்த்தீர்களானால், பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் வீட்டு குழந்தைகள் ஆங்கிலப்பள்ளியில் தான் படித்தார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் தாத்தா கூட ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார். அங்கிருக்கும், பாட்டியிலிருந்து, மாமி வரை, அவர்கள் விட்டு பெண்கள் அப்போதே அரசியல் பேசுவார்கள், சினிமா பற்றி பேசுவார்கள். உடல்நலம், ஆரோக்கியம் பற்றிய தகவல்கள் எல்லாம் அத்துப்படி. வீட்டு வேலை செய்யும் பெண்களை வாடி, போடி என்று தான் அழைப்பார்கள். ( இன்றும் கூட சில வீடுகளில் அப்படி தான்  என்று நினைக்கிறேன் ..) இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், எனக்கு தெரிந்து 80 களிலேயே அவர்கள் யாரும் ஏழைகளாக இருப்பதை நான் பார்க்கவில்லை.

வெகு நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் " அப்பம் வடை தயிர்சாதம் " என்ற நாவலைப் படித்திருக்கிறேன். அருமையான ஒரு நாவல். எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு நாவல். அதில் மிகவும் தெளிவாக காட்டியிருப்பார், ஒரு பார்ப்பனர் குடும்பத்தில்  வாரிசுகள் எப்படி விரைவாக முன்னேறுகிறார்கள் என்பதை!   
முதல் தலைமுறை சேர்ந்த ஒரு புரோகிதர், (நீதிக்கட்சி தோன்றிய சமயம் என்பதை ஆசிரியர் நேரடியாக சொல்லாமல், நாத்திக கருத்துகள் தலைதூக்கியதால் என்று மறைமுகமாக சொல்லியிருப்பார்)  தன்னுடைய புரோகிதத்  தொழிலில் சரியான வருமானம் வரவில்லை என்பதால்,  வேறு ஒரு தொழிலும் தனக்கு தெரியவில்லை என்பதனாலும், உணவு விற்கும் தொழிலை கையில் எடுப்பார். அதாவது, அப்பம், வடை, தயிர்சாதம் எல்லாம் சமைத்து கூடையில் வைத்து, தலையில் சுமத்தபடி, அந்த கிராமத்தின் அருகிலிருக்கும் ரயில்வே நிலையத்தில் விற்பார். உணவு விற்பது பாவம் என்று தங்கள் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது , இருந்தாலும் ஆபத்திற்கு பாவமில்லை சொல்லிக்கொண்டே அந்த வியாபாரத்தை செய்வார். அவருடைய மகன், கும்பகோணத்தில் உணவகம் வைத்து கொஞ்சம் செல்வந்தர் ஆவார். அடுத்த தலைமுறை, படித்து, சென்னையில் அரசு உத்தியோகத்திற்கு சென்றுவிடும். அந்த தலைமுறை பெண்கள் 15 வயதிற்கு மேல் பள்ளிகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே ஆங்கிலம் மற்றும்  ஹிந்தி ஆசிரியர்களை வரவழைத்து கற்றுக்கொள்வார்கள். அதற்கடுத்த நான்காவது தலைமுறை, மகன் டெல்லியில் மத்திய அரசின் உயர் பதவியில் பணி புரிவார்.  அந்த தலைமுறை பெண்கள் பாம்பே, கல்கத்தா, போன்ற நகரங்களுக்கு திருமணம் செய்து அனுப்பப்படுவார்கள். அய்ந்தாவது தலைமுறையைச் சேர்ந்த ஆண்மகன்  அமெரிக்காவிற்கு செல்லுவான். அப்படி தான் அந்த கதை முடியும். அந்த 5 வது தலைமுறை 70 களில் இருப்பதாக தான் கதையின் போக்கு அமைந்திருக்கும்.!

இப்போது புரிந்திருக்கும் தானே ... நமக்கு அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாத காலகட்டத்தில், 70 களிலேயே அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்புகளை பெற்றது தான் முன்னேறிய ஜாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன வகுப்புகள்.  80 களின் மத்தியில், தொலைக்காட்சியில் கூட நாம் பார்த்திருப்போம் மிகவும் பிரபலமான , ' வாஷிங்டன் திருமணம் '  என்ற ஒரு தொடர். அதில் அவர்கள் வகுப்பைசேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி புரிவது போல் காண்பிப்பார்கள். மற்றும் கிரேஸி மோகன் நாடகங்களிலும் கூட மாப்பிளை அமெரிக்காவில் இருக்கிறார் என்று அப்போதே, பெருமையாக சொல்வார்கள்.!

