Wednesday, 30 January 2019

காந்தியடிகளை நினைவு கூறுவோம்!

 காந்தி நினைவுதினம், இறந்த தினம்  (30.1.1948 ) என்று தான் சொல்வார்கள். ஆனால், எப்படி இறந்தார் என்று சில பேருக்கு சிறு வயதில் தெரியாது. எனக்கும் அப்படி தான்.   பிறகு சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தார் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பலருக்கு தெரியாது. எனக்கும் அப்படி தான். யாரோ சுட்டுவிட்டார்கள், அரசியல் காரணமாக என்று சொல்லப்பட்டது. நாங்கள் சிறு வயதாக இருந்த போது தீவிரவாதி என்ற சொல் பிரபலம் இல்லை. 80 களுக்கு பிறகு ' தீவிரவாதி ' என்ற சொல், நடிகர் விஜயகாந்த் மூலம் அறியப்பட்டது. 70 களில் பிறந்தவர்கள் தீவிரவாதம் பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆதலால், காந்தி எப்படி, யாரால், ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்வி மனதில் இருந்தாலும், அதனை பெரிதாக யாரிடம் கேட்க தோன்றவில்லை என்பதுவும் ஒரு காரணம். அப்போதிருந்த  அம்மாக்கள் அவ்வளவு படித்திருக்கவில்லை. அப்பாவிடம் கேட்டிருந்தால் ஒருவேளை தெரிந்திக்கலாம். ஏனோ, கேட்கவில்லை. மேலும், பல அப்பாக்களுக்கு உண்மை காரணம் தெரிந்திருக்குமா என்றும் தெரியவில்லை. இது இப்போதும் கூட பொருந்தக்கூடியது தான். 

எனக்கு எப்படி தெரிந்ததென்றால், 10 வகுப்பு படிக்கும்போது, என் அண்ணன் மூலம் தெரிந்துகொண்டேன். அப்போது  என்னுடைய அண்ணன், பெரியாரின் பக்கம் சென்றுகொண்டிருந்த சமயம்... அப்புறம் என்ன, அரசியல் வரலாறுகள், உண்மைகள் முழுமையாக தெரிந்துவிடுமல்லவா. காந்தி ஹிந்துத்துவ, பார்ப்பனிய வெறியால் கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டு கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன். 
அவனுக்கு எதற்கு அவ்வளவு வன்மம்? காந்தி சுதந்திரத்திற்கு பின்பு, முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்ற உண்மைகள் தெரிய வந்தன. 
பெரியாரைப் படிக்க ஆரம்பித்தபிறகு, முழு வரலாறும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கு இந்த உண்மைகளை. நடந்த வரலாறுகளை நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மதவெறி எந்தளவிற்கு பேராபத்தானது என்பதை புரிய வைக்க வேண்டும். 
அவர்களால், மகாத்மாவாக ஆக்கப்பட்ட காந்தி, பின்னாளில், அவர்களாலேயே சுட்டு கொல்லப் பட்டிருக்கிறார் என்றால், இந்த சனாதனம் எத்தகைய கொடூரம் நிறைந்தது, தனக்கு சாதகமாக இருக்கவில்லை என்றால், அது காந்தியாக இருந்தாலும் கொன்றுவிடுவோம் என்ற கொள்கை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். பற்றி  என்று வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டாமா!

காந்தி படுகொலையைப்பற்றி, தந்தை பெரியார் கூறியவை:

" மதத்திற்கும், அரசிற்கும் சம்பந்தம் இருக்க கூடாது என்று சொன்ன 56 ஆம் நாள் பார்ப்பனரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியை மகாத்மா ஆக்கியவர்கள் பார்ப்பனர்கள். அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் அவர்கள். அவர்களே, அவரைச் சுட்டுக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று."

மேலும் ஒரு செய்தி, காந்தியார் மத ஒற்றுமையை வலிறுத்துகிறார், முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார் மற்றும் மதசார்பற்ற குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார், அதோடு மட்டுமல்ல, உண்மையை உணர்ந்து, வருணாசிரமத்திற்கு எதிரான கருத்தை பேச ஆரம்பித்திருக்கிறார் என்றதுமே, இனி பார்ப்பனீயம் காந்தியை விட்டு வைக்காது என்று பெரியார் முன்கூட்டியே எச்சரித்தும் இருக்கிறார்.

இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். இப்போதிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக அரசு, காந்தியையும் வணங்குகிறது. அவரைக் கொன்ற கோட்ஸேவிற்கும் சிலை வைத்து தியாகியாக்க முயற்சி செய்கிறது என்ற உண்மையை, இரட்டை வேடத்தை,  நம் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவோம்!







Wednesday, 23 January 2019

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது சரியானது தானா?

நான் படித்தது எல்லாம் , ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளி தான் . அதில், பத்தாம் வகுப்பு வரை, கோ- எட்.பள்ளி, மற்ற இரு ஆண்டுகள் பெண்கள் பள்ளி. இத்தனை ஆண்டுகள் படித்தபோதும், ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ ஒருவர் கூட உயர் ஜாதி என்று சொல்லிக்கொள்ளும்,  பிராமணர் வகுப்பை சாராதவர்கள். சொல்லப்போனால், அனைவருமே ஏழை பிள்ளைகள் தான். நாங்கள் வசித்த பகுதியிலும் கூட அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால், அது ராணுவ பயிற்சி இடமாக இருந்த ஒரு பகுதி. அதனால், ராணுவத்தினருக்கு மட்டும் பிளாட் போட்டு விற்க வேண்டும் என்று அரசின் ஏற்பாடு. அதன் மூலம் தான் எங்கள் அப்பாவிற்கும் கிடைத்ததாக செய்தி. ஆனால், அங்கே, அருகிலேயே, பி அண்ட் சி மில் மற்றும் ரயில்வே கேரேஜ், ஐசிஎப் இருந்ததால், அப்பணியில் இருப்பவர்களும் வசித்தார்கள்.
எல்லோருமே, மத்தியதர மற்றும் அதற்கும் கீழேயுள்ள மக்கள் தான்.

எங்கள் பகுதியிலிருந்து 10 நிமிட நடை தூரமுள்ள பகுதி, ஜவஹர் நகர் என்பது. அதில், பார்த்தீர்களானால், பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் வீட்டு குழந்தைகள் ஆங்கிலப்பள்ளியில் தான் படித்தார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் தாத்தா கூட ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார். அங்கிருக்கும், பாட்டியிலிருந்து, மாமி வரை, அவர்கள் விட்டு பெண்கள் அப்போதே அரசியல் பேசுவார்கள், சினிமா பற்றி பேசுவார்கள். உடல்நலம், ஆரோக்கியம் பற்றிய தகவல்கள் எல்லாம் அத்துப்படி. வீட்டு வேலை செய்யும் பெண்களை வாடி, போடி என்று தான் அழைப்பார்கள். ( இன்றும் கூட சில வீடுகளில் அப்படி தான்  என்று நினைக்கிறேன் ..) இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், எனக்கு தெரிந்து 80 களிலேயே அவர்கள் யாரும் ஏழைகளாக இருப்பதை நான் பார்க்கவில்லை.

