Thursday, 15 October 2020

 இன்று, ஒவ்வொரு வீட்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட என்ஜினீயர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமாக முன்னேறி, ஒரு அறிவார்ந்த சமூகமாக நாம் மீண்டும் உருவெடுத்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சிறப்பான ஒரு வளர்ச்சி, முன்னேற்றம்.

கல்லூரி சேர்ந்த புதிதில், மகன் தினமும் நிறைய செய்திகள் சொல்வான். அவனைப்பொறுத்தவரை, கிராமம் பற்றிய தெளிவு அவ்வளவு இருந்ததில்லை. முழுவதுமாக நகரத்தில், இந்த சென்னையில் மட்டுமே வாழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்தவன். ஆதலால், அவனைப்பொறுத்தவரை அவர்களின் சிரமமான வாழ்க்கை, அதில் படித்துமுடித்து வந்திருக்கும் நண்பர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் வியப்புக்குரியவைகளாவே இருந்தன!

முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வந்தவர்கள், ஏழை, எளிய விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர்கள், மீனவசமுகத்திலிருந்து வந்தவர்கள், கூலிவேலை செய்பவர்களின் பிள்ளைகள்  என பலதரப்பட்ட பொருளாதார பின்னணியிலிருந்து வந்த மாணவர்களைப்  பார்த்து, வியப்புடன் சொல்வான். 'இவர்கள் இவ்வளவு கஷ்டத்திலும் படித்து வந்திருக்கிறார்கள். நம்முடைய அரசியல் கட்டமைப்பும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் இடம் கொடுத்து, படிக்க வைக்கிறது.' என்பான்.
இதைப்பற்றி நிறையவே உரையாடியிருக்கிறோம். தமிழ்வழிக்கல்வி மூலம் படித்துவிட்டு வந்த ஒரு மாணவன், முதல்நாள் வகுப்பிலேயே, ' எனக்கு ஒண்ணுமே புரியலைடா.. எதுக்கு இங்கு படிக்க வந்தோம் என்று தெரியல.. ஊருக்கு திரும்பி போயிடலாம் போல..' என்று பயந்து சொன்னதைக்  கேட்டு, ' அப்படியெல்லாம் செய்யதேடா... உனக்கு புரியலைனா என்னை கேளு,,, எனக்கு புரிந்தவரை நான் சொல்லிக்கொடுக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறான். இப்படி பலபேர், சொல்லி, பிறகு தாங்களாகவே மிகவும் முயற்சி செய்து படித்து, இன்று, நல்ல வேலையில், அதிகமான  ஊதியத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இங்கும், வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் என தங்கள் திறமைகளைக் காட்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்!

இது தான் தமிழ்நாடு... இது தான் சமூகநீதிக்கான மண்.

அண்ணா பல்கலைக்கழகம் என்பது  மற்ற பல்கலைக்கழங்கங்கள் போல் பொறியியல் பட்டதாரிகளை மட்டும் உருவாகும் ஒரு கல்வி நிறுவனம் அல்ல.. 
அது சமூகநீதிக்கான ஒரு குறியீடு!
மாநில உரிமைக்கான ஒரு அங்கீகாரம்!
ஒரு அறிவுசார் சமூகம் உருவாக்குவதற்கான அறிவுப்பெட்டகம்! 

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் , ஆரியம் அதனை தன்னுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்து கபளீகரம் செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான சதிவேலைகளை செய்து எப்படியும் நம் பிள்ளைகளின்  மருத்துவப்படிப்பை பறித்துக்கொண்டதுபோல் , பொறியியல் படிப்பையும்  படிக்கவிடாமல் செய்வதற்கு முயற்சி செய்கிறது. இந்த படுபாதக செயலுக்கு அடிமை அதிமுக அரசும் துணைபோகிறது என்பது வேதனையிலும் வேதனை!
இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இந்த சதிவேலையை தடுத்து நிறுத்தவில்லை என்றால், இதற்கான தண்டனையை அதிமுக அரசு பெற்றே தீரும்!

