Monday, 25 February 2019

ஒரு நாட்டின் பிரதமர் செய்யும் செயலா இது!

உத்தரபிரதேசத்தில், கடந்த மாதம் கும்பமேளா ஆரம்பிக்கும் சமயத்தில், பல துப்புரவுப்பணியாளர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும். ஆற்றில் குளிக்கவரும் சாதுக்கள் வரும்போது எதிரில் வரக்கூடாது என்றும் கூட அச்சுறுத்தப்பட்டனர். இதில், உச்சப்பட்சமாக, ஆற்றை ஒட்டிய சாலையில் வைக்கப்பட்டிருந்த, சாதுக்களின் பைகளை நகர்த்திவைத்துவிட்டு, பெருக்கிய, ஒரு துப்புரவுப்பணியாளரை, ' எப்படி எங்கள் பைகளை நீ தொடலாம்?' என்று மோசமாக தாக்கி, கையை உடைத்தார்கள் என்ற செய்தி கூட வந்தது!

இப்போது என்னவென்றால், நாட்டின் பிரதமர், அய்ந்து (சரியாக தெரியவில்லை, இன்னும் கூடுதலாக கூட இருக்கலாம்) துப்புரவுப்பணியாளைர்களை நாற்காலியில் அமரவைத்து, அவர்களின் கால்களை  கழுவுகிறார். தான் செய்த பாவங்களை போக்குவதற்காக செய்கிறாரா? அது உண்மையென்றால், தான் , இந்த நாட்டின் மக்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த தீங்குகளை , பாஜக மூலமாக, ஆர்.எஸ்.எஸ் கட்டளைகளை நிறைவேற்றியதற்கு வருந்தி அரசியலை விட்டே விலகியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காததால்,  இது உண்மையில்லை! 

பிறகு, எதற்கு இந்த நாடகம்? வரப்போகும் தேர்தலுக்காக  தானே!
மீண்டும் மக்களை ஏமாற்றி, அரியணையில் அமர்ந்து, இன்னும் படுபாதாளத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கும் ஒரு ஏமாற்று நாடகம் என்பது மக்களுக்கு நன்றாகவே விளங்கும். இன்னும் சொல்லப்போனால், வடநாட்டுமக்களுக்கே இப்போது புரிகிறது!

இது எல்லாவற்றையும் விட, ஒரு நாட்டின் பிரதமர் செய்யும் செயலா இது? 
உலகளாவிய அளவில், மற்ற நாடுகள் என்ன நினைக்கும் என்ற எண்ணம் கூட இல்லையே.  ஒரு மத தலைவர் செய்தால், புண்ணியம் தேடிக்கொள்ள செய்கிறார் என்று விட்டுவிடலாம். ஆனால், ஒரு மதசார்பற்ற நாட்டினுடைய பிரதமர் அல்லவா இப்படி செய்கிறார். பிரதமருடைய வேலை இதுவல்லவே!

 துப்புரவுத்தொழிலாளர்களின்  மீது அவ்வளவு கரிசனமா... அப்படி இருப்பது உண்மையென்றால், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கட்டும். அவர்களின் குழந்தைகளுக்கு தேவைப்படும் சலுகைகள் வழங்கட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தட்டும்.
முதலில், அவர்களை மனிதர்களாக மதிக்கட்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, அவர்களின் காலை கழுவினால், அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடுமா?

அதிநவீன  ராக்கெட்விடும் நாட்டில் தான், மனித கழிவை மனிதனே அள்ளும் கொடூரமான அவலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதையே கூட, மோடி எழுதிய ' கர்மயோக்'  புத்தகத்தில், மலமள்ளும் தொழிலாளிகள் கடவுளுக்கு சேவை செய்வது போன்ற புண்ணியம் கிடைக்கும் என்று தானே எழுதியிருக்கிறார். இவர்களின் இந்துத்துவச் சித்தாந்தத்தில், வருணாசிரமம் இருக்க வேண்டும், தீண்டாமை இருக்க வேண்டும். அதை வைத்து தங்கள் பிழைப்பு நடத்த வேண்டும். தேவைப்படும் சமயத்தில், இதுமாதிரி சில நாடகங்களை நடத்தி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இவர்களின் குறிக்கோள்!