வெகு நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் " அப்பம் வடை தயிர்சாதம் " என்ற நாவலைப் படித்திருக்கிறேன். அருமையான ஒரு நாவல். எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு நாவல். அதில் மிகவும் தெளிவாக காட்டியிருப்பார், ஒரு பார்ப்பனர் குடும்பத்தில்  வாரிசுகள் எப்படி விரைவாக முன்னேறுகிறார்கள் என்பதை!   
முதல் தலைமுறை சேர்ந்த ஒரு புரோகிதர், (நீதிக்கட்சி தோன்றிய சமயம் என்பதை ஆசிரியர் நேரடியாக சொல்லாமல், நாத்திக கருத்துகள் தலைதூக்கியதால் என்று மறைமுகமாக சொல்லியிருப்பார்)  தன்னுடைய புரோகிதத்  தொழிலில் சரியான வருமானம் வரவில்லை என்பதால்,  வேறு ஒரு தொழிலும் தனக்கு தெரியவில்லை என்பதனாலும், உணவு விற்கும் தொழிலை கையில் எடுப்பார். அதாவது, அப்பம், வடை, தயிர்சாதம் எல்லாம் சமைத்து கூடையில் வைத்து, தலையில் சுமத்தபடி, அந்த கிராமத்தின் அருகிலிருக்கும் ரயில்வே நிலையத்தில் விற்பார். உணவு விற்பது பாவம் என்று தங்கள் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது , இருந்தாலும் ஆபத்திற்கு பாவமில்லை சொல்லிக்கொண்டே அந்த வியாபாரத்தை செய்வார். அவருடைய மகன், கும்பகோணத்தில் உணவகம் வைத்து கொஞ்சம் செல்வந்தர் ஆவார். அடுத்த தலைமுறை, படித்து, சென்னையில் அரசு உத்தியோகத்திற்கு சென்றுவிடும். அந்த தலைமுறை பெண்கள் 15 வயதிற்கு மேல் பள்ளிகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே ஆங்கிலம் மற்றும்  ஹிந்தி ஆசிரியர்களை வரவழைத்து கற்றுக்கொள்வார்கள். அதற்கடுத்த நான்காவது தலைமுறை, மகன் டெல்லியில் மத்திய அரசின் உயர் பதவியில் பணி புரிவார்.  அந்த தலைமுறை பெண்கள் பாம்பே, கல்கத்தா, போன்ற நகரங்களுக்கு திருமணம் செய்து அனுப்பப்படுவார்கள். அய்ந்தாவது தலைமுறையைச் சேர்ந்த ஆண்மகன்  அமெரிக்காவிற்கு செல்லுவான். அப்படி தான் அந்த கதை முடியும். அந்த 5 வது தலைமுறை 70 களில் இருப்பதாக தான் கதையின் போக்கு அமைந்திருக்கும்.!

இப்போது புரிந்திருக்கும் தானே ... நமக்கு அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாத காலகட்டத்தில், 70 களிலேயே அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்புகளை பெற்றது தான் முன்னேறிய ஜாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன வகுப்புகள்.  80 களின் மத்தியில், தொலைக்காட்சியில் கூட நாம் பார்த்திருப்போம் மிகவும் பிரபலமான , ' வாஷிங்டன் திருமணம் '  என்ற ஒரு தொடர். அதில் அவர்கள் வகுப்பைசேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி புரிவது போல் காண்பிப்பார்கள். மற்றும் கிரேஸி மோகன் நாடகங்களிலும் கூட மாப்பிளை அமெரிக்காவில் இருக்கிறார் என்று அப்போதே, பெருமையாக சொல்வார்கள்.!

இந்தளவிற்கு, முன்னேறிய ஜாதியினருக்கு எதற்கு 10% இடஒதுக்கீடு? அதுவும் ஆண்டு வருமானம் 8 லட்சம், 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் எல்லாம் ஏழைகளா? 
நம் மக்கள் ஒரு லட்சம் கூட ஆண்டு வருமானம் இல்லாதவர்கள் இன்றும் இருக்கிறார்களே .. அவர்கள் எல்லாம் ஏழைகள் இல்லையா?
இடஒதுக்கீடு என்பது சமூகம் சார்ந்து, ஆண்டாண்டு காலமாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்  ஒரு ஏற்பாடு. அது ஒரு சமூகநீதி.  அதில் வந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்  என்று சொல்லிக்கொண்டு, அதிலும், ஒரு மாதத்திற்கு 65,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ஏழைகள் என்றால் என்ன ஒரு அநியாயம், அக்கிரமம்!

சிந்தியுங்கள் மக்கா ... நம் மக்களுக்கே இது புரியவில்லை என்பது தான் வேதனையான ஓன்று.!