#DismissSurappa
#SaveAnnaUniversity


 


Saturday, 22 August 2020

Saturday, 6 June 2020

Tuesday, 26 May 2020

பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், கடந்த இரு நாட்களாக பேசியதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய  முக்கியமான விடையங்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்  ....

சில தினங்களுக்கு முன், செல்வி மாயாவதி அவர்கள், ' இந்த அளவிற்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வருவதற்கும், அவர்களின் இந்த ஏழ்மைக்கும் நீண்டகால காங்கிரஸ் ஆட்சியே காரணம், மேலும் பாஜகவும் ஒரு காரணம் ' என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அது, காங்கிரஸ், ஆட்சியோ, பாஜக ஆட்சியோ மட்டுமல்ல, சமாஜ்வாடி ஆண்டது, பகுஜன் சமாஜ் ஆண்டது, இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஏனென்றால், வளர்ச்சி என்பது சமூக மாற்றத்திலிருந்து தான் வர வேண்டும். தென் மாநிலங்கள் வளர்ச்சிக்கு அது தான் பெரிதும் உதவியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், சமூக மாற்றம் தான். அதனை சில சமூக அமைப்புகள், சமூக இயங்கங்கள், கட்சிகள் என அனைத்தும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றன. அவைகள் முதலில் செய்த மிக முக்கிய மூன்று பணிகள், கல்வி, சுகாதாரம், நிலப்பிரபுவத்துவம். அதில் கல்வியை பரவலாக கொண்டு சென்றது. கிராமப்புறங்கள் முதற்கொண்டு எல்லோரும் படிக்கும் அளவிற்கு எளிதாக்கியது, அடுத்து, பொது  சுகாதாரம்  என்ற கட்டமைப்பு . மருத்துவம் என்பது ஏழை, எளிய மக்களுக்கு, குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது, மருத்துவம் படித்தவர்கள், மேற்படிப்பிற்கு படிக்க வேண்டும் என்றால்,  கிராமப்புறங்களில் பணிசெய்ய வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்கியது, கடைசியாக பார்த்தால், நிலப்பிரபுவத்துவம் என்ற ஒரு ஆதிக்க கட்டமைப்பை  அதற்கு தெரியாமலேயே, அடித்து நொறுக்கியது, இவையெல்லாம் ஒரு வளர்ந்த , முன்னேறிய சமத்துவத்தை நோக்கியே கட்டமைக்கப்பட்டது.

இன்றளவில் கூட, உயர்கல்வியில், நம் மாநிலம் தான் முதலில் உள்ளது. 49% என்ற விகிதத்தில் நம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள். இந்தியஅளவில்,  இதற்கு பக்கத்தில்கூட வர முடியவில்லை. இந்த அளவிற்கு ஒரு வளர்ச்சியை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியதற்கு , இங்கு ஏற்பட்ட சமூக மாற்றமே மிக முக்கிய காரணம். வடமாநிலங்கள் முன்னேறாமைக்கு , இந்த சமூக மாற்றம் அங்கு இல்லாதது தான் காரணமே தவிர, யார் ஆட்சி செய்தாலும் இப்படி தான் இருக்கும். இதனை நன்கு புரிந்துகொண்ட காரணத்தால் தான், நம்முடைய இந்த கட்டமைப்பை உடைக்க முயற்சி செய்கிறார்கள். கல்வி, சுகாதாரம் என அனைத்திலும் ஒன்றிய அரசு தன்னுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவர முயல்கிறது. 
மேலும், இந்த சமூக மாற்றத்திற்கு காரணமாக இருந்த அமைப்புகள், இயங்கங்கள், கட்சிகள் மீது அவதூறுகள், பொய்யான பிரச்சாரங்கள், ஏன் தனி மனித தாக்குதல்கள்  வரை செல்லக்கூடும். வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் போல் ஆவது இருக்கட்டும்... நாம் வடமாநிலங்கள் போல் ஆகிவிடக்கூடாது என்றால், நாம் கடந்துவந்த இந்த பாதையை, இந்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை, வரலாற்று உண்மையை, இப்போது இருக்கும் இளைஞர்களிடம் நாம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