தற்போது, கடந்த ஐந்தாண்டுகளில், மோடி அரசால் தாங்கள் பட்ட இன்னல்கள் மூலம் ,  மக்கள் நன்றாவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், நாமும் அவ்வப்போது, பாஜகவின் கொடூரமுகங்களை  நினைவுபடுத்திக்கொண்டும், பாசிச பாஜகவை தோற்கடியுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டும் இருப்பது நம்முடைய கடமை!



 



Thursday, 21 February 2019

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீது திணிக்கப்படும் ஒரு வன்முறை!

காலையில் அலைபேசியில்  மகனிடம்  பேசும்போது, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைக்கப்போவதாக இந்த அடிமை அதிமுக அரசு, மத்திய மோடி அரசின் ஆணையின் பெயரில் அறிவித்திருக்கிறது.  என்ற  இந்த தகவலை சொன்னேன் . அப்போது அவன், ' ஏன் எல்கேஜி யிலிருந்து, 12 வதுவரை தொடர்ந்து பப்ளிக் எக்ஸாம் வைக்க வேண்டியது தானே ? ' என்று கோவமாக கேட்டான். 
' எல்கேஜியில் , ரைம்ஸ் சொல்ல தெரியலையா, அடுத்தவருசமும் நீ எல்கேஜி படி, ஒன்,டூ, த்ரீ, டுவெண்ட்டி வரை சொல்ல தெரியலையா.. நீ அடுத்தவருசமும் யுகேஜி படி' என்ற சட்டம் கொண்டுவரட்டும்... ஒரு மிகப்பெரிய புரட்சியே வெடிக்கும் , இவங்க  சொல்ற தரம் எல்லாம் நம்ம படிக்கக்கூடாது என்பதற்காக  தான் என்று சொன்னான் , இப்படியே அந்த  உரையாடல் நடந்தது.  அப்போது நினைவிற்கு வந்த ஒரு செய்தியை அவனிடம் பகிர்ந்துகொண்டேன்.

  இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு முன்பு, உறவுக்கார பெண் ஒருவர், நல்ல கம்பனியில் பொறியியலாளராக பணியாற்றிவந்தார். அரசுப்பள்ளியில் படித்தவர். அப்போதைய நுழைவுத்தேர்வையும் வெற்றிகொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, நல்ல வேலையில்  இருந்தார். நீண்டநாட்களுக்குப்பிறகு, அவரைச் சந்தித்தபோது,  ' சிறுவயதிலேயே நீங்கள் நன்றாக படிப்பீர்களா ?' என்று நான் கேட்ட கேள்விக்கு, சில நொடிகள் சத்தமாக சிரித்துவிட்டு, பிறகு சொன்னார். 
' நான் ரொம்ப மக்கு. அதிலும் கணக்கு வரவே வராது. எப்பவுமே அதில் குறைந்த மார்க் தானெடுப்பேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது, எங்க டீச்சர், அப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லி, அப்பாவிடம் எச்சரித்தார்கள். காலாண்டு , அரையாண்டு இரண்டிலும் கணக்கில் பெயில் மார்க் வாங்கியிருக்கா .. உங்க பொண்ணு, முழு ஆண்டு பரீட்சையில், இப்படி வாங்கினால், அடுத்த ஆண்டும் இதே வகுப்பில் தான் படிக்க வேண்டும். அதனால், நல்லா படிக்க சொல்லுங்க..' அப்படியெல்லாம் வார்னிங் வாங்குனவ தான்.. ஒன்பதாம் வகுப்பிற்கு பிறகு தான் என்னமோ படிக்க வேண்டும் என்று வெறித்தனமா தோணிச்சி... அப்புறம் வாங்குனதெல்லாம், 50, 60, 70 கூடிகிட்டே போச்சு... பத்தாம் வகுப்பிலே, எங்க பள்ளியிலேயே, கணக்குபரிட்சையில் நான் தான் முதல் மார்க்கு. 94 மார்க் எடுத்தேன் ' என்று சொன்னார். தற்போது அவர், அமெரிக்காவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.