இந்தளவிற்கு, முன்னேறிய ஜாதியினருக்கு எதற்கு 10% இடஒதுக்கீடு? அதுவும் ஆண்டு வருமானம் 8 லட்சம், 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் எல்லாம் ஏழைகளா? 
நம் மக்கள் ஒரு லட்சம் கூட ஆண்டு வருமானம் இல்லாதவர்கள் இன்றும் இருக்கிறார்களே .. அவர்கள் எல்லாம் ஏழைகள் இல்லையா?
இடஒதுக்கீடு என்பது சமூகம் சார்ந்து, ஆண்டாண்டு காலமாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்  ஒரு ஏற்பாடு. அது ஒரு சமூகநீதி.  அதில் வந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்  என்று சொல்லிக்கொண்டு, அதிலும், ஒரு மாதத்திற்கு 65,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ஏழைகள் என்றால் என்ன ஒரு அநியாயம், அக்கிரமம்!

சிந்தியுங்கள் மக்கா ... நம் மக்களுக்கே இது புரியவில்லை என்பது தான் வேதனையான ஓன்று.!



பொறியியல் படிப்பைக் காப்போம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த கன்னடபார்ப்பனரை நியமித்தபோதே, இதில் பல பிரச்சனைகள் உருவாக்க வாய்ப்புள்ளது என நம்மை போன்றவர்கள்  சொன்னோம். ஆனால், அப்போது அது பலருக்கும் பெரியதாக தெரியவில்லை. இப்போது பார்ப்பனியம் தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும், ஒரு ஆபத்தான விதியை கொண்டுவருகிறது.  ஒரு செமெஸ்டரில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அதற்கு அடுத்த செமெஸ்டரில் எழுத கூடாதாம். அதற்கும் அடுத்த தேர்வில் தான் எழுத வேண்டுமாம். அதாவது, முதல் செமெஸ்டரில் அரியர் வைத்தால், மூன்றாவது செமெஸ்டரிலும், இரண்டாவது செமெஸ்டரில் அரியர்  வைத்தால் நான்காவதிலும் தான் எழுத வேண்டுமாம். இடையில் ஒரு ஆண்டு எழுத முடியாது என்ற விதியை கொண்டுவருகிறது.  அதற்கு மாணவர்கள் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தை வெளியில் காட்டிவிட கூடாது என்பதில் அனைத்து  ஊடகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. செய்தி வெளியில் வராமல் பார்த்துக்கொள்கிறது இந்த மாநில அரசும், அதனை தன் கையிற்குள் வைத்திருக்கும் மத்திய  அரசும்.! 

இன்னொரு அதி பயங்கரமான விசயத்தையும் மாணவர்கள் சொல்கிறார்கள். அதாவது இருமுறை அரியர் எழுதியும் வெற்றிபெறாதவர்கள் அனைத்து, அதாவது வெற்றிபெற்ற மற்ற பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுத வேண்டுமாம். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், வருங்காலத்தில் கொண்டுவரும் திட்டமாக கூட இருக்கலாம். இதற்கு அந்த துணைவேந்தர் சூரப்பா சொல்லும் காரணம் என்னவென்றால், தரமான பொறியியலாளர்களை உருவாக்குவதற்கு தானாம். கடைசி செமெஸ்டரில் எழுதி பாஸ் செய்பவர்கள் தரமான, திறமையுள்ளவர்களாக இருக்க மாட்டார்களாம். மேலும், இரண்டு செமெஸ்டர்களில் வெற்றிபெறாதவர்கள் , தொடர்ந்து  இன்ஜினியரிங் படிக்காமல், அடுத்த வேறு படிப்பிற்கு செல்வதற்கு கொடுக்கும் வாய்ப்பாம். என்ன ஒரு அக்கிரமம் ! 
நம் பிள்ளைகளை படிக்கவிடாமல் செய்வதில் இந்த ஆரியத்திற்கு தான் எவ்வளவு அக்கறை பாருங்கள்.!

அந்தந்த செமெஸ்டரில் அந்தந்த தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து நமக்கில்லை. ஆனால், கடைசி செமெஸ்டரில் எழுதி, அனைத்தையும் வெற்றிபெற்று, இன்று நல்ல நிலையில், உயர்பதவிகளில் நம் பிள்ளைகள் இல்லையா... என்ன!
இது ஒரு தகுதி குறைவா?
இதனை தகுதி குறைவு என்று கழித்துக்கட்டுவதற்கு ஒரு பல்கலைக்கழகம் தேவையா?
சிரமாக இருக்கிறது , நான் வேறு படிப்பிற்கு மாற போகிறேன் என்று முடிவெடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தானே இருக்கிறது!
இன்று இப்படி சொல்ல ஆரம்பிக்கும் பல்கலைக்கழக நிர்வாகம்,  நாளை, இரு செமஸ்டர்களிலும் உனக்கு அரியர் இருக்கிறது. அதனால், உனக்கு இங்கு இடமில்லை என்று சொல்ல எவ்வளவு நேரமாகும்???

தொடர்ந்து நம் பிள்ளைகளின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது மக்களே, போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம். ஊடகங்கள் வெட்டி கதை பேசுகின்றனவே தவிர, இதுபோன்ற விசயங்களை விவாதிக்க அஞ்சுகின்றன. மருத்துவத்தை இழந்தது போன்று, பொறியியலையும் இழந்துவிடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்போம்!