( அய்யா ஜெயரஞ்சன் அவர்கள் கூறும் இந்த சமுகமாற்றத்திற்கு காரணமான இயக்கம் திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அதனையொற்றி, திராவிடசித்தாந்தத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்த திராவிடக்கட்சிகள் , முக்கியமாக திராவிட முன்னேற்ற கழகம்  என்பது நம்மைப்போன்றோர்க்கு தெரியும். ஆனால், இந்த உண்மையை, தமிழக அரசியல் வரலாற்றை இப்போதிருக்கும் தலைமுறையினருக்கு சொல்லிப்புரிய வைக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாகும்.)




Monday, 18 May 2020

முள்ளிவாய்க்கால் பெருந்துயரம்.

11 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு மாறுதலும் ஏற்படவில்லை என்பது மிகப்பெரிய வேதனை. காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை. இளம் விதவைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மாணவர்கள்,இளைஞர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். சொந்தநாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை... மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பவைகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு இனப்படுகொலையை, சர்வதேச சமூகமே கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது என்ற உண்மை உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நாள் மே-17 (2009)

"இடம்பெயர் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படுவோர் நடந்துபோகும் தொழிலாளர்களின் சூட்கேசை தூக்கிக்கொண்டே கூடவே நடக்கலாமே ...."
- நிர்மலா சீத்தாராமன்.
இப்படி சொல்லும்போது, அவருடைய உடல்மொழியையும், ஆணவப்பேச்சையும் பாருங்கள். #அசல்_பார்ப்பனியத்தன்மை!
நடந்துபோகும் அம்மக்களின் , ஒவ்வொரு படங்களையும் பார்க்கும்போது நமக்கு துக்கம் அப்பிக்கொள்கிறது. அழுகை தொண்டையை அடைக்கிறது. சாரைசாரையாக இம்மக்கள் இங்கே வரும்போது எனக்கும் கொஞ்சம் கோபமும், வருத்தமும் இருந்தது உண்மை. எங்கே, இவர்கள் வடஇந்திய கலாசாரத்தை இங்கே வளர்த்துவிடுவார்களோ, மோடியை ஆதரித்து, பாஜகவை வெற்றிபெறச்செய்து விடுவார்களோ என்ற ஒரு அச்சம் இருந்தது.ஆனால், இப்போது குழந்தைகளுடனும், முதியவர்களுடனும், மூட்டை, முடிச்சுடன், உணவின்றி, நீரின்றி பல நூறு மைல்கள் நடக்க தொடங்கியிருக்கிறார்கள் என்பதைப்பார்க்கும்போது, தினம் தினம் சொல்லொண்ணா துயரத்தைத் தருகிறது. வாழ வழியின்றி தானே வேறு இடத்தை தேடி வந்து உழைக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே. அதுவும் , இந்த ஒன்றிய அரசு தூக்கிப்பிடிக்கும் இந்திமொழி பேசும் மக்கள் தானே. அவர்களுக்கு உதவுவதில் , இந்த ஒன்றிய அரசுக்கு எது தடையாக இருக்கிறது?
உங்கள் பாணியில் சொல்வதென்றால், உங்களை தேர்ந்தெடுக்காத மக்கள் இல்லையே... உங்களுக்கு வாக்களித்து, உங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் தானே அவர்கள்... அவர்களுக்கு உதவ வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவே இல்லையா???
உங்களுக்கு பிடித்த மொழியை பேசும் மக்கள் என்றாலும், உங்களை தேர்ந்தெடுத்த மக்கள் என்றாலும், நீங்கள் ஒன்றுசேருங்கள் என்று அழைக்கும் இந்துக்கள் என்றாலும் உங்களுக்கு பெரிதில்லை... ஏனென்றால், அவர்கள் ஒடுக்கப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், ஏழை, எளிய அன்றாடங்காய்ச்சிகள் என்ற ஏளனம் தானே!
எங்களுக்கு அம்பானிகளும், அதானிகளும், பார்ப்பன, பனியாக்களும் போதும். இனி, இது ஏழை மக்கள் வாழ முடியாத நாடு என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்!
பாசிசத்தை எல்லா வழிகளிலும் உள் நுழைகிறீர்கள். இவ்வளவு ஆணவம் கூடாது. இதற்கான விலையை நிச்சயம் கொடுப்பீர்கள்!