இதல்லாம், மற்ற மாநிலங்களைவிட  தமிழ்நாட்டில் சாத்தியப்படும். ஒன்பதாம் வகுப்பிற்குப்பிறகு, மிக நன்றாகப்படித்து, நுழைவுத்தேர்வை வெற்றிகொள்ள முடியுமளவிற்கு அப்பெண்ணிற்கு அறிவுவளர்ச்சி வந்திருக்கிறது, வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது நம் கண்ணால் கண்ட சான்று. இதுபோல் பலர் இருப்பார்கள். ஆனால், தற்போதிருக்கும், காவிகளின் அரசும், அதற்கு அடிமைசேவகம்  புரியும் இந்த அதிமுக அரசும் ,  தரம் என்று சொல்லிக்கொண்டு, தகுதித்தேர்வு, பொதுத்தேர்வு என்று வைப்பது எல்லாம், புதியகல்விக்கொள்கையின் ஒரு பகுதி தான்.அவர்களின் புதியகல்விக்கொள்கை என்பது, நவீன குலக்கல்வித்திட்டமே ஆகும். மனு (அ)தர்ம  ஆட்சியின் ஒரு கூறு தான். " சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே "  என்ற பார்ப்பன, பாசிச கொடூரத்தின் உச்சக்கட்டம்.

இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இதற்கான ஆணையை திரும்ப பெறும்வரை, எதிர்த்துக்கொண்டே இருப்பது நம் எல்லோருடைய கடமை!

Thursday, 14 February 2019

காதலர்தின வாழ்த்துகள்!

காதலர்தின செய்தி :

கண்டதும் காதல் என்ற இன கவர்ச்சிக்கு ஆளாகாமல், நன்கு பேசி, பழகி, நல்ல நண்பர்களானதும், அவரவர் சுயத்தை, தனித்துவத்தை  மதிக்குமளவிற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டபிறகு காதலர்கள் ஆகுங்கள். ஒருவரை ஒருவர் சாராமல், பொருளாதாரத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டபின், இணையர்களாக வாழ்க்கையில் இணையுங்கள்.

அன்பு மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடியதும், ஜாதி, மதத்தை ,  பெண்ணடிமைத்தனத்தை அடித்து நொறுக்கக்கூடிய பேராற்றல் காதல் திருமணங்களுக்கு இருக்கிறது. ஆதலால் காதல் செய்வீர்!

காதலர்தின வாழ்த்துகள்! 

Monday, 4 February 2019

பெண் சுதந்திரம் குற்றங்களை தடுக்கும்!