பொறியியல் படிப்பைக் காப்போம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த கன்னடபார்ப்பனரை நியமித்தபோதே, இதில் பல பிரச்சனைகள் உருவாக்க வாய்ப்புள்ளது என நம்மை போன்றவர்கள்  சொன்னோம். ஆனால், அப்போது அது பலருக்கும் பெரியதாக தெரியவில்லை. இப்போது பார்ப்பனியம் தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும், ஒரு ஆபத்தான விதியை கொண்டுவருகிறது.  ஒரு செமெஸ்டரில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அதற்கு அடுத்த செமெஸ்டரில் எழுத கூடாதாம். அதற்கும் அடுத்த தேர்வில் தான் எழுத வேண்டுமாம். அதாவது, முதல் செமெஸ்டரில் அரியர் வைத்தால், மூன்றாவது செமெஸ்டரிலும், இரண்டாவது செமெஸ்டரில் அரியர்  வைத்தால் நான்காவதிலும் தான் எழுத வேண்டுமாம். இடையில் ஒரு ஆண்டு எழுத முடியாது என்ற விதியை கொண்டுவருகிறது.  அதற்கு மாணவர்கள் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தை வெளியில் காட்டிவிட கூடாது என்பதில் அனைத்து  ஊடகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. செய்தி வெளியில் வராமல் பார்த்துக்கொள்கிறது இந்த மாநில அரசும், அதனை தன் கையிற்குள் வைத்திருக்கும் மத்திய  அரசும்.! 

இன்னொரு அதி பயங்கரமான விசயத்தையும் மாணவர்கள் சொல்கிறார்கள். அதாவது இருமுறை அரியர் எழுதியும் வெற்றிபெறாதவர்கள் அனைத்து, அதாவது வெற்றிபெற்ற மற்ற பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுத வேண்டுமாம். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், வருங்காலத்தில் கொண்டுவரும் திட்டமாக கூட இருக்கலாம். இதற்கு அந்த துணைவேந்தர் சூரப்பா சொல்லும் காரணம் என்னவென்றால், தரமான பொறியியலாளர்களை உருவாக்குவதற்கு தானாம். கடைசி செமெஸ்டரில் எழுதி பாஸ் செய்பவர்கள் தரமான, திறமையுள்ளவர்களாக இருக்க மாட்டார்களாம். மேலும், இரண்டு செமெஸ்டர்களில் வெற்றிபெறாதவர்கள் , தொடர்ந்து  இன்ஜினியரிங் படிக்காமல், அடுத்த வேறு படிப்பிற்கு செல்வதற்கு கொடுக்கும் வாய்ப்பாம். என்ன ஒரு அக்கிரமம் ! 
நம் பிள்ளைகளை படிக்கவிடாமல் செய்வதில் இந்த ஆரியத்திற்கு தான் எவ்வளவு அக்கறை பாருங்கள்.!

அந்தந்த செமெஸ்டரில் அந்தந்த தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து நமக்கில்லை. ஆனால், கடைசி செமெஸ்டரில் எழுதி, அனைத்தையும் வெற்றிபெற்று, இன்று நல்ல நிலையில், உயர்பதவிகளில் நம் பிள்ளைகள் இல்லையா... என்ன!
இது ஒரு தகுதி குறைவா?
இதனை தகுதி குறைவு என்று கழித்துக்கட்டுவதற்கு ஒரு பல்கலைக்கழகம் தேவையா?
சிரமாக இருக்கிறது , நான் வேறு படிப்பிற்கு மாற போகிறேன் என்று முடிவெடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தானே இருக்கிறது!
இன்று இப்படி சொல்ல ஆரம்பிக்கும் பல்கலைக்கழக நிர்வாகம்,  நாளை, இரு செமஸ்டர்களிலும் உனக்கு அரியர் இருக்கிறது. அதனால், உனக்கு இங்கு இடமில்லை என்று சொல்ல எவ்வளவு நேரமாகும்???

தொடர்ந்து நம் பிள்ளைகளின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது மக்களே, போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம். ஊடகங்கள் வெட்டி கதை பேசுகின்றனவே தவிர, இதுபோன்ற விசயங்களை விவாதிக்க அஞ்சுகின்றன. மருத்துவத்தை இழந்தது போன்று, பொறியியலையும் இழந்துவிடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்போம்!