Sunday, 10 May 2020

அன்னையர் தின வாழ்த்து செய்தி.



தாய்மை பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதை மறந்து,மறுத்து, தியாகம், அளவற்ற அன்பு என்ற பெயரில், அவளின் முழு வாழ்க்கையாகவே மாற்றிவிட்டது இச்சமூகம்!
தாய்மையைத் தாண்டி எல்லோரையும் போல அவளுக்கும் வேறுபல வேலைகள், இலக்குகள், ஆசைகள், உணர்வுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அதற்கு வழிவிட்டு அவளையும் மற்றவர்கள் போல் சாதிக்க உதவிபுரிந்திருக்கும் மேலைநாட்டினரின் வாழ்க்கை முறை, அதன் வெற்றியை கொண்டாடி மகிழ்கிறது!
ஆனால், நாமோ, அன்னையை கொண்டாகிறோம்,போற்றுகிறோம் என்று இன்னுமும் அந்த தியாகம் என்ற வளையத்திற்குள்ளேயே அடைத்துக் கொண்டிருக்கிறோம்!
இனிவரும் காலத்திலாவது, அம்மாவின்,  அன்பு, சமையல், தியாகம் இவைகளை தாண்டி, அவர்களின் விருப்பம், இலக்கு, எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து, முன்னுரிமை அளித்து கொண்டாடி மகிழ்வோம்!

Friday, 8 May 2020

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறப்பு தேவையா!

ஊரடங்கு முடியும்காலம் வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது, மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்றும்கூறியுள்ளது. ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. முழுதுமாக விற்பனையை தடுத்திருக்கலாம். மேலும், இரண்டு நாட்களுக்கு முன் இந்த தீர்ப்பை சொல்லியிருந்தால், கடந்த இருநாட்களில் நடந்த கூத்தை தவிர்த்திருக்கலாம். நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகளில் பின்பற்றப்படாத தனி மனித  இடைவெளியின் விளைவு அடுத்துவரும் 15  நாட்களில் தெரிய வரும். எப்படியோ, இப்போதாவது இந்த தீர்ப்பு வந்ததே என்று ஆறுதல் அடைய வேண்டிய  நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இந்த நிலையிலும், மோடி அரசு, தன்னுடைய திருகுவேலையில் தான் கவனமாக இருக்கிறது, மக்கள் ஒருவேளை சாப்பாடுக்கு கையேந்தினால் என்ன, புலம்பெயர்ந்த மற்ற மாநில தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடந்து  சென்றால் என்ன, ரயிலில் அடிபட்டு இறந்து போனால்  தான் என்ன... எங்களுக்கு தேவை இந்த முழுநாடும் எங்கள் அதிகாரத்திற்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று, மின்சாரத்திட்டத்திற்கான சட்டத்தை திருத்துதல், காவேரிமேலாண்மை ஆணையத்தை தன்னுடைய அரசின் கீழ்  கொண்டுவருதல்,புதிய கல்விக்கொள்கை செயல்படுத்துதல் என அதன்போக்கில் சென்றுகொண்டிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் உச்சபட்சமாக, கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது  கூறியுள்ளது. இனி, இந்த அரசுகளை நம்பி பலனில்லை. மக்களாகிய நாம் தான் நம்முடைய உயிரை நாமே  காப்பாற்றிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்த நேரத்தில், இங்கே  ஒரு விடையம் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. மகனுடன் பேசும் போதெல்லாம் அரசியலும் பேசுவதுண்டு. சொல்லப்போனால், அரசியலைப்பற்றி தான் அதிகம் பேசுவோம். அங்கு, அந்நாட்டில் (கனடா ) நடப்பவை எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பான்.  அதில் பல மிகவும் பாராட்டுக்குரியவைகளாக இருக்கின்றன. 