பெண்கள் மீது நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஆதிக்கம், அடக்குமுறை  என்பது மிக கொடுமையானது. சுதந்திரமாக சிந்திப்பதிலிருந்து, செயல்படுவது , தீர்மானிப்பது வரை, எல்லாமுமே காலம் காலமாக ஆண்கள் வசம் வைத்திருக்கிறார்கள். இன்னும் சில நேரங்களில், ஆணாதிக்கசிந்தனையுள்ள பெண்களை கூடவே வைத்துக்கொண்டும் தங்கள் விருப்பங்களை, எண்ணங்களை சாதித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக, பெண் தற்கொலை,  கணவனை கொலை செய்த மனைவி, தாய் குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை, கள்ளகாதலால் பெற்ற குழந்தைகளையே தாய்  கொலை, கள்ளகாதலால் மனைவி கணவனை கொலை செய்தாள்,என இப்படிப்பட்ட செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. இம்மாதிரி செய்திகளை விமர்சிப்பவர்கள், அது அனைத்து தளங்களிலும், படித்தவர், படிக்காதவர், வயதானவர்கள், மத்திய வயதையுடையவர்கள், இளைஞர்கள், வசதியானவர்கள், வசதி குறைந்தவர்கள் என எவ்வித வேறுபாடுகளுமின்றி  அனைத்து மக்களும் கைநீட்டி குற்றம் சுமத்துவது பெண்களை மட்டும் தான். இப்படி சொல்வதால் இதனை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. இந்த மாதிரி வன்முறை, கொலை, தற்கொலை முதலியவைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இந்த மாதிரி குற்றங்கள் ஏன் தற்சமயம் அதிகம் நிகழ்கின்றன என்பதனை நாம் சிந்திப்பதில்லை. உடனே, சம்பந்தப்பட்ட பெண்ணை குற்றம் சுமத்தி, இந்த சமூகம் இதற்கு காரணமில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் எதார்த்தம். சற்று சிந்தித்தோமானால், இதற்கு பின்னால் உள்ள வலிகள், ரணங்கள், அவஸ்தைகள், மனஇறுக்கம், வெறுமை, என்பவைகள் தான் என்பது விளங்கிவிடும். இன்னமும், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. தனக்கு பிடித்த இணையைத்தேர்ந்தெடுக்க உரிமையில்லை. சிறு வயதிலேயே திருமணம், பக்குவமடையாத வயதிலேயே தாய்மை அடைதல், வீட்டில், தனக்கான சுதந்திரம் கிடைப்பதில்லை. ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், தான் நினைத்த வாழ்க்கையை வாழ அனைத்து பெண்களாலும்  முடிவதில்லை. இது தான் குற்றங்களை அதிகரிக்க செய்கின்றனவா என்ற கேள்வி எழுமானால், இதுவும் முக்கிய காரணம் என்பது தான் உண்மை. இந்த ஆணாதிக்கம் என்பது ஆண்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதில்லை. ஆணாதிக்கச் சிந்தனையுள்ள பெண்களும் இதில் அடங்குவார்கள்.  

எல்லாமே சரியாக இருந்தும் தவறு, குற்றம் நடக்கிறது என்றால் அது விதிவிலக்கு. விலக்கு எப்போதும் விதியாகாது. அதைப்பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. அது கண்டனத்துக்குரியது.  நாம் பெரும்பான்மை பற்றி தான் பேசுகிறோம். எவ்வளவு காலத்திற்கு, எல்லா பெண்களுக்கும், தங்கள் பிரச்சனைகளை சகித்துக்கொண்டு வாழ்வார்கள், தன்னுடைய உணர்வுகளை மதிக்காத பட்சத்தில், உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்ற உணர்வு வரும்போது சில தவறுகளும், குற்றங்களும் நடக்கின்றன.பெண்களுக்கான முழு சுதந்திரம் கிடைத்துவிட்டால், இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவது குறையும். நல்ல கல்வியறிவு, பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ தன்னை தகுதிபடுத்திக்கொண்டு, தனக்கான இணையை தானே தேர்ந்தெடுத்து கொள்ளுதல், கருத்துவேறுபாடுகள் அதிகமானால், பிரிந்து, நல்ல நண்பர்களாக வாழ்தல், என நம் சமூகம் மாறிவிடுமானால், அதைவிட மகிழ்ச்சி, முன்னேற்றம்  வேறேதுவும் இருக்க முடியாது. வளர்ந்த நாடுகள் எல்லாம் பெண் சுதந்திரத்தை ஆதரிக்கின்றன .. வரவேற்கின்றன !

இனியாவது தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் பெண் சுதந்திரம். பெண் முன்னேற்றம் என்பது  வீட்டின் முன்னேற்றம் என்பது மட்டுமில்லை ... அது ஒரு நாட்டின் முன்னேற்றமும் கூட!