Friday, 24 May 2019

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்!

நாம் எது நடந்துவிடக்கூடாது என்று நினைத்தோமோ, அது நடந்தே விட்டது. 2014-ல் நடந்தது போல,,,, நேற்றைய தேர்தல் முடிவுகள், தொடக்கத்திலேயே நம்மை மிகவும்  சோர்வடைய தான்  செய்தது. பாஜக வெற்றியை சிறிதும் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், ஒருபுறம் திமுக கூட்டணியின் தொடர் வெற்றி நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 38 - 1 என்று வந்தபிறகு மனம் குதூகலித்தது. அந்த ஒன்றும் நமக்கு வந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. இந்தியாவே, பாஜகவை கொண்டாடும்போது தமிழ்நாடு முழுவதும்  விரட்டியடித்திருக்கிறது என்ற செய்தி, பெரு மகிழ்ச்சியைத் தந்தது!
அதன் பிறகு, தோழர் திருமா அவர்கள் பின்னடைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, முன்னிலை, பிறகு பின்னடைவு என்ற செய்தி மனதை பிசைய தான் செய்தது. ஏதோ தில்லுமுல்லு செய்கிறார்கள் போல என்ற கோபம் வந்தது. இரவு 12.45 வரை இழுக்கடித்து, அதற்கு மேல் முடியாது என்ற நிலை வந்தபிறகு தான் வெற்றி அறிவிப்பை வெளியிட்டார்கள்.  தோழர் திருமா வெற்றி அறிவிப்பைக் கண்டவுடன் தான் படுக்கைக்கு போக வேண்டும் என்று தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். முனைவர் தோழர் திருமாவளவன் அவர்களின் வெற்றி, பேரானந்தம் தந்தது. இழந்த ஒன்றைப் பற்றி(தேனி ) மனம் நினைக்கவில்லை. பரவாயில்லை, போகட்டும், அது நேர்மையான முறையில் பதியப்பட்டதா, எண்ணப்பட்டதா என்று தெளிவில்லை!.

திமுக கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றிபெற்றது சாதாரணமானதல்ல. அவ்வளவு தான் , இனி திமுக மேலே எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற ஏகடிகம் பேசிய வாய்க்கெல்லாம் பூட்டு போட்டாகிவிட்டது.  தமிழ்நாட்டு மக்கள், மதத்தையும், அரசியலையும் ஒன்றாகப் பார்க்க மாட்டார்கள், இது சமூகநீதி மண், பெரியாரின் மண் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். நாங்கள் கோவிலுக்கு போவோம், சாங்கியம்,  சடங்குகள் கூட செய்வோம், ஆனால், ஒருபோதும், மதவாதத்திற்கு துணைபோக மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர். 

மேலும் இந்த வெற்றிக்கு மிகவும் உழைத்தவர், தளபதி ஸ்டாலின் என்றால் மிகையில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே தொடர்ந்து , தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் பரப்புரை. சுடும் வெயிலையும் தாண்டி எவ்வளவு பயணங்கள். கிராமசபை கூட்டங்கள் , பொதுக்கூட்டங்கள்,  நடைபயணம் என கொஞ்சம் கூட சோர்வில்லாமல் மக்களை சந்தித்தார் தளபதி. அதன் பயன் தான் இந்த அமோக வெற்றி என்று சொல்ல வேண்டும். 
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நம்முடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இனி வரும் காலங்களில், தமிழகம் பல சோதனைகளை, சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு போர்க்களமாக மாற  வேண்டிய சூழல் கூட ஏற்படும். அனைத்தையும் நாம் உறுதியுடன் எதிர்நோக்குவோம். இந்த காவிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும்  சமூகநீதிக்காக  தங்கள் பங்களிப்பை ஈந்த  அனைத்து தலைவர்களின்  பேச்சுக்களை, எழுத்துக்களை, கொள்கைகளை  நம்மால் முடிந்தளவு அனைத்து  தளங்களிலும் கொண்டுபோய் சேர்ப்போம். மக்களை சிந்திக்க வைப்பது ஒன்றே நம்முடைய பணியாக கொண்டு செயல்படுவோம்!

இன்று இந்த தேர்தல் முடிவுகள், இந்தியாவிலேயே,  தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்தது என்பதை காண்பித்திருக்கிறது!

ஆரியத்தின் சூழ்ச்சியை  எதிர்க்க திராவிடம் என்ற ஒன்றினால் மட்டுமே முடியும் என்பதை நடத்திக்காட்டுவோம்! 







Wednesday, 22 May 2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஓராண்டு நினைவஞ்சலி.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, சுத்தமான காற்றுக்காகவும், சுத்தமான நீருக்காகவும் அறவழியில் போராடிய மக்களை சுட்டு வீழ்த்திய படு கேவலமான அரசாங்கம் இது. 16 வயது மாணவி உட்பட 13 பேரை குறி வைத்து , சுட்டு  படுகொலை செய்திருக்கிறது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓராண்டு முடியபோகிறது. ஆனால்,  இதுவரை இதற்கான விசாரணையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. சுடுவதற்கு யார் உத்தரவிட்டார்கள்? முதலமைச்சரே டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறுகிறார். காவல்துறை முதலவரிடம்இருக்கிறது. சுடுவதற்கு நன்கு பயிற்சிபெற்ற ஒரு குழு இறக்கி விடப்பட்டிருக்கிறது. எப்போதும் ரெடியாக வைத்திருக்கும் ஒரு பதிலை, அதாவது, போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டனர் என்பதை  காரணமாக கூறியது காவல்துறை. 
இதில் எந்த சமூகவிரோதிகளும் கலக்கவில்லை. போராட்டம் இனிமேல் வலுபெற்றுவிடக்கூடாது என்ற ஒரே  நோக்கத்தில் தான் துப்பாக்கிசூடு நடந்தேறி இருக்கிறது, ஆவேசமாக காவல்துறையும், சில அதிகாரிகளும் நடந்துகொண்டதையும், வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுவதையும், தீ  வைப்பதையும், சிசிடிவி கேமெராக்கள் , பதிவு செய்துவிடக்கூடாது என்று வேண்டுமென்றே திருப்பி வைப்பதையும், மிக துல்லியமாக கண்டுபிடித்து, அதன் முதல் காணொளியை கூட வெளியிட்டார் தோழர் முகிலன் அவர்கள்.  அதற்குமேல் , அவரை செயல்பட விட்டுவிட கூடாது என்ற காரணத்தினால், கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றியும் இதுவரை எதுவுமே தெரியவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை, கொடுக்கப்பட்ட புகார்களுக்கு  பதிலுமில்லை.

துப்பாக்கிசூடு நடந்து ,ஓராண்டு ஆகிய நிலையில், தற்போது நினைவேந்தல் நிகழ்விற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் காவலர்கள் அங்கு குவிக்கப்படுகின்றனர்.!

இது மக்களுக்கான ஆட்சி அல்ல. மக்களை துன்புறுத்தும் ஒரு ஆட்சி என்பதை ஒவ்வொரு செயலிலும் உறுதிப்படுத்தி கொண்டே  வருகிறது அதிமுக அடிமை அரசு!
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை  எதிர்த்து,  வன்மையான கண்டங்களை தெரிவிப்பதோடு, மக்களிடம் உண்மை நிலையினை , விழிப்புணர்வினை கொண்டுபோய் சேர்ப்போம்!

#WeRememberTuticorinMassacre
#BanSterlite
#WhereIsMugilan?