அங்கு படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, இந்த லாக்டௌன் சமயத்தில்,  மாதம் 1250 டாலர் அரசே கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எனக்கு தெரிந்தவரையில், உலகில் வேறு எந்த நாடும் இதுபோல் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்று பேசும்போது மற்றொரு  முக்கியமான செய்தியை சொன்னான். அது, வெளிநாட்டு மாணவர்களுக்கு, சர்வேதேச தொலைபேசி அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது என்பது தான். இந்த இக்கட்டான பொது முடக்ககாலத்தில், அவர்கள், தங்களுடைய குடும்பத்தினருடன் அலைபேசியில் பேசுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்ற சலுகையை அளித்திருக்கிறது. இதில், மிகப்பெரிய  வியப்பு என்னவென்றால், இந்த தொலைத்தொடர்பு தொலைபேசி நிறுவனம் அரசுக்கு சொந்தமானது கிடையாது, தனியார் நடத்தும் நிறுவனமாம். அங்கு அரசு மட்டுமல்ல.. தனியார் நிறுவனங்கள் கூட மக்களுக்காக செயல்படுகின்றன என்பது தான் மிகச்சிறப்பு!

இங்கே, சொந்தமக்களுக்கே கஞ்சி ஊத்த கூட வழியில்லாத நிலையில் அரசுகள் இருக்கின்றன . இந்த ஒப்புமை, மலைக்கும், மடுவிற்குமானது என்பது உண்மை. ஆனால், சில விடையங்களை கேட்டுவிட்டு அப்படியே கடந்து போக முடிவதில்லை.

Saturday, 2 May 2020

Saturday, 25 April 2020

Wednesday, 22 April 2020

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி மீண்டும் வந்து,இந்த தடவையும்  கொஞ்சம் அதிகமாகவே படுத்தி விட்டது.  அலைபேசி, கம்ப்யூட்டர் பார்த்தால் இன்னும் வலி கூடுகிறது என்பதால், முழுமையான ஒய்வு தேவைப்பட்டது. சமீபமாக,  கேட்கும், பார்க்கும் செய்திகள் வேறு மனதை சிரமத்திற்குள்ளாக தானே ஆக்கிவிடுகிறது. இம்மாதிரி நாட்களில், ராஜாவின் பாடல்கள்  மிகவும் கை கொடுக்கிறது என்பது நூறு விழுக்காடு உண்மை. ராஜாவிற்கு, ஆயிரம் நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது!

இந்த நான்கைந்து நாட்களில், இங்கே எவ்வளவு நடந்து விட்டன. வருத்தம், வேதனை, கோபம், எரிச்சல், அருவெறுப்பு, திகைப்பு,  கூடவே கொஞ்சம் சிரிப்பு என அனைத்து நவரசங்களும் நடந்து முடிந்திருக்கின்றன!

முதலாவதாக, கொரோனா போன்ற  கொள்ளைநோய், மனித உயிர்களை இரக்கமற்று, அள்ளிக்கொண்டு போகும் இவ்வேளையில்,  தன் உயிரை பணயம் வைத்து, நம்மை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, நாம் மிகவும் நன்றி கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் தன்னுடைய குடும்பத்தைவிட்டு, நமக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு, வீட்டினுள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்கள் கொரோனா பாதிப்பில் இறந்துவிட்டால், அவர்களை அடக்கம் செய்வதற்கு கூட மக்கள் எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது எவ்வளவு கீழ்த்தரமான, மனிதத்தன்மையற்ற செயல். இறந்தவர்களின் உடலிலிருந்து நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற புரிதலை ஏற்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. அம்மக்கள் அறியாமையில் இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தானே அரசின் கடமை. முதல் தவற்றிலிருந்து பாடம் கற்காமல், இரண்டாம் முறையும் தவறியதன் விளைவு , மருத்துவர் சைமன் போன்ற மிகச் சிறந்த மருத்துவர் , இறந்தபிறகும், அவருடைய உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்ய முடியவில்லை என்றால், அதுவும், நம் தமிழ்நாட்டில் என்றால், மிகவும் அவமானமாக இருக்கிறது. நம் தமிழ் மக்களா இப்படி என்று வேதனையும், வருத்தமும், வாட்டியது. அதன் பிறகு, இப்போது அரசு விழித்துக்கொண்டு, இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்,  ஆறு முதல் ஏழு ஆண்டுகள் சிறை என்றும், இப்படி இறக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிக்கை விட்டிருக்கிறது.

இரண்டாவதாக, இன்று வரை இந்தி தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல், இருமொழிக்கொள்கையை செயல்படுத்தி, தமிழ்நாடு  என்ற  பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, சித்திரம் வரைந்த அந்த கேவலமான மனநிலையை கொண்ட கார்டூனிஸ்ட், அதை பத்திரிகையில் சிறிதும் நன்றியில்லாத தன்மையால், வெளியிட்டிருக்கும் தினத்தந்தி பத்திரிக்கை.  பத்திரிகையின் முகப்பில், தமிழ் வெல்க என்று போட்டுகொண்டால்  மட்டும் போதாது. தமிழுக்கு தொண்டாற்றியவர்களை போற்றவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. இழிவுபடுத்தக்கூடாது என்ற பத்திரிக்கை அறம் சார்ந்து செயல்பட  வேண்டும். நினைத்ததையெல்லாம் போட்டுவிட்டு, பிறகு வருத்தம் தெரிவித்தல் என்பது பெரும் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது!

அடுத்து, இறுதியாக, போன வாரம் வரை, இஸ்லாம் மக்களால் தான் கொரோனா பரவுகிறது என்று பரப்பிக்கொண்டிருத்த சங்கிகள் , ஏன்  திடீரென்று, நம்ம பாய்மார்கள் சிறந்தவர்கள், அவர்களின் உதவிகள் போல் ஆகுமா , என்று போற்றி எழுதுகிறார்களே என்று பார்த்தால், அதனுடைய ரூட் அரபிகளின் கையில் வசமாக மாட்டிக்கொண்டு இருக்கிறது. மோடியே, மதசார்பின்மை பேசும் அளவிற்கு, ( அது போலி மதச்சார்பின்மையாக  இருந்தாலும் கூட )   விசயம் போய்க்கொண்டிருக்கிறது. பாஜக எம்.பி. படு கேவலமாக ட்வீட் போட்டு, தங்களின் கீழ்த்தரமான மனநிலையை உலகிற்கே காட்டியுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்ட இயக்கம் என்பதை அரபி அரசு குடும்பத்தினர் புட்டு புட்டு வைக்கிறார்கள். அங்கிருக்கும், சங்கிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றதும், உடனே, அவர்களுக்கே உரிய குணமான  மன்னிப்பை  கடிதம் மூலம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் சங்கிகள் நம்ம இஸ்லாம் சகோதர்களை போற்றுகிறார்களாம். இந்த, பம்முதல், இந்த கொரோனா நேரத்திலும் கூட, நம்மைமீறி, நமக்கு சிரிப்பை வரவழைத்திருக்கிறது !


கொரோனா , நாள்தோறும், நமக்கு பல அனுபவங்களைக் கொடுத்துகொண்டிருக்கிறது!






Saturday, 11 April 2020

Saturday, 28 March 2020

Sunday, 22 March 2020

கொரோனா


நாடு முழுவதும் 75 மாவட்டங்கள், தமிழ்நாட்டில், மூன்று மாவட்டங்கள் என சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு மிக முக்கியம் தான், ஏன், தமிழ்நாடு முழுவதற்கும் கூட ஊரடங்கு போடலாம். கரோனா பரவுதலை தடுக்க வேண்டும். 
சீனா உயிரிழப்புகளைப் பார்த்தோம். தற்போது இத்தாலி, ஈரான் உயிரிழப்புகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இன்று கூட இத்தாலியில் கரோனாவினால் ஏற்பட்ட மரணங்கள் 786 என செய்தி குறிப்பு சொல்கிறது. அதனைப் பார்க்கும்போது மனதை பிசைகிறது. இந்நிலைக்கு மக்களின் அலட்சியமும், அரசு சொல்வதை கேட்காமல் போனது தான் மிக முக்கிய காரணம் என்று தெரிந்தும் நாம் அவர்களிடமிருந்து  கற்றுக்கொள்ளாமல் போனால்,  நம் நாட்டில் ஏற்படப்போகும் உயிரிழப்புகள் தான் உலகிலேயே முதன்மையானதாக இருக்கும். அந்த அளவிற்கு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். இங்கு மக்கள் தொகையும் அதிகம். சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களும், கட்டமைப்பும், மருந்துகளும் கூட போதாது. ஆதலால், ஊரடங்கு முக்கியம் தான்.

ஆனால், அது எவ்விதத்திலும் மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பது அதி முக்கியம். அமைப்பு சாரா தொழிலாளிகளும், அடித்தட்டு மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் , வீடின்றி சாலையில் வசிக்கும் மக்களும்,  பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்பது தான் நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்க  வேண்டும். அடுத்த நிலையில் இருக்கும் மத்திய தர மக்களுக்கு, வரி சலுகை, EMI கடன் தொகை கட்டுவதை சில மாதங்களுக்கு தள்ளி வைத்தல்  போன்ற உதவிகளை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்துவிட்டு, ஊரடங்கு அமல் படுத்தினால், கொரோனவை நிச்சயம் விரட்டிவிடலாம்.

ஆனால், இவற்றையெல்லாம் நம் மாநில, மத்திய அரசுகள் செய்யுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி!

உலக நாடுகள் தங்கள் மக்களின் தேவைகளை அறிந்து சரிவர செய்கின்றன. ஆதலால்  தான் தனிமைப்படுத்துதல் என்பது அங்கெல்லாம் பெரியளவில் பாதிப்பாக  தெரியவில்லை!

இன்று , கனடாவில் இருக்கும் மகனிடம் பேசும் போது  அவன் சொன்னவை,

" இங்கே ஒரு பிரச்சனையும் இல்லைம்மா... நல்லாவே இருக்கோம். இந்த ஒரு வாரம் முழுவதும் காலேஜ் லீவு. அடுத்தவராம் முதல், ஆன்லைன் கிளாஸ் நடக்கும். வேண்டியபொருளை வாங்கி வைத்துவிட்டோம். வெளியே எங்கேயும் போறதில்ல. வீட்டுக்குள்ளேயே இருக்கோம்...  இங்கே மக்கள் தான் முக்கியம். அவர்களுக்காக இந்த அரசு எல்லா தேவைகளையும் செய்கிறது.  முக்கியமா, இந்த நாடு, இங்கே வந்திருக்கும் மக்களை கூட, தன்  சொந்தநாட்டு மக்களாக தான் பார்க்கிறது. போனவாரம் முழுவதும் வேலைக்கு போகல... ஆனால் எனக்கு சம்பளம் கிடைத்துவிடும்மா. என்னைப்பத்தி கவலை படாதீங்க.. நான் இங்கே நல்லா   இருக்கேன். நீங்க கவனமா இருங்க..." என்றான்.


" இந்த நிலையில், , நீ வேறு எந்த நாட்டிலிருந்தாலும் எனக்கு கவலையாக தான் இருந்திருக்கும். கனடாவில் இருப்பதால், அந்த கவலை  இப்போது எனக்கு இல்லை... எழில் மா  "

என்று கூறி போனை வைத்தேன்.

அவன் படிக்கும் கல்லூரியிலேயே,  பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறான். வேலைக்கு போகவில்லை என்றாலும்கூட எப்போதுமுள்ள ஊதியம் கிடைத்து விடுகிறது என்பது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. பொருளாதாரம் மிக முக்கியம் என்பதை கனடா நாட்டு அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தானே இவ்வளவும் செய்ய முடிகிறது.
இது தானே தற்சமயம் மிக முக்கியம். இம்மாதிரி , தொற்றுநோய் பரவும் வேளையில், மக்களுக்கு தேவையானவற்றை செய்து, மக்களை காப்பாற்றுவது தானே ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க முடியும். 

உலகநாடுகள் அளவிற்கு , நம் மத்திய, மாநில அரசுகள் மக்களை, இந்த கொள்ளை நோயிலிருந்து  காப்பாற்றுமா என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் சுய ஊரடங்கு என ஒருநாள் முழுக்க கடைபிடித்துவிட்டு, மாலையில் கூட்டம்  கூட்டமாக  கைதட்டி மகிழ்கிறார்கள். இவர்களுக்கு self isolation, social  distancing, என்றால் என்ன  பொருள் என்று புரியவில்லையா என்பது நமக்கு விளங்கவில்லை!

நமக்கு நாமே தனிமைப்படுத்தி கொள்ளல் ஒன்றே தீர்வு போல!






Saturday, 29 February 2020



சிறகு மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை. சிறகிற்கு மிக்க நன்றி.

Saturday, 22 February 2020

சிறகு மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை. சிறகிற்கு மிக்க நன்றி ...

http://siragu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/

Tuesday, 4 February 2020

ஓராண்டு காலமாக எவ்வளவு மனஉளைச்சல். இந்த குழந்தைகளுக்கு பொதுத்  தேர்வா என்று மனதில் புழுங்கி, பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி, எழுதி, அப்படியும் ஆற்றாமையால் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து, பல தலைவர்கள், மாணவர்கள், பொது மக்கள், ஏன் குழந்தைகள் கூட  என அனைவரும் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடி, இறுதியில் இப்போது 5&8 வகுப்பிற்கு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிக்கை வந்துள்ளது. ஒருவாறு இன்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மனதிற்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது. 
இயல்பாக தானே போய்  கொண்டிருக்கிறது ... ஆனால், இதெல்லாம் எதற்காக என்று சிந்தித்தோமானால்,  நம்மை ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கும் ஒரு யுக்தி தான். அது மத்தியில் ஆளும் பாஜக அரசும் சரி,  அவர்களின் ஆணைகளுக்கிணங்க இங்கே மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் சரி, அவர்கள் செய்யும் தவறுகளை நாம் கவனிக்கக்கூடாது என்பதற்காக நம்மை ஒரு போராட்ட மனநிலையிலேயே வைத்திருக்க, இதுபோல் அவ்வப்போது சில விஷயங்களை செய்கிறார்கள். அதோடு மட்டுமல்ல.. அவர்கள் இதுபோல் செய்யும் அனைத்து விசயங்களும் அவர்களின் (ஆர்.எஸ்.எஸ்.) அஜெண்டாவில் உள்ளவையே! 
தேசிய கல்விக்கொள்கையில் 3ஆம் வகுப்பிற்கு கூட பொதுத்தேர்வு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதனை கூட, ரத்து பண்ணிவிட்டார்கள் என்று நாம் மகிழ்ச்சியடைந்து அலட்சியமாக விட்டுவிட்டோமானால் , பின்னாலேயே இதைவிட பெரிதாக வேறு  எதாவது செய்ய போகிறார்கள் என்று தான் பொருள்!



மேலும் இது தேர்தலுக்கான முன் ஏற்பாடாக கூட இருக்கலாம். நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  எப்படியோ, இந்த ஆண்டு குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதவேண்டிய கொடுமை இல்லை என்பதில் மிக்கமகிழ்ச்சி!